உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

நற்றிணை தெளிவுரை


'தோளே தொடிநெகிழ்ந் தனவே நுதலே
பீரிவர் மலரின் பசப்பூர்ந் தன்றே
கண்ணும் தண்பனி வைகின அன்னோ!
தெளிந்தனம் மன்ற தேயாஎன் உயிர்' என
ஆழல் வாழி தோழி! நீ நின் 5
தாழ்ந்தொலி கதுப்பின் வீழ்ந்த காலொடு
வண்டுபடு புதுமலர் உண்துறைத் தரீஇய
பெருமட மகளிர் முன்கைச் சிறுகோல்
பொலந்தொடி போல மின்னிக் கணங்கொள்
இன்னிசை முரசின் இரங்கி மன்னர் 10
எயிலூர் பல்தோல் போலச்
செல்மழை தவழும் அவர் நன்மலை நாட்டே.

தோழி! "தோள்கள், தம்பாற் செறிக்கப்பட்டிருந்த தோள்வளைகள் நெகிழ்ந்துபோகத் தாம் வளையிழந்து வறியவாயின; நெற்றியோ பீர்க்கிடத்துப் பரந்துள்ள மலர்களின் தன்மையைப் போன்றதாய்ப் பசலைபடர ஒளியிழந்துள்ளது; கண்களும் தண்ணிய துளிகளை நீங்காவாய்ப் பெற்றிருப்பவாயின. ஐயகோ! இவை இங்ஙனமாதலின் எம் உயிரும் இனித் தேய்ந்தொழியும் என்பதனைத் தெளிவாக யாமும் அறிந்துகொண்டோம்" எனக் கூறினையாய் நீயும் அழாதிருப்பாயாக! இத் துயரம் முற்றவும் நீங்கினையாய் நீயும் நெடுங்காலம் வாழ்வாயாக! நினது தாழ்ந்து தழைத்த கூந்தலது மயிர்க்கால்களைப் போன்று காலிறங்கியும், வண்டு பொருந்திய புதுமலர்களை உண்ணுநீர்த் துறையிடத்தே நின்று கொய்தும் கொணர்வாரான பெரிதான மடப்பத்தைக் கொண்ட மகளிரது, முன்னங் கைகளிடத்தே விளங்கும் சிறிதான கோற்றொழிலையுடைய பொன் வளைகளைப்போல மின்னலிட்டும், கூட்டங்கொண்ட இன்னிசை எழுப்பும் முரசங்களின் முழக்கத்தைபோல இடிமுழக்கியும், மன்னர்களது கோட்டை சூழ்ந்த ஊரிடத்துக் கோட்டை மதில்களின் மேலாகக் காவலயரும் வீரர்களது கையிடத்து விளங்கும் பலவாகிய கிடுகுகளைப் போலத் தவழ்ந்தபடியும், அவருடைய நல்ல மலை நாட்டிடத்தே மேகங்கள் வானிடத்தே செல்பவாயின; அதனையும் காண்பாயாக. அவர் இனிக் காலம் தாழ்த்தாராய் விரைய நின்பால் மீள்வர் காண்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/385&oldid=1706947" இலிருந்து மீள்விக்கப்பட்டது