உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

நற்றிணை தெளிவுரை


'இரைதேர் எண்கின் பகுவாய் ஏற்றை
கொடுவரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி.
நல்லரா நடுங்க உரறிக் கொல்லன்
ஊதுலைக் குருகின் உள் உயிர்த்து, அகழும்
நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம்' என, 5
வரைந்து வரல் இரக்குவம் ஆயின், நம்மலை
நல்நாள் வதுவை கூடி நீடுஇன்று
நம்மொடு செல்வர்மன் தோழி! மெல்ல
வேங்கைக் கண்ணியர் எருதுஎறி களமர்
நிலம்கண் டன்ன அகன்கண் பாசறை 10
மென்தினை நெடும்போர் புரிமார்
துஞ்சுகளிறு எடுப்பும்தம் பெருங்கல் நாட்டே.

தோழீ! இரையினை விரும்பித் திரிகின்ற அகன்ற வாயையுடைய ஆண்கரடியானது, வளைந்த வரிகளைக் கொண்ட புற்றத்தினை வாய்ப்பாகப் பெயர்க்கும். அப்புற்றத்தினுள்ளே குடியிருக்கும் நல்லபாம்பு நடுக்கங் கொள்ளுமாறு முழக்கமிடும் கொல்லனது ஊதுகின்ற உலையினது மூக்கைப்போலச் கடுமூச்செறிந்தபடி தோண்டிக்கொண்டுமிருக்கும். அத்தகைய இரவின் நடுயாமத்தே, நீயிரும் அவ் வழியூடு வருவீர், 'அங்ஙனம் வருதலை நினைத்து யாம் பெரிதும் அஞ்சுகின்றோம்' என்று கூறி, இனி வரைந்து வருதலை அவனிடத்தே நாமும் வேண்டுவோம். அங்ஙனம் வேண்டுவோமாயின், நம் மலையிடத்தே, நல்ல நாளிலே, நம்மோடு வதுவை கூடுதலையும் அவர் நிகழச் செய்வர். அதன்பின், மேலும் காலத்தை நீட்டிக்கவிடாதாராய், வேங்கைமலர்ச் கண்ணிகளைச் சூடியவரான குறவர்கள், எருதுகளை ஓட்டிக் கதிர்களைத் துவைக்கும் உழவர்களது வயற்புறத்திற் காணுமாறுபோல, அகன்ற இடத்தையுடைய பாறையிடத்தே மென்தினையின் நெடிய போரினைத் துவைக்கும் பொருட்டாகத், தூங்கியிருக்கும் களிறுகளை எழுப்பிக்கொண்டிருக்கும் தன்மையுடைய தம்முடைய பெரிதான மலைநாட்டிடத்திற்கு, நம்மோடும் மெல்லச் சென்று சேர்தலையும் செய்வர் காண்!

கருத்து : 'நின்னை மணந்து தம்முடன் தம் வீட்டிற்கும் அழைத்துக் கொண்டு செல்வார் தலைவர்; ஆதலின் வருத்தமுறாதே' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/245&oldid=1692150" இலிருந்து மீள்விக்கப்பட்டது