உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/காந்தாமணியின் கடிதம்

விக்கிமூலம் இலிருந்து

39. காந்தாமணியின் கடிதம்

காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. உருண்டு விழுந்தவன் எழுந்திருக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடட்டுமே! -

உள்ளுரிலும் சரி, வெளியூர்களிலும் சரி, ஹரி ஒவ்வொரு கச்சேரிக்கும் சுசீலாவையும் கூடவே அழைத்துக் கொண்டு சென்றான்; அவனோடு சேர்ந்து அவள் போகாத இடம் இல்லை; பார்க்காத ஊர் இல்லை. சுசீலா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, ஒரு நாள் ஹரி கேட்டான்: “அவரவர்களுக்கு உரிய பொருளை, அவரவர்களிடம் சேர்த்து விட வேண்டாமா? இனியும் எனக்கு வந்த காந்தாமணியின் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு, என் கண்ணில் காட்டாமல் இருக்கலாமா சுசி?”

அவ்வளவுதான், ஹரி இதைக் கேட்டு முடிப்பதற்குள், ஐப்பசி மாதத்து ஆகாயம் போல் எங்கிருந்தோ குபீர் என்று பொங்கி வந்த துயரம் அவள் உள்ளத்தை அப்பிக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கி விட்டாள். அதன் பிறகு ஹரி எத்தனை முயன்றும், அவளைச் சமாதானம் செய்ய முடியவில்லை.

“கடிதத்தை நான் உன்னிடம் கேட்டது பிசகு. அதை நீ என்னிடம் கொடுக்கவே வேண்டாம். தவறாக எண்ணி அழக் கூடாது” என்று கெஞ்சினான்.

இதற்குள், “ஹரி, என்ன பண்ணினாய்?” என்று லட்சுமியம்மாளும், காயத்திரியும் அங்கு வந்து விட்டனர்.

“வாயும், வயிறுமாய் இருப்பவளை இப்படி அழ விடலாமா ஹரி? என்னதான் நடந்தது? என்ன செய்து விட்டாய்?” என்று ஹரியைக் கண்டித்த வண்ணம், “அழாதே சுசீலா; நல்ல உடம்பா? இப்படிக் குலுங்கிக் குலுங்கி அழுதால், தாங்குமா? உள்ளே வா” என்று லட்சுமியம்மாள் அழைத்துச் சென்று விட்டாள்.

பிறகு காயத்திரி, ஹரியிடம் சண்டையின் காரணம் கேட்டாள். ஹரி நடந்ததைக் கூறினான்.

“இதைக் கேட்க, உனக்கு இப்போதுதான் சமயம் கிடைத்ததா? இவ்வளவு நாளைக்கு அப்புறமும், உனக்கு ஏன் அவள் ஞாபகம் போகவில்லை ஹரி?”

“நாட்கள் ஆனால், மறந்து விட வேண்டியதுதானா? நல்லவர்கள், கெட்டவர்கள் என்று ஒன்றும் இல்லையா? அந்தக் கடிதம் எனக்கு வந்தது; என் கையில் சேர்க்க வேண்டியதுதானே நியாயம்?”

“யார் கண்டார்கள்? உனக்கு வந்தது என்று, அவள் உன்னிடம் சொன்னாளா?”

“நீங்கள் பார்க்கவில்லையா?”

“இல்லை. அவள் அதை யார் கண்ணில் காட்டினாள்? ஆயினும், நானும் பார்க்க வேண்டும் என்றுதான் இருக்கிறேன். சொன்னால்,. மூளையைப் போட்டுக் குழப்பிக் கொள்வாயோ என்று பயந்துதான் நான் சொல்லவில்லை.”

“இதில் என்ன குழப்பிக் கொள்ள இருக்கிறது?”

“இல்லாமல் இருந்தால் சரிதான். இங்கே வா” என்று அழைத்த காயத்திரி, உள்ளே இருந்த சுசீலாவின் காதில் விழாதவாறு, ஹரியிடம் ஒன்று கூறினாள்; அதைக் கேட்டதும், ஹரி திடுக்கிட்டான்.

“பார்த்தாயா? அதுதான் நான் உன்னிடம் இது நாள் வரை சொல்லவில்லை. சொன்னபடி அலட்டிக் கொள்ளாமல் இரு. சாயங்காலம் அடையாற்றில் கச்சேரி இருக்கிறது இல்லையா?”

“ஆமாம், பிறந்த நாள் கச்சேரி. பெரிய மிராசுதாருடைய பங்களாவில். அவர் யார் தெரியுமா?”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“பூங்குளம் சின்ன மைனர் என்று பெயர். பெரிய பணக்காரர். சிறந்த சங்கீத ரசிகருங்கூட. அவர் தந்தையின் திருமணந்தான், நான் அப்பாவை வந்து அடைவதற்கு வழிகாட்டியாக இருந்தது” என்று பழைய கதையை நினைப்பூட்டி விட்டு, “கச்சேரிக்கு சுசீலாவையும் அழைத்துக் கொண்டு போகவா?” என்றான் ஹரி.

“அவளைச் சமாதானம் பண்ண அதுதான் வழி. இனி மேல், பட்டணத்துக் கச்சேரிகளுக்கெல்லாம் எங்கே வர முடியும்? சுற்றிச் சுற்றி சுவாமி மலைதான்” என்றாள் காயத்திரி.

“நீங்களும் வருகிறீர்களா அக்கா?”

“அழகுதான்; மறுபடியும் சண்டைக்கு அஸ்திவாரம் போடுகிறாயா? இன்னும், நாலு நாள் பொழுதைக் கௌரவமாக ஓட்டி விட்டு, ஊரைப் பார்த்துப் புறப்பட வேண்டுமே என்று சுவாமியை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.”

“ஊருக்குப் புறப்பட நாள் கூடப் பார்த்தாயிற்றா?”

“ம். புதன்கிழமை.”

“ஐயா இப்போது எங்கே?” என்று கேட்டான் ஹரி.

“டாக்டரோடு போயிருக்கிறார்.”

“ஏதோ மந்திர சக்தியினால் எழுப்பி, உட்கார்த்தி விட்டாற் போலில்லை.”

“ஆமாம்! எத்தனை ஆபரேஷன், எத்தனை ஊசி, எத்தனை எக்ஸ்ரே, புட்டி புட்டிகளாக எவ்வளவு டானிக்! பெரிய மகராஜாக்களுக்குக் கூட இந்த மாதிரி வைத்தியம் நடக்காது; இல்லாவிட்டால், அப்பாவாவது எழுந்திருக்கவாவது! அத்தனையும் உன்னால்தானே?” என்று பெருமிதமாக ஹரியைப் பார்த்தாள் காயத்திரி.

“இல்லை, அவரால்தான் நான். அவருடைய பெருமைதான் அவருக்கு வேண்டியதையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறது. இப்படி வேறு யாருக்கும் நடக்காது.”

“எப்படியோ; அப்பா எழுந்து நடந்து விட்டார். சுவாமிநாதன் கிருபை.”

மாலையில் ஹரி கச்சேரிக்குப் புறப்பட்ட போது, சுசீலா ஒன்றுமே நடவாதது போல்; கூடப் புறப்படுவதற்குத் தயாராகத் தன்னைச் சிங்காரித்துக் கொண்டிருந்தாள்.

“அக்கா, இந்தப் பூவைக் கொஞ்சம் தலையில் வைத்து விடுகிறாயா?”

எங்கோ சுற்றிக் கொண்டு வந்த காயத்திரி, சுசீலாவின் குரலைக் கேட்டுத் திரும்பினாள். நிலைக் கண்ணாடியில், தங்கையின் அழகைக் கண்டு, காயத்திரியே வியந்து போய் நின்று கொண்டிருந்தாள்.

களி உவகை பொங்க; தனது இனிய மணத்தை உலகெங்கும் பரப்பும் வசந்த காலத்தின் முதல் பருவம் போல்; சுசீலாவின் ஒவ்வொரு அங்க அசைவிலும் அழகு பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.

நீண்ட கருநாகம் போன்று வளைந்து தொங்கிய கூந்தலின் மீது சீப்பு ஓடிய தடம் பளபளத்தது. ஏதோ ‘சென்ட்’ கடைக்குள் நிற்பது போலிருந்தது காயத்திரிக்கு. பவுடரைக் கைகளில் கொட்டி, சுசீலா முகத்தில் பூசிக் கொண்ட போது, தாமரைக் கொடியன்ன கரங்களில் வளையல்கள் சலங்கை கட்டியது போல், அசைந்து ஒலித்தன. தங்கத்தினாலான மயிற்பதக்கம் - மங்களபுரி மகாராணி ஹரிக்குப் பரிசளித்தது - சுசீலாவின் மார்பில் தவழ்ந்தது.

உடலெல்லாம் ஜரிகை இழை ஓடிய நீல நிறப் பட்டுப் புடவைக்குப் பொருத்தமான உயர்ந்த ரகச் சோளியை அணிந்திருந்தாள். வெள்ளிக் கிண்ணத்தில் துள்ளும் கெண்டை மீனை ஒத்து, விழிகள் அஞ்சனம் தீட்டப்பட்டு, கருவண்டெனச் சுழன்று கொண்டிருந்தன. மாதுளை மொக்கு நிகர்த்த உதடுகள் தாம்பூலம் தரித்து, ரத்தச் சிவப்பேறி, அவளுடைய பொன் நிறத்துக்கு முத்திரை குத்தியது போலிருந்தது. காயத்திரி தன் பின்னால் நிற்பதைத் தெரிந்து கொண்ட சுசீலாவின் செவ்விதழ்களில், புன்னகை தவழ்ந்து மின்னியது.

தன் அழகை அவளே வியந்து கொண்ட வண்ணம், எதிரில் இருந்த பூப்பந்தை எடுத்து காயத்திரியின் கையில் கொடுத்து விட்டுத் திரும்பிக் கொண்டாள்.

காயத்திரி அதைச் சுசீலாவின் தலையில் சூட்டி விட்டு, “கண்ணேறுதான் படப் போகிறது!” என்று ஒரு திருஷ்டிப் பொட்டும் வைத்து அனுப்பினாள்.

எதிரில் வந்து நின்ற சுசீலாவைக் கண்டு, ஹரி கிறங்கிப் போனான். ‘பொங்கி வழியும் இத்தனை அழகையும், இவ்வளவு நாள் எங்கே ஒளித்து வைத்திருந்தாள்!’ என்று அவன் வியப்புடனேயே, சுசீலாவையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

ரண்மனை மாதிரி இருந்த மைனரின் பங்களா, விசேஷ அலங்காரங்களுடன் காட்சியளித்தது. ஹரியும், சுசீலாவும் காரிலிருந்து இறங்கியதுமே, காரியஸ்தர்கள், அவர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றனர்.

பூங்குளம் சின்ன மைனர் ஹரியையும், சுசீலாவையும் அன்புடன் வரவேற்று, அருகிலேயே அமர்த்திக் கொண்டார். மைனருக்குப் பின்னால், இடுப்பில் குழந்தையுடன் நின்ற காந்தாமணியைப் பார்த்ததும், ஹரி திடுக்கிட்டான். சுசீலாவோ, அவள் அழகைக் கண்டு பிரமித்து, கண்ணை இமைக்கவும் மறந்தாள். ஹரிக்கு எல்லாமே புரிந்து விட்டது.

“மன்னிக்க வேண்டும், உடம்பு சரியில்லாததினால்தான், உங்களை வாசலிலேயே வந்து வரவேற்க வர முடியவில்லை” என்று மைனர் சொன்ன போது, ஹரி அவர் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

காந்தாமணி குழந்தையைக் கையிலிருந்து இறக்கி விட்டு, அருகில் இருந்த வெள்ளித் தட்டைச் சுசீலாவின் கையில் கொடுத்து, ஹரியையும், சுசீலாவையும் தனித் தனியாக வணங்கினாள்.

“கச்சேரிப் பணம் என்று எண்ணி விடாதீர்கள். இது என் மனைவி காந்தாமணியின் குருதட்சிணை” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைனர்.

தட்டில், ஜரிகைப் பட்டு, பொன், பூ, பழத்துடன், ஐயாயிரம் ரூபாய் பணமும் இருந்தன. சுசீலா விழியசைக்க மறந்தாள்.

“என்னைத் தெரிகிறதா?” என்று சுசீலாவிடம் கேட்டாள் காந்தாமணி.

“தெரிகிறது”, என்று - தாயும், மகளுமாக அப்பாவிடம் சிக்ஷை கற்றுக் கொள்ள, தன் வீடு தேடி வந்த பழைய சம்பவத்தை நினைவு படுத்திக் கொண்டு சொன்ன வண்ணம்—தட்டை ஹரியிடம் கொடுத்து விட்டு, காந்தா மணியின் குழந்தையைத் தன் இடுப்பில் ஏற்றிக் கொண்டாள் சுசீலா. அந்தக் குழந்தையைத் தீண்டிய போது, ‘காந்தாமணி இப்போது யாருக்கோ மனைவி ஆகி விட்டவள்; இவளைப் பற்றி எவ்வளவு தவறுதலாக எண்ணி விட்டோம்!’ என்ற கழிவிரக்கம் அவளுக்கு உண்டாயிற்று.

மைனரின் குழந்தைக்குப் பிறந்த நாள் பரிசாகத் தான் வாங்கி வந்திருந்த பொருளை சுசீலா, குழந்தையிடம் கொடுத்தாள். குழந்தை அதை காந்தாமணியிடம் நீட்டியது.

விசேஷ அழைப்பின் பேரில் வந்திருந்த பிரமுகர்கள், ஹரியின் பாட்டைக் கேட்டு பிரமித்துப் போயினர். அந்த இடத்திலேயே மைனர் மூலம், ஹரிக்கு பல பெரிய மனிதர்கள் வீட்டுத் திருமணக் கச்சேரிக்கு ஒப்பந்தமேற்பட்டது.

கச்சேரி முடிந்து திரும்பிய போது; ஹரியைப் போலவே சுசீலாவின் உள்ளமும் குளிர்ந்திருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும், அவள் பரபரவென்று யைத் திறந்தாள், “கடிதம் கடிதம் என்று நிதம் ஒரு சண்டை போட்டீர்களே, இதோ இருக்கிறது; இது உங்களுக்கு வந்த கடிதமா? என் அக்காவுக்கு வந்தது; அதைக் கேட்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? போனால் போகிறது. இந்தாருங்கள் காந்தாமணி அம்மாள் என்ன எழுதியிருக்கிறாள் என்று படித்துப் பாருங்கள்!” என்றாள் சுசீலா ஒய்யாரமாக.

ஹரி வேகமாகக் கடிதத்தைப் படித்தான்:

ன்புள்ள காயத்திரி அக்கா அவர்களுக்கு, காந்தாமணி வணக்கமாக எழுதியது. தங்கள் கடிதம் கிடைத்தது. தாங்கள் என்னைப் பற்றி மட்டும் அல்ல, ஹரி அவர்களைப் பற்றியும் தவறுதலாக எண்ணி விட்டீர்கள். குருவை மீறி, ஹரி அவர்களால் ஒரு தவறும் செய்ய முடியாது என்பதைத் தாங்கள் நம்ப வேண்டும். என்னைப் பற்றிய வரையில் பயப்படாதீர்கள். நான் விலகிக் கொள்கிறேன்.”—