உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப் போர்/ஐந்து அரசுகள்

விக்கிமூலம் இலிருந்து

ஐந்து அரசுகள்


பெரியார்:—'திராவிட நாடு' தனி அரசாக அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பற்றித்தங்கள் கருத்தென்ன?

கோதாவரி மிஸ்ரா :—நியாயமான கோரிக்கையே! அந்தந்த இனம் தங்களின் தனி ஆட்சி கோருவதிலே தவறு என்ன இருக்க முடியும்?

பெரியார்:—காங்கிரஸ் தலைவர்கள் மறுப்பதன் நோக்கம் என்ன?

மிஸ்ரா :—அவர்கள் மறுக்காதது எது? எங்கள் கதையைக் கேட்டால் என்ன சொல்வீரோ ?

பெரியார்:—என்ன? என்ன?

மிஸ்ரா :—ஏன் கேட்கிறீர்கள் அந்த வயிற்றெரிச்சலை ! எனக்கும் வார்தாவுக்கும் சண்டை ஏற்பட்ட இரகசியம் என்ன தெரியுமோ? எல்லாம் நீங்கள் கேட்கிறது போல, என் மாகாண மக்களுக்கு நியாயம் வழங்கும்படி கேட்டதுதான்.

பெரியார்:—என்ன கேட்டீர்கள்? ஏன் மறுத்தார்கள் ?

மிஸ்ரா :—விவரத்தைக் கேளுங்கள். ஒரிசா மாகாணம் ஒரியர்களின் இடம். மிக்கஏழ்மையான மாகாணம். புதியது, இதற்கென ஏற்பட்டுள்ள எல்லைக் கோடு சரியல்ல. அதனால் பல தொல்லை. எல்லையைத் திருத்தி அமைத்தால், மாகாணத்தின் செல்வநிலை விருத்தி அடையும்.

பெரியார்:—ஒரிசாவுக்குச் சொந்தமாக ஏதே னும் இடம், இன்னமும் ஒரிசாவில் சேர்க்கப்படவில்லையோ?

மிஸ்ரா : —ஆமாம்! ஜெம்ஷெட்பூர் பிரதேசம் இருக்கிறதே, அது பீகாருக்குச் செல்வமாக இருக்கிறது. ஆனால் அது பெருவாரியாக ஒரியா மக்களே உள்ள இடம், ஒரிசாவுக்கே சொந்தம். அதை பீகாரிலே சேர்த்து விட்டனர். அதை ஒரிசாவிலே சேர்க்க காங்கிரஸ் தீர்மானிக்க வேண்டுமென்று கெஞ்சினேன், வார்தா வரந்தர மறுத்துவிட்டது.

பெரியார் :—ஏன்?

மிஸ்ரா :—ஒருக்காலும் ஜெம்ஷெட்பூர் பிரதேசத்தை, பீகாரிலிருந்து பிரிக்கக் கூடாது என்று பாபு ராஜேந்திர பிரசாத் கூறிவிட்டார். வார்தாவிலே. பீகாருக்கு வருமானம் கெட்டுவிடும். அது பிரசாதுக்குப் பிடிக்கவில்லை. பிரசாதுக்குப் பிடிக்காதது காந்தியாருக்குப் பிடிக்கவில்லை. காந்தியாருக்குப் பிடிக்காதது காங்கிரசுக்குப்பிடிக்குமோ! ஆகவே எனக்கு வரம் இல்லை! இது மட்டுமா? சிட்டகாங் பிரதேசமிருக்கிறதே, அங்கே பெருவாரியான மக்கள் ஒரியாக்கள். ஆகவே அந்த இடமும் ஒரிசாவுடனேதான் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்யுங்கள் என்று கேட்டேன். இதையும் மறுத்து விட்டனர்.

பெரியார் :—இதற்கு யார் தடை சொன்னது?

மிஸ்ரா :—சுபாஸ் சந்திரபோஸ் இதைப் பலமாக எதிர்த்தார். சிட்டகாங், வங்காள மாகாணத்திலே இப்போது இருக்கிறது. அதை இழக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அப்போது அவர் காந் தியாரின் செல்லப் பிள்ளைகளில் ஒருவராக இருந்தார். ஆகவே எனக்கு "இல்லை" தான் கிடைத்தது.

பெரியார் :—போசுக்குச் சிட்டகாங் மீது அவ்வளவு ஆசை பிறக்கக் காரணம்?

மிஸ்ரா:- காரணமா? வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும், இருக்கும் வீதம் தெரியுமே உங்களுக்கு. முஸ்லீம்கள் மெஜாரட்டி என்றபோதிலும், அதிகமான மெஜாரடியல்ல; 56% முஸ்லீம், 44% இந்து என்ற அளவு இருக்கும். சிட்டகாங் ஒரியாக்கள் வாழும் இடம், இந்துப் பிரதேசம்; இதை வங்கத்திலிருந்து பிரித்துவிட்டால், வங்கத்திலே முஸ்லீம்களே மிக மெஜாரடி! பஞ்சாபிலுள்ளது போன்றாகிவிடும். இந்து ஆதிக்கம் குறையும், எண்ணிக்கையே குறையும். இது சுபாசுக்கு இஷ்டமில்லை. சிட்டகாங் போய்விட்டால், வங்காளத்திலே, இந்துக்களின் ஆதிக்கம் ஏற்படவே முடியாது. வங்காளமோ 'வந்தே மாதரம்' பிறந்த இடம். எனவே வம்புக்கு நிற்கிறது. முஸ்லீமுடன் சச்சரவிடுவதற்காக, இந்து எண்ணிக்கையை அதிகமாகக்காட்ட, சிட்டகாங்கை விட மறுக்கிறார்கள் வங்கஇந்துத் தலைவர்கள்.

பெரியார்:—இப்படியா இருக்கிறது? பிறகு உங்கள் மாகாணத்தின் கதிதான் என்ன?

மிஸ்ரா :—இப்போது பூரி ஜகன்னாதர்தான்! என் கிளர்ச்சி வலுத்து ஒரியர்கள் பெருவாரியாக உள்ள இடம், ஒரிசாவுக்கு என்ற திட்டம் நிறைவேறினால் ஒரிசா மாகாணம் முன்னுக்கு வரமுடியும்.

மிகப்பழய, மிகச்சிறிய மாடிவீட்டிலே, இந்த சம்பாஷணை நடந்தது, சில ஆண்டுகளுக்கு முன்பு. பண்டிட் கோதாவரி மிஸ்ரா, ஒரிசா மாகாண மந்திரியாவதற்கு முன்பு நடந்த உரையாடல். அன்று ஒரிசாவின் நிலைமை விளக்கப்பட்டது போலவே, ஒவ்வோர் மாகாணத்திலும், (சிந்து எல்லைப் புறம் தவிர) இந்தப் பிரிவினைக் கிளர்ச்சி சம்பந்தமாகப் பல நிபுணர்கள் 'இங்கும் இந்த கதிதான்!' என்று முறையிட்டனர்.

பஞ்சாப் ! இங்கு மக்கள் பஞ்சாபிகள். ஆனால் சூத்திரக்கயிறு, வியாபாரம், 'பாம்பேவாலாவிடம்' இருக்கிறது, என்று லாகூரிலே ஒரு பிரபல வியாபாரி கூறினார். அவரும் வெளி மாகாணத்தவரே!

அசாமிலே ஒரு சிமிட்டிக் கம்பெனியின் ஆரம்ப விழா! ஆதை ஆதரிக்கும்படி வெளியிடப்பட்ட அறிக்கையிலே, கம்பெனியின் விசேஷ குணங்களை விளக்கி இருந்தது. கம்பெனியின் திறமையை விளக்குவதைவிட அசாமின் நிலைமை நன்கு விளங்கிற்று அந்த அறிக்கை மூலம்! இந்தக் கம்பெனியின் டைரக்டர்கள் மிக்க திறமைசாலிகள். 5 பேர் வங்காளிகள், 2 ஐரோப்பியர், என்று அறிக்கை தெரிவித்தது. அசாமிய நாட்டு கம்பெனிக்கு வங்க ஐரோப்பிய முதலாளிகள்!

பம்பாயின் ஒரு பகுதி, மத்ய மாகாணத்திலே சில இடங்கள், ஆகியவற்றினைக் கொண்டு விதர்ப்பம் என்ற மாகாணத்தை அமைக்க வேண்டுமென்பது, கனம் ஆனே அவர்களின் கருத்து. அதற்கான கிளர்ச்சியும் இருந்து வருகிறது.

பீகாரிலே வெளி மாகாணத்தாரின் ஆதிக்கத்தையும், உயர்ந்த ஜாதிக்காரர் என்போரின் ஆளுகையையும் ஒழித்து பீகாரின் பூர்வ குடிகளுக்கு உரிமை ஏற்படுத்தி, பீகாரிலே அவர்களின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதிபாசி இயக்கம் இருக்கிறது. (ஆதிவாசி— பூர்வ குடிகள், என்பதுதான் ஆதிபாசி என்பது). இதனைப் பக்குவமாக நடத்திக் கொண்டு வருகிறார்கள்.

நாட்டிலே இன்றுள்ள உணர்ச்சியை, நாட்டின் பெரிய கட்சி என்று பாத்யதை கொண்டாடும் காங்கிரஸ், மறைக்கப் பார்க்கிறது என்ற போதிலும், பிரிவினை, உரிமை, எனும் எண்ணம், எங்கும் தோன்றிவிட்டது. 'திராவிட நாடு' தனிநாடாக வேண்டுமென்ற நமது கிளர்ச்சி, இதிலே ஒரு பகுதி. சர் பிரேஸ்கான் நூன், அலிகார் பல்கலைக் கழக மாணவர் கூட்டத்திலே பேசுகையில் இந்தியா,

1. எல்லைப்புறம், பலுசிஸ்தானம், பஞ்சாப்
2. வங்காளம், அசாம்
3. ம. மாகாணம், ஐக்கியமாகாணம்
4. பம்பாய்
5. திராவிட நாடு (சென்னை)

என ஐந்து அரசுகளாகப் பிரித்து அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். வெளி நாட்டுப் படை எடுப்பு ஏற்பட்டால் என்ன செய்வதென்று பேசுவோரின் வாயை அடக்கவும் வழியொன்று கூறியுள்ளார். இந்த ஐந்து அரசுகளும் அனுப்பும் பிரதிநிதிகள் கொண்ட மத்ய சர்க்கார், பாதுகாப்பு, நாணய வாரி முறை ஆகியவற்றை நடத்தி வரலாமென்றும் கூறியிருக்கிறார்.

நியூஜிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகியவைகள் தனி அரசுகளாக இருத்தல் சாத்யமாகிறதே, இங்கு, ஐந்து அரசுகள் ஏற்படுவதிலே என்ன தவறு இருக்க முடியும் என்றும் கேட்டிருக்கிறார். ஐம்பத்தாறு அரசுகள் இருந்தனவாம் இந்து ஆட்சிக்காலத்திலே. புராண இதிகாசாதிகளும் ஆரம்பகால சரிதைகளும் இதனை வலியுறுத்துகின்றன. ஐம்பத்தாறு அரசுகள் கொண்ட பூபாகத்திலே இன்று சர் நூன் கூறும் விதமான ஐந்து அரசுகளுங்கூட இருக்க இந்து தலைவர்கள் சம்மதிக் காதது விந்தைதான் ! இதற்குக் காரணம் முன்னாளிலே இந்த ஐம்பத்தாறு அரசுகளும், ஆரியக்கூடங்கள்! ஆகவே அந்தநிலை பாரத மாதாவை வெட்டுவதாகத் தோன்றவில்லை! இப்போது தனி அரசுகள் ஏற்பட்டால், ஆரிய ஆதிக்கம் அழிந்தொழியும். எனவேதான், இன்று, தனி அரசுகள் அமையக்கூடாதென்று ஆர்ப்பரிக்கின்றனர்.

எவ்வளவு கடுமையான கூக்குரலைக் கிளப்பினாலுஞ்சரியே, இந்தப்பிரிவினைக் கிளர்ச்சி அடங்காது. வேரூன்றி விட்டது. முறைகள், திட்டங்கள் பலப் பல வெளியிடப்படக்கூடும். சர் நூன் கூறிய மத்யசர்க்கார் என்பதை, இந்திய நேசநாடுகளின் கூட்டுப் பாதுகாப்புக் கழகம் என்ற அளவில் மட்டுமே நாம் ஏற்றுக் கொள்கிறோம். திட்டங்களிலே பல விதம் விவாதிக்கப்படுவது சகஜமே. ஆனால் அடிப்படையான கோட்பாடு இனி மாய்க்க முடியாததாகிவிட்ட தைக் காங்கிரஸ் உணர மறுப்பது ஏனோ ! யார் மறுத்தாலும் இந்தக் கிளர்ச்சி அடங்கிவிடப் போவதில்லை. அறிவாளிகள், இந்தக் கிளர்ச்சிபற்றி அலட்சியமாக இருந்துவிடவும் முடியாது. "பாகிஸ்தான் பிரிட்டிஷாரால் தரவும் முடியாது முஸ்லீம்கள் அடையவும் முடியாது" என்று முப்புரிதரித்த முதியோர் ராமஸ்வாமி சாஸ்திரி முதல் புத்தர் அவதாரமென்று சொல்லும் வார்தா முனிவர் உள்பட சொன்னார்கள். மறுத்தார்கள். காலப் போக்கையும் கருத்து வளர்ச்சியையும் உணர மறுக்கும் உன்னதமான உரிமையை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

பல பல ஆண்டுகளுக்கு முன்பு "எதிரி எப்படி வருவான், எடுத்து வீசு துளசியை எங்கும்" என்று கூறினாராமே தஞ்சை மன்னனுக்கு ஒரு கனபாடி, அந்த வாழையடி வாழையாக வந்த திவான்பகதூருக்கு இத்தகைய உரிமை நிச்சயம் உண்டு! கிடக்கட்டும், விழியிருந்தும் வழி தெரியாத இத்தகைய வித்தகர்கள் ஒருபுறம்!

நமது கிளர்ச்சிக்குரல், உள்நாடு, வெளிநாடுகளிலும் கேட்குமாறு செய்யவேண்டும். எந்தத் திட்டம் வந்தாலும், எத்தனை அரசுகள் அமைக்கப்பட்டாலும், இயற்கை சரிதம், இனப் பண்பு, இலக்கியம், இன்றைய நிலைமை முதலிய எந்த ஆதாரத்தைக் கொண்டு அரசுகள் அமைப்பதானாலும், நர்மதை ஆற்றங்கரையிலிருந்து கன்னியாகுமரி வரையிலே, 'திராவிடநாடு' அமைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.