உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

175


சொற்பொருள் : தொல்வினை – பழவினை: ஊழ்வினை. பேதுறல் – மயங்கியழிதல், புணர்திரை – பொருந்திய அலைகள். கடல்விளை அமுதம் – உப்பு. உருகி உகுதல் - கரைந்து அழிந்து போதல். தம்மோன் – தம்மை உடையானாகிய தலைவன். எற்றி – நினைந்து. நயம் – அன்பு. பழமுதிர் குன்று – பழம் உதிரும் குன்றம்: பழம் உண்பாரற்று மரங்களிடத்தேயே முதிர்ந்து கிடக்கின்ற வளமுடைய குன்றமும் ஆம்; ஆசிரியர் நல்லந்துவனாரின் பாடலாதலின், இச்சொற்கள் பழமுதிர் சோலைக் குன்றத்தைக் குறிப்பவும் ஆகலாம்.

விளக்கம் : 'கூட்டிய தொல்வினையானது விரைந்து வரைந்து கோடலைச் செய்யுமாறு தலைவனைத் தூண்டாதுபோயின். அதற்கு யாம் மயங்குவது எதற்காகவோ' என்பாள், 'யாம் செய் தொல் வினைக்கு எவன் பேதுற்றனை?' என்கின்றாள். கூட்டிய அது மீளவும் மணவினையால் ஒன்றுபடுத்துதலையும் தவறாதே நிகழ்த்தும் என்பதாம். மழைவாய்ப்பட்ட உப்புக் குன்றம் கரைந்து ஒழிதலைப் போலக் காமநோயின் வாய்ப்பட்ட தலைவியின் உடலும் சோர்ந்து அழிகின்றது என்கின்றார். 'குன்றம் அருவியாக அழும்' என்றது, அதற்குரிய அன்பு தானும் அவர்பால் இல்லாதாயிற்றே என வருந்தியதாம். இவற்றைக் கேட்கும் தலைவன். விரைய மணந்து கொள்ளற்கான முயற்சிகளைக் கடிதாக மேற்கொள்வான் என்பதும் தெளிவாகும்.

உப்பு மழையிலே 'அழிதலைக் காமநோயால் நெஞ்சழியும் தலைவியரது நிலைக்குப் பிறரும் உவமிப்பர். 'உப்பியல் பாவை உறையுற்றதுபோல, உக்கு விடும் என் உயிர்' (கலி 138) எனவும், 'சுடும்புனல் நெருங்க உடைந்து நிலையாற்றா, உப்புச் சிறைபோல் உண்ணெகிழ்ந்துருகி (பெருங்.3.20)' எனவும், 'உப்பு ஒய் சகடம் பெரும்பெயல் தலைய வீழ்ந்தாங்கு' (குறுந் 165) எனவும் வருவன காண்க.

'கண்ணீர் அருவியாக, அழுமே தோழி, அவர் பழம் முதிர் குன்றே' என்பதனாற் குறித்த கார்காலத்தினது வரவினைக் காட்டி உரைப்பதும் ஆகும்.

மேற்கோள் : இது பிரிவிடைத் தோழி இயற்பழித்து வற்புறுத்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் – (தொல். பொருள்.சூ.114. உரை மேற்கோள்.)

பாட பேதங்கள் : உருகி அல்குதல் அஞ்சுவல்; நம்வயின் ஏற்றி; சுழலுமே தோழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/176&oldid=1683148" இலிருந்து மீள்விக்கப்பட்டது