34
அப்பாத்துரையம் - 45
முதலாளிக்குப் பொறுப்பும் அக்கறையும் உண்டு. ஆனால் தொழிலாளி வாழ்வில் உழைப்புத் தவிர முதலாளிக்கு எத்தகைய பொறுப்போ, அக்கறையோ இருக்க வேண்டுவதில்லை. உழைத்ததற்குரிய கூலி கொடுத்தாகிவிட்டது. இனி அவன் வாழ்ந்தாலும் நன்று; வாழாது போனாலும் கேடில்லை என்ற நிலையே முதலாளிக்கு இருக்கமுடியும்.
ஆனால் உண்மையில் தொழிலாளியின் உழைப்புக்குரிய கூலி கொடுக்கப்பட்டதா? தொழிலாளர் நலனிலும் சமூக நலனிலும் அக்கறையுடையவர்கள் இதனை ஆராய்ந்து உண்மை காண்பது இன்றியமையாதது. ஏனெனில் இத்துறையில் வெளித்தோற்றம் உண்மை நிலையை முற்றிலும் மறைத்து வைத்துள்ளது.
பழைய அடிமையும் புதிய அடிமையும் கூலி, ஆதாயம், வருவாய்!
மனிதரின் மொழி வகுத்துள்ள சொல்லின் மாய மந்திர சாலங்கள் இவை! ஏனெனில் அவை மூன்று வகுப்புக்களின் மூன்று வகை உரிமைத் தரங்களை மறைத்துச் செப்பிடுவித்தை புரிகின்றன!
கூலி, கடமை அடிப்படையானது. உரிமையடிப்படையான தன்று. ஏனெனில் கூலியின் அடிப்படை தொழிலாளியின் உயிர் ஆற்றல் அல்லது உடலுழைப்பு. அதன் அளவு அவன் வாழ்நாளின் ஒரு பகுதி, ஒருநாள் அல்லது வாரம்.
ஆனால் ஆதாயத்தின் வரையறை, வணிகனின் சந்தர்ப்பம்! வருவாயின் வரையறையோ, சமுதாயம் அடைந்துள்ள முன்னேற்றம்!
தொழிலாளருக்குக் கால அடிப்படையில், நாள், வார அடிப்படையில் கூலி! ஆலைகளை ஆட்சி செய்யும் அறிவு வகுப்பினர்களுக்குக் கூட மாதச் சம்பளம் மட்டுமே! இதே கூலியை, சம்பளத்தை வணிகர் பெற இசைவரா? தொழில் முதலாளிகள் பெற இணங்குவார்களா?
மாட்டார்கள்! ஏன் மாட்டார்கள்?