உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/விஜய திருவேங்கடம் பார்வையில் பாலைப்புறா

விக்கிமூலம் இலிருந்து


சம கால நடப்புக்களை கலைக் கண்ணோடு மட்டும் பார்க்காமல், தேவைப்பட்ட இடங்களில், நேரங்களில் கவலையோடும், தீர்வு கிடைக்குமா என்ற தேடலோடும் பார்க்கிற எந்த எழுத்தாளனுக்கும், ‘எய்ட்ஸ்’ ஒரு கதைப் பொருளாகலாம். ஆனால், மனித குலத்துக்கெதிரான அந்தப் பேராபத்து குறித்துச் சிந்திக்கிற போது, ஏதோ பாலியல் வக்கிரங்களின் வெளிப்பாடு என்ற கிட்டப் பார்வையில்லாமல், அது ஒரு பெரிய சமூகச் சிக்கலின் வெடிப்பு என்று கருதுவதிலேயும், அதன் சகல ஆயுதங்களையும் செயலிழக்கச் செய்வதிலேயும், சு.சமுத்திரம், தனித்து ஜொலிக்கிறார்.

போதை மருந்துகளின் பேயாட்டம் - அதை மறைந்திருந்து பொம்மலாட்டமாய் இயக்கும் சமூக விரோத சக்திகள் ஒரு புறம்.

கந்தல், குடிசை, கூழ், கூடப் பிறந்த வியாதி இவற்றைத் தந்ததோடு, உழைப்புக்கும் ‘பெப்பே’ காட்டும் வறுமை மறுபுறம்.

ஆணாதிக்கப் போக்கின் அவலம் மூன்றாவது பரிமாணத்தில்.

இந்தப் பின்னணியில், பதுங்கிப் பாயும் ஆட்கொல்லியின் பிடர் பிடிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்.ஆசிரியர்.

இங்கே கிராமம், நகரம் என்ற பூகோள வரையறைகள் பொசுங்கிப் போகின்றன. மெத்தப் படித்தவர்களின் சாதுர்யமும், சாமானியர்களின் பிள்ளை மனமும், துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

எப்போதும் சரசரக்கும் பட்டுப் புடவையில், சரள ஆங்கிலத்தில் சாமர்த்தியம் காட்டும் டாக்டர் சுமதியை, ஒரு சமூக விரோதியென கலைவாணி அடையாளம் காட்டுகிற போது ‘இனியேது எனக்கு வாழ்வு’ என்று ஒதுங்கி, ஒடுங்கி விடாமல், மற்றவர் வாழ்வை மதித்துக் காரியமாற்றும் அவளது.துணிச்சல் தெரிகிறது. கிராமத்து புஷ்பமான ‘கலை’கசங்கி வீழ்வதைக் காண்கையில் நெஞ்சம் கலங்குகிறது.

‘அந்த மூன்று போலீஸ்காரர்களுக்கும் எய்ட்ஸைக் கொடுத்துட்டேன்’ என்று எக்களிக்கிற எஸ்தரை, ஏதோ எதேச்சையாக இல்லாமல், எதேச்சாதிகாரத்துக்கு எதிராக ஏவப்பட்ட கணையாக அடையாளம் காண்கிறோம். எஸ்தரின் கொச்சைப் பேச்சும், ‘வாடா போடாவும்’ ஆண்-பெண் உறவுகளின் நளினத்தை ஏளனப்படுத்துகிற விஷயம் அல்ல. சமூக அவலங்களுக்குச் சவால் விடுகிற மொழியாகத்தான், சமுத்திரம், அந்தப் பாத்திரத்தைக் கையாளுகிறார்.

‘உடம்பை எவ்வளவு தூரம் கெடுக்க முடியுமோ, அவ்வளவு தூரம் கெடுக்க வேண்டும், எவ்வளவு சீக்கிரம் சாக வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் சாக வேண்டும்’ என்று மெழுகுவர்த்தியாய் உருகும் மனோகரும் நம்மை உருக்கும் ஒரு பாத்திரம்.

கலை, எஸ்தர், மனோகர் இவர்கள் சோகச் சித்திரங்கள் என்று சொல்வது கூட வழக்கமான வருணனை. அதை விட… அதை விட… ஆமாம், அழுகைதான் வருகிறது.

‘பாலைப்புறாவை’த் தொடராக்கி தினமணி, தனது நீண்ட கால சமூக சேவைக்கு இன்னுமொரு சான்றினை நிறுவியுள்ளது.

தினமணி மூலம் லட்சக் கணக்கான வாசகர்களுக்கு ஒரு சமூகப் பயணம் தரப்பட்டுள்ளது. சினிமா, இப்படிப்பட்ட புதினங்களைப் பார்க்க வைப்பது நல்லது. சாராயத்திற்கும், சினிமாவுக்கும், சம அளவிலும் கணிசமாகவும் நிதி ஒதுக்கீடு செய்யும் என் சகோதரத் தமிழனை, சினிமாவைத் தவிர வேறெந்த வழியில் சென்றடைவது?

சு.சமுத்திரம் ஒரு வெகு ஜன சமுத்திரம். பாலைப்புறா அவரது சமூக விஞ்ஞான சாத்திரம்.

சென்னை,

-விஜயதிருவேங்கடம்

10.4.1998.