உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

191

நான் இக்கோயிலுக்குச் சென்றது பகல் வேளை. அந்த நேரத்திலும் இக்கோயில் மிக மிக இருளடைந்து காணப்பட்டது. மீண்டும் வெளியே வந்த போது மறுபிறப்புப் பிறந்தவன்போல உணர்ந்தேன். அவ்வளவு இருள் அடர்ந்து அச்சமாக இருந்தது.

பெரிய சிவன் கோயில்களிலே, பிள்ளையார் கோயிலும் முருகன் கோயிலும் இப்போது காணப்படுகின்றன. இக் கோயில்களும் பிற்காலத்திலே ஏற்பட்டவை. முருகனுக்கும் கணபதிக்கும் தனித் தனியாகப் பண்டைக் காலத்தில் கோயில்கள் இருந்தது உண்மையே. ஆனால், சிவன் கோயிலுக்குள் பரிவார ஆலயங்களாக, முருகன், கணபதி, அம்பிகை முதலியவர்களுக்குத் தனித் தனியே பண்டைக் காலத்தில் ஆலயங்கள் இல்லை.

பதினாறுகால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரக்கால் மண்டபம் முதலிய மண்டபங்களும் சோழர் காலத்திலும் அதற்குப் பிற்காலத்தில் ஏற்பட்டவையே.

கோயில்களின் வாயில்களில் இப்போதுள்ள முகப்புக் கோபுரங்கள் பண்டைக் காலத்தில் இல்லை. இக் கோபுரங்கள் பிற்காலத்திலே, விஜயநகர அரசனான கிருஷ்ணதேவர் காலத்திலே ஏற்பட்டவை. இவற்றிற்கு இராயகோபுரம் என்று பெயர் உண்டு. சிவன் கோயில்களிலே சனீசுவரன் கோயில், நவக்கிரகக்கோயில் என்பவை மிகப் பிற்காலத்திலே புதிதாகச் சேர்க்கப்பட்டவை.

வைணவக் கோயில்

பெருமாள் கோயில்களிலும் கி. பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு “தாயார் சந்நிதி” இருந்ததில்லை. சைவ சமயமும் வைணவ சமயமும் தனித்தனி மதமாகப் பிரிந்த பிறகு, சைவர்கள் சிவன் கோயிலில் அம்மனுக்குத் தனியாக ஆலயம் அமைத்துக் கொண்டது போல, வைணவர்களும் திருமகளுக்குத் “தாயார் சந்நிதி” அமைத்துக் கொண்டார்கள். அன்றியும் ஆழ்வார்களுக்கும் ஆசாரியார்களுக்கும் மற்றும் தெய்வங்களுக்கும் உருவங்கள் அமைத்து வழிபட்டார்கள். ஆகவே, பெருமாள் கோயில்களிலும் வெவ்வேறு ஆலயங்களும் மண்டபங்களும் புதிதாக அமைக்கப்பட்டன.