உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

மருமக்கள்வழி மான்மியம்

பூமக ளோடும் புவிமக ளோடும்
மதித்திட அரிய வளமெலாம் ஒருங்கு
வைகுந் திவ்விய வைகுந் தத்தில் 15
ஆயிரம் பணாமுடி அரவணை மீதே
அறிதுயி லமர்ந்திவ் வகில மெல்லாம்
ஆளும் பெரிய அண்ணலே யாயினும்,
கபட நாடகன்; கையிற் சக்கரம்
இருந்தும், எவர்க்கும் ஈயாக் கள்வன். 20
ஆதலின், நீயும்,
தந்தை வீடெனத் தங்கிட மின்றி
மாமன் வீடென மதிப்பிட மின்றிச்
சந்தியும் தெருவும் தண்ணீர்க் கரையும்
மரத்தி னடியும் வாழிட மாக 25
இருந்தனை, உன்போல் இருவழி கட்கும்
இடைவழித் தங்கி இடர்ப்படும் எங்கள்
வருத்த மெல்லாம் அறிந்திட வல்லவர்
அறிந்து முற்றும் அகற்றிடும் நல்லவர்
நடுநிலை கண்ட நாயகர் வேறிங்கு 30
ஒருவரும் இல்லை; உன் திருவடி பணிந்து
மருமக் கள்வழி மான்மியம் பாடத்
தொடங்கினன், வந்து துணைநின் றிந்நூல்
இனிது முடிய இதயம்
கனிவு செய்தெனைக் காத்தருள் வாயே. 35


19-20. சக்கரம்-இருபொருள்: திருமால் கையிலேந்திய சக்கராயுதம்; திருவிதாங்கூரில் வழங்கிய சக்கரம் என்னும்ஒரு செப்பு நாணயம். இப்பெயருடைய நாணயங்கள் கொல்லம் ஆண்டு 1125 புரட்டாசி மாதம் 30-ம் தேதியோடு அரசாங்கத்தாரால் நிறுத்தப்பட்டுவிட்டன.