உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

நற்றிணை தெளிவுரை


அத்த இருப்பைப் பூவின் அன்ன
துய்த்தலை இறவொடு தொகையீன் பெறீஇயர்
வரிவலைப் பரதவர் கருவினைச் சிறாஅர்
மரன்மேற் கொண்டு மான்கணம் தகைமார்
வெந்திறல் இளையவர் வேட்டுஎழுந் தாங்கு 5
திமில்மேற் கொண்டு திரைச்சுரம் நீந்தி
வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி
நிணம்பெய் தோணியர் இதமணல் இழிதரும்
பெருங்கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி! கொண்கன் தேரே. 10

தோழி! பரதவர் வரிந்த வலையைக் கொண்டு மீன் வேட்டம் கொள்பவர். அப் பரதவரின் வலிமிகுந்த தொழிலாண்மையினைக் கொண்டிருக்கும் அவரது சிறுவர்கள், மான் கூட்டத்தை அகப்படுத்தக் கருதும் வேட்டுவரது வெவ்விய ஆற்றலையுடைய இளையர்கள். மரனிடத்தே தங்குதலை மேற்கொண்டாராய் வேட்டைக்கு எழுந்தாற்போல, மீன்பிடி படகின்மேல் ஏறிக்கொண்டாராய்க் கடற்கண் புகுவாராயினர். சுரத்திடத்துள்ள இருப்பைப் பூவினைப் போன்றதான துய்யுடைத் தலையினைக் கொண்ட இறால் மீனொடு, மற்றும் தொகுதியான மீன்களையும் பெற்றுவரக் கருதி, அவர்கள் எழுந்தனர். கடற்பரப்பாகிய சுரத்தினைச் கடந்துபோய், வாள்போன்ற வாயையுடைய சுறாமீன்களோடு மற்றும் கொழுமையான வலிய மீன்களையும் பற்றி வாரிக்கொண்டு வருவர். அவற்றின் நிணம் பெய்யப்பெற்ற தோணியராக அவர்கள் திரும்பிவரும் கடற்கரைப் பகுதியிலே, மணலைக் காற்றுச் சொரிந்தபடியிருக்கும் பெரிதான கழியிடத்துப் பாக்கமானது, கல்லென்னும் ஒலியோடு ஆரவாரிக்குமாறு, நம் தலைவனது தேரும் இனி விரைவில் வாரா நிற்கும்.

கருத்து : 'மணவினை விரைவிற் கைகூடுமாதலின் நீதான் அதுவரை பொறுத்து ஆற்றியிருப்பாயாக' என்பதாம்.

சொற்பொருள் : அத்தம் – சுரநெறி. துய்த்தலை – துய்யையுடைய மேற்பகுதி, தொகைமீன் – தொகுதி கொண்ட மீன்கள். கருவினை – வலியோடு தொழிலாற்றும் திறன். மரன் – மரம்: 'மரல்' எனவும் பாடம்; மரல் – மரற்களனி. நிணம் - ஊன். இகுமணல் – காற்றாற் சொரிந்து குவிக்கப் பெறும் மணல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/219&oldid=1689901" இலிருந்து மீள்விக்கப்பட்டது