6.கவியரசு கு. நடேச கவுண்டர்
எந்த மொழி ஆனாலும், அஃது அந்த மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் பொதுச் சொத்து ஆகும். அம் மொழியின் வாழ்வும் தாழ்வும், அதனைப் பேசும் மக்கள் அனைவர் கையிலேயும் உள்ளன. ஆதலால், அதனை வளர்க்கும் பொறுப்பு அம்மொழி பேசும் அனைவருக்கும் உண்டு என்பது வெளிப்படை. க் கருத்து, புதுமையானது அன்று. சங்க காலந் தொட்டே கடைப்பிடிக்கப்பட்ட கொள்கையாகும்.
கோவூர்கிழார் முதலிய கிழார்ப் பெயர் பெற்ற புலவர்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்டவர்கள். சீத்தலைச் சாத்தனார் கூல (தானிய) வாணிகத்திலும், இளவேட்டனார் அறுவை (துணி) வாணிகத்திலும், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் பொன் வாணிகத்திலும் ஈடுபட்டவர்கள்.
மதுரைக் கணக்காயனார், மதுரை இளம்பாலாசிரியர் சேந்தங்கூத்தனார், மதுரைப் பாலாசிரியர் நப்பாலத்தனார் முதலியவர்கள் ஆசிரியப் பணி புரிந்தவர்கள்.
உறையூர் மருத்துவன் தாமோதரனார், வெண்ணிக் குயத்தியார், தண்கால்பூண் கொல்லனார், மதுரைப் பெருங் கொல்லனார், கணியன் பூங்குன்றனார் ஆகியோர் முறையே மருத்துவம், குயவேலை, பொன்வேலை, கொல்லுவேலை, சோதிடம் (கணியம்) ஆகிய தொழில்களில் ஈடுபட்டவர்கள். இவ்வாறே வேறு பல தொழில்களில் ஈடுபட்டவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் சங்கப் புலவர்கள்; தமிழ் வளர்த்த சான்றோர்கள்; மொழியை வளர்த்தல் அனைவர்க்கும் கடமை என்பதை உணர்ந்தவர்கள்.
இந்நிலை இந்நாள் வரை தொடர்ந்து வருதல் உண்மையாம். நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்து பின்னே புலவராக விளங்கியவர். பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் முதலில் வணிகத் தொழிலில் ஈடுபட்டிருந்து பின்பு புலமைநலங் கனிந்தவர். கப்பலோட்டிய