3. இன்னல் இடர்தாண்டுதல்
- மனிதன் மனிதன் ஆதல் வேண்டின் மன்மனப் பேரர சாளுதல் வேண்டும்; தனிப்பே ரரசைத் தன்னுள் கண்டு தன்மன உறுதி தனிச்செங் கோல்ஆக, தன்னடக் கமெனும் தவிசில் அமர்ந்து, தன்னவா ஏக்கத் தன்னலப் பகைமைகள் பின்னுற ஓட்டிப் பிறங்கொளி நாட்டித் தன்னுளே தன்னிறை வாக்குதல் வேண்டும்!
- கவிஞர் ஷெல்லி
2குறியிழந் தனையோ? இழந்தே னென்று கருதி மறுகி நிற்பதென்? மீட்டும் அஃதுன் முனே ஒளிரும்! இறுதிப் பந்தயம் இழந்தனையோ, இழந்தாலென்? உறுதிகொள், மறுபந்தயத் துக்கது படியே!
எல்லா வீலர் வில்காக்ஸ்
இடர்கள் இன்னல்களிலிருந்து இன்பம் பெறலாம் என்பது மேலீடாகப் பார்ப்பவருக்கு முதற்கண் முரண்பட்ட கூற்றாகவே தோன்றும். கல்லிலிருந்து நார் உரிக்கலாம், அனலிலிருந்து புனல் பெறலாம் - இரும்பிலிருந்து கரும்பின் சாறெடுக்கலாம் என்பது போன்ற பொருத்தமற்ற உரையாகவே அது காட்சியளிக்கக் கூடும். ஆனால் மூடர் மயங்குமிடமே அறிஞர் தெளியுமிடம் என்ற உண்மை இதில்தான் அடங்கியுள்ளது. இடர்கள், இன்னல்கள் அறிவும் உரமும் அற்றவர்களுக்கே இடர்களாகவும் இன்னல்களாகவும் தோற்றுபவை. அறிவும் உறுதியும் பெற்று விட்டால், அவையே இன்பம், ஆக்கம் ஆகியவற்றின் திருகு வாயில்களாக மலர்ச்சி பெற்றுவிடும்.