ஆசிரியர்
முன்னுரை
எனக்குப் பிறந்த முதல் குழந்தை ஈராண்டுக்குள் இறந்தது. வருத்தத்தில் மூழ்கிய எனக்கு அந்த வருத்தத்தினை மறக்கச் சிந்தாதரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளித் தொண்டு கிடைத்தது; அதன் செயலாளன் ஆனேன். ஆதலின், அதனை, மகவெனவே கொண்டு வாழலாயினேன். சிந்தாதிரிப்பேட்டைத் தொடக்க நிலைப் பள்ளி, இராவ் பகதூர் கலவலகண்ணன் செட்டியார் பெண்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை மாண்டிசோரிப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை ஆரம்பப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டைக் கலியாணம் பெண்கள் உயர்நிலைப்பள்ளி. சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப்பள்ளி எனப் பள்ளிகள் இன்று வளர்ந்தோங்கி உள்ளன. சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியனாகத் தொண்டாற்றவந்ததும் பள்ளிகளின் செயலாளன் எனத் தொடர்ந்திருப்பது இயலாததாயிற்று. திரு. துரை வேலனார் அன்புடன் முன்போந்து செயலாளராகத் தொண்டாற்றிவருகிறார். ஆதலின், வருத்தம் ஒருவாறு எனக்கு மகிழ்ச்சியாக மாறியது.
பள்ளியோடு கால் நூற்றாண்டு தொடர்ந்திருந்த என் நினைவைப் பாராட்டவேண்டும் என்று நண்பர்கள் விரும்பினார்கள். தொண்டினைச் செய்தோம் என்ற நிறைவுள்ளமே பெரிய பாராட்டு. அதற்கு மேலும் பாராட்டு ஏன்? ஆனால் இளைய நண்பர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். யான் எழுதிய கட்டுரைகள் இதுவரை நூல்வடிவில் வெளிவராதவற்றைத் திரட்டி நினைவுப்பதிப்பாக வெளியிடுவதே இந்தப் பாராட்டு என்றபோது எவ்வாறு நான் மறுக்கத்தகும்?
இந்தச் சூழ்ச்சியைச் செய்த திரு. துரைவேலனார், திரு. பிநாகபாணியார், திரு. சண்முகசுந்தரனார், திரு. இராசேசுவரி