உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

171


சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவிமுகை அவிழ ஈங்கை
நல்தளிர் நயவர நுடங்கும்
முற்றா வேனில் முன்னிவந் தோரே!

தோழி! வீரமறவரது கையிடத்துள்ள வேற்படையினைப்போல, விரிந்த மேற்கதுப்பாகிய தோலையுடைய வெள்ளி வட்டிலைப் போன்ற வெள்ளிய மலர்களைப் பகன்றையானது மலர்ந்திருக்கும், கடிய முன்பனியை உடையது அற்சிரக்காலம். அக்காலத்தே, நாம் நடுக்கங் கொள்ளுமாறு நம்மைப் பிரிந்து போயினவர் நம் தலைவர். கண்டினபுறத்தக்கபடி சமைக்கும் கைவினைத் தொழிலிலே வல்லானாகிய தொழில் வல்லான் ஒருவன். கற்களையிட்டு இழைத்துச் செய்த பொன்னாலாகிய சுரிதகத்தின் வடிவத்தை உடையவாகிப் பெரிய கோங்கினது குவிந்திருந்த முகைகள் மலர்ச்சி கொள்ளும். ஈங்கையது நல்ல தளிர்கள், கண்டார் விருப்புறும் வண்ணம் நுடக்கம் பெற்று விளங்கும். இத்தகைய முதிராத இளவேனிற் காலத்தினைக் கருதினராக, நம் தலைவரும் நம்பால் வந்து சேர்ந்தனர். அவர்தாம் அறநெறியாளர்! அவர் நெடிது வாழ்வாராக.

கருத்து : 'சொன்ன சொற் பிழையாராய் அவரும் குறித்த காலத்தே வந்தனர்; இனி நீயும் நின் வாட்டத்தைக் கைவிட்டுக் கூடி மகிழ்ந்திருப்பாயாக' என்பதாகும்.

சொற்பொருள் : அறவர் – அறநெறியாளர்; வாய்ம்மை தவறாதவர். கதுப்பு – பூவின் புறவிதழாகிய மேல் தோடு. பாண்டில் – வட்டில்; பகன்றைப்பூ வட்டிலைப் போல்வதென்பது, 'பகன்றை, நீலுண் பச்சை நிறமறைத் தடைச்சிய, தோலெறி பாண்டிலின், வாலிய மலர' (அகம். 217:6–8) என்பதனாலும் விளங்கும். அற்சிரம் – முன்பனி; மார்கழி தை மாதங்கள். தையுபு சொரிந்த – இட்டு இழைத்துச் செய்த. சுரிதகம் – தலையணி; முறுக்கிட்டுச் செய்யப்படும் கற்பதித்த ஒரு நகை. நுடக்கம் – தள்ளாட்டம்; மெல்லென அசைந்தாடுதல். முன்னி – கருதி.

விளக்கம் : மார்கழி தையாகிய முன்பனிக் காலத்தே வினைமேற் பிரிந்து சென்றானாகிய தலைவன் இளவேனிற் பருவத்தே மீண்டு வந்ததனால், குறித்தபடி வந்த மகிழ்வைத் தோழி கூறிப் பாராட்டுகின்றாள். கோடையிற் பிரிந்து கார்த் தொடக்கத்தில் மீள்வதே பொதுமரபாக, இது கால-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/172&oldid=1681597" இலிருந்து மீள்விக்கப்பட்டது