250 || |
அப்பாத்துரையம் - 33 ——————————————— |
தன் மனைவிமீது அவதூறு கூறிய அதே குடிகாரனிடம் அவன் சென்றான். அந்த நண்பன் ‘என்ன எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய், எத்தனை புட்டி இன்று எனக்கு வாங்கித்தரப் போகிறாய்.’ என்று அரை மயக்கத்திலேயே கேட்டான்.
கீவ் அவன் மயக்கம்தீர இரண்டு குத்துக்கொடுத்து அடே, கேட்ட பணம் தரும் புட்டி என் மனைவியிடமிருக்கிறது. ஆனால், அதை அவள் இரண்டு காசு கொடுத்தால்தான் விற்பாள். எனக்கு விற்கவும் மாட்டாள். நீ அதை வாங்கித் தராவிட்டால் என்னிடம் இனிப் பணம்பெற முடியாது. வாங்கித் தருவதாயிருந்தால் இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் புட்டியிடம் வாங்கித் தருவவேன்,” என்றான்.
‘உன் புட்டிக்கதையை நான் நம்பவில்லை’ என்றான் நண்பன்.
‘நீயே தேர்ந்து பார்த்துக் கொள்ளேன். என்னிடமிருந்து வந்ததாக மட்டும் கூறாமல் இரண்டு சிறுகாசு கொடுத்து என் மனைவியிடம் கேள். அவள் புட்டியைக் கட்டாயம் கொடுப்பாள்; கொடுத்தபின் எனக்குத் தருவதற்கு முன் எத்தனை புட்டிக் குடிவகைகள் வேண்டுமானாலும் கேட்டுப்பார். அதன் பின் நான் ஒரு சிறுகாசு விலைதந்து அதை வாங்கிக் கொள்கிறேன்.’ என்றான்.
அச்சாரமாகச் சிறிது குடிவாங்கிக் கொடுத்த பின்னால் நண்பன் இரண்டு சிறு காசுகளுடன் சென்றான். கீவ் அவனுக்காக காத்திருந்தான். நெடுநேரம் இருந்தும் அவன் வரவில்லை.
கீவ் கவலையுடன் அவனைத் தேடிக்கொண்டே தன் வீட்டு வரை வந்தான். வீட்டண்டை வரும்போது அவனெதிரே நண்பன் நடக்கமாட்டாமல் தள்ளாடிக் கொண்டு வருவது கண்டான்.
அவன் உடுப்பின் ஒவ்வொரு பையிலிருந்தும் ஒன்றிரண்டு புட்டியின் கழுத்துகள் நீட்டிக் கொண்டிருந்தன. கையில் நீண்ட ஒரு புட்டி இருந்தது. அவன் குடித்துக் கொண்டே நடந்து வந்தான்.
“அண்ணே! நல்ல புட்டிச்சாத்தன் அண்ணே! நீதானே எனக்கு இந்த நன்மை செய்தாய், நீ ஒரு புட்டி சாப்பிடுகிறாயா?” என்றான்.