நற்றிணை தெளிவுரை
203
கருத்து : 'அவளை இப்போது நினைவூட்டிக் கலக்கமுறச் செய்யும் நீதான், எதற்காகப் பொருளார்வத்தைத் தூண்டினையாய், இக் காட்டுவழியிடை என்னைச் சேர்த்தனை?' என்பதாம்.
சொற்பொருள் : 'பெரிய' – பெருங்கிளை; பெருமரமும் ஆம். முன்பு – வலிமை 'நீரல் ஈரம்' என்றது. களிறு தான் நின்றவிடத்துச் சிறுநீர் கழித்ததனாலே உண்டாகிய ஈரமாகும். மாயா வேட்டம் – தப்பாத வேட்டை. பிணவு – செந்நாயின் பெட்டை, 'விருந்தின் காடு' – பழகிய வழியில்லாதாய்க் கிடக்கும் காடு.
விளக்கம் : 'பாலவி தோல்முலைப் பிணவு' என்றது. கோடையின் வெம்மை மிகுதியை விளக்குதற் பொருட்டு. அதன் கணவன் அதனை நினைந்து இரங்குதலைக் காணும், தன்பாலும் தலைவிபாற் சென்று சேர்தற்கான நினைவு எழுதலை இவ்வாறு கூறுகின்றான். இனி 'வேட்டம் போகிய கணவனை நினைந்தபடி பெண்நாய் இரங்கும்' என்று கொண்டு, 'அவ்வாறே தன்னைப் பிரிந்த தலைவியும் வருந்தி நலனழிந்திருப்பாள்' என்பதுமாம். பைங்கட் செந்நாயினத்தின் பசியட முடங்கிய பொய்யாமரபின் பிணவானது, தன் துயரத்தை நினையாதாய்த் தன் கணவன் வேட்டம்போகிய விடத்து, வெம்மையால் துன்புறும் துயரத்தை நினைந்து இரங்குமாறுபோலத் தலைவியும் பிரிவால் நலிந்தழிந்த தன் நிலையைக் கருதாளாய்த், தலைவனது வழியிடை உண்டாகும் நலிவை நினைந்தே கலங்கியிருப்பாள் என்று கூறுவதாகவும் கொள்க.
உள்ளுறை : 'செந்நாயின் ஆணும் தான் பிரிந்துவந்த பிணவினை நினைந்து இரங்கும் வெங்காடு' என்றது. அதற்குள்ள காதற் பாசமும் இல்லாதே தான் தலைவியை நீத்துப் பிரிந்துவந்த கொடுஞ்செயலை நினைந்து கூறியதாம்.
பிறபாடம் : சிறியிலை வேலம்: வேலம் – கருவேலம் : முள்மர வகையுள் ஒன்று
104. நினைவோர் உளரோ!
- பாடியவர் : பேரிசாத்தனார்.
- திணை : குறிஞ்சி
- துறை : தலைவி ஆறுபார்த்து உற்ற அச்சத்தால் சொல்லியது.