54
அப்பாத்துரையம் - 45
எல்லா உறுப்பினர் வலுவையும் ஒருங்கே பயன்படுத்துகிறான். ஒவ்வொருவனும் முழுமுதல் சமூகத்துக்கு உரிமையை விட்டுக்கொடுத்து அதைத் திரும்பக் குடியுரிமையாகப் பெறுவதன் மூலம் எல்லாருடனும் சரிசம நிலையிலிருந்து கொண்டே, தன் சுதந்திர உரிமையை விடாமலே, எல்லார் உதவியும் பெறுகிறான்; ஆனால் அதே சமயம் அவன் எல்லாருக்கும் உதவுகிறான். ஒரே பொது உரிமைக்குத் தானும் மனமாரப் பணிந்து, பிறரையும் மனமாரப் பணிய வைப்பதனால், அவன் தனக்குத்தானே பணிபவன் ஆகிறான்.
இங்கே முழுமுதலினிடம் உறுப்பினர் தம் இயற்கை உரிமை அனைத்தையும் கொடுத்து விடுகின்றனர். அது மட்டுமல்ல, தம் இயற்கை உடைமை அனைத்தையும் கொடுத்து விடுகின்றனர். ஆனால் கொடுத்த எதையும் அவர்கள் இழக்கவில்லை. இயற்கை உடைமையைச் சமூக உடைமையாக மீட்டும் பெறுகின்றனர். சமூகக் கூட்டுறவில் சேர்ந்ததனால் அவர்களுக்கு உண்மையில் நட்டம் மிகுதி இல்லை. ஆயினும் ஆதாயம் எல்லையற்றது. ஏனெனில் தன் ஒரு தனிமனித உரிமைக்கும் உடைமைக்கும் பதிலாக அவர்களுக்கு அத்தனை மனிதர் உதவியும் பாதுகாப்பும் நிலையாகக் கிடைக்கிறது. ஒரு துளி தன் ஆற்றலைக் கடலுக்குக் கொடுத்தது. கடல் தன் ஆற்றலை அத்துளிக்குத் திரும்பவும் கொடுத்தது. துளியை யாரும் விழுங்கிவிடலாம். கடலை எவரும் விழுங்க முடியாது. கடல் எல்லாரையும் யாவரையும் விழுங்கவல்லது. கூட்டுறவின் முழுமுதல் இப்போது சமூகம் ஆயிற்று.
இயற்கை வாழ்வில் வலிமை, வாழ்வின் ஒரே பாதுகாப்பு. மனிதன் செயல்கள் அவன் பசி, வேட்கை முதலிய உடலின் உணர்ச்சிகளின் பயன் மட்டுமே. சமூக வாழ்வில் உரிமை என்ற புதுப்பாதுகாப்பு எழுகிறது. செயல்களைக் கடமை, நேர்மை ஆகிய உயர்வகை அறிவுணர்ச்சிகள் இயக்குகின்றன. மனிதன் அறிவு செயலாற்றத் தொடங்குகிறது. அறிவு ஒரு சமூகப் பண்பு. ஒரு தனி மனிதன் அனுபவம் அடுத்த தனி மனிதனுக்கும், ஒரு தலைமுறை அனுபவம் அடுத்த தலைமுறைக்கும் என்றிப்படி அறிவாற்றல் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு