கிறித்தவக் கீர்த்தனைகள்
105
‘கிறித்தவக் கீர்த்தனம்' என்னும் அவருடைய பாடல் நூல் கிறித்துவில் அவர் கொண்டிருந்த பக்திக்கும் பற்றுமைக்கும் சான்றாக வெளிவரல் வேண்டும் என்பது இறைவரின் திருவுளச் சித்தமாகும் என்பது தோன்றுகின்றது.
கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் முன்னால் என்னிடம் கொடுக்கப்பட்ட இந் நூலின் இரண்டு அட்டைகளும் கிட்டவில்லை, நூற்பொருளுக்கு முற்பட்ட பக்கங்களும் கிட்டவில்லை. எனவே இது முதலில் எப்பொழுது பதிப்பிக்கப்பட்டது என்பது தெரியாத நிலையில் வேதாகம மாணவர் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவரும் முதல் பதிப்பு என்றே குறித்துள்ளேன்.
கடவுள் வாழ்த்து முதல் ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் ஈறாக 28 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன; கடவுள் வாழ்த்து நீங்கலாக 51 பக்திப்பாடல்கள் உள்ளன. இன்றைய திருச்சபை பெரிதும் தமிழ் இசையை மறந்து இருக்கும் நிலையில் இப் பாடல்களை விரும்பிப் போற்றுதல் வேண்டும். தமிழ் அன்பர்கள் ஒவ்வொருவரும் போற்ற வேண்டிய பாடல்கள். கிறித்து பெருமானின் முழுவாழ்க்கையும் பாடப்பட்டுள்ளது. அவருடைய சிலுவைப்பாடுகள் நூலின் பெரும் பகுதியாக அமைந்துள்ளது. திருச்சபைக்கு எச்சரிப்பு, கிறித்துவின் இரண்டாம் வருகை, நடுத்தீர்ப்பு, கிறித்து பெருமான் திருமணவாட்டியாம் திருச்சபையில் மேன்மை பெறுதல் வரையில் நிறைவாக நூல் அமைந்துள்ளது.
வேதாகம மாணவர் பதிப்பகத்தின் வாயிலாக இந் நூலினை வெளியிடுவதற்கு முழு உரிமையும் வழங்கிய நேசமணி பதிப்பகத்தின் உரிமையாளர், பாவாணரின் மகனார் திருவாளர் தே. மணி அவர்கட்கும், பாவாணர் குடும்பத்தார்க்கும் என் நன்றி உரித்தாகுக.
இந் நூலுக்கு ஏற்ற ஒரு முகவுரை எழுதி உதவிய பாவலர், பேராசிரியர் பொ. ஆ. சத்திய சாட்சியார் அவர்களுக்கு என் பணிவார்ந்த நன்றி உரித்தாகுக. இந் நூல் வாயிலாக இயேசு கிறித்து பெருமான் பலருக்கு நன்மை
வழங்கி அருள்புரிவாராக.
இரட்சணிய யாத்திரிக நிலையம்
23-4-1981
மகாகவி எ.ஆ. கிருட்டிணர்
பிறந்த திருநாள்
கிறித்து இயேசுவின் ஊழியன்
வீ. ஞானசிகாமணி