உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
214 ||

அப்பாத்துரையம் - 33



என்பதனை மட்டும் அவள் ஊகிக்க முடிந்தது. ஆனால் பிரியும் சமயம் கூறிய வாசகங்கள் மட்டும் நினைவிலிருந்தன. அவள் வாழ்க்கையின் மூல பாடமே அதுதான். அதன்படியே எட்டாண்டுகளாக அவள் நடந்தும் வந்திருந்தாள்.

அப்பாடத்தை அவள் ஒப்பித்தாள்.

"அம்மாவும் அப்பாவும் ஆறாக வழிந்த கண்ணீரை ஒதுக்கிவிட்டுக் கொண்டு தேம்பித் தேம்பிக் கூறிய பேச்சுக்கள் அந்தச் சிறுவயதில்கூட என் உள்ளங்களைக் கலக்கிவிட்டது.

“அம்மா, சிறு பிள்ளையாக உன்னையும், கைக்குழந்தையாகிய உன் தங்கையையும் துணையில்லாமலே விட்டுப் போகிறோம்.

“நாங்கள் இனி வாழ முடியாது, ஆனாலும் எங்கள் கவலை உங்களைப் பற்றியதுதான். நீங்களாவது வாழ வேண்டும். ஆனால் உங்களைப் பாதுகாக்க இனி யாருமில்லையே என்றுதான் கவலைப்படுகிறேன்.

“நீ சிறு பிள்ளை, ஆனால் நீயாவது நாங்கள் சொல்வதை அறியக் கூடிய வயது உடையவள். உன் தங்கையை ஒரு தாய்போல், தந்தை போலப் பார்க்கும் பெரும் பொறுப்புக்கள் கூட உன் சின்னஞ்சிறு தோள்களின்மேல் போட்டுப் போகிறோம்.

“உன்னால் எப்படி இவ்வளவும் முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எங்கள் கண்ணீரும் கவலையும்தான் உனக்கு இனி வலுவும் அறிவும் தந்து, தங்கையையும் வளர்த்து நீயும் வளர உதவ வேண்டும்.

‘கடவுளாக ஒரு வழிகாட்டும் வரை இந்தக் கட்டத்தில் இந்த அறையைவிட்டு எங்கும் போகாதே. தங்கையையும் போகவிடாதே.

“நல்லகாலமாக இந்த அறைக்குள் பல ஆண்டுகளுக்குப் போதிய உணவுப் பொருள்கள் இருக்கின்றன. தெரிந்த மட்டும் இங்கே சமைத்துண்டு வாழ்ந்து தங்கையையும் ஊட்டி வளர்ப்பாயாக.

“நாங்கள் போகிறோம். உன்னை நம்பி உங்கள் வாழ்வில் மாளா நம்பிக்கையுடன் உங்களை விட்டுப் போகிறோம்.