உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

351


[(து–வி) வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச்சென்ற காலம் கடந்துகொண்டே போயிற்று. அதனால், தலைவி பெரிதும் ஆற்றாமை உடையவளாயினான் அதனைத் தோழியும் அறிந்தாள். அந்த ஆற்றாமையினைத் தீர்க்கும் வகையினை நாடினாள். தலைமகளை விரைந்து வரைந்து வருதற்குத் தூண்டுதற்கும் நினைத்தாள். ஒரு நாள், அவன் குறியிடத்திற் சிறைப்புறமாக வந்து நிற்பதை அறிந்தவள், தான் தலைவிக்குச் சொல்வாளைப் போல, அவன் உள்ளத்திலும் பதியுமாறு இப்படிக் கூறுகின்றாள்.]

நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன நிற்புறங் காக்கும்
சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள்
கெடுத்துப்படு நன்கலம் எடுத்துக்கொண் டாங்கு 5
நன்மார்பு அடைய முயங்கி மென்மெலக்
கண்டனம் வருகம் சென்மோ தோழி!
கீழும் மேலும் காப்போர் நீத்த
வறுந்தலைப் பெருங்களிறு போலத்
தமியன் வந்தோன் பனியலை நீயே! 10

தோழி! நிலவும் வானத்தினின்றும் மறைந்துபோயிற்று. அதனால் இருளும் எங்கணும் பரலியுள்ளது. ஓவியமாக எழுதி வைத்தாற்போலத் தோன்றும் அழகிய இடத்தையுடையது நம் இல்லம்; அதன் எல்லைகண்ணே விளங்கும் சித்திரப் பாவைகள் போன்ற நம்மைப் புறத்தே போகாதபடியாகக் காத்திருக்கும் சிறந்த மேம்பாட்டையுடைய அன்னையும் உறங்கிப்போயினள். கீழாக நடத்திச் செல்வாரும் மேலாக அமர்ந்து செலுத்துவாருமாகிய இருவருமே விட்டகன்ற, வறிய தலையையுடைய பெருங்களிற்றைப் போலத் தலைவனும் தமியனாக வந்திருப்பான். பெய்கின்ற பனி வருத்துதலினாலே துன்புற்றிருக்கும் அவனுடைய நிலைதான் இரக்கத்தக்கது. அறியாதே கெட்டுப்போகிய நல்ல அணிகலன் ஒன்றனை மீளவும். கண்டெடுத்துக் கொண்டாற் போல, அவனுடைய நன்மை விளங்கும் மார்பினைச் சேரத்தழுவி எடுத்துக் கொள்வோம்; மெல்லமெல்லச் சென்று அவனைச் கண்டு வருவோம்; செல்வோமோ? நீயும் இனிக் கண்ணீர் பெருக்கி வருந்தாதே கொள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/352&oldid=1706379" இலிருந்து மீள்விக்கப்பட்டது