உள்ளடக்கத்துக்குச் செல்

செவ்வாழை/பூபதியின் ஒருநாள் அலுவல்

விக்கிமூலம் இலிருந்து

2
பூபதியின் ஒருநாள் அலுவல்


"ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும், அலைந்து திரியவேண்டிய அவசியமில்லை. நிம்மதியாக வாழ எனக்கு வசதி இருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும் என்னை உழைத்து உருக்குலையும்படியான நிலையிலே விட்டு வைக்கவில்லை. வாழ்வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை" என்று கூறினார், ஒய்வூர் மிட்டாதார் ஒயிலானந்த பூபதி, கொஞ்சம் கோபத்துடன். அவரிடம் பேசிக் கொண்டிருந்த “பிரதர்’’ துரைசிங்கம் என்பவர். துரைசிங்கம், பூபதியிடம் கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலை செய்து, யுத்தக் கடன் பத்திரங்களை அதிகமாக விற்று, "கவர்னர் பெருமான்" ஒய்வூருக்கு வரும்போது, இந்தப் பக்கத்திலேயே, அதிகமாக யுத்த உதவி செய்தவர், மிட்டா தாரர்தான் என்ற கியாதியை அடைய வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார். யுத்தக் கடன் பத்திரங்களை விற்பது, யுத்த உதவி நிதி சேர்ப்பது இரண்டும் முதலிலே ஒயிலானந்த பூபதிக்குச் சந்தோஷமாக இருந்தது. அதிலும், மேற்படி நிதிக்காக, சங்கீதக் கச்சேரிகள், நாட்டியக் கச்சேரிகள் முதலியவற்றை ஏற்பாடு செய்யும்போது, 'ரொம்பக் குஷி' பூபதிக்கு. இந்தச் சந்தோஷத்துடன் கொஞ்சம் சுறுசுறுப்பாகவும் வேலை செய்தால் பலன் உருவாகும் என்பது துரைசிங்கத்தின் எண்ணம். யுத்த உதவித் தொகையின் அளவு உயர உயரத் தனக்கும் 'ராவ்சாகிபு' பட்டத்துக்கும் இடையே உள்ள 'தொலைவு' குறையும் என்பது துரைசிங்கத்தின் எண்ணம். எனவே பூபதியைச் சற்று அதிகமான சுறுசுறுப்புக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். பூபதிக்குக் கொஞ்சம் 'இவனே அலையட்டும்! சர்க்கார் இவனை யுத்தப் பிரசாரகர் என்று நியமித்திருக்கிறார்கள்; மாதம் 500 சம்பளமும்தருகிறார்கள்; இவன் அலைய வேண்டியது சரி; என்னை எப்படி இவன் அதிகமாக வேலை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கலாம்" என்று கருதியே கோபித்துக் கொண்டு, தனது அந்தஸ்தைச் சுட்டிக்காட்டினார் துரைசிங்கத்திடம்.

"ஏன் ஊர் சுற்றித் திரியமாட்டான்! குடித்துவிட்டுக் கூத்தாடத்தான் செய்வான். ஏதாவது ‘வித்து விசனம்' கவலை— கஷ்டம் இருந்தால்தானே! காளைமாடு போலச் சுற்றி வருகிறான். இருப்பது பாழாகாதபடி பார்த்துக்கொள்ளவும், இவனுக்குச் சொத்து சுகம் தேடிக் கொடுக்கவும் நான் பாடுபட்டேன். அவன், அந்தத் தைரியத்திலே, உலகத்தைப் பற்றியே கவலை இல்லை என்று மதோனமத்தனாகத் திரிகிறான். எந்த விலை ஏறினால் அவனுக்கென்ன! அவன் உண்டு, நண்பர்கள் உண்டு, செலவு செய்வதற்குக் கேட்கும்போது பணம் தர நான் உண்டு என்று இருக்கிறான். விளைந்து வருகிறது, விற்றுப் பணத்தைக் குவிக்கிறான், செலவு செய்து கொண்டு குஷாலாக இருப்போம் என்று உலவுகிறான். பாடுபட்டுப் பணத்தைச் சேர்க்கிற எனக்கல்லவா தெரியும், அதனுடைய அருமை."

பூபதி, புவனேஸ்வரியின் நடனக் கச்சேரியை ஏற்பாடு செய்யப் போயிருக்கிறார்; கல்யாணி என்ற பாடகியை அழைத்துவரப் போயிருக்கிறார் என்ற செய்திகளை அடிக்கடி கேட்டுக் கோபங் கொண்டார், பெரிய மிராசுதாரர், பொன்னுராமர். தன் மகன், சர்க்கார் காரியமாகப் போயிருக்கிறான், சண்டைக்குப் பணம் திரட்டும் காரியமாகத்தான் போயிருக்கிறான், யுத்த நிதி உதவிக் கச்சேரிகளுக்காகத்தான் புவனேஸ்வரி, கல்யாணி ஆகியோரைத் தேடிச் சென்றானேயொழிய வேறு சொந்த வேடிக்கைக்கு அல்ல என்று, பொன்னுராமரிடம் கூறப்பட்டது என்றபோதிலும், அவர் சமாதானம் அடையவில்லை. யுத்த வேலை, நிதி திரட்டுவது என்று என்ன பேர் வேண்டுமானாலும் வைக்கட்டும், பூபதி இப்போது சதா சர்வகாலம், இந்தச் 'சிரிப்புக் காட்டிகள்' இருக்கும் இடத்திலே உலாவுகிறான். அது தவறு; அது கூடாது என்று கூறியபடி இருந்தார். அவருக்குத் தன் பாலிய கால நினைவு. அவர் காலத்திலே யுத்தநிதி வசூலிக்கும் வேலை இல்லை; ஆனால் 'நவராத்திரி உற்சவ ஏற்பாடு' இருந்தது. பொன்னுராமர் அதிலே தீவிரமாகச் சேவை செய்தபோதுதான் திலகாவும், அன்னமும் அவருக்குச் சினேகிதமானது. "இலேசாக படுக்கப் போகும்போது கொஞ்சம் உசத்திச் சரக்கு' சாப்பிடக் கற்றுக் கொண்டதும் அந்தச் சமயத்திலைதான். ஆகவே பொன்னுராமர், யுத்தநிதி வசூல் வேலைக்குத்தான் போயிருக்கிறான் ஒயிலானந்தன் என்று சொன்னவர்கள் மீது சீறி விழுந்தார். தனக்கு "நவராத்திரி"— தன் மகனுக்கு 'யுத்தநிதி வசூல் வேலை' என்று மாறி இருக்கிறது என்று எண்ணினார்.

"ராஜா போல நிம்மதியாக இருக்க வேண்டியவன்! வீடு இருக்கிறது, அரண்மனைபோல; தோட்டம் இருக்கிறது, நந்தவனம் போல; என்ன குறை இவனுக்கு? எந்த வேலைக்குத்தான் இவனுக்கு இங்கே ஆள் இல்லை. நிம்மதியாக இருக்கக்கூடாதா? பகவான், நமக்கு ஒரு குறையும் செய்யவில்லை; சகல சம்பத்தும் கொடுத்திருக்கிறார். இதை அனுபவித்துக்கொண்டு, வீட்டோடு சந்தோஷமாக ஏன் இருக்கக் கூடாது? என்னமோ, பாடுபட்டு ஜீவிக்க வேண்டியவனைப் போல, சதா அலைச்சல்! வீடு தங்குவது கிடையாது; வேளாவேளைக்குச் சாப்பிடுவது கிடையாது; உடம்பைக் கவனித்துக் கொள்வது கிடையாது; கண்டவர்களிடம் பேசிப்பேசி, தொண்டையைக்கூடப் புண்ணாக்கிக் கொள்வான் போலிருக்கிறது. ஏனம்மா இவனுக்கு இந்தக் கஷ்டம்? இவன் தலையிலே நல்ல எழுத்து எழுதியிருக்க, எதற்காக இவன் அலைந்து கொண்டிருக்க வேண்டும்? வீட்டோடு நிமமதியாக இருக்கக்கூடாதா" என்று, பூபதியின் தாயார் வருத்தப்பட்டுக் கொண்டார்கள். எப்போது பார்த்தாலும் பூபதி வெளியே சுற்றிக் கொண்டே இருப்பதைக் கண்டு தாய்க்கு, மகன் இப்படி அலைந்து உடம்பை பாழாக்கிக் கொள்கிறானே என்று சோகம். அவர்களுக்கென்ன தெரியும், மகன், உல்லாச வேட்டையாடுகிறானே தவிர, ஊருக்கு உபகாரம் செய்ய ஒரு துளியும் வேலை செய்யவில்லை என்பது? அலைந்து தீர வேண்டும், திரிந்து கிடக்க வேண்டும், பாடுபட்டுப் பணம் தேடியே ஜீவித்தாக வேண்டும் என்ற நிலையில் பலர் இருப்பதற்குக் காரணம், அவர்கள் தலையிலே ஆண்டவன் அப்படி எழுதினான் என்பது, மிட்டாதாரணியின் எண்ணம். மகன்,ஏதோ பாடுபடுகிறான் மற்றவர்களுக்காக என்று வருத்தப்பட்டார்கள் அந்த அம்மையார். இரவெல்லாம் குடித்துவிட்டுக் கிடப்பதால், பூபதியின் உடல் இளைத்தது. அதை அம்மையார், மகன் ஊருக்கு உழைத்து அப்படியானான் என்று எண்ணிக் கொண்டார்கள்.

"உன் அந்தஸ்துக்கும், செல்வத்துக்கும், இது ஒரு பிரமாதமா? நேற்றுத் தோன்றியவர்களெல்லாம், ஷெவர்லேயில் போகும்போது, நீ ஏன் 'ரோல்ஸ்ராயில்' போகக் கூடாது? அந்தப் பயல், 'ரேஸ்' கிளப்பிலே, ஆயிர ரூபாய் நோட்டை அலட்சியமாக வீசி எறிகிறான்; நூறு ரூபாய் நோட் எடுப்பதென்றால் உனக்குக் கைநடுக்கம் பிறக்கிறது. உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியா உடை இருக்கிறது? 'ட்வீட் இல்லாமல் டாக்டர் தாமோதர் வெளியே கிளம்புவதில்லை; உன் உடையைப் பார்! செச்சே! என்ன இருந்தாலும், நீ இப்படி உன்னுடைய செல்வ நிலைக்குக் குறைவாக, மட்டமாக, வாழ்க்கையை நடத்தக்கூடாது. மதிக்கமாட்டார்களே ஜனங்கள்!" என்னடா மகா பிரமாதம்! அவன்பெரிய ஆசாமியின் மகன் என்று சொல்லுகிறாய்; அவனுந்தான் '555' பிடிக்கிறான்; நம்முடையதும், அதே ரகச் சிகரெட்தான்" என்று, அன்று ஒரு நாள் அப்ரகாம் சொன்னான். எனக்கு வெட்கமாகத்தான இருந்தது. எவ்வளவு செலவு செய்தாலும் உனக்குத் தகும்."

செல்வவான்களின் செருக்கு, அவர்களையே அழிக்கும் நெருப்பாக மாறும். ஆகவே அவர்கள் உள்ளத்திலே அந்த நெருப்புக் குறையாதபடி நாம் அடிக்கடி தூண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்; அதிகமாகச் செலவு செய்கிறோம், அனாவசியமாகச் செலவு செய்கிறோம் என்ற எண்ணமே, அந்தச் சீமானுக்குத் தோன்றக்கூடாது. எவ்வளவு செலவு செய்தாலும் கெடுதி இல்லை; தகும். மேலும் அப்படிச் செலவு செய்வதுதான் நமது அந்தஸ்துக்கு ஏற்றது. ஜனங்கள் அப்போதுதான் நம்மைக் கண்டால் மதிப்பார்கள்: செலவைச் சுருக்க ஆரம்பித்தால், கேவலமாக நினைத்துவிடுவார்கள் என்ற இப்படிப்பட்ட எண்ணம் சீமானின் மனதிலே முளைத்தபடி இருக்க வேண்டும். அந்தப் பயிர் செழிப்பாக இருக்க முகஸ்துதி என்ற தண்ணீரை நாம் பாய்ச்சியபடி இருக்க வேண்டும் என்ற தத்துவம், கோடீஸ்வரனுக்கு. பெயர் கோடீஸ்வரன்; நிலைமை மகா மோசம். ஆசாமியோ பலே பேர்வழி, மரத்திலே தான் பழம் இருக்கும்; நாம் நடந்து செல்லும் பாதையிலேயா இருக்கும்? பாதையிலே, முள்ளும் கல்லும்தான் இருக்கும். நமக்கு இந்தக் கல்தான் கிடைக்கும்; கனி தோட்டக்காரனுக்குத்தானே கிடைக்கும்? நாம் பாட்டையிலே போக வேண்டியவரானோம் என்று சொல்பவன், பைத்தியக்காரன். கிடைக்கிற கல்லை, எடுத்துத் தொலைவிலே தொங்கும் பழத்தை நோக்கி வீசினால், பழம் கீழே விழுகிறது. கல்லை விட்டுவிடு, கனியை எடு; சாப்பிடு! இதுதானே புத்திசாலி செய்ய வேண்டிய காரியம்? பாதையிலே நடந்து கொண்டே, காலிலே கல் தடுக்கினால் கஷ்டப்பட்டு, அதே நேரத்திலே, மேலே அண்ணாந்து பார்க்கும்போது, மரத்திலே கனி குலுங்கக்கண்டு, ஏக்கமடைந்து நடப்பவன் ஏமாளி. மேலே பழம், உன் காலடியிலே கல்! கைக்கும் கருத்துக்கும் கொஞ்சம் வேலை கொடு. கனி பிறகு உனக்குத்தான். மரத்துக்கா, தோட்டக்காரனுக்கா?- இந்தத் தர்க்கம் செய்பவன் கோடீஸ்வரன். பணம், பணக்காரனிடம் இருக்கிறது, மரத்திலே பழம் இருப்பது போல! ஏழையிடம், பணமில்லை; ஆனால் பணக்காரனிடம் உள்ள பணத்தைப் பறிக்கும் 'வித்தை' கூடவா இல்லை? அவன் மூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்தால்தானே என்பான் கோடீஸ்வரன. அந்த முறையிலே, சீமான்களின் தோழனாக இருந்தான், இலாபத்துடன். சீமான்களின் மனது குளிரும்படி பேசுவான். கெஞ்சுவதில்லை; பணம் ஒரு பிரமாதமா என்று சொல்வான். சீமான் எவ்வளவு செலவு செய்தாலும், இது என்ன சாதாரணச் செலவுதான் என்று கூறுவான். வேறு பல சீமான்களின் நடை, நொடி, பாவனைகளை தன் வலையில் வீழ்ந்த சீமானின் முன் புகழ்ந்து பேசுவான். அதன் மூலம், தன் நண்பனான சீமானின் மனதிலே, 'ரோஷ' உணர்ச்சி உண்டாகச் செய்வான். அந்த ரோஷ உணர்ச்சி, ஷெவர்லே காராகக் காட்சி அளிக்கும்; ட்வீட் சூட்டாகத் தோற்றமளிக்கும்; உயர்தரமான ஓட்டல்களுக்கு இழுத்துச் செல்லும்; சினிமா நாடகங்களிலே, சோபாவிலே கொண்டுபோய் உட்கார வைக்கும்! அதிகமாக அவசியமற்ற செலவு செய்து வருகிறோம் என்று பூபதி கொஞ்சம் கவலைப்பட்டபோது, ரோஷ உணர்ச்சி ஊட்டுவதற்கு உபயோகித்த உபதேசம் மேலே குறிப்பிடப்பட்டது. அந்தப் பேச்சின் பயனாகப் பூபதிதான் உண்மையிலேயே தன் அந்தஸ்துக்கு ஏற்றபடி செலவு செய்யவில்லை என்று எண்ணவும், கொஞ்சம் வெட்கப்படவும்கூட நேரிட்டது. கோடீஸ்வரன், பூபதியின் ரோஷ உணர்ச்சியை அவ்வளவு சாமர்த்தியமாகக் கிளறிவிட்டான். அதன் பலன், அன்று ரமாமணி வீட்டிலே ரசமான விருந்து பூபதிக்கு! கோடீஸ்வரனிடம் கொஞ்சிக் கொண்டிருந்தாள், கோகிலா ரமாமணியின் தங்கை. "உங்களுக்கென்ன குறைச்சல்! மிட்டாதாரர்தான், நீங்கள் போட்ட கோட்டைத் தாண்டுவதில்லையாமே?" என்றாள் கோகிலம். "கோடு போடுவது நான், புதிய வீடு கட்டுவது ரமா" என்றான் கோடீஸ்வரன் வேடிக்கையாக. "அந்த வீடு உங்களுக்கும் சொந்தம்தானே" என்று "பாத்யதை" யைக் கவனப்படுத்தினாள் கோகிலம்.

"உனக்கு என்னப்பா குத்தலும் குடைச்சலும்? பெட்டி யிலே பணம் இருக்கிறது ஏராளமாக. வட்டி மூலம் அதனை வளர்க்கச் சரியான தந்தை இருக்கிறார். நீ சுற்றலாம், ஆனந்தமாக. விலையைப் பற்றிக் கவலை இல்லாமல் சாமான்களை வாங்கலாம். காலத்தைப் பற்றியே கவலையின்றி, வேடிக்கையாக இருக்கலாம். எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்_நீ கஷ்டப்பட்டு சம்பாதித்தது என்ன கெட்டுவிட்டது! எப்படியோ சொத்து சேர்ந்துவிட்டது; சுகமாக வாழ முடிகிறது. நீ எதற்குப் பாடுபடப் போகி றாய்? மற்றவர்களைப் போல நீயும் கஷ்டப்பட்டுப் பணம் சேர்த்திருந்தால், உனக்கும் தெரியும், அதனுடைய பலன்! சீமானுக்கு மகனாகப் பிறந்தாய், சுகம் என்ற தொட்டிலிலே வளர்ந்தாய், இப்போது ஆனந்தம் என்ற அம்ச தூளிகா மஞ்சத்திலே புரள்கிறாய். உனக்கு, ஊரின் கஷ்டம் என்ன தெரியும்? பணம் தேடி அலுப்பவனின் பதைப்பு எப்படிப் புரியும்? பாடுபடுபவனின் தொல்லையை எப்படி நீ தெரிந்துகொள்ளப் போகிறாய்! உன் கவலை பூராவும், விதவிதமான களியாட்டங்களைத் தேடுகிற அளவுதானே!"— பூபதியின் நண்பர்களிலே இவன் ஒரு தனிரகம். பணக்காரனிடம் பணம் இருக்கிறது, மலரிலே மணம் இருப்பதுபோல. நாம் பச்சிலை ; நாளாவட்டத்திலே சருகு ஆகிவிடுவோம். மலருக்கு இருக்கும் மணம் தனக்கு இருக்க வேண்டுமென்று பச்சிலைஎதிர்பார்க்கலாமா? என்று வாதம் புரிபவன், வக்கீல் அல்ல,வியாபாரி. வியாபாரியிலும், நஷ்டக் கணக்கையே அடிக்கடி கண்டு நொந்தவன்; பூபதியுடன் ஒரு காலத்திலே படித்தவன் என்ற முறையிலே, சந்திப்பு ஏற்படும். அப்போதும், தன் சஞ்சலத்தை மறக்கமாட்டான. பூபதியும் கோடீஸ்வரனும் ஆனந்தமாக விளையாடிவிட்டு வருகிறபோது கண்டான்; நண்பன் என்ற முறையிலே, பூபதியின் சந்தோஷத்தின் சூட்சமத்தைப் பற்றியும், தன சஞ்சலத்தைப் பற்றியும் பேசினான். அதுவும், மற்றப் பணக்காரர்களிடம் பேச முடியாதல்லவா? "போடா சுடுமூஞ்சி" என்று கேலி பேசிவிட்டு, முதுகைத் தட்டிக் கொடுத்துவிட்டு, அவனிடம் பேசுவதற்காக அதுவரை நிறுத்தி வைத்திருந்த மோட்டாரை, ஓட்டலானான் பூபதி. வளமில்லாத வியாபாரம் செய்துவந்த வரதராஜன், தன் ‘கூட்டாளி' காதரிடம், பூபதியின் செவ்வம், செல்வாக்கு ஆகியவைபற்றி பெருமையாகப் பேசிக் கொண்டே நடந்தான். காதர், பணக்காரர் உயர்ந்தவர்கள்; ஏழை மட்டம் என்ற கொள்கையை ஏற்றுக் கொள்பவனல்ல. ஆகவே பூபதியைத் தன் நண்பன் புகழ்ந்தது பிடிக்கவில்லை. எவன் தன் சாமர்த்தியத்தால், உழைப்பால், முயற்சியால், வாழ்கிறானோ அவனைத்தான் பாராட்ட வேண்டுமே தவிர பணத்தை யாரோ, எப்படியோ திரட்டிக் கொடுத்துவிட, அதை வைத்துக் கொண்டு படாடோப வாழ்வு நடத்துபவனைப் புகழ்வது, மதியீனம் என்பது காதர் கொண்டிருந்த கருத்து. ஆகவே பூபதியின் மோட்டார் போகிற வேகத்தைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, "கிடக்கிறான் தள்ளப்பா! என்ன புகழ்வது அவனை! மோட்டாரிலே சவாரி செய்கிறானாம்; அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலைகொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை— சம்பாதிக்க முடியாது— சம்பாதிக்க வழி கிடையாது. என்னமோ, பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான்; அகப்பட்டதை வைத்துக் கொண்டு ஆட்டம் ஆடுகிறான். இது ஒரு பெரிய கீர்த்தியா! இவன் தன்னுடைய புத்தி சாதுர்யத்தாலும், உழைப்பினாலும், இந்தச் சொத்து சேர்த்தானா, திறமைசாலி என்று இவனைப் புகழ? அவன் மட்டும், அந்தச் சீமானுக்கு மகனாகப் பிறக்காதிருந்தால், அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு, அவனுக்குப் பிழைக்கும் மார்க்கம் இன்னது தெரியுமென்று! படாடோபத்தோடு சரி. படிப்பு கிடையாது. மிரட்டத் தெரியும்; ஒரு வேலையும் தெரியாது. எப்படிப் பிழைப்பான்? என்ன வேலைக்கு இலாயக்கு? கூலிவேலைகூட. செய்ய முடியாதே, உடலிலே அதற்கு வலிவு ஏது? ஒன்றுக்கும் பயனற்றவன், ஏதோ அங்கே பிறந்ததால் ஆடுகிறான் ஆட்டம். இதிலே பெருமை இல்லை. இதற்காக இவனை நான் மதிக்கத் தயாராக இல்லை! என்னைக் கேட்டால், அவன் கையாலாகாதவன்; பிழைக்கத் தெரியாதவன்; அப்பா சேர்த்து வைத்திருப்பதைச் செலவிட்டுக் கொண்டு திரியும் ஒரு வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்"என்று வெறுப்பு, அலட்சியம் இரண்டையும் ஏராளமாகக் கலந்து பேசினான். பேசிவிட்டு, 'அக்பர்ஷா சிகரெட்டைப் பற்ற வைத்தான், ஆனந்தமாக.

"குட் மார்னிங் மிஸ்டர்! உட்காருங்கள். உங்களைப் போன்ற உயர்ந்த அந்தஸ்துக்காரர்கள்தான ஊருக்கே மதிப்புத்தர வேண்டியவர்கள். உங்களுடைய உதவியும், திறமையும்தானே ஊருக்கே பொதுச் சொத்து! நீங்களெல்லாம், நினைத்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும். நீங்கள்தான் செல்ல வேண்டும். ஊர் ஜனங்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்ல வேண்டும். ஜனங்கள் நல்வழிப்பட, நாகரிகம் பெற, அறிவு பெற, நீங்கள் தான் வேலை செய்ய வேண்டும்." என்றார் டிப்டி கலெக்டர்! ஜே. ஈஸ். பங்களா எதிரே வந்து நின்றது, மிட்டாதாரர் பூபதியின் மோட்டார் என்பதை டபேதார் சொன்னதும், புதிய நாற்காலியைப் போடச் சொன்னார். பூபதி கொஞ்சம் வெட்கத்துடன் வரக்கண்டு. புன்சிரிப்புடன் வரவேற்றார், கை குலுக்கினார். கொஞ்ச நேரம் ‘லோக' விஷயம் பேசினார். பிறகு, பூபதி யுத்தநிதி சம்பந்தமாக மேலும் கொஞ்சம் மும்முரமாக வேலை செய்யவேண்டும் என்பதற்காக, அவனைத் தூண்ட ஆரம்பித்தார். பூபதிக்குக் கொஞ்சம் 'ஸ்துதி' செய்தால்போதும்; சொல்கிறபடி ஆடுவான் என்று ஜே. ஈஸ். நினைத்தார், ஆகவேதான், பூபதியின் பெருமையைப் பூபதிக்குக் கவனப்படுத்தினார். பூபதிக்கு ஆனந்தம்! விடை பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது, தன் வீட்டிலே ஏதோ விசேஷத்துக்குச் சமையல் செய்த வேதாந்தாச்சாரி வரக்கண்டான் பங்களாவுக்குள். 'ஐயர்! இங்கே என்ன வேலையாக வந்தீர்?" என்று பூபதி கேட்க, ஐயர் சிரித்துக்கொண்டே, "வேலையா? இது என் மருமான் மோன்னோ?" என்றார். “என்ன என்ன?" என்று திடுக்கிட்டுப் போய்க் கேட்டான் பூபதி. 'ஜெமீன்'தார்வாள்! டிப்டிக் கலெக்டர் யாருன்னு நினைச்சீர்? அவருக்கு என் தமையனாரின் மகளைத்தான் கொடுத்திருக்கு" என்று கூறிப் பந்துத்வத்தை விளக்கினார் வேதாந்தாச்சாரி. விளங்கவில்லை; கொஞ்சம் பரிதாபமாகவும் இருந்தது அந்தப் பேச்சு, பூபதிக்கு சூட்சமத்தைத் தெரிந்து கொண்டார் வேதாந்தாச்சாரி. "ஓ! அதனாலே மிரள்கிறீரா? டிப்டிக் கலெக்டர், எங்களவாதான் ஜெமின்தார்வாள்! பெயர், ஈஸ் என்று இருக்கவே, கிருஸ்தவன்னு எண்ணிண்டீர் போலிருக்கு. ஈஸ் என்பது, ஜெகதீஸ் என்ற பெயரின் ரத்னச்சுருக்கம். அவர் பெயர் ஜெகதீசாச்சார். சீமையிலே, ஈஸ்னு பெயரை வைச்சுண்டார். உத்தியோகத்துக்கும் அதே பெயர் ஒட்டிண்டது, அவ்வளவுதான்" என்று விளக்கம் கூறினார். பூபதி, வேதாந்தாச்சாரியாருக்கு, வழக்கத்தைவிடச் சற்று அதிகமான மரியாதை காட்டிவிட்டு பூபதி மோட்டாரில் புறப்பட்டார் வீடு நோக்கி. கோடீஸ்வரன், வேறு வேலை இருப்பதாகக் கூறிவிட்டுப் போய்விட்டான், "டாக்சி'யில்.

"பூபதி, பெரிய குடும்பம். நேக்கு அவா குடும்பத்திடம் ரொம்ப நாளாகப் பரிச்சயம்" எனறு கூறிக்கொண்டே வந்தார், வேதாந்தாச்சாரி. டிப்டி கலெக்டர் ஆன பிறகு உனக்கு இப்படிப்பட்ட சீமான்களின் சினேகம் கிடைத்தது. எனக்கு, இவர்களுடைய சினேகிதம் நெடுநாட்களாக உண்டு என்று கூறிக்கொள்வதிலே அவருக்கும் வகையான சந்தோஷம். டிப்டி கலெக்டர் ஆரம்பித்தார் தன் அர்ச்சனையை.

"இடியட்! கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான், கொஞ்சம்கூட மட்டு மரியாதை தெரியாமல். சுத்த ஞானசூணயம். வைசிராயின் பெயர் தெரியவில்லை; இன்னமும் விலிங்டன்தான வைசிராயாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். இவனெல்லாம், ஊருக்குத் தலைவர்களாக வேண்டும். இந்த உதவாக்கரைக்கு ராவ்பகதூர் வேண்டுமாம்! எப்படியோ, பணம் சேர்ந்துவிட்டது; ஊரை ஏமாற்றிச் சேர்த்துக் கொண்டான். பணம் இருப்பதாலேயே, இவனுக்கு நாமெல்லாம் மதிப்புத் தரவேண்டுமாம். மடையன்! ஒரு சாதாரண கிளார்க்குக்குத் தெரிந்தவிஷய ஞானம்கூட இவனுக்கு என்னதெரியும்? மளமளவென்று அளக்கிறான், அந்த ஆபீசர் தெரியும், இந்த கலெக்டர் தெரியுமென்று. தெரிந்து என்ன, தெரியாமல் போனால் என்ன? எழுத்துப் பிழையில்லாமல் இன்னமும், தன் கையெழுத்தைப் போடத் தெரியாது. நாமும் உத்யோகம் செய்கிறோம், தலை நரைக்கிறவரையில். என்ன காண்கிறோம்! அந்த இடியட் 'இன்கம் டாக்ஸ்' நான்தான் இந்த ஜில்லாவிலேயே அதிகம் கட்டுகிறேன் என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறான். இவனுக்கு எஸ்டேட் மானேஜர், பி.ஏ.வாம்! எவ்வளவு அலட்சியமாகப் பேசுகிறான் தெரியுமோ? பணம் போய் எப்படியோ மாட்டிக் கொண்டு இப்படிப்பட்ட இடியட்களை நம்ம வாயினாலேயே புகழ்ந்து பேசவேண்டிய நிலைமையைக்கூட உண்டாக்குகிறது!" என்று சுடச்சுடப்பேசினார், மிஸ்டர் ஜே ஈஸ்.

"பணம் இருக்கலாம்; நீர் பெரிய பங்களாவிலே வாழலாம்; அதை எல்லாம் இங்கே சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. உம்மிடம் சொத்து இருப்பதாலேயே. மதிப்புத் தரவேண்டுமென்ற அவசியம் கிடையாது. சட்டம் உம்மையும் சாதாரண மனிதனையும் சமமாக நடத்தும். உளறாமல், கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்காக, உண்மையை ஒளிக்காமல் பதில் சொல்ல வேண்டும். குடித்துவிட்டு, நிலைதவறி, மோட்டார் ஓட்டிக்கொண்டு போனது, முதல்குற்றம்; மோட்டார் ஓட்ட லைசென்ஸ் வாங்கவில்லை—அது இரண்டாவது குற்றம்; நாலு காலன் பெட்ரோல் டின் உமது மோட்டாரில் இருந்தது. முதலில் அதற்கு “கோட்டா" இல்லை; பிளாக்மார்க்கட் பெட்ரோல் அது. அது மூன்றாவது குற்றம், ஏன் உன்னை நான் சார்ஜு செய்யக் கூடாது?"— அன்று மாலைதான், சார்ஜு எடுத்துக் கொண்டார், சப்-இன்ஸ்பெக்டர் சாப்ஜான். அவருக்கு, கனம். ஆகாகான் தூரபாத்யம் ஆகவே அவர் சாதாரணமாக எந்தச் சீமானாக இருந்தாலும், நமக்கென்ன என்று கூறுபவர்; பூபதியின் பூர்வோத்திரம் தெரியாது. தெரிந்தாலும் அதற்காகச் சப் இன்ஸ்பெக்டர் தன் டீக்கைக் குறைத்துக்கொள்ளுகிறவரல்ல. டிப்டி கலெக்டரிடம் கைகுலுக்கிய ஜோரில், மோட்டாரைக் கொஞ்சம் வேகமாக ஓட்டினார் பூபதி. ஒரு சிறுவன், சிக்கிக்கொள்ள இருந்தான்; திடீரென்று, 'பிரேக்' போட்டார். ஜனங்கள் கூவினார்கள்; இவ்வளவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வெகு சமீபத்திலே நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர்சேதி என்ன என்று பார்க்கச் சொன்னார் ஐவானை. அவன் மோட்டாரை நிறுத்தச் சொல்லிவிட்டு, 'ஐயா கூப்பிடுகிறார்' என்று சொன்னான் பூபதியிடம். பூபதிக்குப் பழைய சப்-இன்ஸ்பெக்டரே அங்கு இருப்பதாக எண்ணம். ஆகவே, "நாளைக்கு வீட்டண்டை வரச்சொல்' என்று கூறினார். சப்-இன்ஸ்பெக்டர் சாப்ஜான், இதை ஜவான் சொன்னதும் ஒரு முறைப்பிலே, ஜவானின் குலையை நடுங்க வைத்தார், வெளியே போனார். தன் கைப்பிரம்பை ஆட்டிக் கூப்பிட்டார் பூபதியை. புதிய ஆசாமியாக இருக்கவே, பூபதி, ஸ்டேஷனை நோக்கிவர வேண்டி இருந்தது. 'உள்ளே போய் இரும்' என்று கூறிவிட்டு, கும்பலை விரட்டும்படி ஜவான்களை அனுப்பிவிட்டு நேரே மோட்டார் இருக்குமிடம் சென்று சோதனைபோட்டு, பெட்ரோல் டின்னைக் கண்டுபிடித்து, அதைத் தூக்கிக் கொண்டு வரும்படி வேறோர் கான்ஸ்டெபிளுக்கு உத்திரவு செய்துவிட்டு, கோபமாக உள்ளே நுழைய, அங்கே "ரைட்டர்" பூபதி எதிரே நின்று கொண்டிருக்கவும், பூபதி டி. எஸ். பி. போல,உட்கார்ந்திருக்கவும் கண்டு, ஒரு கனைப்பினால், ரைட்டரை, அவருடைய ஆசனத்துக்குத் துரத்திவிட்டு விசாரணையைத் துவக்கினார். பூபதி தன்னுடைய மிட்டாதார் நிலைமையை ஜாடை காட்டவே, சாப்ஜான், கோபம் அதிகரித்தது. பணக்காரர் என்ற பதவி, ஏழைகளை மிரட்டஉதவுமே தவிர, பொறுப்பாகவும், தயவு தாட்சண்யம் பார்க்காமல் நேர்மையாகவும் நடந்து கொள்ளும் அதிகாரியை அடக்கப் பயன்படாது என்பதை விளக்க வேண்டி, காரசாரமாகப் பேசி, சார்ஜும் செய்துவிட்டார். கோபம்! ஆனால் யார்மீது காட்டுவது? பூபதி, மோட்டாரை ஓட்டிக்கொண்டு நேரே சப் கலெக்டரிடமே போகலாமா, இந்த சப்-இன்ஸ்பெக்டரைப் பற்றிக் கூறிவிட்டு வருவோமா என்று எண்ணினார். பிறகு, "பெட்ரோல் டின்' கவனம் வந்தது! நேரே பங்களா போவது, பிறகு என்ன யோசிப்பது என்று தீர்மானித்து, மோட்டாரைக் கொஞ்சம் குறைந்த வேகத்திலேயே ஓட்டிக் கொண்டு போனார். வழியிலே இரண்டு கூலிக்காரர்கள், மோட்டாரில் போகும் பூபதியைக் கண்டனர். அதிலே ஒருவன், கும்பிட்டான் பூபதியை. மற்றவன், "ஏன்? யார் அவர்?" என்று கேட்டான். கும்பிடு போட்டவன் சொன்னான். "மனுஷ ஜென்மமெடுத்தா, இப்படி எடுக்க வேண்டும். நாம் இருக்கிறோம் நாய் படாதபாடு பட்டுக்கொண்டு; அதோ பார்டா,போகிறான், மகராஜன்! புண்யசாலி. போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ! இந்த ஜென்மத்திலே, இவ்வளவு அந்தஸ்தோடு வாழறான்! கடவுள் கடாட்சம்டா" என்றான். மற்றவன், அதை மறுத்தும் பேசவில்லை; ஆதரித்தும் பேசவில்லை. நிலக்கடலையைக் கொரித்துக் கொண்டே இருந்தான். இன்னும் இரண்டொரு வீதிகளே இருந்தன வீடுபோக. வேகத்தைக் குறைத்தார் பூபதி; மறுபடியும் யோசனை வந்தது,யுத்தப் பிரச்சாரகரைப்போய் பார்த்து விஷயத்தைச் சொல்வோமா என்று. போவதா வேண்டாமா என்ற யோசனையிலே ஈடுபட்டு, மோட்டாரின் வேகத்தைக் குறைத்துக் கொண்டே இருந்தார். இரண்டு ஆலைத் தொழிலாளர்கள், நடுப்பாதையில் சென்று கொண்டிருந்தனர்; மோட்டர் ஊதுகுழலைப் பலமுறை அழுத்த வேண்டி நேரிட்டது, பூபதிக்கு. ஆலைத் தொழிலாளர், நிதானமாக, மோட்டாரை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, பாதை ஓரம் சென்றனர். மோட்டார் பிறகு அவர்களைத் தாண்டிச் சென்றபோது, ஒரு தோழன், மற்றவனிடத்திலே, "போறான் பார்டா, பொதிமாடு மாதிரி. நாம்ப வேகாத வெயிலிலே பாடுபட்டுவிட்டு, தள்ளாடி நடக்கிறோம். எப்படிப் போறான் பார்த்தாயா, மோட்டார்லே அந்த மோட்டார் சவாரியிலேகூட அவருக்குக் களைப்பு வந்துட்டுது; கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைக்கிறான்! நாம்ப, உடம்பு பூரா மண், வீட்டிலே போய்க் கழுவ வேணும்; தெருக் கோடியிலே தண்ணி வந்தா..." என்று சொன்னான். பூபதியின் மாளிகை இருக்கும் தெருக்கோடியிலே, ஏதோ கூட்டம்; ஒருவன், உரத்த குரலில் பேசிக் கொண்டிருக்கக் கண்டான் பூபதி. ஒரு சமயம் யுத்தநிதி கூட்டமோ என்று எண்ணினான். பிறகு "செ! யுத்தநிதிக் கூட்டம் இப்படி ஏன் நடுத்தெருவிலே நடக்கப்போகிறது?" என்று எண்ணினான். எதற்கும் கவனிப்போம் என்றெண்ணி மோட்டாரை மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றான். பிரசங்கி ஆவேசமாகப் பேசுவது தெரிந்தது. ஜனங்கள் மோட்டார் வருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, பிரசங்கத்தைச் சரியாகக் கவனிக்காமலிருந்தனர். பிரசங்கி, ஒருவிநாடி பேச்சை நிறுத்தினான். மோட்டாரைப் பார்த்தான்; அதிலே இருந்த பூபதியையும் பார்த்தான்; ஆரம்பித்தான் ஆவேசமாக. ஜனங்களின் கண்ணும் கருத்தும், பேச்சாளி பக்கம் திரும்பிவிட்டது. 'பாடுபடுபவர்களே! மேனி கருத்தவர்களே' என்று வார்த்தைகள் கணீர் கணீரெனக் கிளம்பிற்று. பூபதியின் முகத்திலே வெறுப்புக்குறி தோன்றிற்று. தொழிலாளிகள் கூட்டம்போலிருக்கு என்று மெள்ளக் கூறிக்கொண்டே, மோட்டாரைச் சற்று வேகமாக ஓட்டலானான். ஆனால் பிரசங்கியின் குரல் வேகமாக, அழுத்தமாக, ஆவேசத்துடன் மோட்டாரைத் துரத்திக் கொண்டு வருவதுபோல் இருந்தது. கூட்டத்திலே ஒலிபெருக்கி இருக்கவே, பூபதியின் செவியில், "ஒட்டி உடல் உலர்ந்து ஏன் நாம்ப இருக்கிறோம்? பாடுபடாமலா இருக்கிறோம்?ஏன் பசியாரச் சாப்பிடக்கூட முடியலேன்னு கேள்வி கேட்கறயேப்பா! அதோபார், போறான், உழைப்புறிஞ்சி! அதுபோன்ற ஜென்மங்களைக் கொழுக்க வைக்கத்தான் நாம்ப பரம்பரை பரம்பரையாப் பாடுபட்டுப் பாடுபட்டு இந்தக் கதியானோம். தெரியுதா? நாம்ப இப்படி இருக்கக் காரணம், அவனுங்க அப்படி இருக்கிறதாலே தான்" என்று அந்தப் பிரசங்கி பேசியது தெளிவாகக் கேட்டது. கோபம் அதிகரித்தது பூபதிக்கு! மோட்டாரின் வேகமும் அதிகரித்தது. வேகம், பங்களா வாசற்படிக் கதவைத் தாக்கிற்று. கோபம், தோட்டக்காரன் முதுகிலே சுரீல் எனப் பாய்ந்தது. ஆனால் அன்று இரவு, பூபதியின் தலையணை நனைந்துவிட்டது. வெட்கம், கோபம், துக்கம் யாவும் ஒரே சமயத்திலே தாக்கியதால் மனம் கண் வழியாக நீரைச் சொரிந்தது! தூங்க முயற்சித்தான்; முடியவில்லை.

"உழைப்பை உறுஞ்சுபவன்! போகிறான் பார்! அந்த ஜென்மங்களை நாம் கொழுக்க வைக்கிறோம்" என்ற சத்தம், அவன் செவியைத் துளைத்துக்கொண்டே இருந்தது. சோடா குறைவாகக் கலந்து, விஸ்கியைச் சாப்பிட்ட பிறகும் அந்தச் சத்தம் கேட்டபடி இருக்கவே, பூபதி, ரேடியோவைத் திருப்பினான்.

"பஞ்சம் பரவி, பட்டினி அதிகரிக்கவே, பாட்டாளிக் கூட்டம் படைபோலத் திரண்டு மாளிகைகளில் நுழைந்து கொள்ளை அடிக்கவும், தடுத்தவர்களைத் தாக்கவும், கைது செய்யவந்த போலீசாரைப் பார்த்து, 'நீங்களும் ஏழைகள் தானே என்று சொந்தம் கொண்டாடவும் தொடங்கிற்று. சீமான்கள் அவறி ஓடினர். 'சக்திக்கேற்ற உழைப்பு! தேவைக்கேற்ற வசதி' என்ற முழக்கம் எங்கும் கேட்டது..." என்று ரேடியோவில், யாரோ, பிரெஞ்சுப் புரட்சியையோ, ரஷியப் புரட்சியையோ பற்றி விளக்கிப் பேசிக்கொண்டிருக்கவே, விஸ்கி பாட்டிலை ரேடியோமீது அடித்துவிட்டு பூபதி பெருங் கூச்சலிட்டான். ஓடோடி வந்த தாயார், "என்னப்பா பூபதி!" என்று கதறினார்கள். "கெட்ட சகவாசம் வேண்டாமென்றால் கேட்கிறானா?" என்றார் தகப்பனார். டெலிபோன் மூலம் சேதி கேட்டு விரைந்து வந்த டாக்டர் தினகர், "ஒன்றும் இல்லை. ரொம்பக் களைத்திருக்கிறார்; ஒருமாதம் ஊட்டிபோய் இருந்தால் எல்லாம் சரியாகிவிடும்" என்று மருந்து இருக்குமிடத்தைக் கூறிவிட்டுப் போனார்.

பங்களாத் தோட்டக்காரச் சிறுவன்,

"வடக்கே ருஷிய நாடொன்றிருக்குதாம்! அங்கே..."

என்று பாட்டை பாடினான். விஸ்கியுடன், டாக்டர் கொடுத்த மருத்தும் சேர்ந்து, பூபதிக்கு மயக்கத்தைத் தந்தது. பாட்டு காதிலே பட்டதும் படாததுமாக இருக்கையிலேயே, படுக்கையில் சாய்ந்துவிட்டான்.