உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

361


வேனிலிடையே அகப்பட்டுக் கொண்டு நிறமாறிய ஓந்திப் போத்தானது. அவ்வழியே செல்லும் பாணர்கள் தம் யாழினை மீட்டி இசைப்பக்கேட்டுத் தன் துயரை மறந்ததாய் அருகிலிருக்கும் நெடிய நிலையைக் கொண்ட யாமரத்தின் மேலாக எறுந் தொழிலைச் செய்தபடி இருக்கும். அத்தகைய காட்டினூடாகச் செல்லும் அவனை நினைந்தால், யானும் எவ்வாறு வருந்தாதிருப்பேன்?

கருத்து : 'அவனுக்கு வழியிடை ஏதும் ஏதம் நேரக் கூடுமோ என நினைந்தே பெரிதும் கவலையுற்று வருந்துவேன்' என்பதாம்.

சொற்பொருள் : கல் ஊற்று – கற்பாறையினிடையே தோண்டப்பெற்ற ஊற்று. கயன் – ஊற்றுநிலை. பிணர் – சருச்சரை; செதிள் செதிளாகத் தோன்றும் அடுக்குதலையுடைய அமைப்பு. நொண்டு – மொண்டு. கடைய – செலுத்த. காமர் – விருப்பம். வெங்காதலர் – விரும்பும் காதலர்.

இறைச்சிப் பொருள் : மிகுகின்ற நீர் வேட்கையினாலே உண்டாகும் தன் வருத்தத்தைப் பாராட்டாது, தன் பிடியது வருத்தத்தை முற்படப் போக்கக் கருதினதாய், நீரோடு எதிராகச் செல்லும் களிற்றைப்போன்று, தலைவனும் பொருள் கிடைத்ததும் தலைவியது துயரை முதற்கண் தீர்க்கக் கருதினனாய் விரைய மீள்வன்: அதனால், அவன் வருங்காலத்தளவும் தானும் ஆற்றியிருப்பல் என்பதாம்.

விளக்கம் : 'கல்லூற்று' என்றது, சுனைகளும் நீரற்றவாய் வறண்டதனைக் குறிப்பால் உணர்த்தும்; 'தம் வழிநடை வருத்தத்தை மாற்றக் கருதினராகப் பாணர் யாழிசையை எழுப்பியபடியே செல்ல, அவ் இசையொலி ஓந்தி முதுபோத்தினது துயரைத் தணித்து, அதனை யாமரத்து மேலாக ஏறச் செய்யும்' என்றது. அவ்வாறே தலைவன் ஈட்டிவரும் பெரும் பொருளும் ஏதிலரான இரவலர்கட்குப் பயன்படும் என்பதாம். பொருளார்வம் பிணிபோல்வது எனினும், அது நற்பயனைத் தருதலினாலே 'காமர் பொருட் பிணியாக' உரைக்கப்படுவதாயிற்று.

187. ஊரொடு பொழில்!

பாடியவர் : ஔவையார்.
திணை : நெய்தல்.
துறை : தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கித் தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.

ந.—23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/362&oldid=1706894" இலிருந்து மீள்விக்கப்பட்டது