உள்ளடக்கத்துக்குச் செல்

பரிசு/காதல்-கதை 2

விக்கிமூலம் இலிருந்து

கா த ல் ?

ஜல் ஜல் ஜல ஜல ! ஜல் ஜல் ஜல ஜல!

"உம்! கொஞ்சம் வேகமா நட. வேகற வெய்யில் வர்ரதுக்குள்ளே ஊர் போவோம்..."

ஜல் ஜல், ஜல ஜல, ஜல் ஜல். ஜல ஜல.

"சும்மா போவ மாட்டியே, நீ. உன் வாடிக்கையே அது தானே? சவுக்கடி கொடுத்தால் தானே போவே...உம்...

"வேண்டாமப்பா, பாவம். வாயில்லா பிராணி. வெயில் வேளை. போகட்டும் மெதுவா, அடிக்காதே என்று வேதவல்லி சொன்னாள், மாட்டை சவுக்கால் சுரீல் என அடித்து வாலைப் பிடித்து ஒடித்து வண்டியை ஓட்டியவனைப் பார்த்து. மணி காலை பதினொன்று ஆகிறது. ஒரு சாலை ஓரமாக வண்டி போகிறது. வண்டியிலே இருமாதர், தாயும் மகளும், தலைக் குட்டையும், சந்தனப் பொட்டும், பொடி மட்டையுடன் ஒரு ஆடவர். வேதவல்லியின் புருஷர், வீராசாமிபிள்ளை, ஆக மூவரும் செல்லுகின்றனர். வண்டி மாடு செவில நிறம், ஓட்டுகின்ற ஆளும் சிகப்பு, மீசை கருக்கு விட்டுக் கொண்டிருக்கிற பருவம். "என்னமோம்மா. நீங்க பாவ புண்ணியத்தைப்பாக்குறீங்க. மாட்டை அடிச்சு ஓட்டாதீங்கன்னு சொல்றீங்க. சில பேரே பார்க்கணுமே; என்னடா, மாடு நகருது, அடிச்சு ஓட்டேன். கொடுக்கிறது காசா மண்ணா என்று கோபிப்பார்கள்" என்றான் வண்டிக்காரன்.

"சிலபேரு அப்படித்தான். ஓட்டமும் நடையுமா போனாக் கூட, பன்னிரண்டு மணிக்குள்ளே போயிடலாமே மாரிக்குப்பத்துக்கு, உச்சி வேளை பூஜைக்குப் போய்ச் சேர்ந்துடலாமே” என்று வேதவல்லி கூறினாள்.

“அதுக்குள்ளே பேஷா போகலாம். அடிச்சி ஓட்டினா அரைமணிலே போகலாம். எதுவும் அப்படித்தான். அடிச்சி ஓட்டாத மாடும், படிச்சி வழிக்கு வராத பிள்ளையும் எதுக்கு உதவப் போவுது. என் சேதியைக் கேட்டா சிரி சிரின்னு சிரிப்பிங்கோ, நான் படிச்சதும், பிழைச்சதும் அப்படி" என்றான் வண்டியோட்டி.

"நீ படிக்கவே இல்லையாப்பா" என்று கேட்டாள் வேதவல்லி. "படிச்சேன், ஆறாவது வரையிலே. அதுக்கு மேலே ஆட்டமெல்லாம் ஆடினேன். இப்போ மாட்டுவண்டி ஓட்டுற வேலை தான் கிடைச்சுது. அதுவும் நம்ம சிநேகிதர் ஒருவர் காட்டினார், இந்தப் பிழைப்பையாவது..உம்! எல்லாம் இப்படித்தான். அந்த சினிமாவிலே கூட பாட்றாங்களே, "நாடகமே உலகம், நாளை......" என்று மெல்லிய குரலிலே, பாடலைப் பாடினான் பரந்தாமன்–அதுதான் அவன் பெயர். நாடகமே உலகத்திலிருந்து "மாயப் பிரபஞ்சத்துக்கு" வந்தான். அதிலிருந்து "ராதே உனக்குக் கோபம் ஆகாதடி என்று ஆரம்பித்தான். வீராசாமி கனைத்தார், "தம்பி, பாட்டு பிறகு நடக்கட்டும். ஓட்டு வண்டியை" என்றார். வேதவல்லி “சாரதா! சாரதா! என்னம்மா? மயக்கமா இருக்கா" என்று தன் மகளைக் கேட்டாள்.

கொஞ்ச நேரம் சென்றதும் வண்டிக்குள்ளே நோக்கினான். சாரதா வேதவல்லியின் தோள்மீது சாய்ந்துபடுத்துக் கொண்டிருந்தாள். ஒரு முறை அவளைக் கண்டான், ஓராயிரந்தடவை ராதே உனக்குக் கோபம் ஆகாதடி என்று பாடலாமா என்று தோன்றிற்று. பரந்தாமன் உள்ளத்தை அந்தப்பாவை கொள்ளை கொண்டாள். கண்கள் மூடித்தான் இருந்தன; ஆனாலும் அதிலும் ஒரு வசீகரம் இருந்தது. காற்றினால் சீவி விடப்பட்டிருந்த கூந்தல் சற்று கலைந்து, நெற்றியில் அங்குமிங்குமாக அலைந்தது, கருப்புப்பொட்டு அந்த சிங்காரியின் நெற்றியிலே வியர்வையில் குழைந்து ஒருபுறம் ஒழுகிவிட்டது, ஆனால் அதுவும் ஒருதனி அழகாகத்தான் இருந்தது, "மாதே உனக்குச் சோகம் ஆகாதடி" என்று பாட எண்ணினான். சோகித்துச் சாய்ந்திருந்த அந்த சொர்ண ரூபியை நோக்கி 'ஆஹா! நான் வண்டியை ஓட்டுபவனாகவன்றோ இருக்கிறேன். எனக்கு இவள் கிட்டுவாளா?' என்று எண்ணினான், ஏங்கினான், மாடு தள்ளாடி நடந்தது, பரந்தாமனுக்கு அதைத்தட்டி ஓட்டமுடியவில்லை. இஷ்டங்கூட இல்லை. அந்த ரமணி எவ்வளக்கெவ்வளவு அதிகமாக வண்டியில் இருக்கிறாளோ அவ்வளவு ஆனந்தம், வண்டியோட்டுகிற வேளையிலும் இப்படிப்பட்ட சம்பவம் இருக்கிறதல்லவா? என்று கூட எண்ணினான்.

ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆறாவது மைலில் மாரிக்குப்பம். அங்கு ஆடி வெள்ளிக்கிழமையிலே, குறி சொல்வதும், பிசாசு ஓட்டுவதும், குளிச்சம் கட்டுவதும், முழுக்கு போடுவதும் வழக்கம். சுற்றுப்பக்கத்து ஊரிலிருந்து திரளான கூட்டம் வரும். மாரிக்குப்பம் கோயில் பூசாரி மாடிவீடு கட்டியதும். அவன் மகன் மதராசிலே மளிகைக்கடை வைத்ததும், அந்த மகமாயி தயவாலேதான், எத்தனையோ ஆயிரம் குளிச்சம் கட்டியிருப்பான் பூசாரி. அவனைத்தேடி எத்தனையோ ஆயிரம் பேர் வந்திருப்பார்கள், எவ்வளவோ பேரைப் பார்த்தவன். எத்தனையோ பிசாசை ஓட்டியவன். அந்தப் பேர்வழியைக் காணவும் சாரதாவுக்கு அடிக்கடி வருகிற சோகம், ஏதாவது காத்து சேஷ்டையாக இருக்கலாம். அதுபோக ஒரு குளிச்சம் வாங்கிப் போகலாமென்றும்தான் ஐம்பது அறுபது மைல் தாண்டி அழகாபுரியை விட்டு, வீராசாமிப் பிள்ளை மனைவியையும் மகளையும் அழைத்துக்கொண்டு வந்தார். ஆவணியிலே சாரதாவுக்கு கலியாணம் நிச்சயமாகிவிட்டது. நல்ல பெரிய இடத்திலே ஏற்பாடு, நூறு வேலிக்கு நிலம், ஆடும். மாடும் ஆளும், அம்பும், வண்டியும் அதிகம், அந்த அழகாபுரிக்கே அவர்தான் ஜெமீன்தார் போல. வயது கொஞ்சம் அதிகம் தான். அறுபது என்று சொல்லுவார்கள். ஆனால் அவர் நினைப்பு முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள்தான். ஆள் நல்ல உயரம், பருமன், மீசை மயில்ராவணன் படத்திலே இருப்பது போல. ஆசாமி பேசினால், இடி இடித்த மாதிரிதான். அழகாபுரியிலே மாரியப்ப பிள்ளை என்றால் போதும் கிடுகிடுவென நடுங்குவார்கள்.

அவருக்கு மூன்றாந்தாரமாக சாரதா ஏற்பாடாகிவிட்டது. சாரதாவுக்கு வயது பதினாறுகூட நிரம்பவில்லை. அவள் அழகு அழகாபுரிக்கே அழகு செய்தது. நல்ல பஞ்சவர்ணக்கிளி என்றாலும் சோலையில் பறக்க விடுகிறார்களா? தங்கக் கூண்டிலே போட்டுத்தானே அத்துடன் கொஞ்சுவார்கள். அதைப் போலத்தான் சாரதாவுக்கு மாரியப்பபிள்ளை கூண்டு. அவருடைய பணம் பேசுமே தவிர வயதா பேசும்? அதிலும் வீராசாமிப் பிள்ளை வறட்சிக்கார ஆசாமி. கடன் பட்டுப்பட்டுக் கெட்டவர். இந்த சம்பந்தத்தினால் தான் ஏதாவது கொஞ்சம் தலை எடுக்க முடியும். வேதவல்லிக்குக் கொஞ்சம் கசப்புத்தான். இருந்தாலும் என்ன செய்வது? சாரதாவுக்குத் தெரியும் தனக்குப் பெற்றோர்கள் செய்கிற விபரீத ஏற்பாடு. அதனை எண்ணி எண்ணி ஏங்கினாள்.வாடினாள், மாரியப்ப பிள்ளையை மனதாலே நினைத்தாலே பயமாக இருந்தது அவளுக்கு. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியதால் உடல் இளைக்கலாயிற்று. ஐயோ! அந்த ஆர்ப்பாட்டக்காரக் கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு நான் எக்கதியாவது? என்று நடுங்கினாள் அந்தப் பெண். தனது குடும்பத்திலுள்ள கஷ்டமும், அந்தக் கஷ்டத்தைப் போக்கிக் கொள்ளவே தன்னை. கிளியை வளர்த்து பூனையிடம் தருவது போல மாரியப்ப பிள்ளைக்கு மணம் செய்து கொடுக்கத் துணிந்ததும் அவளுக்குத் தெரியும். தனது குடும்பக் கஷ்டத்தைப் போக்க வேண்டுமென்பதிலே சாரதாவுக்குத் திருப்திதான். ஆனால் தான் கிழவனுக்குப் பெண்டாக வேண்டுமே எண்றெண்ணும்போது, குடும்பமாவது பாழாவது, எங்கேனும் ஒரு குளத்தில் விழுந்து சாகலாமே என்று தோன்றும். இது இயற்கைதானே!

இப்படிப்பட்ட பொருத்தமில்லாத ஜோடிகளைச் சேர்ப்பதற்காக யார் என்ன செய்கிறார்கள்? ஊரார் கேலியாகப் பேசிக் கொள்வார்களேயொழிய, இவ்விதமான வகையற்ற காரியம் நடக்க வொட்டாது தடுக்கவா போகிறார்கள்? கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன் என்று பழ மொழி இருக்க, கல்லோ புல்லோ அல்லாத மாரியப்ப பிள்ளைக்கு சாரதாவை மணமுடித்துக்கொடுக்காது இருப்பார்களோ?

அதிலும் மாரியப்ப பிள்ளை ஒரு ஏழையாக இருந்தால் "கிழவனுக்கு எவ்வளவு கிறுக்கு பார்த்தீர்களா! காடு வா வா என்கிறது. வீடு போபோ என்கிறது. கிழவன் சரியான சிறு குட்டி வேண்டுமென்று அலைகிறானே. காலம் கலிகாலமல்லவா" என்று கேலி செய்வார்கள். மாரியப்ப பிள்ளையோ பணக்காரர். எனவே அந்த ரமணிசாரதா சமூகத்தில் வளர்த்து விடப்பட்ட பழக்கத்துக்கு தனது அழகையும் இளமையையும் பலிகொடுக்கப் போகிறாள். இவ்விதம் அழிந்த ‘அழகுகள்' எவ்வளவு! தேய்ந்த இளமை எத்துணை!!

சாரதாவுக்குப் பிசாசு பிடித்துக்கொண்டது என்று அவளின் பெற்றோர் எண்ணினார்கள். அவளுக்கா பிசாசு பிடித்தது? அல்ல! அல்ல! மாரியப்ப பிள்ளை பிடித்துக் கொள்ளப்போகின்றாரே என்ற பயம் பிடித்துக்கொண்டது. பாவை அதனாலேயே பாகாய் உருகினாள். அதைத் தவிரவேறு என்ன செய்யமுடியும்? அவள் புரட்சிப் பெண்ணல்ல! புத்துலக மங்கையல்ல!

மாரி கோயிலுக்கு மாட்டுவண்டி வந்து சேர்ந்தது. அம்மன் தரிசனமாயிற்று. அந்தப் பூசாரி ஏதோ மந்திரம் செய்தான். மடித்துக் கொடுத்தான் மாரி பிரசாதத்தை. வாரத்திற்கோரு முறை முழுக்கு. ஒருவேளை உணவு. ஒரு நாளைக்கு ஒன்பது முறை அரசமரம் சுற்றுவது என்று ஏதேதோ 'நிபந்தனை' போட்டான். கோவிலில் விற்ற சோற்றைத் தின்றார்கள். மிச்சம் கொஞ்சம் இருந்தது. "பாவம்! வண்டிக்கார பிள்ளையாண்டானுக்குப் போடலாமே" என்றாள் வேதவல்லி. "ஆமாம், பாபம்" என்றாள் சாரதா.

ஒவ்வொரு உருண்டையாக உருட்டி வண்டியோட்டும் பிள்ளையாண்டான் கையிலே கொடுத்தாள் சாரதா. அந்த நேரத்திலே அவள் தந்தை வெகு சுவாரசியமாக பூசாரியுடன் பேசிக் கொண்டிருந்ததால், அதுவும் நடக்க முடிந்தது. அவர் மட்டும் அதைப் பார்த்திருந்தால், ஒரு முறைப்பு, ஒரு கனைப்பு–உடனே சாரதா நடுநடுங்கிப்போயிருப்பாள்.

சாரதா வண்டியோட்டிக்குச் சோறு போட்டதாக அவன் கருதவில்லை. அமிர்தம் கொடுத்தாள் என்றே கருதினான். அந்த மங்கையின் கையால் கிடைத்த உணவு, அவனுக்கு அவ்வளவு இன்பமாக இருந்தது. அவளும் அவனுக்கு வெறும் சாதத்தைப் போடவில்லை. ஒவ்வொரு பிடியிலும், தனது காதல் ரசத்தைக் கலந்து பிசைந்து தந்தாள். இவரைப் போன்றதன்றோ என் புருஷன் இருக்கவேண்டும் என்று எண்ணினாள். அந்த எண்ணம் திடீரெனத் தோன்றியதால் துணிவும் ஏற்பட்டது. அந்தத் தையலுக்கு. எனவே அவனுக்குச் சாதம் போட்டுக் கொண்டே புன்சிரிப்பாக அவனைப் பார்த்துச் சிரித்தாள். பூந்தோட்டத்தின் வாடைபோல அந்தப் புன்சிரிப்பு பரவிற்று. வாலிபன் நாடி அனைத்திலும் அது புகுந்தது. இந்தக் காதல் காட்சியைக் கடைக் கண்ணால் கண்டாள் வேதவல்லி..பெருமூச்சு விட்டாள்.

மாரி பிரசாதம் பெற்றாள் சாரதா. இனி நோய் நீங்குமென வீராசாமிப் பிள்ளை எண்ணினார். சாரதா முன்போல முகத்தைச் சுளித்துக் கொள்ளாமல், சற்று சிரித்த முகமாக இருப்பதைக் கண்டு, வீராசாமிப் பிள்ளை தம் மனைவி வேதவல்லியை அருகே அழைத்து, "வேதம்! பார்த்தாயா பெண்ணை. பூசாரி போட்ட மந்திரம் வேலை செய்கிறது. முகத்திலே தெளிவு வந்து விட்டது பார்." என்று கூறினார். வேதவல்லிக்குத் தெரியும், சாரதாவின் களிப்புக்குக் காரணம். பூசாரியுமல்ல, அவன் மந்திரமுமல்ல. ஆனால் புதிதாகத் தோன்றிய பரந்தாமனும், அவன் ஊட்டிய காதலும் பெண்ணின் உள்ளத்திலே ஆனந்தத்தைக் கிளப்பிவிட்டதென்பது.

மறுபடி அவர்கள் அதே வண்டியிலேறி ரயிலடிக்கு வந்தனர். வண்டியோட்டியிடம் கூறிவிட்டு, ரயிலேறும் சமயம் வேதவல்லி, பரந்தாமனைப் பார்த்து. "ஏன் தம்பி, எங்க ஊருக்கு வாயேன் ஒரு தடவை" என்று அழைத்தாள். சாரதா வாயால் அழைக்கவில்லை; கண்ணால் கூப்பிட்டாள். வேதவல்லி வாயால் கூப்பிட்டது பரந்தாமன் செவியில் புகவில்லை. சாரதாவின் கண்மொழி, அவனுடைய அத்தனையிலும் புகுந்து குடைந்தது. "மாடாவது வண்டியாவது, மாரிக்குப்பமாவது. பேசாமல் சாரதாவைப் பின் தொடர்ந்து போக வேண்டியதுதான்" என்று நினைத்தான் "எனைக் கணம் பிரிய மனம் வந்ததோ, நீ எங்கு சென்றாலும் உன்னை விடுவேனோ, ராதே" என்ற பாட்டை எண்ணினான்.

மணி அடித்துவிட்டார்கள்! வீராசாமிப் பிள்ளை கனைத்து விட்டார். வேதவல்லி உட்கார்ந்தாகி விட்டது. சாரதாவின் கண்கள். பரந்தாமனை விட்டு அகலவில்லை. பரந்தாமன் பதுமை போல் நின்றான்.

வண்டி அசைந்தது சாரதாவின் தலையும் கொஞ்சம் அசைந்தது. அவளுடைய செந்நிற அதரங்கள் சற்று அசைந்தன. அலங்காரப் பற்கள் சற்று வெளிவந்தன. அவளையும் அறியாமல் புருவம் வளைந்தது. கண் பார்வையிலே ஒரு விதமான புது ஒளி காணப்பட்டது. வண்டி சற்று ஓட ஆரம்பித்தது. பரந்தாமனின் கண்களில் நீர் ததும்பிற்று. வண்டி ரயிலடியை விட்டுச் சென்றுவிட்டது. கன்னத்திலும் இரு துளி கண்ணீர் புரண்டு வந்தது. நேரே வண்டிக்குச் சென்றான். வைக்கோல் மெத்தை மீது படுத்தான். புரண்டான். சாரதாவை நான் ஏன் கண்டேன்? என்று கலங்கினான். கிட்டாதே பொருள். கலங்குவது ஏன்? என்று மனதைத் தேற்றினான்.

"சாரதா, நீ ஏன் அவ்வளவு அழகாய் இருக்கிறாய்? என் கண்களை ஏன் கவர்ந்து விட்டாய். அழகி, என் மனதைக் கொள்ளை கொண்டாயே, என்னைப் பார்த்ததோடு விட்டாயா? எனக்கு 'அமிர்தம்' அளித்தாயே. ரயில் புறப்படும் போது என்னைக் கண்டு சிரித்தாயே, போய் வருகிறேன் என்று தலையை அசைத்து ஜாடை செய்தாயே, நீ யார்? ஏன் இங்கு வந்தாய்? வண்டியோட்டும் எனக்கு ஏன் நீ எதை எதையோ எண்ணும்படி செய்துவிட்டாய்? சாரதா, உன்னை நான் அடையத்தான் முடியுமா? எண்ணத்தான் படுமா?—”என்று எண்ணினான். இரண்டு நாட்கள் பரந்தாமனுக்கு வேறு கவனமே இருப்பதில்லை. எங்கும் சாரதா! எல்லாம் சாரதா! எந்தச் சமயத்திலும் சாரதாவின் நினைப்பு தான்! இளைஞன் படாத பாடு பட்டான். பஞ்சில் நெருப்பென காதல் மனதில் புகுந்து அவனை வாட்ட ஆரம்பித்து விட்டது. அதிலும் கைகூடும் காதலா? வண்டியோட்டும் பரந்தாமன் அழகாபுரி முதலாளி மாரியப்ப பிள்ளைக்கு வாழ்க்கைப்பட இருக்கும் சாரதாவை அடைய முடியுமா?

அழகாபுரி வந்து சேர்ந்த அழகிக்கு, பரந்தாமன் நினைப்புத்தான்! பரந்தாமனின் வாட்டம் சாரதாவுக்கு வராமற்போகவில்லை சாரதாவின் கவலை பரந்தாமனை விட அதிகம். பரந்தாமனுக்கேனும் சாரதா கிடைக்கவில்லையே இன்பம் வராதே— என்ற கவலை மட்டுமேயுண்டு. சாரதாவுக்கு இரு கவலை. பரந்தாமனைப் பெற முடியாதே—இன்ப வாழ்வு இல்லையே–என்பது ஒன்று. மற்றொன்று மாரியப்ப பிள்ளையை மணக்கவேண்டுமே— துன்பத்துக்கு அடிமைப்பட வேண்டுமேயென்பது. எனவே சாரதாவின் 'சோகம்' குறையவில்லை...அதிகரித்தது.

மாரியப்ப பிள்ளைக்கு ஆத்திரம் அதிகமாகிவிட்டது. "ஆச்சு! ஆவணி பிறக்கப்போகிறது! இந்தப் பெண் 'சோகம்' 'சோகம்' என்று படுத்தபடி இருக்கிறாள். இவள் எப்போது போவது? என் மோகம் எப்போது தணிவது" என்று கோபித்துக்கொண்டான்.

"அழகான பெண்ணாக இருக்கிறாளே என்று பார்த்தால் இப்படி 'சீக்' பேர்வழியாக இருக்கிறாள். உடல் கட்டை மட்டும் கவனித்தால், 'உருட்டி எடுத்த கிழங்குகள், போல் இருக்கின்றன" என்று கவலைப்பட்டான். சாரதாவுக்கு வைத்தியத்தின் மேல் வைத்தியம். ஒரு மந்திரவாதி உபயோகமில்லை என்று தெரிந்ததும். மற்றொரு மந்திரவாதி என்று சிகிச்சை நடந்து வந்தது. ஆனால் அவளுடைய மன நோய் மாறினால்தானே சுகப்படும்.

வீராசாமிப் பிள்ளைக்கு விசாரம்! வேதவல்லிக்கு விஷயம் வெளியே சொல்ல முடியாது. ஒரு நாள் மெதுவாக சாரதாவிடம் " மாரியப்ப பிள்ளையை மணந்துகொண்டால் படிப்படியாக நோய் குறைந்துவிடும்" என்று கூறினாள். "யார் நோய் குறையுமம்மா! அப்பாவுக்குள்ள பணநோய் குறையும்! அந்தக் கிழவனுக்கு ஆத்திரம் குறையும்" என்று அலறிச் சொன்னாள் சாரதா. பிறகு அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது தனக்கு எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது என்று. நோய் தானாகப் போகும் கல்யாணத்துக்கு நாள் குறிப்பிட வேண்டியதுதான் என்று மாரியப்ப பிள்ளை கூறிவிட்டார். நாள் வைத்துவிட்டார்கள். கலியாண நோட்டீசுகள் அச்சடிக்கப்பட்டு உறவினருக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டே நாட்கள் தான் இருக்கின்றன கல்யாணத்துக்கு. அந்த நேரத்தில் தான் மாரியப்ப பிள்ளைக்கு, தனது பேரனுக்கு அழைப்பு அனுப்பவதா வேண்டாமா என்ற யோசனை வந்தது. ஆகவே. தமது காரியஸ்தர் கருப்பையாவை அழைத்துக் கேட்டார்.

"ஏ! கருப்பையா! அந்தப் பையலுக்கு கல்யாணப்பத்திரிகை அனுப்பலாமா வேண்டாமா?

"யாருக்கு எஜமான்?" என்றான் கருப்பையா.

"அதாண்டா அந்த தறுதலை பரந்தாமனுக்கு"— என்றார் மாரியப்ப பிள்ளை.

"ஒண்ணு அனுப்பித்தான் வைக்கிறது...வரட்டுமே" என்று யோசனை சொன்னான் காரியஸ்தன்.

இந்த சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்த. வீராசாமிப் பிள்ளை மேற்கொண்டு விசாரிக்கலானார். அப்போது சொன்னார் மாரியப்ப பிள்ளை தனது பூர்வோத்ரத்தை.

"எனக்கு 15 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. மறு வருஷமே ஒரு பெண் பிறந்தது. ஐந்து ஆறு வருஷத்துக்கெல்லாம் என் முதல் தாரம் என்னிடம் சண்டை போட்டுவிட்டு குழந்தையுடன் தாய் வீடு போனாள். நான் வேறே கல்யாணம் செய்து கொண்டேன். என் பெண் பெரியவளானாள். அவளுக்கு 12–வது வயதிலேயே கலியாணமாயிற்று. நான் அதற்குப் போகவேயில்லை. அவர்களும் அழைக்கவில்லை. அந்தப்பெண் மறு வருஷமே ஒரு பிள்ளையைப் பெற்று ஜன்னி கண்டு செத்தாள். அந்தப் பயல் எப்படியோ வளர்ந்தான். அவளும் செத்தாள். கோர்ட்டில் ஜீவனாம்சம் போட்டார்கள். அவர்களால் வழக்காட முடியுமா? என்னிடம் நடக்குமா? ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கி விட்டேன். இப்போ அவன் அந்த ஊரிலே ஏதோ கடை வைத்துக்கொண்டிருக்கின்றான் என்று கேள்வி" என்று கூறி விட்டு மாரியப்ப பிள்ளை "கருப்பையா, பையனுக்கு இப்போ என்ன வயதிருக்கும்?" என்று கோட்டார். ஏறக்குறைய இருபது இருக்கும்" என்று வீராசாமி பிள்ளை பதில் கூறினார்.

"உங்களுக்கெப்படித் தெரியும்?" என்று கேட்டார் மாரியப்ப பிள்ளை. "அந்த பிள்ளையாண்டான் மாரிக்குப்பத்துக்கு நாங்கள் போனபோது வண்டி ஓட்டிக் கெண்டு வந்தான்" என்றார் வீராசாமிப் பிள்ளை. பிறகு வேறு விஷயங்களைப் பேசிவீட்டு, வீராசாமிப் பிள்ளை வீடு வந்தார். வேதவல்லியைத் தனியே அழைத்து விஷயத்தைச் சொன்னார். சாரதா காதில் விருந்தால் அவள் ஒரே பிடிவாதம் செய்வாள். கலியாணத்துக்கு ஒப்பவே மாட்டாள். சொல்லவேண்டாம் என்று வேதவலி, யோசனை கூறினாள். எனவே சாரதாவுக்கு தான் மணக்கப்போவது தன் காதலனின் தாத்தா என்பது தெரியாது. விசாரத்துடன் மாரிக்குப்பத்துக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே வண்டியோட்டிக்கொண்டு வாழ்ந்துவந்த பரந்தாமனுக்கும் தெரியாது. தன் காதலி சாரதா, தனக்கு பாட்டி ஆகப்போகிறாள் என்பது! காதலியே தனக்குப் பாட்டி ஆனால் என்பதுதெரிந்தால் அவன் மனம் என்ன பாடுபடும்?

"என்னடா பரந்தாமா, ரெம்ப குஷியாக இருக்கிறாய். சம்பாத்தியம் ரொம்ப ஜாஸ்தியோ?" என்று மற்ற வண்டிக்காரர்கள் பரந்தாமனைக் கேட்டனர்.

"நான் அழகாபுரிக்குப் போகப்போகிறேன். அங்கே ஒரு கலியாணம் டேய், யாரும் சிரிக்கக்கூடாது. எங்க தாத்தாவுக்கு கல்யாணம், கார்டு வந்தது வரச்சொல்லி" என்றான் பரந்தாமன்.

"பலே! சரியான பேச்சு பேசினானப்பா பரந்தாமன். தாத்தாவுக்குக் கலியாணமாம். பேரன் போகிறானாம்!" என்று சொல்லி சிரித்து கேலி செய்தார்கள்.

பரந்தாமனும், கூடவே சிரித்தான். அவனுக்கு உள்ளபடி மாரியப்ப பிள்ளைக்கு அறுபதாம் கலியாணம் நடக்க வேண்டி இருக்க, நிஜமான கலியாணமே செய்துகொள்ளப்போவதாகவும், அதற்கு வரும்படி, காரியஸ்தன் கருப்பையா கார்டு போட்டதைக் கண்டதிலிருந்து சிரிப்புத்தான்! அழகாபுரியிலே தானே, அந்தப் பெண் சாரதா இருக்கிறாள்; கலியாண சாக்கிலே, அவளைக் காணலாமே என்று எண்ணித்தான். தன் தாத்தா கலியாணத்துக்குப் போக முடிவு செய்தான்.

விஷயத்தைச் சொன்னாலே, எல்லோரும் சிரிக்கிறார்கள். எவ்வளவோ சொன்னான். விழுந்து விழுந்து சிரித்தார்களே தவிர, ஒருவர்கூட நம்பவில்லை.

கடைசியில், மடியில் வைத்திருந்த கார்டை எடுத்து வேறு ஆளிடம் கொடுத்து படிக்கச் சொன்னான். பிறகுதான், பரந்தாமன் சொல்வது உண்மை எனத் தெரிந்தது. உடனே சிரிப்பு போய்விட்டது. ஒவ்வொருவரும், கண்டபடி பேசலாயினர். "என்னா கிறாக்குடா கிழவனுக்கு? கல்லு புள்ளையார்போல பேரன் இருக்கத்லே மூணாம்தாரம் செய்கிறானாமே" என்று ஒருவனும், "இதாண்டாப்பா கலிகாலம்" என்று மற்றொருவனும், "சே! என்னா இருந்தாலும் இந்த மாதிரி அநியாயம் கூடாது" என்று பிறிதொருவனும் கூறி, எல்லோருமாக "பரந்தாமா, நீ போகாதேடா என்று சொன்னார்கள்! நான் போறது அந்தக் கல்யணத்துக்காக மாத்திரமில்லை. வேறு சொந்த வேலை கொஞ்சம் இருக்கிறது" என்று பரந்தாமன் சொன்னான்.

தூக்கம் தெளியாத நேரம்! முகூர்த்தம் அந்த வேளையில் தான் வைக்கப்பட்டிருந்தது! கோழி கூவிற்று! கூடவே வாத்தியம் முழங்கிற்று! சாரதா கண்களிலே வந்த நீரை அடக்கிக்கொண்டு "கலியாண சேடிகளிடம்" தலையைக் கொடுத்தாள்! அவர்கள் தைலம் பூசினார்கள்! சீவி முடித்தார்கள்! ரோஜாவும் மல்லிகையும் சூட்டினார்கள்! புத்தாடை தந்தார்கள்! பொன் ஆபரணம் பூட்டினார்கள்! முகத்தை அலம்பச் செய்தார்கள்! பொட்டு இட்டார்கள்! புறப்படு என்றார்கள்! மாரியப்ப பிள்ளைக்கு மாப்பிள்ளை வேடத்தை காரியஸ்தர் கருப்பையா செய்து முடித்தார்! மேளம் கொட்டினார்கள்! மணப் பந்தலுக்கு சாரதா வந்தாள் பரந்தாமன் அங்கொருபக்கம் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவள் கால்கள் பின்னிக்கொண்டன. கண் மயங்கிவிட்டது. சோகம் மேலிட்டுவிட்டது. சுருண்டு கீழேவிழுந்துவிட்டாள். எல்லோரும் 'என்ன? என்ன?' என்று கேட்டுக்கொண்டு ஓடினார்கள் சாரதா அருகில். பரந்தாமன் உட்கார்ந்தவன்தான் அவனால் அசையக்கூட முடியவில்லை. அவ்வளவு திகைப்பு! என் சாரதா மணப்பெண்! என் காதலியா, இந்தக் கிழவனுக்கு! பாட்டியாகிறாளே என்பாவை! இந்தக் கோலத்தையா நான் காணவேண்டும்– என்று எண்ணினான். அவனால் ஏதும் செய்யமுடியாது தவித்தான்! யாரிடம் பேசுவான்! என்ன பேசுவது! யார் இவன் பேச்சைக் கேட்பார்கள்! எப்படி இவனால் தடுக்க முடியும்! மெல்ல எழுந்து சாரதா படுத்திருந்த பக்கமாகச் சென்றான். வேதவல்லி கண்களைப் பிசைந்துகொண்டே, "தம்பி, போய் ஒரு விசிறி கொண்டு வா!" என்றாள். விசிறி எடுத்துக்கொண்டு வந்தான். "வீசு" என்றாள் வேதவல்லி வீசினான். சில நிமிஷங்களில் சாரதா கண்களைத் திறந்தாள். வீசுவதை நிறுத்திவிட்டான். இருவர் கண்களும் சந்தித்தன. பேசவேண்டியவைகள் யாவும் தீர்ந்துவிட்டன! மெல்ல எழுந்தாள் மங்கை. தூர நின்றான் பரந்தாமன். வாத்தியங்கள் மறுபடியும் கோஷித்தன. புரோகிதர் கதறாலானார்! கருப்பையா வந்தவர்களை உபசரித்தார். "பலமாக மேளம்" என்றனர். பக்கத்தில் அமர்ந்திருந்த பதுமை போன்ற சாரதாவுக்கு, பரந்தாமனின் பாட்டன், அவன் கண் முன்பாகவே தாலி கட்டினான். எல்லோரும் 'அட்சதையை' மணமக்கள் மீது போட்டனர்! பரந்தாமனும் போட்டான். போடும்போது பார்த்தான் சாரதாவை! அவள் கண்களில் நீர் ததும்பியபடி இருந்தது. "புரோகிதர் போட்ட புகை கண்களைக் கலக்கிவிட்டது" என்றாள் வேதவல்லி. அல்ல! அல்ல! பாழும் சமூகக் கொடுமை அந்த கோமளத்தின் கண்களைக் கலக்கிவிட்டது என்று எண்ணினான். பரந்தாமன்.

ஆம்! சாரதாவை அவன் காதலித்தான். அவளும் அவனைத்தான் விரும்பினாள். அவளே அவன் பாட்டியுமானாள். என்செய்வான் ஏங்கும் இளைஞன்?

சாரதாவின் சோகம், பரந்தாமனின் நெஞ்சம் பதறினது. வேதவல்லி வாட்டம் இவைகளைப்பற்றி மாரியப்பபிள்ளைக்கு கவலை ஏன் இருக்கப் போகிறது.

வீட்டிலுள்ள கஷ்டத்தினால் கழுத்திலுள்ள நகையை விற்று விட்டால், வாங்குகிறவர்கள் விற்றவர்களின் வாட்டத்தை எதற்காக கவனிக்கப்போகிறார்கள். அந்த நகையைத் தாங்கள் அணிந்துகொண்டால் அழகாக இருக்கும் என்ற எண்ணம் மட்டுந்தானே இருக்கும். அதைப்போலவே மங்கை மனவாட்டம் கொண்டாலும், தனக்கு மனைவியானாளல்லவா அதுதான் மாரியப்பபிள்ளைக்கு வந்த எண்ணம். தன் இரண்டாம் மனைவி இறந்தபோது காரியஸ்தன் கருப்பையா தேறுதல் கூறும் போது "எல்லாம் நல்லதுக்குத்தான் வருத்தப் படாதீர்கள்" என்று கூறினான்.

அன்றலர்ந்த ரோஜாவின் அழகு பொருந்திய சாரதாவை அடையத்தான் போலும், அந்த விபத்து நேரிட்டது என்று கூட எண்ணினார் மாரியப்பபிள்ளை, கல்யாணம் முடிந்து விருந்து முடிந்து மாலையில் நடக்க வேண்டிய காரியங்கள் முடிந்து ஒரு நாள் இன்பம் பூர்த்தியாயிற்று. அன்றிரவே வேதவல்லி, விம்மி விம்மி அழும் சாரதாவுக்கு என்ன சொல்லி அடக்குவது என்று தெரியாது விழித்தாள். பரந்தாமன், பதை பதைத்த உள்ளத்தினனாய் படுத்துப்புரண்டான்.

மறு தினம், சாரதாவுக்கு காய்ச்சல் வந்து விட்டது. இரவு முழுவதும் அழுது அழுது கண்கள் சிவந்து விட்டன. இருமலும் சளியும். குளிரும் காய்ச்சலுமாக வந்து விட்டது மறுநாள் நடக்க வேண்டிய சடங்குகள் முடிந்து, உறவினர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுக் கொண்டு போயினர் பரந்தாமனுக்கு போக எண்ணந்தான். ஆனால் சாரதாவுக்கு காய்ச்சல் விட்ட பிறகு போகலாம். காய்ச்சலாக இருக்கும் போதே ஊருக்குப் போய் விட்டால், எப்படி இருக்கிறதோ. என்ன ஆயிற்றே என்று கவலைப் படத்தானே வேண்டும். என்று எண்ணியதால் அவன் அங்கேயே தங்கிவிட்டான்.

மாரியப்பபிள்ளை மகிழ்ச்சியின் மேலீட்டால், பரந்தாமனை, “டேய் பயலே, அங்கு போய்த்தான் என்ன செய்யப்போகிறாய்? இங்கேயே இருப்பது தானே. பத்துப் பேரோடு பதினொன்றாக இரு. இங்கே கிடைக்கிற கூழோ தண்ணியோ,குடித்து விட்டு காலத்தைத் தள்ளு. ஏதாவது வயல் வேலையைப் பார்த்துக்கொள். வண்டி பூட்ட ஒட்ட ஆள் வைத்திருக்கிறேன். அவனையும் ஒழுங்காக வேலைவாங்கு இரு இங்கேயே" என்று கூறினார். காரியஸ்தன் கருப்யையாவும் இந்த யோசனையை ஆதரித்தான். வேதவல்லியும் இது நல்ல யோசனை என்றாள். பரந்தாமன், "சரி பார்ப்போம்" என்று கூறினான். அவனுக்கு தான் காதலித்த சாரதா ஒரு கிழவனின் மனைவியாக இருப்பதைக் கண்ணாலே பார்த்துக் கொண்டிருக்க இஷ்டமில்லை. சாரதாவுக்கு உடம்பு சரியாகு மட்டும் இருந்து விட்டு, ஊர் போய்ச் சேருவது என்று முடிவு செய்தான்.

சாரதாவுக்கு ஒரு நாட்டு வைத்தியர் மருந்து கொடுத்து வந்தார். ஜுரம் குறையவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் ஜுரம் விட்டது. ஆனால் களைப்பும், இருமலும் அதிகமாக இருந்தது. அன்று மருந்து வாங்கிவர பரந்தாமனையே அனுப்பினார்கள். வைத்தியர் வீட்டை விசாரித்துக் கொண்டு வந்து சேர்ந்தான் வைத்தியர் சற்று வெறியில் இருந்தார். அவர் கொஞ்சம் "தண்ணீர்" சாப்பிடும் பேர்வழி எனவே, அவர் கிண்டலாகப் பேசினார். இது பரந்தாமனுக்குப் பிடிக்கவில்லை.

"வாயா, வா!என்ன மருந்துக்கு வந்தாயா! யாருக்கு சாரதாபாய்க்குத்தானே." என்று ஆரம்பத்திலேயே கிண்டலாகப் பேசினான்.

"ஆமாம் வைத்தியரே, பாவம் கலியாணமானதும் காய்ச்சல் இப்படி வந்துவிட்டது சாரதாவுக்கு" என்றான் பரந்தாமன்.

"ஏனப்பா வராது? ஏன் வராது சொல்லு? பெண்ணோ பதுமைபோல ஜிலு ஜிலுன்னு இருக்கிறாள். பருவமோ ஜோரான பருவம். புருஷனாக வந்த ஆளோ ஒரு கிழம் இதைக் கண்ட பெண்ணுக்கு வருத்தம் இருக்காதா?" என்றான் வைத்தியன். "இதெல்லாம் நமக்கேன் வைத்தியரே எல்லாம் ஆண்டவன் எழுதிவைத்தபடி நடக்கும்" என்றான் பரந்தாமன். “ஆண்டவனை ஏனப்பா இந்த வேலைக்கு அழைக்கிறே. அவர் தன் வரைக்கும் சரியாகத்தான் செய்து வைத்துக் கொண்டார். பார்வதி-பரமசிவன் ஜோடிக்கு என்ன குறை! லட்சுமி–விஷ்ணு இந்த ஜோடி தான் என்ன இலேசானதா. சாமிகளெல்லாம் பலே ஆசாமிகளப்பா. அவர்கள் பேரைச் சொல்லிக் கொண்டு நாம் தான் இப்படி இருக்கிறோம்' என்று வைத்தியன் சொன்னான்.

பரந்தாமனுக்கு இந்த வேடிக்கைப்பேச்சு சிரிப்பை உண்டாக்கியது. பரந்தாமன் சிரித்ததும், வைத்தியருக்கு மேலே பேச்சு பொங்கிற்று, உள்ளேயும் "அது" பொங்கிற்று!

"கேளப்பா கேளு. இந்த மாதிரி "ஜோடி" சேர்ந்தால் காரியம் ஒழுங்காக நடக்காது. என்னமோ, மாரியப்பபிள்ளைக்கு பணம் இருக்கிறதே என்று ஆசைப்பட்டு அந்த வேதவல்லி இந்த மாதிரி முடிச்சுபோட்டு விட்டாள். பணமா பெரிசு! நல்ல ஓய்யாரமான குட்டி சாரதா. அவளை ஒரு ஓடிந்து விழுந்து போகிற கிழவனுக்கு பெண்டாக்கினால், அந்த குடும்பம் எப்படியாவது? உனக்கு தெரியாது விஷயம்.மாரியப்ப பிள்ளை, ஆள் ரொம்ப முடுக்காத்தான் இருப்பாரு. ஆனால், இந்த "பொம்பளை" விஷயமென்றால், நாக்கிலே தண்ணி சொட்டும், அந்த ஆளுக்கு. ரொம்ப சபலம், ரொம்ப சபலம். எப்படியோ பார்த்து போட்டுட்டான். சரியான பெண்ணை தன் வலையிலே" என்றான் வைத்தியன்.

பரந்தாமன் பார்த்தான். மேலே பேச்சு வளர ஆரம்பிக்கிறது. வைத்தியர் ரொம்ப வாயாடி என்பது தெரிந்து விட்டது. 'நேரமாயிற்று மருந்துகொடு, வைத்தியரே போகிறேன்' என்று கேட்டான். வைத்தியர், "மருந்து கொடுக்கிறேன். ஆனால் அந்த மருந்து மட்டும் வேலை செய்தா போதாது. அந்தப் பெண்ணுக்கு மனோவியாகூலம் இருக்கக்கூடாதே. அதுக்காக என்ன மருந்து தரமுடியும்? நான் ஜுரம் தீர மருந்து தருவேன். குளிர்போக குளிகை கொடுப்பேன். காய்ச்சல்போக கசாயம் தருவேன். ஆனால் சாரதாவின் மன வியாதியைப்போக்க நான் எந்த மருந்தைக் கொடுப்பது? தம்பீ, சரியான ஜோடி நீதான். சாரதாவுக்கு மருந்தும் நீயே" என்றான் வைத்தியன்.

தன் சாரதாவைப்பற்றி இவ்வளவு கிண்டலாக ஒரு வைத்தியன் பேசுவதா— அதிலும் தன் எதிரிலே பேசுவதா என்று கோபம் வந்துவிட்டது பரந்தாமனுக்கு. ஓங்கி அறைந்தான் வைத்தியனை.

"படவா, மருந்து கேட்க வந்தால் வம்புந்தும்புமா பேசுகிறாய். யார் என்று என்னை நினைத்தாய்" என்று திட்டினான்.

வைத்தியன் வெறி தெளிந்து "அடே தம்பி, நான் வேடிக்கையாகப் பேசினேன், கோபிக்காதே. இந்தா மருந்து" என்று சொல்லிவிட்டு மருந்துகொடுக்கச் சென்றான்.

வைத்தியனை, கோபத்தில், பரந்தாமன் அடித்து விட்டானே தவிர, அவனுக்கு நன்றாகத் தெரியும், வைத்தியன், சொன்னதிலே துளிகூட தவறு இல்லை என்று. சாரதாவின் நோய் மன வியாதிதான் என்பதிலே சந்தேகமில்லை. அது அவனுக்குத் தெரிந்ததுதான். பிறர் சொல்லும் போதுதான் கோபம் வருகிறது. அதிலும் சாரதாவைக் கிண்டல் செய்வது போலக் காணப்படவேதான் கோபம் மிக அதிகமாகிவிட்டது. ஆழ்ந்து யோசிக்கும் போது, அந்த வைத்தியர் மட்டுமல்ல, ஊரில் யாரும் அப்படித்தானே பேசுவார்கள். நேரில் பேச பயந்து கொண்டு இருந்துவிட்டாலும், மறைவில் பேசும்போது, இதைப்பற்றிக் கேலியாகவும், கிண்டலாகவுந்தானே பேசுவார்கள் என்று எண்ணிய பரந்தாமன் "ஆஹா! இந்த அழகி சாரதாவுக்கு இப்படிப்பட்ட கதி வந்ததே! ஊர் முழுவதும் இனி இவளைப்பற்றித்தானே பேசுவார்கள். என்னிடம் வைத்தியன் கிண்டலாகப் பேசியதே எனக்குக் கஷ்டமாக இருந்ததே. சாரதாவின் காதில் இப்படிப்பட்ட கேலி வார்த்தைகள் விழுந்தால், அவள் மனம் என்ன பாடுபடுமோ? பாவம் எங்கெங்கு, இதே வேளையில், கிழவனை மணந்தாள் என்று கேலி செய்யப்படுகிறதோ. எத்தனை கணவன்மார்கள். தமது மனைவியிடம், 'நான் என்ன மாரியப்பபிள்ளையா?' என்று கிண்டலாகப் பேசுகின்றார்களோ! எத்தனை உணர்ச்சியுள்ள பெண்கள், 'நான் குளத்தில், குட்டையில் விழுந்தாலும் விழுவேன்' இப்படிப்பட்ட கிழவனைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன்,' என்று பேசுகின்றனரோ? சேச்சே! எவ்வளவு கேலி பிறக்கும், கிண்டல் நடக்கும். இவ்வளவையும் என் பஞ்சவர்ணக்கிளி எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்? நான் அவள் வருத்தத்தைப் போக்க என்ன செய்ய முடியும்? எனக்கோ அவள் பாட்டி!" என்று எண்ணிப் பரந்தாமன் வாட்டத்துடன் வீடுவந்து வேதவல்லியிடம் மருந்தைக் கொடுத்தான்.

"தம்பி, நீயே இந்த வேளை உன் கையாலேயே மருந்தைக் கொடு. நீ கொடுக்கிற வேளையாவது, அவளுக்கு உடம்பு குணமாகட்டும்" என்று கூற, மருந்து கொடுக்க பரந்தாமன் சாரதா படுத்துக்கொண்டிருந்த அறைக்குச் சென்றான்.

நல்ல அழகான பட்டுமெத்தை ! அதன்மீது சாரதா ஒரு புறமாகச் சாய்ந்துகொண்டு படுத்திருந்தாள். அவள் படுத்துக்கொண்டிருந்த பக்கமாக, தலையணை, சிறிதளவு நனைந்து கிடந்தது கண்ணீரால்! "சாரதா! கண்ணே, இதோ, இப்படித் திரும்பு, இதோ பார், பரந்தாமன் மருந்து எடுத்து வந்திருக்கிறார்" என்று வேதவல்லி கூறிக்கொண்டே சாரதாவை எழுப்பினாள்.

சாரதா தாயின் குரலைக் கேட்டுத் திரும்பினாள். கண்களைத் திறந்தாள். பரந்தாமன் மருந்துடன் எதிரில் நிற்பதைக் கண்டாள். அந்த ஒரு விநாடிப் பார்வை சாரதாவின் உள்ளத்தில் புரண்டுகொண்டிருந்த கருத்துக்கள் அத்தனையையும் காட்டிவிட்டது. கை நடுக்கத்துடன் மருந்துக் கோப்பையைப் பிடித்துக்கொண்டு பரந்தாமன் நின்றான். "வேதம்! வேதம்" என்று வெளியே வேதவல்லியின் புருஷன் கூப்பிடும் சத்தம் கேட்டது. வேதவல்லி "இதோ என்று கூறிக்கொண்டே வெளியே போனாள். காதல் நோயால் கட்டில் மீது படுத்துள்ள மங்கையும், அவளைக் காதலித்துக் கிடக்கப்பெறாது வாடிய பரந்தாமன் கையில் மருந்துடனும் இருவருமே அங்கு இருந்தனர்.

அந்த அறை ஒரு தனி உலகம்!

அங்கு இன்பத்திற்குத் தடை இல்லை! கட்டு இல்லை! காவல் இல்லை! பெண்டு கொண்டேன் என அதிகாரம் செலுத்த மாரியப்ப பிள்ளை இல்லை, 'மகளே, என்ன வேலை செய்கிறாய்' என்று மிரட்ட வேதவல்லி இல்லை. கனைத்து மிரட்ட சாரதாவின் தகப்பன் இல்லை.

காவலற்ற கட்டற்ற உலகம். காதலர் இருவர் மட்டுமே இருந்த உலகம்.

"மருந்தைக் குடி சாரதா" என்றான் பரந்தாமன்.

சாரதா வாயைக் கொஞ்சமாகத் திறந்தாள். மருந்து நெடியினால் முகத்தைச் சுளித்தாள். கட்டில் ஓரத்தில் உட்கார்ந்தான் பரந்தாமன். "சாரதா! திற வாயை, இதோ மருந்து, குடித்துவிடு" என்று மருந்தை ஊற்றிவிட்டு வாயைத் துடைத்தான், அந்த "தீண்டுதல்" சாரதா அதுவரை கண்டறியாத இன்பத்தை அவளுக்குத் தந்தது. முகத்திலே ஒருவித ஜொலிப்பு. கண்டு கொண்டான் பரந்தாமன். குனிந்து அவளுடைய கொஞ்சும் உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தான்.

“ஆஹா! என்ன வேலை செய்தாயடி கள்ளி! என்ன வேலையடா செய்தாய் மடையா" என்று கர்ஜித்தார், மாரியப்ப பிள்ளை வாயற்படியில் நின்றுகொண்டு.

"மடையா!" என்ற சொல் காதில் விழுந்த உடனே பரந்தாமன் காதல் உலகைவிட்டுச் சரேலெனக் கிளம்பி சாதாரண உலகுக்கு வந்தான். மணமான சாரதாவை கணவன் காணும்படி முத்தமிட்டதும், பேரன் செய்த செயலைப்பாட்டன் கண்டதும், அவன் நினைவிற்கு வந்தது. அவனோ, சாரதாவோ, மேற்கொண்டு எண்ணவோ, எழவோ நேரமில்லை. 'மடையா!' என்று கர்ஜித்துக்கொண்டே மாரியப்பபிள்ளை எருது கோபத்தில் பாய்வதுபோல, பரந்தாமனின் மீது பாய்ந்தார். அவன் கழுத்தைப் பிடித்தார், அவன் கண்கள் சிவந்தன. மீசை துடித்தது. கை கால்கள் வெடவெடத்தன. மாரியப்ப பிள்ளையின் பிடியினால் பரந்தாமனின் கண்கள் பிதுங்கி வெளி வந்துவிடுவது போலாகிவிட்டது. பரபரவெனப் பரந்தாமனை இழுத்து எறிந்தார். மாரியப்பபிள்ளையின் கரத்துக்குப் பரந்தாமன் எம்மாத்திரம்! அடியறுந்த மரம்போல சுருண்டு சுவரில் மோதிக்கொண்டான் பரந்தாமன். குபீலென மண்டையிலிருந்து ரத்தம் பெருகிற்று. 'ஐயோ!' என்று ஈனக் குரலில் அலறினாள் சாரதா! 'என்ன! என்ன!' என்று பரபரப்புடன் கேட்டுக்கொண்டே வேதவல்லியும், அவள் புருஷனும், கருப்பையாவும் வந்தனர்.

பரந்தாமன், இரத்தம் ஒழுக நிற்பதையும், சாரதா கண்ணீர் பெருக நடுங்குவதையும், கோபத்தின் உருவமென, மாரியப்ப பிள்ளை உறுமிக்கொண்டிருப்பதையும் கண்டவுடன் வந்தவர்களுக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று. "நடடா! நட! உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பாதகா! நட! இங்கு நிற்காதே" என்று மாரியப்ப பிள்ளை கூறிக்கொண்டே பரந்தாமனின் தலை மயிரைப் பிடித்து இழுத்து அறையை விட்டு வெளியே கொண்டு கொண்டுவந்தார்.

"எஜமானருக்குத்தான் சொல்கிறேன். இவ்வளவு உரக்கக் கூவாதீர்கள். அண்டை அயலார் காதில் கேட்கப்போகிறது" என்று கருப்பையா கூறினான்.

கேட்பதென்ன, செய்வதென்ன, என் போறாதவேளை ஒரு வெட்கங்கெட்ட சிறுக்கியைத் தேடிப்பிடித்துக் கட்டிக்கொண்டேன். என் சோறு 'தின்றுவிட்டு சோரம் செய்கிறாள் இந்தக் கள்ளி. இன்று இருவரும் கொலை! ஆமாம்! விடமாட்டேன்! எடுத்துவா, அரிவாளை, இரண்டு துண்டாக அந்தக் கள்ளியையும் வெட்டிப் போடுகிறேன். விடு, கருப்பையா, கையை விடு, டே, கிழ ராஸ்கல்! நல்ல பெண்ணடா! என் தலைக்குத் தீம்பாகக் கொண்டுவந்தாய் நிற்காதே என் எதிரே. யாரும் நிற்கவேண்டாம். யார் நின்றாலும்,உதை. குத்து, வெட்டு, கொலை, ஆமாம்! விடமாட்டேன்,'-என்று மாரியப்ப பிள்ளை, இடி முழக்கம் போலக் கத்தினார். அவர் ஆயுளில், அதைப்போல, அவர் கத்தியதில்லை.

காரியஸ்தன் கருப்பையா விடவில்லை அவர் கரங்களை. "எஜமான்! எஜமான்! சற்று என் பேச்சைக் கேளுங்கள். ஊர் நாடு தெரிந்தால் நமக்குத்தானே இழிவு. டே, பரந்தாமா, போய்விடுடா வெளியே, வேதம்மா நீங்களும் போங்க—" என்று மிக சாமர்த்தியமாகக் கூறிக்கொண்டே துடித்துக்கொண்டு, கொலைக்கும் தயாராக நின்று கொண்டிருந்த மாரியப்ப பிள்ளையை, மெதுவாக தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டான். மாரியப்ப பிள்ளை போன உடனே வேதத்தின் புருஷர், பரந்தாமனை நையப்புடைத்து 'பாவி! ஒரு குடும்பத்தின் வாயிலே மண் போட்டாயே,' என்று அழுதார்.

"புறப்படடி! போக்கிரிச் சிரிக்கி, போதும் உன்னாலே எனக்கு பரிசு" என்று சாரதாவை கட்டிலிலிருந்து பிடித்து இழுத்து, மூவருமாக தமது வீடு போய்ச் சேர்ந்தனர்.

பரந்தாமன், இன்னது செய்வதென்று தோன்றாது ஊர்க் கோடியில் இருந்த பாழடைந்த மண்டபத்தில் புகுந்துகொண்டான் அன்றிரவு. ஊரில் இலேசாக வதந்தி உரவிற்று. சாரதா வீட்டாருக்கும், அவள் கணவனுக்கும், பெருத்த தகராறாம். சாரதாவை கணவன் வீட்டை விட்டு துரத்தி விட்டார்களாம் என்று பேசிக்கொண்டனர்.

வீடு சென்ற சாரதா, நடந்த காட்சிகளால், நாடி தளர்ந்து சோர்ந்து படுத்துவிட்டாள். ஜூரம் அதிகரித்துவிட்டது. மருந்து கிடையாது, பக்கத்தில் உதவிக்கு யாரும் கிடையாது. "அவள் பக்கம் போனால் உன் பற்கள் உதிர்ந்துவிடும்; இடுப்பு நொறுங்கிவிடும்" என்று வேதத்துக்கு அவள் கணவன் உத்திரவு.

எனவே தாலி கட்டிய புருஷன் தோட்டத்தில் தவிக்க, காதலித்த கட்டழகன் மண்டை உடைபட்டு பாழ் மண்டபத்தில் பதுங்கிக் கிடக்க. பாவை சாரதா படுக்கையில் ஸ்மரணையற்றுக் கிடந்தாள்.

இரவு 12 மணிக்குமேல், மெள்ள மெள்ள, நாலைந்து பேர் பரந்தாமன் படுத்திருந்த மண்டபத்தில் வந்து பதுங்கினர். அவர்களின் நடை உடை பாவனைகள் பரந்தாமனுக்கு, சந்தேகத்தைக் கொடுத்தது. வந்தவர்களிலே ஒருவன், மெதுவாக பரந்தாமன் அருகே வந்து, தீக்குச்சியைக் கொளுத்தி, முகத்தைப் பார்த்தான். பரந்தாமன் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தான்.

"எதுவோ பரதேசிக் கட்டை போலிருக்கு" என்று சோதித்த பேர்வழி, மற்றவர்களுக்குக் கூற, வந்தவர்கள் மூலையில் உட்கார்ந்து கொண்டு கஞ்சா பிடித்துக்கொண்டிருந்தனர். அந்த நெடி தாங்கமாட்டாது பரந்தாமன் இருமினான். வந்தவர்கள் குசுகுசுவெனப் பேசினர்.

அதே நேரத்தில் "டார்ச்லைட்" தெரிந்தது. "ஆஹா! மோசம் போனோமடா முத்தா. சின்ன மூட்டையை மடியிலே வைத்துக்கொள். பெரிசை அந்தப்பயல் பக்கத்திலே போட்டுடு, புறப்படு, பின் பக்கமாக” என்று கூறிக்கொண்டே ஒருவன், மற்றவர்களை அழைத்துக்கொண்டு இடிந்திருந்த சுவரை ஏறிக் குதித்து ஓடினான். பரந்தாமன் பாடு பெருத்த பயமாகிவிட்டது. ஓடினவர்கள் கள்ளர்கள் என்பதும், சற்று துலைவிலே டார்ச்லைட் தெரிவதும், போலீசாரின் ஊதுகுழல் சத்தமும் கேட்டதும். 'புலியிடமிருந்து தப்பி பூதத்திடம் சிக்கிவிட்டோம்' என்று பயந்து என்ன செய்வதெனத் தெரியாது திகைத்தான். கள்ளர்களோ ஒரு மூட்டையைத் தன் பக்கத்திலே போட்டு விட்டுப் போயினர். அது என்ன என்றுகூட பார்க்க நேரமில்லை. டார்ச்லைட் வரவர கிட்டே நெருங்கிக்கொண்டே வரவே வேறு மார்க்கமின்றி திருடர்கள் சுவரேறிக் குதித்ததைப் போலவே தானும் குதித்து ஓடினான். கள்ளர்கள் தனக்கு முன்னால் ஓடுவதைக் கண்டான். அவர்கள் செல்லும் பாதை வழியே சென்றான். அது ஒரு அடர்ந்த சவுக்கு மரத்தோப்பில் போய் முடிந்தது. கள்ளர்கள் எப்படியோ புகுந்து போய்விட்டனர். பரந்தாமன் சவுக்குத் தோப்பில் சிக்கிக்கொண்டு விழித்தான். அதுவரையில் போலீசாரிடம் சிக்காது தப்பினதே போதுமென்று திருப்திகொண்டான். தன் நிலைமையைப்பற்றி சிறிதளவு எண்ணினான். அவனையும் அறியாமல் அவனுக்கு சிரிப்பு வந்தது 'என் பாட்டிக்கு ஜூரம். நான் அவளுக்கு மருந்து கொடுப்பதை விட்டு முத்தம் கொடுப்பது. பாட்டன் என் மண்டையை உடைப்பது! அவருக்குப் பயந்து பாழும் மண்டபத்துக்கு வந்தால் கள்ளர்கள் சேர்வது! அவர்கள் கிடக்கட்டும் என்று இருந்தால், போலீசார் துரத்துவது! அதனைக் கண்டு அலறி ஓடிவந்தால், சவுக்குத் தோப்பில் சிக்கிக் கொள்வது! நரி ஊளையிடுவதைக் கேட்பது— நல்ல பிழைப்பு என் பிழைப்பு!' என்று எண்ணினான். சவுக்கு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுத்து தயாராக வைத்துக்கொண்டான் கையில். ஏனெனில் தூரத்தில் நரிகள் ஊளையிடுவது கேட்டது. அவைகள் வந்து விட்டால் என்ன செய்வது என்றுதான். சவுக்கு மலார் வைத்துக்கொண்டு உட்கார்ந்தபடி இருந்தான். ஒருமணி நேரத்திற்குப் பிறகு அவன் கண்கள் தானாக மூடிக்கொண்டன. அவன் தூங்கி விட்டான் அலுத்து.

அதே நேரத்தில் கணவனுக்குத் தெரியாமல் வேதவல்லி மெதுவாக எழுந்து, சாரதா படுத்திருந்த அறைக்குள் சென்றாள். சாரதாவின் நெற்றியிலும், கழுத்திலும் வியர்வை முத்து முத்தாக சொட்டிக் கொண்டிருந்தது. ஜாக்கட் பூராவும் வியர்வையில் நனைந்து விட்டது. ஜுர வேகத்தால் ஆடை கலைந்து இருந்தது. ஜுரம் அடித்த வேகம் குறைந்து வியர்வை பொழிய ஆரம்பித்திருப்பதைக் கண்ட வேதம் தன் மகளின் பரிதாபத்தை எண்ணி கண்ணீர் பெருக்கிக் கொண்டே தன் முந்தாணியால் சாரதாவின் முகத்தையும். கழுத்தையும் துடைத்தாள். சாரதா கண்களைத் திறந்தாள். பேச நாவெடுத்தாள். முடியவில்லை. நெஞ்சு உலர்ந்து போய் இருந்தது, உதடு கருகி விட்டிருந்தது. ஓடோடிச் சென்று கொஞ்சம் வெந்நீர் எடுத்து வந்தாள். அந்நேரத்தில் அது தான் கிடைத்தது. அதை ஒரு முழுக்கு சாரதாவுக்குக் குடிப்பாட்டினாள். சாரதாவுக்குப் பாதி உயிர் வந்தது. தன்னால் வந்தவினை இதுவென தெரியும் சாரதாவுக்கு. ஆகவே அவள் தாயிடம் எதுவுமே பேசவில்லை. தாயும் ஒன்றும் கேட்கவில்லை. வேறு இரவிக்கை எடுத்துக் கொடுத்தாள். சாரதா நனைந்து போன இரவிக்கையைக் கழற்றி விட்டு தாய் தந்த இரவிக்கையைப் போட்டுக்கொண்டாள். "என் பொன்னே உன் பொல்லாதவேளை இப்படிப்புத்திகொடுத்ததடி கண்ணே" என்று அழுதாள் வேதம். சாரதா, படுக்கையில் சாய்ந்து விட்டாள் தாயின் கரத்தைப் பற்றிக்கொண்டு, "அம்மா! நான் என்ன செய்வேன். நான் எதை அறிவேன். என் நிலை உனக்கு என்ன தெரியும்" என்று மெல்லிய குரலில் கூறினாள். தாய் தன் மகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு "காலையில் ஜூரம் விட்டு விடும். இப்போதே வியர்வை பிடிக்க ஆரம்பித்து விட்டது" என்று கூறினாள்.

“என் ஜுரம் என்னைக் கொல்லாதா? பாவி நானேன் உயிருடன் இருக்க வேண்டும்? ஊரார் பழிக்க, உற்றார் நகைக்க, கொண்டவர் கோபிக்க பெற்றவர் கைவிட நான் ஏன் இன்னமும் இருக்க வேண்டும்? ஐயோ! அம்மா! நான் மாரி கோயிலில் கண்ட நாள் முதல், அவரை மறக்கவில்லையே. எனக்கு அவர் தானே மணவாளன் என நான் என் மனதில் கொண்டேன். என்னை அவருக்கே நான் அன்றே அர்ப்பணம் செய்துவிட்டேனே! அவருக்குச் நான் சொந்தமான உதட்டை நீங்கள் வேறொருவருக்கு விற்கத் துணிந்தீர்கள். அவர் கேட்டார் அவர் பொருளை. நான் தந்தேன். அவ்வளவுதான். உலகம் இதை உணராது. உலகம் பழிக்கத்தான் பழிக்கும். என்னைப் பெற்றதால் நீங்கள் ஏன் இப்பாடு படவேண்டும். அந்தோ! மாரியாயி, மகேஸ்வரி! நீ சக்தி வாய்ந்தவளாக இருந்தால் என்னை அழைத்துக் கொள். நான் உயிருடன் இரேன், இரேன், இரேன்' —என்று கூறி அழுதாள்.

நாட்கள் பல கடந்தன, வாரங்கள் உருண்டன. மாதங்களும் சென்றன. சாரதாவின் ஜுரம் போய்விட்டது. ஆனால் மனோ வியாதி நீங்கவில்லை. அவளைக் கணவன், வீட்டுக்கு அழைத்துக் கொள்ளவில்லை. பரந்தாமன் மனம் உடைந்து தொழிலை விட்டுப் பரதேசியாக ஊரூராகச் சுற்றினான். சாரதாவின் தாயார் தனது மருமகப் பிள்ளையைச் சரிப்படுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.

இங்நிலையிலே, சாரதாவைப்பற்றி ஊரிலே பழித்தும் இழித்தும் பேசத் தொடங்கினார்கள். இதுவும் அவள் காதில் விழுந்தது. அவள் கவலை அதிகமாகி விட்டது.

கடைசியில் காரியஸ்தன் கருப்பையாதான் கை கொடுத்து உதவினான். மெள்ள மெள்ள மந்திரம் ஜெபிப்பது போல ஜெபித்து, "ஏதோ சிறு பிள்ளைத்தனத்தில் துடுக்குத்தனத்தால் நடந்துவிட்டது. இனி ஒன்றும் நடவாது. சாரதாவை அவள் வீட்டிலேயே விட்டு வைத்தால் ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுகிறார்கள்" என்று மெதுவாக சாரதாவின் புருஷனிடம் கூறினான். சாரதாவின் கணவன் உள்ளபடியே வருந்தினான். வருத்தம்போக மருந்து தேடினான். அவனுக்கு அபின் என்னும் பழக்கம் கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டது. மாலையில் அபினைத் தின்றுவிட்டு மயங்கி விழுந்து விடுவான். இரவுக் காலத்தில் கவலையற்றுக் கிடக்க அபினே அவனுக்கு உதவிற்று.

கருப்பையாவின் முயற்சி கொஞ்சம் கொஞ்சமாக பலிக்க ஆரம்பித்தது. ஊரிலே திருவிழா வந்தது. "திருவிழாக் காலத்தில், உறவினர்கள் வருவார்கள். அந்த நேரத்தில் சாரதா வீட்டில் இல்லாவிட்டால் கேலியாகப் பேசுவார்கள்" என்று கூறினான். அனால் "நீயே போய் அவளை அழைத்துவா" என்று கூறினார். காரியஸ்தன் கருப்பையா சாரதாவை அழைத்து வந்து வீட்டில் சேர்த்தான். சாரதாவும் மிக அடக்கஒடுக்கமாக பணிவிடைகள் செய்துகொண்டு வந்தாள். புருஷனுக்கு மனைவி செய்யவேண்டியமுறையில் துளியும் வழுவாது நடந்தாள்.

சாரதா வீடு புகுந்ததும் வீட்டிற்கே ஒரு புது ஜோதி வந்து விட்டது. வேலையிலே ஒரு புது ரகம். வீடு வெகு சுத்தம் தோட்டம் மிக அலங்காரமாக இருந்தது. மாடு கன்றுகள் நன்கு பராமரிக்கப்பட்டன. பண்டங்களைப் பாழாக்குவதோ, வீட்டு வேலையாட்களிடம் வீண் வம்பு வளர்ப்பதோ, சாரதாவின் சுபாவத்திலேயே கிடையாது. சாரதாவின் நடவடிக்கையைக் கண்ட அவள் புருஷன், "இவ்வளவு நல்லசுபாவமுள்ள பெண், அன்று ஏன் அவ்விதமான துடுக்குத்தனம் செய்தாள்? எவ்வளவு அடக்கம், எவ்வளவு பணிவு. நான் நின்றால் உட்கார மாட்டேனென்கிறாள். ஒரு குரல் கூப்பிட்டதும். ஓடோடி வருகிறாள். வீட்டுக் காரியமோ, மிக மிக ஒழுங்காகச் செய்கிறாள். இப்படிப்பட்டவள் அந்தப் பாவியின் துடுக்குத் தனத்தால் கெட்டாளே தவிர, இவள் சுபாவத்தில் நல்லவள் தான்" என்று எண்ணினான்.

ஆனால், சாரதா வெறும் யந்திரமாகத்தான் இருந்தாள். வேலையை ஒழுங்காகச் செய்தாள். ஆனால் பற்றோ, பாசமோ இன்றி வாழ்ந்தாள். வாழ்க்கையில் அவளுக்கு இன்பம் என்பதே தோன்ற வில்லை. புருஷனுக்கு அடங்கி நடப்பது தான் மனைவியின் கடமை என்பதை உணர்ந்து, அவ்விதம் நடந்தாளேதவிர, புருஷனிடம் அவளுக்கு அன்பு எழவில்லை. பயம் இருந்தது! மதிப்பு இருந்தது! கடமையில் கவலை இருந்தது! காதல் மட்டும் இல்லை! காதலைத்தான். அந்தக் கள்ளன் பரந்தாமன் கொள்ளை கொண்டுபோய் விட்டானே! அவள் தனது இருதயத்தை ஒரு முத்தத்துக்காக, அவனுக்கு தத்தம் செய்து விட்டாள்.

சிரித்து விளையாடி சிங்காரமாக வாழ்ந்த சாரதா போய்விட்டாள். இந்தச் சாரதா வேறு. பயந்து வாழும் பாவை. இவள் உள்ளத்திலே, காதல் இல்லை. எனவே வாழ்க்கையில் ரசம் இல்லை.

இதை இவள் கணவன் உணரவில்லை. எவ்வளவுக்கெவ்வளவு அடக்கமாக இருக்கிறாளோ அவ்வளவு அன்பு என்று எண்ணிக்கொண்டான். உலகில் இதுதானே பெரும்பாலும் பெண்கள் கடமை என்றும், புருஷனுக்கும் பெண்டுக்கும் இருக்கவேண்டிய அன்பு முறை என்றும் கருதப்பட்டு வருகிறது.

"பெண், மகா நல்லவள், உத்தமி, நாலுபேர் எதிரே வரமாட்டாள். நாத்தி, மாமி எதிரே சிரிக்கமாட்டாள். சமையற் கட்டை விட்டு வெளிவரமாட்டாள் புருஷனைக் கண்டால் அடக்கம், உள்ளே போய்விடுவாள். கண்டபடி பேசிக் கொண்டிருக்க மாட்டாள்” என்று பெண்ணின் பெருமையைப் பற்றி பேசப்படுவதுண்டு. அந்தப் பேதைகள், வாழ்க்கையில் ரசமற்ற சக்கைகளாக இருப்பதை உணருவதில்லை. வெறும் இயந்திரங்களாக, குறிப்பிட்ட வேலைகளை, குறித்தபடி செய்து முடிக்கும் இயந்திரம்— அந்தப் பெண்கள், ஆனால் காதல் வாழ்க்கைக்கு அதுவல்ல மார்க்கம்.

செடியில் மலர் சிங்காரமாக இருக்கிறது! அதனைப்பறித்து கசக்கினால் கெடும். வண்டுஆனந்தமாக ரீங்காரம் செய்கிறது! அதனைப்பிடித்துப் பேழையிலிட்டால் கீதம்கிளம்பாது. கிளி கூண்டிலிருக்கும்போது கொஞ்சுவதாகக் கூறுதல், நமது மயக்கமே தவிர வேறில்லை. கிள்ளை கொஞ்சவேண்டுமானால், கோவைக் கனியுள்ள தோப்பிலேபோய்க் காணவேண்டும். மழலைச்சொல் இன்பத்தை மற்றதில் காணமுடியாது. அது போன்றே இயற்கையாக வாழும் காதல், தடைப்படுத்தப்படாமல், அதற்குச் சுவர் போடப்படாமல், அது தாண்டவமாடும் போது கண்டால் அதன் பெருமையைக்காண முடியுமே தவிர வேறு விதத்தில் காணமுடியாது.

நமது குடும்பப் பெண்களிலே எவ்வளவோ பேர், தங்கள் மன விகாரத்தை மாற்ற முகத்தில் மஞ்சள் பூசி. குங்குமமிட்டு வாழுகின்றனர். எத்தனை பெண்கள் வாழ்க்கையின் இன்பம் என்றால், சமையற்கட்டில் அதிகாரம் செலுத்துவதும், கட்டிலறையில் விளக்கேற்றுவதும், கலர்புடவை. கல்கத்தா வளையல். மங்களூர் குங்குமம், மயில் கழுத்து ஜாக்கெட் ஆகியவைகளைப்பற்றிப் புருஷனிடம் பேசுவதும், தொட்டிலாட்டுவதுந்தான் என்று கருதிக்கொண்டு வாழுகின்றனர். ரசமில்லாத வாழ்க்கை, பாவம்!

அப்படிப்பட்ட வாழ்க்கைதான் சாரதாவுக்கு. புருஷனோ அபின் தின்று ஆனந்தமாக இருந்தான். இந்நிலையில் தான் காரியஸ்தன் கருப்பையாவுக்கு சாரதாவின் மீது கண்பாய்ந்தது. சாரதாவின் தற்கால வாழ்வுக்குத் தானே காரணமென்பது அவனுக்குத் தெரியும். அது மட்டுமல்ல! சாரதாவை தன் வலையில் போடுவதும் சுலபமென எண்ணினான். நாளாவட்டத்தில், பேச்சிலும், நடத்தையிலும் தன் எண்ணத்தை, சாரதாவுக்கு உணர்த்த ஆரம்பித்தான்.

தாகமில்லாத நேரத்திலும் ஒரு டம்ளர் தண்ணீர் வேண்டும் என்பான். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வலியச்சென்று பேசுவான். தோட்டத்துப் பூவைப் பறித்து வந்து கொடுப்பான். விதவிதமான சேலை வகைகளைப்பற்றி பேசுவான். சாரதாவின் அழகை அவர்கள் புகழ்ந்தார்கள். இவர்கள் புகழ்ந்தார்கள் என்று கூறுவான்.

"உன் அழகைக்காண இரு கண்கள் போதாதோ" என்று பாடுவான். சாரதாவைக் கண்டதும் ஒரு புன் சிரிப்பு.

இவனுடைய சேட்டைகள் எதுவும் சாரதாவின் புருஷனுக்குத் தெரியாது. சாரதா உணர்ந்து கொள்வதற்கே சில நாட்கள் பிடித்தன. உணர்ந்த பிறகு திகைத்தாள். விஷயத்தை வெளியில் சொல்லவோ பயமாக இருந்தது. "மகா யோக்யஸ்தி தான் போடி! கலியாணமான உடனே, எவனையோ கட்டி முத்தமிட்டாய். பாவம், அந்தக் காரியஸ்தன் உனக்காக எவ்வளவோ பாடுபட்டு, கணவனோடு சேர்த்து வைத்தான். இப்போது அவன் மீது பழிபோடுகிறாய்" என்று தன்னையே தூற்றுவார்கள் என்று சாரதா எண்ணினாள். அதுமட்டுமா! காரியஸ்தனைக் கோபித்துக் கொண்டால், தன் கணவனிடம் ஏதாவது கூறி. அவர் மனதை கெடுத்து விடுவான் என்று பயந்தாள். இந்த பயத்தை சாரதாவின் தாய் அதிகமாக வளர்த்து விட்டாள். எனவே கருப்பையாவின் சேட்டையை முளையிலேயே கிள்ளிவிட சாரதாவால் முடியவில்லை. கருப்பையா பாடு கொண்டாட்டமாகி விட்டது. சரி! சரியான குட்டி கிடைத்து விட்டாள், என்று தீர்மானித்து விட்டான்.

அவனுடைய வெறி, வினாடிக்கு வினாடி வளர்ந்தது. "சாரதா, நம்மைக் கவனிக்க மாட்டாயோ, தயவு இல்லையே" என்று கேட்பான். சிரித்துக்கொண்டே, "என்ன வேண்டும் கருப்பையா, சொல்லேன்" என்பாள் சாரதா. கருப்பையா பெருமூச்சு விடுவான். "கொஞ்சம் தாகந்தீர உன்கையால் தண்ணீர் கொடம்மா" என்பான். சாரதா விசாரத்துடன் நீர் தருவாள். ஏனம்மா முகம் வாட்டமாக இருக்கிறது" என்பான். "ஒன்றுமில்லையே" என்று கூறுவாள் சாரதா. "அம்மா! நீ முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக்கொண்டால், என் மனம் படாதபாடு படுகிறது" என்று தன் அக்கரையைக் காட்டுவான் காரியஸ்தன்.

"உன்னுடைய சிகப்பு மேனிக்கு அந்த நீலப்புடவை கட்டிக்கொண்டு, வெள்ளை ஜாக்கெட் போட்டுக் கொண்டு ஜவ்வாது பொட்டு வைத்து நிற்கும்போது, அசல் ரவிவர்மா பிக்சர்போல இருக்கிறது என் கண்களுக்கு" என்பான்.

இவ்விதமாக, கருப்பையா மிக விரைவில் முன்னேறிக்கொண்டே போனான். ஆனால் ஜாடை செய்து சாரதாவைப் பிடிக்க அதிக நாட்களாகும் என்பதைத் தெரிந்துகொண்டு, வாய் திறந்து கேட்டு விடுவதே மேல் என எண்ணினான். அதற்கும் ஒரு சமயம் வாய்த்தது.

முதலாளி பக்கத்து ஊருக்குப்போனார், ஒரு பாகப்பிரிவினை மத்தியஸ்துக்காக. வர இரண்டு நாட்கள் பிடிக்கும். அந்த இரண்டு நாட்களில் காரியத்தை எப்படியாவது முடித்துவிட தீர்மானித்துவிட்டான் கருப்பையா.

மாலை நேரம், தோட்டத்திலே சாரதா பூப்பரித்துக்கொண்டிருந்த சமயத்தில் கருப்பையா அங்கு போனான். சாரதாவுடன் பேச ஆரம்பித்தான். சற்று தைரியமாகவே "சாரதா, நீ நல்ல சாமர்த்தியசாலி".

"நானா! ஊம்! என்ன சாமர்த்தியும் கருப்பையா? என் சாமர்த்தியம் தெரியாதா; எட்டு மாதம் சீந்துவாரற்றுக்கிடந்தவள் தானே."

"சீந்துவாரற்றா! அப்படிச் சொல்லாதே. உன் அழகைக் கண்டால் அண்டசராசரத்தில் யார்தான் சொக்கிவிடமாட்டார்கள்".

"போ! கருப்பையா, உனக்கு எப்போதும் கேலிதான்

"கேலியா இது,நீ கண்ணாடி எடுத்து உன் முகத்தைக் கண்டதில்லையா?"

"சரி! சரி! நாடகம்போல நடக்கிறதே."

"ஆமாம்! நாடகம்தான். காதல் நாடகம்".

"இது என்ன விபரீதப்பேச்சு கருப்பையா, யார் காதிலாவது விழப்போகிறது."

"நான் சற்று முன் ஜாக்கிரதை உள்ளவன். தோட்டக்கார முனியனை நாலு மணிக்கே அனுப்பிவிட்டேன் கடைக்கு."

"நீ ஏதோ தப்பு எண்ணம் கொண்டிருக்கிறாய், கருப்பையா. தயவு செய்து அதனை விட்டுவிடு. நான் அப்படிப்பட்டவளல்ல."

"சாரதா! நான் இனி மறக்கப் போவதில்லை, உன்னை எப்படியாவது கூடவேண்டுமென நான் தவங்கிடந்து வந்தேன். இன்றுதான் தக்க சமயம்."

என்று கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டான். சாரதா திமிறினாள், பூக்கூடை கீழே விழுந்தது. மலர்கள் மண் மீது சிதறின, சாராதாவின் கண்களிலே நீர் பெருகிற்று. கருப்பையாவின் கரங்கள் அவள் உடலைக் கட்டிப் பிடித்துக்கொண்டன, அவனுடைய உதடுகள் அவள் கன்னத்தில் பதிந்தன. அந்த முத்தங்களின் ஓசை கேட்டு பறவைகள் பறந்தன. சாரதா கருப்பையாவிடம் சிக்கிவிட்டாள்.

சாரதா ஜென்மம் இப்போதுதான் சாபல்யமாயிற்று. அடி பைத்தியமே! ஏன் இவ்வளவு நடுங்குகிறாய்? பயப்படாதே! இந்த கருப்பையாவை சாமன்யமாக எண்ணாதே. நான் இந்த இன்பத்துக்காக எவ்வளவு பாடுபட்டேன். எத்தனை நாள் காத்துக்கொண்டிருந்தேன் தெரியுமா? தேனே, நான் இதற்காகத்தானே உன்னை தாய் வீட்டிலிருந்து இங்கு வரும்படி செய்தேன்" என்று களிப்பாய் கருப்பையா கூறினான், சாரதாவின் ஆடையைப்பற்றி இழுத்தான். கன்னங்களைக் கிள்ளினான். "ஒரே ஒரு முத்தம் —இன்னம் ஒன்று ஆம்! அப்படி. பலே பேஷ்" என்று கொஞ்சினான்.

சாரதா மயக்கத்தில் ஈடு பட்டவள் போல, அவன் இஷ்டபடியே நடந்தாள். அன்று தோட்டத்தில் சாரதா, தனது மூன்றாவது பிறப்புப் பெற்றாள்.

அவளுடைய கன்னிப் பருவம் காதலைக் கண்டது! அது கருவிலேயே மாண்டது. அவளுடைய இரண்டாம் பிறப்பு கணவனுக்கு மனைவியாக வாழ்க்கையில் ரசமின்றி இயந்திரம் போல இருந்தது. அன்று தோட்டத்தில் சாகசக்கார கருப்பையாவிடம் சிக்கியதால் அவள் மூன்றாம் பிறப்பு –வெளிக்கு கற்புக்கரசியாகவும், மறைவில் பிறருக்குப் பெண்டாவும் இருக்கும் வாழ்வைப் பெற்றாள்.

கணவனுக்கும் அவளுக்கும் மணமாயிற்று என்பதைத் தவிர வேறு பிணைப்பு இல்லை. அவன், அவள் கழுத்தில் தாலியைக் கட்டினானே தவிர மனதிலே அன்பு என்ற முத்திரையைப் பதிய வைக்கவில்லை. எனவே அவள் கணவனிடம் கலந்து வாழுவதை தனது கடமை, உலகம் ஏற்படுத்திய கட்டு எனக்கொண்டாளே தவிர அதுவே தனது இன்பம் என்று கொள்ளவில்லை.

பரந்தாமனை மணந்திருந்தால், அவளை பதைக்கப்பதைக்க வெட்டினாலும் பாழும் கிணற்றில் தள்ளினாலும் பயப்பட மாட்டாள். பிறருடைய மிரட்டலுக்கு காலடியில் கோடி கோடியாகப் பணத்தைக் குவித்தாலும் நிமிர்ந்து நோக்கியிருக்க மாட்டாள் மற்றொருவனை. அவள் காதற் செல்வத்தைப் பெறவில்லை. அவள் இன்பக் கேணியில் புகவில்லை. எனவே அவள் வாழ்க்கையில் இவனிடம் எளிதில் வழுக்கி விழுந்தாள்.

உலகம் தன் குற்றத்தைத் தெரிந்து கொள்ளாதிருக்கு மட்டும், கவலை இல்லை என்று எண்ணினாள்.

இனி, இந்த உலகில், ஜோராக வாழவேண்டும். சொகுசாக உடுத்தி நல்ல நல்ல நகைகள் போட்டுக்கொண்டு கணவர் கொண்டாட, ஆனந்தமாய் வாழவேண்டும். அதற்கு காரியஸ்தன் தயவிருந்தால், கணவனைச் சரிப்படுத்த முடியும். காரியஸ்தனோ தன் கால் அடியில் கிடக்கிறான். இனி தனக்கென்ன குறை! என்று எண்ணினாள் சாரதா. சாரதா புது உருவெடுத்தாள். உடைகளை தேடித்தேடி அணிந்தாள். நகைகள் புதிகாகப் போட்டாள். ஒரு நாளைக்கு பத்து முறை முகத்தை அலம்புவாள். நிமிடத்துக்கொருமுறை கண்ணாடி முன் நிற்பாள். வலியச்சென்று புருஷனிடம் கொஞ்சுவாள். அவள் சரஸம் புரியத் தொடங்கினாள். கிழக் கணவன் அவள் வலையில் வீழ்ந்தான். கேட்டதைத் தந்தான் சாரதாவே கண்கண்ட தெய்வம் என்றான். ஆனால் அவன் அறியான் பாவம். அவள் கற்பை இழந்த சிறுக்கியானாள் என்பதை.

மயிலும், மாதரும் தமது அழகை பிறர் காணவேண்டுமென்ற எண்ணத்துடன் இருப்பதாக கவிகள் கூறுவர். மயிலின் தோகை அவ்வளவு வனப்புடன் இருக்கும்போது அது பிறர் கண்களுக்குத் தெரியாமல் மறைந்துகிடப்பின் பயன் என்ன? கண்டோர் மனதில் களிப்பை உண்டாக்கும் ஒப்பற்ற பணியை அழகு செய்கிறது. அந்த அழகு, அன்றலர்ந்த பூவிலுண்டு அந்திவானத்திலுண்டு! அதரத்தில் தவழும் அலங்காரப் புன்சிரிப்பிலுண்டு. கிளியின் கொஞ்சுதலில், குயிலின் கூவுதலில், மயிலின் நடனத்தில், மாதரின் சாயலில் உண்டு! சிற்பத்தில் உண்டு. ஆனால் அதன் சிறப்பை முழுவதும் காணவல்லார் மிகச்சிலரே. ஆனால் மாதரின் எழில் அத்தகையதன்று. அது கண்டவரை உடனே களிக்கவைக்கும் தன்மையது. காற்று வீசும்போது குளிர்ச்சி தருகிறேன் பாரீர் எனக் கூவுமா! அதன் செயல் நமக்கு அந்த இயற்கையான எண்ணத்தை உண்டாக்கும். அதுபோலவே. எந்த மாதும், என் அழகைக் கண்டாயோ எனக்கேளாய். ஆனால் தம் அழகைப் பிறர்கண்டனர், களித்தனர் என்பது அவர்களுக்குத் தெரியும். அதிலே பூரிப்பும் பெருமையும் அடையாத பெண்கள் மிகமிகச்சொற்பம்.

ஆனால், அழகு களிப்பதற்கு எங்ஙனம் உதவுகிறதோ அதைப்போலவே பிறரை அழிக்கவும் செய்கிறது. எனவே தான் புலவர்கள், மாதர்களின் விழியிலே அமிர்தமும் உண்டு, நஞ்சும் உண்டு என்றனர்.

இசைந்த உள்ளத்தை எடுத்துக் காட்டும் விழி, அமிர்தத்தை அள்ளி அள்ளி ஊட்டும்! இல்லை! போடா! மூடா! எட்ட — நில் என்ற இதயத்துக்கு ஈட்டி போன்ற பதிலைத்தரும் விழிகள், நஞ்சு தரும். ஆம்! அமிர்தம் உண்டு ஆனந்தப்பட்டவர்களுமுண்டு. நஞ்சு கண்டு நலிந்தவர்களுமுண்டு! ஒரே பொருள் இருவகையான செயலுக்குப் பயன்படுகிறது! ஆனால் சாரதாவின் கண்கள் அமிர்தத்தையும் ஊட்டவில்லை. நஞ்சையும் தரவில்லை! இயற்கையாக எழும் எண்ணத்தை அடக்கி, மடக்கி மாற்றிக்காட்ட அவளது கண்கள் கற்றுக்கொண்டன!

உண்மையான அன்பு கனிந்திருந்தால், அக்காரிகை தன்னைக் காதலன் நோக்கும்போது தலை குனிந்து நிற்பாள். பளிங்குப் பேழையின் மூடியை மெதுவாக திறப்பாள். கண் சரேலெனப்பாயும் காதலன் மீது! நொடியில் மூடிக் கொள்ளும்! இடையே ஒரு புன் சிரிப்பு மின்னலெனத்தோன்றி மறையும்!

காதலற்று, வேறு எதனாலேனும், பொருள் காரணமாகவோ, வேறு போக்கு இல்லை என்ற காரணத்தாலோ கட்டுப்பட்ட காரிகை தன்னுடன் பிணைக்கப்பட்டுள்ளவன் தன்னைக் காணும்போது உள்ளத்தில் களிப்பு இருப்பினும் இல்லாது போயினும், பற்களை வெளியே காட்டியும், அவன் அப்புறம் சென்றதும், முகத்தில் மெருகு அற்று சோருவதும் உண்டு! தானாக மலர்ந்த மலருக்கும், அரும்பை எடுத்து அகல விரித்ததற்கும் உள்ள வித்தியாசம் இங்கும் உண்டு.

சாரதா மலராத மலர்! அரும்பு! அந்த அரும்பு முள் வேலியில் கிடந்தது. கருப்பையா, அதனை அகல விரித்தான்! அவன் ஆனந்தமடைந்தான்! சாரதா ஆனந்தமடைந்ததாக நடித்தாள்! அந்நடிப்பே அவனுக்கு நல்லதொரு விருந்தயிற்று! நடிப்பும் ஒரு கலைதானே? கருப்பையாவுக்கும் சாரதாவுக்கும் கள்ள நட்பு பெருகிவருவதைக் கணவனறியான். நல்ல தோட்டம். அழகான மாடு கன்று இருப்பது கண்டும், பெட்டியைத் திறந்ததும் பணம் நிரம்பி இருப்பதைப் பார்த்தும் பெருமை அடைவதைப் போலவே தன் அழகிய மனைவி சாரதாவைக் கண்டு அவன் பெருமை அடைந்தான்,

"என் சாரதா குளித்துவிட்டு, கூந்தலைக் கோதி முடிக்காது கொண்டையாக்கி, குங்குமப் பொட்டிட்டு, கோயில் போகும் லட்சுமியோ, பார்வதியோ என்று தோன்றுகிறது. பூஜா பலன் இல்லாமலா எனக்கு சாரதா கிடைத்தாள்" என்று அவள் கணவன் எண்ணினான்.

அந்த லட்சுமி தனது செல்வத்தை, இன்பத்தை, கருப்பையாவுக்குத் தருவதை அவன் அறியான். அறிய ஒட்டாது அபின் தடுத்தது. நாளுக்கு நாள் அபினின் அளவும் அதிகரித்தது. கள்ள நட்பும் பெருகி வந்தது. இவ்வளவு சேதியும் பரந்தாமன் செவி புகவில்லை.

அவன் செவியில்:

'காயமே, இது பொய்யடா, நல்ல காற்றடைத்த பையடா' என, கருணானந்த யோகீசுவரர் செய்து வந்த கானமே, பரந்தாமன் செவி புகுந்தது. பரந்தாமன் பால சந்நியாசியாகக் காலந்தள்ளி வந்தான். காதலைப் பெற முடியவில்லை. கருத்திலிருந்து சாரதாவை அகற்ற முடியவில்லை. அன்று மருண்டு ஊரை விட்டோடி, பாழும் சத்திரத்தில் படுத்துப் புரண்டு, கள்ளரைக் கண்டு கலங்கி, கடுக நடந்து தோப்புக்குள் புகுந்து துயின்ற நாட் தொட்டு, பரந்தாமன் ஊர் ஊராக. அலைந்தான்! காவி கட்டியவர்களை எல்லாம் அடுத்தான்! "சாந்தி வேண்டும் சுவாமிகளே! உலக மாயையினின்று நான் விடுபட அருளும் என் ஐயனே! உண்மை நெறி எதுவெனக்கூறும் யோகியே" என்று கேட்டான் பலரிடம்.

கருணானந்த யோகிசுவரர், தமது சீடராக இருப்பின் சின்னாட்களில், "கைலை வாழ் ஐயனின் காட்சியும் காட்டுவோம்" எனக்கூறினார். பரந்தாமன் சிகை வளர்த்தான். சிவந்த ஆடை அணிந்தான். திருவோட்டைக் கையிலெடுத்தான்.

"சங்கர சங்கர சம்போ. சிவ சங்கர, சங்கர சம்போ", என்று கீதம் பாடியபடி கிராமங்கிராமமாக, யோகீசுவரருடன் சென்றான்.

"சாரதா! ஒரு விசேஷம்!"

"என்ன விசேஷம்?"

"நம் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர் நாளைக்கு!"

"யார் வருகிறார்கள்!"

"சென்னையிலிருந்து எனது உறவினர் ஒருவர் வருகிறார். சிங்காரவேலர் என்பது அவர் பெயர். அவருடன் கோகிலம் என்ற அவர் தங்கை வருகிறாள். அவர்கள் மகாநாசூக்கான பேர்வழிகள். பெரிய ஜெமீன் குடும்பம்."

"வரட்டுமே, எனக்கும் பொழுது போக்காக இருக்கும்"

"கோகிலத்தை நீ கண்டால் உடனே உன் சிநேகிதையாக்கிக் கொள்வாய், நன்றாகப் படித்தவள் கோகிலம்."

"படித்தவர்களா! சரி சரி! எனக்கு அல்லியரசாணிமாலை தவிர வேறு என்ன தெரியும்? என்னைப் பார்த்ததும் அந்தம்மாள் நான் ஒரு பட்டிக்காட்டுப்பெண் என்று கூறிவிடுவார்."

"கட்டிக் கரும்பே, நீயா ஒரு பட்டிக்காட்டுப்பெண்— என்று கூறிக்கொண்டே சாரதாவின் ரம்மியமான கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினான் கணவன்.

"இது தானே உங்கள் பழக்கம்! இது என்ன தவடையா, ரப்பர் பந்தா இப்படிப் பிடித்துக் கிள்ளுவதற்கு. வரட்டும் அம்மா, சொல்லுகிறேன் நீங்கள் செய்த வேலையை..." என்று கொஞ்சினாள் சாரதா.

"அடடா, பாவம்! கன்னம் சிவந்து விட்டதே! சாரதா. கிள்ளினதற்கே இப்படிச் சிவந்து விட்டதே..."

"போதும் நிறுத்துங்கள் விளையாட்டை. நான் பூப்பறிக்கப் போகவேண்டும்" என்று கூறிவிட்டு, சாரதா தன் கணவன் தன்னிடம் வசியப்பட்டு இருப்பதை எண்ணிப்பெருமை அடைந்தபடியே தோட்டத்துக்குச் சென்றாள். அங்கு கருப்பையா காத்துக் கொண்டிருந்தான்.

"ஏது! ரொம்பக் குஷிதான் போலிருக்கு!" என்று கூறிக் கொண்டே, சாரதாவின் கரங்களைப் பிடித்து இழுத்தான். "இது என்ன வம்பு! விடு கருப்பையா, அவர் வந்துவிட்டால் என்ன செய்வது" என்று கூறி கையை இழுத்துக் கொண்டாள். அந்த வேகத்தில் வளையல் உடைந்து, கீறிக் கொண்டதால், பொன்னிற மேனியில், செந்நிற இரத்தத் துளியும் வந்தது.

"பார் நீ செய்த வேலையை" என்று கரத்தைக் காட்டினாள்.

"சூ மந்திரக்காளி! ஓடிப்போ!”–என்று கூறிக்கொண்டே, கருப்பையா அந்தக் கரத்திற்கு முத்தமிட்டான் அவன் அறிந்த மந்திரம் அது!

"ஒரு சங்கதி கருப்பையா, நாளைக்கு விருந்தாளிகள் வருகிறார்கள். நாம் சற்று ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். யாரோ ஜெமீன்தாராம்; அவர் தங்கையாம், இருவரும் வருகிறார்களாம்" என்று சாரதா எச்சரித்தாள்.

அன்றிரவு சாரதாவுக்கு நாளைக்கு எந்தக் கலர் புடவை உடுத்திக்கொண்டால் அழகாக இருக்கும், கார்டுகலர் சேலையா, ரிப்பன் பார்டர் சேலையா, மயில் கழுத்து கலரா மாதுளம் பழநிறச் சேலையா, ஜவ்வாது இருக்கிறதா, தீர்ந்து விட்டதா, என்ற யோசனைதான்.

மாதுளம் பழ நிறச்சேலை கட்டிக்கொண்டால்தான் நன்றாக இருக்கும் என முடிவு செய்தாள். உடனே முகம் மாறிற்று. ஆம்! முதன் முதலில் பரந்தாமனைக் காணும்போது மாதுளம்பழ நிறச்சேலைதான் கட்டிக் கொண்டிருந்தாள் சாரதா!

பழைய நினைவுகள், தோணி ஓட்டையில், நீர் புகுவது போல விரைவிற்புகுந்தன. தோணி, கடலில் அமிழ்வதைப்போல, அவள் துக்கத்தில் ஆழ்ந்தாள், தலையணையில் நீர்; கண்கள் குளமாயின! அவளது வாசனை திரவியப் பூச்சு வேலை சேறாகிவிட்டது. சாரதா தனது உண்மைக் காதலை நினைந்து உள்ளம் கசிந்தாள். உறக்கமற்றாள்! மறுநாள் காலையில் முகவாட்டத்துடன் விருந்தாளிகளை வரவேற்றாள்.

சிங்காரவேலுக்கு அந்த முக வாட்டமே, ஒரு புது மோஸ்தர் அழகாகத் தெரிந்தது. கோகிலம் கத்திரிப் பூக்கலர் சேலைதான்—சாரதாவுக்கு ஏற்றது என்று யோசனை கூறினாள். விருந்தாளிகள் வந்த ஒரு மணி நேரத்துக்குள் சாரதாவுடன், வருஷக் கணக்கில் பழகினவர்கள் போல நடந்துகொண்டனர். ஒரே பேச்ச! சிரிப்பு! கோகிலத்தின் குட்டிக் கதைகளும் சிங்காரவேலின் ஹாஸ்யமும் சாரதாவுக்குப் புதிது. அவைகள் அவளுக்குப் புதியதொரு உலகைக் காட்டிற்று. அதிலும் அந்த மங்கை புகுந்தாள்!

ஒரு முறை வழி தவறிவிடின் பிறகு எவ்வளவோ வளைவுகளில் புகுந்தாகத்தானே வேண்டும்.

அத்தகைய ஒரு வளைவு சிங்காரவேலர்—கோகிலா பிரவேசம்!

கோகிலா அழகியல்ல! சாரதா அதைத் தெரிந்துகொண்டாள். என்றாலும், கோகிலத்தின் நடை உடை பேச்சில் ஒரு தனி வசீகரம் கண்டாள். கோகிலத்தின் கண்கள் சில மணி நேரங்களில் சாரதா–கருப்பையா நட்பைக்கண்டுவிட்டன. அவள் வாய், ஒரு நொடியில் சிங்காரவேலருக்குக் கூறிவிட்டது அவரது மூளை உடனே சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. சிங்காரவேலரும், கோகிலமும் செல்வக் குடி பிறந்தோர். செல்வத்தை வீண் ஆட்டத்தில் செலவிட்டு பிறகு உல்லாசக்கள்ளராயினர்! கோகிலம் தன் கணவனை வீட்டுக்கு வரவே கூடாது எனக் கண்டிப்பாக உத்தரவிட்டுவிட்டவள். சிங்காரவேலர் முதல் மனைவி பிரிந்த துக்கத்தை மறக்க முடியுமா—என்பவர். தாரமிழந்தவர். இருவருமாக பழைய ஜெமீன் பெருமையைக்கூறி, ஊரை ஏய்ப்பதும் உலாவுவதுமாகவே இருந்தனர்.

சாரதா –கருப்பையா உறவு நல்லதொரு தங்கச்சுரங்கம் என்று சிங்காரவேலன் எண்ணினான். அவனுடைய சிந்தனையில் சூதுவலை உடனே வளர்ந்தது. கோகிலத்திடம் கலந்தான்.

"பேஷான யோசனை அண்ணா! சரியான யோசனை!',

"நம் யோசனை எது சரியானதாக இராமற் போய்விட்டது கோகிலம்."

"இந்த 'விடுமுறை' வியாபார தோரணையில் நமக்கு மிகச் சிறந்தது."

"ஆமாம்! நாம் போடப்போகும் 'முதல் தொகை' மிகச் சொற்பம். கோடாக் நாதனின் கருணையால், நமக்குக்குறைவே ஏற்படாது" என்றான் சிங்காரவேலன்.

கோகிலா அண்ணனின் சமர்த்தை எண்ணிச் சிரித்தாள்.

அண்ணனும் தங்கையுமாகச் சிரிக்கும் நேரத்திலே சாரதா, அங்கு வந்தாள். சிரிக்கும் காரணம் எண்ணவோ என்று கேட்டாள்.

"நாங்களா! சிரிப்பதா! ஏன் அண்ணா, நாம் எதற்காகச் சிரித்தோம்"– என்று கோகிலம் கேட்டாள். அவள் கேட்ட கேள்வியும், பேசிய விதமும் சாரதாவுக்கும் சிரிப்பை உண்டாக்கிவிட்டது.

மூவருமாக விழுந்து விழுந்து சிரித்தனர்! "பேதைப்பெண்ணே சிக்கினாயா" என்று சிங்காரவேலன் எண்ணினான்!

"குட்டி மகா கெட்டிக்காரியாக இருக்கிறாள், எங்கே நமது கண்களுக்கு விஷயம் தெரிந்து விடுகிறதோவென்று மிக ஜாக்கிரதையாக நடந்துகொள்கிறாள். அவனாவது பரவாயில்லை. நான் பார்க்கவில்லையென்று எண்ணிக்கொண்டு சில சமயங்களில் அவளை நோக்கி சிரிக்கிறான். கொஞ்சுகிறான், இருவரும் கைப்பிடியாகக் கிடைக்கவேண்டும். அது போட்டோ எடுக்கப்பட வேண்டும். அதுதான் என் பிளான். சமயம் வாய்க்கவில்லையே" என்றான் சிங்காரவேலன் கோகிலத்திடம்.

"அண்ணா! பெண்கள் எப்போதும் நிறைகுடம் போன்றவர்கள். உணர்ச்சியை ததும்பவிட மாட்டார்கள். ஆண்கள் அப்படியல்லவே. நிழலசைந்தாலும் அவள் அசைந்தாள் என்று எண்ணிக் கொண்டு அவதிப்படுவார்கள். இது இயற்கை தானே" என்றாள் கோகிலம்.

"அது எப்படியாவது தொலையட்டும். நமக்கு வேண்டியது நடக்கவேண்டுமே" என்றான் வேலன். "இது ஒரு பிரமாதமா! நாளை மாலை, சாரதா கருப்பையாவின் தோளைப்பிடித்திழுத்து முத்தமிடும் காட்சியை நீங்கள் போட்டோ எடுக்கலாம். அந்தக் காட்சியை நான் டைரக்ட் செய்கிறேன்" என்றாள் கோகிலம்.

சிங்காரவேலன் முகம் சற்று சுளித்தது. கோகிலம் சிரித்துக்கொண்டே "ஏன் அண்ணா, உமக்கும் சாரதா மீது......" என்று கேலி செய்தாள்.

"தூ! தூ! நான் பெண்கள் மீது ஆசை வைப்பதை விட்டு பல வருஷங்களாகி விட்டன" என்றான் வேலன்..

"சரி! நான் நமது சினிமா காட்சிக்கு வேண்டிய ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு, கோகிலம் கருப்பையாவைத் தேடிக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றாள்.

"கருப்பையா! நாளைக்கு நாங்கள் ஊருக்குப் போகி போகிறோம்" என்று கோகிலம் சம்பாஷணையைத் துவக்கினாள்.

"ஏனம்மா! எங்கள் ஊர் பிடிக்கவில்லையோ" என்று கருப்பையா கேட்டான்.

"பிடிக்கவில்லையா! சரிதான், ரொம்ப அதிகமாகப்பிடித்துவிட்டது. இன்னம் கொஞ்ச நாள் போனால் என் அண்ணனுக்கு பித்தம் பிடித்துவிடும் போல் இருக்கிறது" என்றாள் கோகிலம்.

"நீங்கள் சொல்வது எனக்கொன்றும் விளங்கவில்லையே" என்றான் கருப்பையா.

"கருப்பையா,நீ எங்கும் வெளியில் சொல்லக்கூடாது மிக ரகசியம். வெளியில் தெரிந்தால் தலை போய்விடும்" என்றாள் கோகிலம்.

"என்ன இரகசியம்?" என்று கேட்டான் கருப்பையா. கோகிலம், அவன் காதில் குசுகுசு' வென ஏதோ கூறினாள். கருப்பையாவின் கண்களில் தீப்பொறி பறந்தது.

"அதனால் தான் கருப்பையா, வம்பு வளருவதற்குள் நாங்கள் போய் விடுகிறோம். அவளோ, பாவம் கிழவனின் மனைவி. என் அண்ணனோ, மகா ஷோக் பேர்வழி. பஞ்சு அருகே நெருப்பை வைத்து விட்டு, பற்றி எரிகிறதே என்று பிறகு நொந்து கொள்வதில் என்ன பயன்?" என்று வேதாந்தம் பேசிவிட்டு விஷயத்தை எங்கும் மூச்சு விடக்கூடாது என்று கோகிலம் கேட்டுக் கொண்டாள். கருப்பையாவுக்கு கவலை அதிகரித்து விட்டது. அடடா! மோசம் வந்து விடும் போலிருக்கிறதே என்று கலங்கினான். சாரதா மீது அளவு கடந்த கோபம் அவனுக்கு. சும்மா விடக்கூடாது. கேட்டுத் தீர வேண்டும். சிறுக்கி இவ்வளவு தூரம் கெட்டு விட்டாளா! அந்த சிங்கார வேலன் என்ன சொக்குப்பொடி போட்டானோ! என்று ஏதேதோ எண்ணி ஏங்கினான்.

கோகிலத்துக்கு, தான் மூட்டி விட்ட கலகம் வேலை செய்யுமென்று தெரிந்து விட்டது, தன் சாகசப் பேச்சில் கருப்பையாவைப் போன்ற காட்டான் ஏமாறுவது சுலபந்தானே என எண்ணி, அண்ணனிடம் தன் வெற்றியைக்கூறவும், சாரதாவும், கருப்பையாவும் தனியாக சந்திக்கும் நேரத்தில், ரசமான காட்சி நடந்தே தீருமெனச் சொல்லவும் சென்றாள்.

செல்வம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாது போவது அவ்வளவு அதிகமான பொறாமையைக் கிளப்புவதில்லை. அது "கொடுத்து வைத்தவன்," "ஆண்டவன் அருள்", "பூர்வ ஜென்ம புண்ணிய பலன்", என்ற சமாதானங்களால் சாந்தியாகிவிடும். ஆனால் காதல் செல்வத்தின் விஷயம் அங்ஙனம் அன்று.

"உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றி" விடும் காதல் சம்மதக் கண்ணொளியால் தணிக்கப்பட்டு, காதல் விளையாட்டுகளால் சாந்தியாக்கப்பட்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கி இருக்கும் ஒருவருக்கு தன் காதலில் பிறனொருவன் புகுவதாகவோ கெடுக்கவோ கண்டால், கோபமும் கொதிப்பும் உள்ளத்தின் அடிவாரத்திலிருந்து கிளம்பும்.

பசியினால் களைத்துப் படுத்துத் துயிலும் புலியின்வாலை வேண்டுமானாலும் வளைத்து ஒடிக்கலாம். ஆனால் காதல் நோயில் சிக்கிக்கொண்டவனைத் தொந்தரவு செய்தால் அவன் புலியினும் சீறுவான், எதுவுஞ் செய்வான் எதற்கும் அஞ்சான், எதையுங் கருதான். ஆம்! இன்னமும் மனிதன் மாடமாளிகை கூடகோபுரத்தைவிட, மங்கையின் அன்பையே பெரிதென எண்ணுகிறான். பொன்மணி பொருளைவிட தனது பிரியையின் புன்சிரிப்பே பெரிதெனக் கருதுகிறான். எதையும் இழப்பான். காதலை இழக்கத்துணியான். எது இல்லாமற் போய்விடினும், "இதுதான் நம் நிலை என் செய்வது" எனத் தன்னைத்தானே தேற்றிக்கொள்வான்,ஆனால் மனதில் குளிர்ச்சி ஊட்டும் மனோகரி ஒருவள் இல்லையெனில் அவன் செத்த வாழ்வு வாழ்வதாகவே கருதுவான். பருவமும் பழக்க மிகுதியால் வரும் சலிப்பும் ஒரு சிறிது இக்குணத்தைக் குறைக்கலாம். அடியோடு மாற்றுவதென்பதோ அந்தக்குணமே வர ஒட்டாது தடுத்து விடுவது என்பதோ முடியாத செயலாகும். கிடைக்காவிட்டால் கிலேசப்படும் உள்ளம், கிடைத்ததைக் கெடுக்க யாரேனும் முற்பட்டால், அவர்களைக் காலடி போட்டு மிதித்துத் துவைத்து விடவே எண்ணும்.

கருப்பையா அந்நிலையில்தான் இருந்தான். அவன் கொண்ட நட்பு, கள்ளத்தனமானதுதான் – துரோகத்தின் மீது தோற்றுவிக்கப்பட்டதுதான். மருண்ட இளமனதை மிரட்டிப் பெற்றதுதான் என்றாலும் "தான் பெற்ற இன்பம் பிறனுக்குச் செல்வதென்றால்?" அவமானம் பொறுக்க முடியவில்லை. சிங்காரவேலனுக்கும் சாரதாவுக்கும் ஏதோ நடக்கும் போலத் தோன்றுகிறது என கோகிலம் கயிறு திரித்தாள். அது கருப்பையாவின் மனதைக் கலக்கிவிட்டது.

மறுநாள் மாலை, தோட்டத்தில் கோகிலம் குறிப்பிட்டபடியே ஊடல் காட்சி ஆரம்பமாயிற்று. கருப்பையா, கருத்து, வியர்க்கும் முகத்துடன், பெருமூச்சு விட்டுக்கொண்டு, வேலியைச் சரிப்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில் சாரதா வந்தாள். அவள் கோகிலம் செய்துவிட்டுப்போன குட்டிக் கலகத்தையும் அறியாள். கோடியில் மரமறைவில் 'கோடக்'குடன் ஒளிந்துகொண்டு சிங்கார வேலன் இருப்பதையும் அறியாள். அன்றெல்லாம் கருப்பையா முகத்தைக் கோணலாக்கிக் கொண்டும், சிடு சிடுவெனப் பேசிக்கொண்டும் இருந்தது கண்டு ஒன்றும் புரியாது தத்தளித்தாள். அதனை விசாரிக்கவே அங்கு வந்தாள்.

"கருப்பையா –"

பதில் இல்லை.....

"கருப்பையா......"

"கந்தன் ஒரு வேலையையும் சரியாகச் செய்யமாட்டேனென்கிறான். ஆமாம்! அவனுக்கு நிலைமை மாறிவிட்டது. புது கிராக்கி–" என்று தோட்டக்காரக் கந்தனை சாக்காகவைத்துக்கொண்டு, கருப்பையா பேசினான். சாரதாவுக்கு அப்போது தான் கருப்பையா ஏதோ தன் மீது சந்தேகங்கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது. உடனே கோபமும் வந்தது. இருவரும் கோபித்துக்கொண்டே இருந்தால் என்ன செய்ய முடியும்! அதிலும் இவள் ஒரு பெண்! வழி தவறி நடந்த பெண்!! எனவே, பணிந்து போக வேண்டியவள் தானே என எண்ணினாள்,அந்த ஒரு விநாடியில் அவள் மணக்கண் முன்பு, தனது முன்னாள் நிலை யாவும், படமெடுத்தது போல் தோன்றிற்று.

ஒரு முறை தவறினாள்-பெற்றோர் தவற விட்டார்கள் அது முதல், சருக்கு மரத்தில் செல்வது போல, நழுவி நழுவி வழுக்கி வழுக்கி கீழுக்கு வந்து, கடைசியில் திருட்டுத்தனமாகப்பெற்ற ஒரு முரட்டு ஆளுடன், கொஞ்ச வேண்டிய நிலையும் வந்ததல்லவா-காரணமின்றி அவன் கொண்ட கோபத்துக்கும் சமாதானம் கூற வேண்டி வந்ததல்லவா– என்று எண்ணியதும், சாரதாவின் கண்கள் தானாகக் கலங்கின.

மெள்ள நடந்து, கருப்பையாவை அணுகினாள். அவன் அங்கு மரமென நின்றான். "சொல்லு கருப்பையா, என் மீது ஏன் உனக்குக் கோபம்? நான் என்ன செய்தேன்?" என்று வீட்டு எஜமானி சாரதா, காரியஸ்தன் கருப்பையா வைக் கேட்டாள்-காதலால் கட்டுப் பட்டு அல்ல, அவனிடம் கண்மூடித்தனத்தால் கட்டுண்டகாரணத்தால்.

"எனக்கென்னம்மா உங்கள் மீது கோபம், நீங்கள் வீட்டு எஜமானியம்மா, நான் கணக்கு எழுதி காலந் தள்ளுபவன்" என்று எரிகிற நெருப்பை ஏறத்தள்ளினான் கருப்பையா.

"இதோ, இப்படிப்பார், விஷயத்தைச் சொல்லு. வீணாக என் மனதைப் புண்ணாக்காதே" என்றாள் சாரதா. கருப்பையாவின் தோளைப் பிடித்து இழுத்துக் கொண்டே கோடியில் இருந்த சிங்கார வேலன், பதுங்கியபடி சற்று அருகிலிருந்த மரத்தின் பின்புறம் நின்று கொண்டு, கோடாக்கை சரிபடுத்திக் கொண்டான்.

"மனம் புண்ணாகுமா! மகராஜி நீ. நான் இங்கு மாதச்சம்பளத்துக்கு இருப்பவன். என் கோபம் உன் மனதைப்புண்ணாக்குமா" என்றான் கருப்பையா.

"விஷயத்தைச் சொல்கிறாயா, நான் விழுவதற்கு குளம்குட்டை தேடட்டுமா" என்று உறுதியுடன் கேட்டாள் சாரதா.

"ஐயோ! அம்மா! அப்படி ஒன்றும் செய்து விடாதே சிங்காரவேலருக்கு யார் சமாதானங் கூறுவது" என்று கிண்டல் செய்தான் கருப்பையா.

சாரதாவுக்கு விஷயம் விளங்கி விட்டது. தனக்கும் சிங்காரவேலுக்கும் ஏதோ தொடர்பு ஏற்பட்டதாக எண்ணிக் கொண்டுதான் கருப்பையா கோபித்தான் என்பது தெரிந்துவிட்டது. அவளையும் அறியாமலே சிரிப்பு வந்தது.

"கருப்பையா, விஷயம் தெரிந்து கொண்டேன். நீ நினைப்பது தவறு. ஆண்டவனறியக் கூறுகிறேன், சிங்காரவேலுக்கும் எனக்கும் துளியும் நேசம் கிடையாது.நீ இதனை நம்பு, வீண் சந்தேகம் வேண்டாம்" என்றாள் சாரதா உறுதியுடன்.

துளியும் தட்டுத் தடங்கலின்றி நிதானமாக சாரதா கூறியதைக் கேட்ட கருப்பையாவுக்கு பாதி சந்தேகம் போய் விட்டது.

"கோகிலம் சொன்னாளே...." என்று ஆரம்பித்தான்

"கோகிலம் குறும்புக்குச் சொல்லி இருப்பாள்" என்று கூறிக்கொண்டே, சாரதா, கருப்பையாவின் இரு தோள்பட்டைகளையும் பிடித்துக் கொண்டே அவன் முகத்தை நோக்கியபடி. "கருப்பையா, நான் ஏதோ இப்படிக்கெட்டு விட்டேனே தவிர, நான் சுபாவத்தில் கெட்டவளல்ல" என்றாள். கருப்பையாவின் மனம் இளகிற்று. சாரதாவின் தலையைத் தடவினான்.

"சாரதா, கண்ணே. உன்னை நான் இழக்கமாட்டேன். உயிர் எனக்கு நீதான்" என்று கொஞ்சினான். சாரதா சிரித்தாள். கருப்பையா அவளை, அருகிலிழுத்து முத்தமிட்டான்.

"கடக்" என்ற சப்தமும், “சபாஷ்" என்ற பேச்சும் கேட்டு, இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். கையில் காமிராவுடன் சிரித்தபடி சிங்காரவேலன் நிற்கக்கண்டனர்.

"ஆ! ஐயோ!"

"என்ன! நீயா?"

"பதறவேண்டாம்!"

பெருமூச்சுடன் கருப்பையா நின்றான். உடம்பெல்லாம் துடிக்க சாரதா நின்றாள். சிரித்துக்கொண்டே சிங்காரவேலன் நின்றான்.

"நான் உல்லாசப் பிரயாணம் செய்வதே, இவ்விதமான அழகு ததும்பும் காட்சிகளை போட்டோ எடுப்பதற்குத்தான். இயற்கையின் அழகுகள் எனக்கு மெத்தப் பிரியம். அதனைவிட உணர்ச்சிதரும் உல்லாசக் காட்சிகள் என்றால் நான் விடவே மாட்டேன். மலர் அழகுதான்! போட்டோ எடுத்தாலும் அழகாகத்தானே இருக்கும். ஆனால் அந்த மலரிடம் வண்டு பறந்து சென்று தேன் உண்டு களிக்கும் காட்சி இருக்கிறதே, ஆஹா!. நான் என்ன சொல்வேன் அந்த ரம்மியத்தை..." என்று சிங்காரவேலன் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தான்.

சிவ பூஜையில் கரடி புகுந்ததுடன், கவி வேறு பாடினால் எப்படி இருக்கும்?

"சாரதா. இந்த ஒரு தோட்டக் காட்சிக்கு மட்டும் நியூ தியேட்டர்சார் பத்தாயிரம் கொடுப்பார்கள். கதாநாயகனைத்தான் மாற்றவேண்டும். காட்சியில் குற்றமில்லை. நீ மிக அழகுபட நடித்துமுள்ளாய். திகைக்க வேண்டாம். கருப்பையா, முட்டாளுக்கு முத்து கிடைத்ததைப்போல உனக்கு இந்த மங்கை கிடைத்தாள். நீ அதிர்ஷ்டசாலிதான். ஆனால் நான் உன்னைவிட அதிர்ஷ்டசாலி. உறுமாதே, ஊரார் அறியும்படி இப்படத்தை வெளியிட்டால் உன் கதி என்னாகும்? இந்த உல்லாசியின் நிலைமை என்னாகும்?"

"கப்சிப்!! இங்கே நிற்கவேண்டாம். அதோ யாரோ வரும் காலடிச் சப்தம் கேட்கிறது. இன்று இரவு 12 மணிக்கு சாரதா, நீ என் அறைக்கு வரவேண்டும்.........வேண்டாம் வேண்டாம். நீ வரவேண்டாம் உன்னை நான் தனியாகச் சந்திக்கமாட்டேன்—கருப்பையா, நீவா' சில நிபந்தனைகள் கூறுகிறேன். அதன்படி நீங்கள் நடக்கவேண்டும்" என்று கண்டிப்பாகக் கூறிவிட்டு சிங்காரவேலன் போய்விட்டான்.

சாரதாவும் கருப்பையாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.

"விதியே தலைவிதியே" என்று சாரதா விம்மினாள்.

"சாரதா! யரோ வருகிறார்கள். கவலைப்படாதே. நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறினான் கருப்பையா.

"என்னடி மெத்த தளுக்குக் காட்டுகிறாய்" என்று இனிய குரலில் இசைத்துக்கொண்டே கோகிலம் அங்கு வந்து சேர்ந்தாள்.

இரவு கருப்பையா, சிங்காரவேலன் அறைக்குச் சென்றான். மடியில் கூரான ஈட்டியுடன், சாரதாவின் மானத்தையும், தன் மரியாதையையும் வாழ்வையும் அழிக்கக்கூடிய அந்த வேலனின் உயிரைப் போக்கி விடுவது என்ற முடிவுடன்.

ஒரு கொலை செய்வதற்கு வேண்டிய அளவு உறுதி அவன் முகஜாடையில் காணப்பட்டது.

வேலன் 'வா கருப்பையா, சொன்னபடி வந்து விட்டாயே" எனத் துளியும் தடுமாற்றமின்றி பேசினான்.

கருப்பையாவின் கரம், மடியில் சொருகி வைக்கப்டிருந்த ஈட்டியின் மீது சென்றது.

வேலனின் கூரிய பார்வை ஏதோ ஆபத்து இருக்கிறது என்பதை உணர்த்திற்று. ஆனால் அவன் துளியும் அசையவில்லை. படுக்கையின் மீது உட்கார்ந்தபடியே ஒரு முடிவுக்கு வந்தான்.

சாமர்த்தியமாக கருப்பையாவை ஏமாற்ற வேண்டும்.

"ஓ! கோகிலா,வாயேன் உள்ளே" என்று கூறினான். கோகிலம் வருவது போலப்பாசாங்கு செய்து கொண்டே.

முரட்டுக் கருப்பையா, சரலெனத் திரும்பினான் கதவுப்பக்கம். வேலன் புலி போல அவன் மீது பாய்ந்து மடியில் இருந்த ஈட்டியைப் பிடுங்கிக் கொண்டான்.

சட்டை கிழிந்து விட்டது கருப்பையாவுக்கு, தான் முட்டாள் தனமாக நடந்து கொண்டதை எண்ணினான்.

வேலன் இளித்தான். "கருப்பையா, நான் சொல்வதைக் கேள். என்னிடம் உன் முரட்டுத்தனம் பலிக்காது. மூடு கதவை. இப்படி உட்கார்" என்று கட்டளையிட்டான்.

பெட்டியிலிட்ட பாம்பென அடங்கிய கருப்பையா, மிகப்பரிதாபத்துடன். "ஐயா, என்னைப்பற்றிக் கூட கவலையில்லை. அந்தப் பெண்ணின் மானம்–அதைக் காப்பாற்றும். அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம்" என்று கெஞ்சினான்.

"கருப்பையா, நான் அவசரப்படுகிற வழக்கமே கிடையாது தோட்டத்தில் உங்கள் சல்லாபத்தைக் காண எவ்வளவு நேரம் பொறுமையாக இருந்தேன் தெரியுமா? இன்று தான் என்ன, ஈட்டி முனைக்கு எதிரில் கூட நான் அவசரப் படவில்லை" என்றான் வேலன்.

"அந்தப் போட்டோ அதனைக் கொடுத்துவிடு. உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு உன் பிள்ளைகுட்டிகளுக்குப் புண்ணியம், ஒரு குடும்பத்தைக் கெடுக்காதே" என்று கருப்பையா வேண்டினான். "உளராதே கருப்பையா. குடும்பத்தை நானா கெடுத்தேன்" என்று கோபித்தான் வேலன்.

கருப்பையா வேலன் காலில் விழுந்தான். வேலன், "சரி சரி சர்வ மங்களம் உண்டாகட்டும். எழுந்திரு. நான் சொல்வதைக் கேள். முடியாது என்று சொல்லக் கூடாது. நாளைக் காலைக்குள் எனக்கு ஆயிரம் ரூபாய் வேண்டும். கொடுத்தால் உடனே நாங்கள் போய் விடுகிறோம். இல்லையேல் நீயும் சாரதாவும் போக வேண்டிய இடத்திற்குப்போகத்தான் வேண்டும்" என்றான் வேலன்.

"ஆயிரம் ரூபாயா என்னிடம் இருப்பதே கொஞ்சந் தானே" என்றான் கருப்பையா.

"கிடைத்தற்கரிய செல்வத்தைப் பெற்ற நீயா, ஒருஆயிர ரூபாய்க்கு அஞ்சுவது” என்றான் வேலன்.

'சரி' என ஒப்புக்கொண்டான் கருப்பையா, ஆனால் ஆயிர ரூபாய் தந்ததும் போட்டோவை (நெகட்டிவுடன்) தன்னிடம் தந்துவிட வேண்டுமெனப் பேரம் பேசினான்.

"அது முடியாது. ஆயிரம் ரூபாய், நான் வெளியே போவதற்கு படத்தை நான் வெளியிடாதிருப்பதற்கு, மாதாமாதம் 200 ரூபாய்.தவறாமல் என் சென்னை விலாசத்துக்கு அனுப்பிக் கொண்டு வரவேண்டும். நான் கண்டிப்பான பேர்வழி. ஒரு முறை பணம் வருவது தவறினாலும் படம் வெளிவரும். படம் வெளிவந்தால் என்ன ஆகும் என்பது உனக்கே தெரியும். சாரதா கர்ப்பவதியல்லவா! அவள் பிள்ளை தெருவில் அலைய வேண்டித்தான் வரும்" என்றான் வேலன் "கண்டிஷன்கள்" போட்டான்.

"ஐயா உனக்குக் கருணை இல்லையா" என்று கெஞ்சினான் கருப்பையா.

"கருணை இருந்தது சில வருஷங்களுக்கு முன்பு இப்போது கருணை இல்லை. இப்போது உலகமும் உல்லாசமும் எதிரே இருக்கிறது" என்றான் அந்த உல்லாசக்கள்ளன்.

வேறுவழியின்றி கருப்பையா ஒப்புக்கொண்டான்.

மறுதினம் ஆயிரம் ரூபாய் (பாங்கியில் அவன் போட்டு வைத்திருந்த பணம் அதுதான்) கொடுத்தான்.

உல்லாசக் கள்ளர்கள், வீட்டில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஊருக்குப் பிரயாணமாகினர்.

வேலனோ, கோகிலமோ, பேச்சிலோ, நடவடிக்கையிலோ, சாரதா கருப்பையா மர்மக் காதலைப்பற்றிக் கண்டுகொண்டதாக, சாரதாவின் புருஷனுக்குக் காட்டிக்கொள்ளவேயில்லை.

"கண்ணே,சாரதா, போய் வரட்டுமா? ஆண் குழந்தை பிறந்தால், பிரபாகரன் என்று பெயரிடு. பெண் பிறந்தால் பிருந்தா, கவனமிருக்குமா" என்று கொஞ்சினாள் கோகிலம். சாரதாவிடம்.

சாரதாவின் புருஷன், விருந்தாளிகளை மிக மரியாதையுடன் அனுப்பிவைத்தார். அபின் உலகில் அலையும் அவருக்கு மர்ம சம்பவங்கள் என்ன தெரியும் பாபம்!

கருப்பையாவுக்கும், சாரதாவுக்கும் மாதாமாதம் 200 ரூபாய் சேகரிப்பது தவிர வேறு வேலை கிடையாது.

கருப்பையா ஓய்ந்த வேளையில் எல்லாம், எந்தக்கணக்கை எப்படி மாற்றுவது, எப்படி சூதுசெய்வது என்ற யோசனையிலேயே இருந்தான்.

வீட்டில் தன் புருஷனின் பரம்பரைச் சொத்துக்களைக் கொஞ்சங்கொஞ்சமாக கணவனுக்குத் தெரியாமல் திருடித்திருடி கருப்பையாவிடம் தந்துவந்தாள் சாரதா.

செக்கு இழுத்து இழுத்து மாடுகெட, எண்ணெயைத்தடவித்தடவிப் பிறர் மினுக்குவதைப் போல சாரதாவும் கருப்பையாவும் பாடுபட்டு, திருடி, சூது சூழ்ச்சி செய்து பணம் சேர்த்துச் சேர்த்து அனுப்ப அதனை வைத்துக்கொண்டு ஆனந்தமாக விஸ்கியும், பிராந்தியும் வாங்கிக்குடித்துச் சிரித்தான் சிங்காரவேலன்.

"இப்படியும் எனக்குத் தொல்லை வருமா, நீ செய்த வேலைதானே. பாவி, உன்னால்தானே நான் இப்பாடுபடுகிறேன், திருடுகிறேன், அவர் என்றைக்கேனும் கண்டுவிட்டால், எங்கே பச்சைக்கல் பதக்கம், எங்கே கழுத்துக்கண்டி என்று கேட்க ஆரம்பித்தால், நான் என்ன செய்வேன்" என்று சாரதா, சிந்தை நொந்து கருப்பையாவைக் கேட்பாள். அவன் பலமுறை சாதகமாகவே பதில் கூறினான். சஞ்சலமும் சலிப்பும் அவனுக்கு ஆத்திரத்தை மூட்டிவிடுமல்லவா? "சரி! என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவன் படத்தைக் காட்டிவிடட்டும். நான் ஒன்றும் சந்நியாசி அல்ல! உனக்குத்தான் ஆபத்து! ஓட வேண்டியதுதான் நீ வீட்டைவிட்டு' என்று மிரட்டினான்.

"படுபாவி! என்னைக் கெடுத்ததுமின்றி, மிரட்டியுமா பார்க்கிறாய். நீ நாசமாய்ப் போக, உன் குடிமுழுக" என்று சாரதா தூற்றினாள்.

ஆனால், மாதம் முடிகிறது என்றதும் இருவரும், தகராறுகளை விட்டுவிட்டு, பணத்தைச் சேர்த்து அனுப்புவதிலேயே அக்கரையாக இருப்பார்கள். ஏன்! வயிற்றிலுள்ள குழந்தை வாழ்க்கையில் இழிச்சொல்லோடு இருக்கக்கூடாதே! அதற்குதான்!

"பாவி, படத்தைக்காட்டி, என் முரட்டுக் கணவன் என்னைத் துரத்திவிட்டால் என் குழந்தையின் கதி என்னவாகும்? கண்டவர் ஏசுவார்களே, அதோ அந்தப்பிள்ளை, வீட்டைவிட்டு ஓடிவிட்டாளே, சாரதா, அவள் பிள்ளை என்றுதானே தூற்றுவார்கள். நான் செய்த குற்றம் என் வாழ்க்கையை கெடுக்குமே" என்று எண்ணும்போது சாரதாவின் நெஞ்சு "பகீர்" என்றாகும். மாதங்கள் ஆறு பறந்தன. மாதம் தவறாது பணம் போய் சேர்ந்தது. ஒரு ஆண் குழந்தையும் சாரதாவுக்குப் பிறந்தது. கருப்பையாவின் கணக்குப் புரட்டுகளும் சாரதாவின் திருட்டுகளும் அதிகரித்தன. இவர்களின் நல்ல காலத்திற்கு அடையாளமாக, சாரதா புருஷனின் அபின் தின்னும் வழக்கம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

இதே நேரத்தில் கருணாநந்த யோகீசுவரருக்கும். பரந்தாமனுக்கும் சச்சரவு வளர்ந்தது. மன சோகத்தை மாற்றகாவியணிந்த யோகியின் சேவையை நாடிய பரந்தாமன் காவிபூண்ட கருணாநந்தன், காசாசை பிடித்த கயவன் என்பதை உணர்ந்தான். அவனுக்கு தன் நிலைமையில் வெறுப்பு ஏற்பட்டது.

யோகியைத் தண்டிக்கத் தொடங்கினான். ஊரை ஏய்க்க, உருத்திராட்சமா? கண்டவரை மயக்க காவியா? விபூதி பூசிக்கொண்டு விபரீதச் செயல் புரிவதா? என்று, கேட்க ஆரம்பித்தான். யோகி ஒரு திருட்டுப் போகி என்பது பரந்தாமனுக்குத் தெரிந்ததும் இப்படிப்பட்டவனிடம் சிக்கி, வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டோமே, வீணுக்கு உழைத்தோமே, என்று வருந்தினான்.

"நான் என் நிலைமையைப்பற்றி மட்டுமே கவனித்தேன். என் சுகம், என் மன ஆறுதல் என் அமைதியைப் பற்றி அக்கரை கொண்டேனே யன்றி, என்னிடம் காதல் கொண்டு இக்கட்டுகளில் சிக்கிக் கலங்கிய காரிகையின் கஷ்டத்தைப் போக்க நான் என்ன செய்தேன், அவள் எக்கதியானாள்? அவள் பக்கத்தில் அல்லவா நின்று பாதுகாத்திருக்கவேண்டும் அதுதானே வீரனுக்கு அழகு. நான் ஒரு கோழை, எனவேதான். கோணல் வழி புகுந்தேன்" என்று மனங்கசிந்தான்.

நாளாக நாளாக, பரந்தாமனுக்கு கருணானந்த யோகியினிடம் வெறுப்பும் கோபமும் வளர்ந்தது. உலகின் முன் அவனை இழுத்து நிறுத்திவிட வேண்டுமென்று எண்ணினான்.

இந்நிலையில் சென்னை வந்து சேர்ந்தார் கருணாநந்தர். தமக்கென புதிதாகத் தயாரிக்கப்பட்டிருந்த மடத்தில் தங்கினார்.

சென்னை நாகரீகத்திலும் படிப்பிலும் மிக முன்னேறிய நகரமாயிற்றே. இங்கு யோகியின் தந்திரம் பலிக்காது என்று பரந்தாமன் எண்ணினான். ஆனால் சென்னையைப் போல கருணாநந்தருக்கு ஆதரவு தந்த ஊரே இல்லையெனலாம், அவ்வளவு ஆதரவு தந்துவிட்டது சென்னை.

சீமான்களெல்லாம் சீடர்களாயினர். மேநாட்டுப் படிப்பில் தேறியவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், பத்திரிக்கைக்காரர்கள் யாவரும் சீடர்களாயினர்.

கருணாநந்தரின் தோழரொருவர் ஒரு பிரபல பத்திரிகையில் இருந்தார். அவர் யோகியின் குணாதிசயங்களைப்பற்றி கட்டுரைகள் வெளியிட்டார். அவருடைய 'தத்துவமே' உலகில் இனி ஓங்கி வளருமென்றார். அவர் சர்வமத சமாஜத்தை உண்டாக்குவார் எனறு கூறினார்கள் பலர்.

அவருடைய கொள்கைக்கும் அரவிந்தர் கொள்கைக்கும் அதிகம் வித்தியாசமில்லை என்று வேறொருவர் கூறினார்.

மடத்தின் வாயிலில் மணி தவறாது மோட்டார்கள் வரும். விதவிதமான "சீமான்கள்" அவருடைய "பக்தி" மார்க்கத்தைக் கேட்டு ஆனந்திப்பர்.

பரந்தாமன் திடுக்கிட்டுப் போனான். சென்னையில் நாகரீகம் அதன் கட்டங்களிலும், காட்சிகளிலும். மக்கள் உணவிலும் உல்லாச வாழ்விலும் காணப்பட்டதேயன்றி. உள்ளத்திலே மிகமிக குருட்டுக் கொள்கைகளே இருப்பதைக்கண்டான். உலகை ஏமாற்றும் ஒரு வஞ்சகனிடம் "வரம்" கேட்க, பலர் வருவது கண்டு, சிந்தை மிக வெந்தான்

ஆஹா! பகட்டு வேஷத்துக்குப் பாழும் உலகம் இப்படிப் பலியாகிச் சீரழிகிறதே என்று வாடினான். இனி இந்த வஞ்சக நாடகத்தில் தான் பங்கு கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தான். நாள் முழுதும் அத்தீர்மானம் வளர்ந்து வலுப்பட்டது. ஒரு நாள் நடுநிசியில் பரந்தாமனின் உள்ளம் பதைபதைத்தது.

நேரே யோகியின் அறைக்குச் சென்று, எச்சரித்துவிட்டு மடத்தை விட்டு விலகி விடுவது என்று முடிவு செய்து கொண்டான்.

கோபத்துடன் எழுந்தான். கொத்துச் சாவியை எடுத்தான். பெட்டியைத் திறந்தான் இரண்டு வெள்ளை வேட்டிகளை எடுத்துக்கொண்டான். காவியைக் களைந்து வீசினான். வெள்ளை வேட்டிகளைக் கட்டிக்கொண்டான். உருத்திராட்ச மாலைகளை எடுத்தெறிந்தான்.

நேரே யோகி படுத்துறங்கும் அறைக்குச் சென்றான். கதவு சாத்தப்பட்டிருந்தது. ஆனால் கதவிடுக்கில் வெளிச்சம் தெரிந்தது.

அடிமேலடி எடுத்து வைத்து கதவருகே சென்று உள்ளே நடப்பதை நோக்கினான்.

யோகி,மங்கை யொருவளுடன் சல்லாபித்துக்கொண்டிருப்பதைக் கண்டான்.

"கோகிலா! நீ என்னை உதவாக்கரை என்று ஒதுக்கித் தள்ளினாயே, பார் இப்போது!" என்று யோகி கூறிட, இவ்வளவு சமர்த்து உமக்கு இருப்பதைக் காணவே நான் உம்மை முன்னம் வெறுத்தேன்"—கோகிலம் என்று அழைக்கப்பட்ட பெண் கூறினாள்.

பரந்தாமனுக்கு ஆத்திரம் பொங்கிற்று. கதவைக்காலால் உதைத்து உள்ளே சென்று யோகியின் கன்னத்தில் அறையலாமா என்று தோன்றிற்று. பொறு மனமே பொறு என்று நின்றான்.

"அழகாபுரி உமக்குத்தெரியுமோ?" என்றாள் கோகிலம்; "அங்கே என்ன அதிசயம்" என்றார் யோகி.

"அங்கே, சாரதா என்றொரு பெண்...." என்று கோகிலம் கூறலானாள்.

தன் காதலி சாரதாவின் பெயர் உச்சரிக்கப்பட்டவுடன் பரந்தாமன் மிக ஜாக்கிரதையாக உள்ளே என்ன பேசுகிறார்கள் என்பதை உற்றுக் கேட்கத் தொடங்கினான். யோகியின் மடிமீது சாய்ந்தபடியே, அவள் சாரதாவின் ரசமுள்ள கதையைக் கூறலானாள்.

கோகிலம், சாரதாவின் சேதி பூராவையும், ஒன்று விடாது கூறினாள். ஒரு போட்டோ மூலம் தன் அண்ணன், அவளை மிரட்டுவதைக் கூறிய போது, "இது ஒரு பிரமாதமா? இருப்பதைக் காட்டி உன் அண்ணன் மிரட்டுகிறான். யாரவள், சாரதாவா, அவள் மிரளுகிறாள். இந்த கருணாநந்தன் செய்வது உனக்கென்ன தெரியுமடி, கட்டழகி" என்று கொஞ்சினான். யோகி வேடம் பூண்ட போகி.

"உன் சமர்த்தை உரைக்க ஒரு நாக்கும் போதாதே" என்று இசைந்தாள் கோகிலம் கிண்டலாக.

"கேள் கோகிலா, இருப்பது கண்டு மிரள்வது இயல்பு. இல்லாதது கண்டு மிரள்வதை என்னவென்பேன் பேதை மக்களிடம்.

பிடிப்பான், அடிப்பான், கடிப்பான், உதைப்பான்
பேசினாயா நமச்சிவாயா என்பான்
பூசினையோ திரு நீறு எனக் கேட்பான்.

என்று கேட்டு, பற்களை நறநறவெனக் கடித்து, மீசைகள் படபடவெனத் துடிக்க, அந்த நரகலோகத் தூதர்கள், சிவபக்தி அற்றவர்களின் சிரத்தில் சூட்டி, கரத்தில் வெட்டி, எரிகிற கொப்பரையில் எறிந்து, சுடுகின்ற மணலில் உருட்டி, செந்தேள், கருந்தேள் விட்டுக் கொட்டவைத்து சித்திரவதை செய்வார். எனவே மெய்யன்பர்களே.

"மந்திரமாவது நீறு வானவர் மேலுது நீறு" என்ற மணி மொழிப்படி, விபூதி பூசி ருத்திராட்சமணிந்து வில்வாபிஷேகனை, வேண்டிட வேண்டும்" என நான் நரகலோகக் காட்சி பற்றி பிரசங்கிக்கும் போது, அடடா, இந்த மக்கள் தான் எவ்வளவு நம்புகிறார்கள். எத்தனை பயம், இதைவிட சாரதாவின் பயத்தை நான் கண்டு ஆச்சரியப்படேன்"– என்றான் யோகி.

“அதுவுஞ் சரிதான்" என்றாள் கோகிலம்.

"ஆகவே நீ எனை அணைந்திட வாடி, அணைந்திட வாடி, ஆனந்தத் தோடி பாடி"

என்று யோகி ஜாவாளி பாடினான். சரசமாடினான். ஜடையைப் பிடித்திழுத்தான். அவள் இவன் ருத்திராட்ச மாலையைப் பிடித்திழுத்தாள். பொட்டைக் கலைத்தான் இவன். அவள் நீரைத் துடைத்தழித்தாள். கிள்ளினான்! கின்ளினாள். நெருக்கினான்! நில் என்றாள், சிரித்தான்! சீறுவதுபோல் நடித்தாள், எழுந்தான்! அவள் படுத்தாள்!

எட்டி உதைத்தான் கதவைப் பரந்தாமன், ஆத்திரம் தாளமாட்டாது!! மட்டி! மடையா! எனத் திட்டினான். மாது கோகிலம் மருண்டாள். "மானத்தைப்பறித்திடுவேன், உன் சூது மார்க்கத்தை அழித்திடுவேன். ஊரை இதோ எழுப்பிடுவேன், உன் சேதி உரைத்திடுவேன்" என்று கோபத்துடன் கூறினான் பரந்தாமன்.

"பரந்தாமா! பொறு! பொறு! பதறாதே! ஏதோ நடந்தது நடந்துவிட்டது. இவள் என் சொந்த மனைவி. கோகிலம் கூறடி உள்ளதை, நான் குடும்பம் நடத்த முடியாது திகைத்தேன். பாடுபட முயற்சித்தேன். உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இவ்வேடம் பூண்டேன். என் மானத்தைக் காப்பாற்று, உன் காலடி விழுவேன்" என்று கருணாகரன் அழுதான்.

மடத்துக்கென வரும் காணிக்கையை எண்ணினான். ஐயோ, அது வராவண்ணம் இப்பாவிப் பரந்தாமன் செய்திடுவானே, என் செய்வது என்று பயந்தான்.

"மோசக்கார வேடதாரியே கேள்! இனி உன் முடிவுகாலம் கிட்டிவிட்டது. நீ பிழைக்க வேண்டுமானால், அந்த சாரதா போட்டோவை என்னிடம் தந்துவிட ஏற்பாடு செய். இல்லையேல் உன்னை, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மீது ஏற்றி ஊர்வலம் வரும்படி செய்வேன் உஷார்" என்றான் பரந்தாமன்.

"சாரதாவின் போட்டோவிலே என்ன ரசம் கண்டீர்" என சாகசமாகக் கேட்டாள் கோகிலம்.

"அதிரசம்" என்று அலட்சியமாகப் பதிலளித்தான் பரந்தாமன்.

யோகி. மங்கையின் மலரடி தொழுதான். அவள் முதலில் மறுத்தாள். பிறகு திகைத்தாள். கடைசியில் அண்ணனிடமிருந்து அப்படத்தைத் திருடிக்கொண்டு வருவதாகக் கூறினாள்.

"புறப்படு" என்றான் பரந்தாமன்.

"போவோம்" என்றாள் கோகிலம்.

நள்ளிரவில், கோகிலமும் பரந்தாமனும் மெள்ள, சிங்கார வேலன் ஜாகை சென்றனர்.

கோகிலம், படத்தை அதன் "நெகட்டிவ்” உள்பட, திருட்டுத்தனமாக எடுத்து, பரந்தாமனிடம் கொடுத்துவிட்டு, "நீ மிரட்டினதற்காக நான் இதனைத் தருவதாக எண்ணாதே. முன்னாளில் நீ சாரதாவிடம் கொண்ட காதல் இவ்வளவு காலத்துக்குப் பிறகும் அணையாதிருப்பது கண்டு, மகிழ்ந்தே இதனைத் தருகிறேன். நான் அறிவேன் உன் சேதியாவும், அன்றொரு நாள் தோட்டத்தில் அவள் எல்லாம் என்னிடம் கூறினாள். ஆனால் நான் நீ காதல் இழந்ததுடன், வேறு வாழ்வில் புகுந்திருப்பாய் என்றே எண்ணினேன். இன்றுதான் கண்டேன் அன்று அவள் தீட்டிய சித்திரம், இன்னமும் இருப்பதை" என்று மிகுந்த வாஞ்சையுடன் கூறினாள்.

பரந்தாமனின் கண்களில் பல துளி நீர் சரேலென வந்தது.

"ஐயய்யோ! புளியமரத்தைப் பாருடா பொன்னா" என்று அலறினான் பொம்மன்.

"பிணம் தொங்குதேடா பிடிடா ஒட்டம், தலையாரி வீட்டுக்கு" என்று கூறினான் பொன்னன். கரியா, வரதா, காத்தா, முத்து, என கூக்குரல் கிளம்பிற்று. அமிர்தம், கமலம், ஆச்சி அகிலாண்டம் என்ற படைகள் வந்தன. மரத்திலே தொங்கிய பிணம், காற்றிலே ஊசலாடிற்று, அதைக்கண்ட வர்களின் குடல் பயத்தால் நடுங்கிற்று. கூவாதே! கிட்டே போகாதே! என்றனர் சிலர்.

"அடி, ஆறுமாதம் கர்ப்பக்காரி அகிலாண்டம் இதை பார்க்கக்கூடாது, என்று புத்தி புகட்டினாள் ஒரு மாது.

"ஐயய்யோ இது என் அக்கா புருஷனாச்சே" என்று அலறினாள் வேறொரு வீரி.

"ஆமாம்! ஆமாம்! கருப்பையாதாண்டோ! அடடா? இது என்னடா அநியாயம்" என்றான் பொம்மன்.

தலையாரி வந்தான். ஊர் கூடிற்று. கருப்பையாவின் மனைவியும் மக்களும், மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கூடிவிட்டனர்.

கருப்பையா புளியமரத்துக் கிளையில் பிணமாகத் தொங்குவது கேட்ட சாரதாவின் முகம் வெளுத்துவிட்டது.

அவள் புருஷன் அழுதே விட்டான்.

ஊர் முழுவதும் ஒரே அமர்க்களம்தான்.

ஏன் கருப்பையா தற்கொலை செய்து கொண்டான் என்பதை ஊர் அறியாது.

வருட முடிவில், வீட்டுக் கணக்குப் பார்ப்பார். அதிலே ஆயிரத்துக்கு மேலே துண்டு விழுந்துவிட்டது. தன் மோசம் வெளிக்குவரும். தன்பாடு பிறகு நாசந்தான். இந்நிலையில் மாதக் கப்பம் கட்டத் தவறிவிட்டது. மருட்டி உருட்டிக் கடிதம் வந்தது. சாரதா கைக்கு எப்பொருளும் சிக்கவில்லை இருவருக்கும் சண்டையோ நிற்கவில்லை. சாரதா, சற்றுக் கடுமையாகப் பேசிவிட்டாள், கருப்பையாவின் சித்தம் கலங்கிவிட்டது. "ஒரு முழக்கயறுக்குப் பஞ்சமா, ஊரில் ஒரு மரமும் எனக்கில்லையா" என சாரதாவிடம் வெறுத்துக் கூறினான். அப்படியே செய்தும்விட்டான். பிணமானான்! இரண்டொரு மாதத்தில் புளியமரத்துப் பிசாசுமாவான்!

சாரதாவின் நிலைமைதான் என்ன? சிங்காரவேலனின் மிரட்டல் கடிதம் அவளைச் சிதைக்கத் தொடங்கிற்று.

ஊர்க் கோடியில் ஒரு மாந்தோப்பு. அதில் உள்ள கிணறு ஆழமுள்ளது. அதுதான் தனக்குத் துணை என முடிவு செய்தாள் சாரதா, அந்த முடிவு செய்தது முதற்கொண்டு அவள் முகத்தில் வேதனை, தாண்டவமாடிற்று. விதி என்னை இப்படியும் வாட்டுமோ என்றெண்ணுவாள். வேதனைக்கோ நான் பெண்ணாய்ப் பிறந்தேனோ என்பாள். கணவன் தன் மனைவியின் கலக்கத்தை அறியான். அவள் இளைப்பது கண்டு, மருந்து கொடுத்தான்.

பரந்தாமன் போட்டோவை எடுத்துக்கொண்டு அழகா புரிக்குப் புறப்பட்டான். இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்தான். இடியும் மழையும் இணைபிரியாது அழகா புரியில் அவதி தந்தது. குளம் குட்டை நிரம்பி வழிந்து ஓடிற்று. பெருங்காற்று அடித்தது. சாலை சோலையை அழித்தது. மரங்கள் வேரற்று வீழ்ந்தன. மண் சுவர்கள் இடிந்தன, மாடு கன்றுகள் மடிந்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று.ஊர் தத்தளித்தது, வந்துள்ள வெள்ளம். தன்னைக் கொள்ளைக்கொண்டு போக வேண்டும் என சாரதா மாரியை வேண்டினாள்.

இருட்டும் வரை ஊர்புறத்தே ஒளிந்திருந்து பிறகு மெள்ள நடந்து சாரதாவின் தாய் வீட்டை அடைந்தான் பரந்தாமன்.

நரைத்து நடை தளர்ந்துபோன அம்மாது விதவைக் கோலத்துடன் இருந்தாள்.

"கருத்துமிரட்டும் கடு மழையில் எங்கிருந்து தம்பி நீ வந்தாய்" என்றாள். "வந்தேன் ஒரு முக்கியமான வேலைக்காக. நான் சாரதாவைப் பார்க்க வேண்டும்" என்றான் பரந்தாமன்.

"சாரதாவையா? நீ பழைய சாரதாவென எண்ணாதேயப்பா. அவள் என் மகள்தான். ஆனாலும் பெரிய பாவியானாள். அவள் முகத்தில் நான் விழிப்பதே இல்லை. ஊர் சிரித்துவிட்டது" என்று சலிப்புடன் தாய் கூறினாள்.

"சாரதா என்ன செய்தாள்?" என்றான் பரந்தாமன்.

"என்ன செய்தாளா? நல்ல கேள்விதான்!" என்று வெறுத்துக் கூறினாள் தாய்.

"இதோ இதைப்பார். இதனைத்தானே நீ கூறுகிறாய்" என்று கூறிக்கொண்டே, போட்டோவைக் காட்டினான் தாயிடம்.

"ஆ! படமும் எடுத்தார்களா" என்று திகைத்தாள் தாய்.

"பயப்படாதே அம்மா, இதனைக் காட்டத்தான், நான் சாரதாவைப் பார்க்கவேண்டும்" என்றான் பரந்தாமன். "நீயாவது, இந்தப் படத்தையாவது அவளிடம் காட்டுவதாவது! வெட்கக்கேடு" என்றாள் தாய்.

"அம்மா! நீ விஷயமேது மறியாய். இந்தப் படத்தை ஒரு போக்கிரி வைத்துக்கொண்டு சாரதாவை மிரட்டிக்கொண்டிருந்தான். பாவம் நம் சாரதா, எவ்வளவு பயந்தாளோ, அழுதாளோ நமக்கென்ன தெரியும்? என்னிடம் இது தற்செயலாகச் சிக்கிற்று. இதனை சாரதாவிடமே கொடுத்துவிட்டால் அவள் மனம் நிம்மதியாகும்.' என்றான் பரந்தாமன்.

"தம்பீ, பரந்தாமா, உனக்குத்தான் அவள் மீது எவ்வளவு ஆசை. உம்! உன்னைக் கட்டிக்கொண்டிருந்தால் அவளுக்குப் பாடும் இல்லை. பழிப்பும் இல்லை" என்றாள் தாய். "ஆமாம்! எனக்கு சாரதா கிட்டாது போனால்தான் வாழ்வுமில்லை, வகையுமில்லை" என்று அழுதான் பரந்தாமன்.

நாளைக் காலையில் நான் சேதி விடுத்து, அவளை இங்கு வரவழைக்கிறேன். நீ உடையைக் களைந்துவிட்டு வேறு துண்டு உடுத்திக்கொண்டு படுத்துறங்கு" என்று வேதவல்லியம்மை கூறினாள்.

'ஆகட்டும்' என்றான். ஆனால் அழுத கண்களுடனும் நனைந்த ஆடையுடனும் படுத்துப் புரண்டான். அலைச்சலாலும், அடைமழையில் நனைந்ததாலும், மனமிக நொந்ததாலும், பரந்தாமனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. கண் திறக்கவும் முடியாதபடி காய்ச்சல். ஊரில் மழையும் நிற்கவில்லை. உடலில் ஜுரமும் நிற்கவில்லை, ஆறுகள் பாலங்களை உடைத்துக்கொண்டு ஓடின! வயல்கள் குளமாயின. செயல் மறந்து படுத்திருந்தான் பரந்தாமன்.

ஜுரம் முற்றிற்று. உடலும் திடீரென சிவந்தது. வேதவல்லி தனக்குத் தெரிந்த சில்லரை வைத்தியமெல்லாம் செய்து பார்த்தாள். ஒன்றுக்கும் ஜூரம் கேட்கவில்லை.

பரந்தாமன் அலற ஆரம்பித்தான். வேதம் அழுது கொண்டிருந்தாள். சாரதாவுக்குச் சொல்லி அனுப்பிப் பயனில்லை. “எப்படி நான் அவர் முகத்தைப் பார்ப்பேன்" என்று இடிந்து போனாள் சாரதா. பரந்தாமனுக்கு ஜுரம் குறைந்ததுபோல் காணப்பட்டது. ஆனால் அம்மை வார்த்துவிட்டது. சிவந்த அவன் மேனியில் சிவப்புச் சித்திரங்கள் பல நூறு ஆயிரம் திடீர் திடீரெனத் தோன்றின. மயக்கமும் மருட்சியும் அதிகரித்தன. குளறலும் குடைச்சலும் அதிகமாயிற்று. புரண்டு புரண்டு படுத்ததால் அம்மை குழைந்துவிட்டது. பார்க்கவே பயங்கரமாக இருந்தது பரந்தாமனை.

வேதவல்லி வேப்பிலையும் கையுமாக அவன் பக்கத்தில் வீற்றிருந்தாள்.

அம்மையின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க, பரந்தாம்னின் நிலை மோசமாகிக் கொண்டே வந்தது. வேதவல்லி வேப்பிலை கொண்டு வீசி, உபசாரம் செய்தாள். மாரியோ கேட்கவில்லை. பரந்தாமனின் மேனியில் துளி இடங்கூடப்பாக்கியில்லை. எங்கும் சிவப்புப் பொட்டுகள் பூரித்துக்கொண்டிருந்தன. பரந்தாமனின் உடல் எரிச்சல் சொல்லுந்தரமன்று. அவன் அம்மைத் தழும்புகளைத் தேய்த்துவிடுவான். தழும்புகள் குழைந்துவிடும். வேதவல்லி, அபசாரம், அபசாரம், மாரி கோபிக்காதே, மகன் மீது சீறாதே, மாவிளக்கு ஏற்றுகிறேன் என்று வேண்டுவாள். மாரிக்கு என்ன கவலை?

இரவு பத்து மணிக்கு ஒரு உருண்டை அபினெடுத்தாள். சாரதா பாலில் கலக்கினாள். நேரே படுக்கையறை சென்றாள். பாதி மயக்கத்தில் படுத்திருந்த அவள் கணவன், "சாரதா எனக்கேண்டி கண்ணே இவ்வளவு பால்! நீ கொஞ்சம் சாப்பிட்டால்தான்" என்று கூறினான்–கொஞ்சினான். "வேணாமுங்கோ, சொல்றதைக் கேளுங்கோ, நான் இப்ப தான் பெரிய டம்ளர் நிறையப் பால் சாப்பிட்டேன்" என்று சாக்குக் கூறினாள் சாரதா.

அந்த நேரத்திலே அவனுக்கு ஏதோ குஷி! விளையாட வேண்டுமென்று தோன்றி விட்டது.

"குடித்தால் தான் நான் குடிப்பேன்" என்று கூறிவிட்டான்.

"பால் ஆறிப் போய் விடுகிறதே"

"ஆறட்டுமே, யாருக்கென்ன?"

"விளையாட இது தானா சமயம்"

“சரசத்துக்கு சமயம் வேண்டுமோ"

"சின்னப் பிள்ளை போல விளையாட வேண்டாம்! எனக்கு தூக்கம் வருகிறது. நீங்கள் பால் குடித்துவிட்டால் படுத்துத் தூங்கலாம்."

"தூங்க வேண்டுமா! ஏன் நான் ஆராரோ ஆரரிரோ பாடட்டுமா? தொட்டிலிலே படுக்க வைக்கட்டுமா?" என்று கூறிக்கொண்டே, சாரதாவைத் தூக்க ஆரம்பித்துவிட்டான் கணவன். சாரதாவுக்குத் தன்னையும் அறியாமலே ஒரு சிரிப்பு வந்துவிட்டது.

"ஐய்யய்யோ! இதேது இவ்வளவு சரசம். என்ன சங்கதி! பால்யம் திரும்பிவிட்டதோ" என்று கேட்டுக்கொண்டே "இதோ பாருங்கள் இப்படி, என் மீது உமக்கு ஆசைதானே" என்றாள்.

தலையை வேகமாக கிழவன் அசைத்தான்.

"சத்தியமாக, ஆசை தானே?" என்று கேட்டாள் சாரதா.

"சாமுண்டி சாட்சியாக நிஜம்" என்றான் கிழவன்.

"அப்படியானால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். பாலைக் குடித்துவிட்டு பிறகு பேசுங்கள்" என்றாள் சாரதா.

"ஹுஹும்.நான் மாட்டேன். நீ கொஞ்சமாவது குடிக்கவேண்டும்" என்றான். கிழவன் சொல்லிக்கொண்டே பால் செம்பை, சாரதாவின் வாயில் வைத்து அழுத்திக்கொண்டே விளையாடினான். கொஞ்சம் பால் உள்ளேயும் கொஞ்சம் அவள் மேலாடையிலும் விழுந்தது.

"இப்போ சரி! உன் உதடுபட்ட உடனே, இந்தப்பால் அமிர்தமாகிவிட்டது. இனி ஒரு சொட்டுப் பால்கூட விடமாட்டேன்." என்று கிழவன் கொஞ்சு மொழி கூறிக்கொண்டே பாலைக் குடித்தான். பக்கத்தில் படுத்த சாரதாவை நோக்கிச் சிரித்தான்.

"ஆலமர முறங்கக் குட்டி அடி மரத்தில் வண்டுறங்க, உன் மடிமேலே நானுறங்க, குட்டி என்ன வரம் பெற்றேனோடி" என்று பாடத் தொடங்கினான். சாரதா, தனக்குத் தூக்கம் வருவதாகக் கூறினாள். பார்க்கலாமா, யார் முதலில் தூங்குவது என்று பந்தயங் கட்டினான் கணவன்.

இரண்டொரு வினாடிகளில் சாரதா குறட்டை விட்டாள். அது வெறும் பாசாங்கு. கிழவன், அவள் பாசாங்கு செய்வதைக் கண்டுகொண்டான். அவளுடைய காதில் சிறு துரும்பை நுழைத்தான். அவள் சிரித்துக்கொண்டே எழுந்துவிட்டாள்.

"என்னை ஏமாற்ற முடியுமோடி குட்டி, என்னிடம் சாயுமோடி" என்று பாடினான். இரண்டொரு விநாடியில் குறட்டைவிட்டான். பாசாங்கு அல்ல! நிஜம் பாலில் கலந்திருந்த அபின் வேலைசெய்யத் தொடங்கிவிட்டது. சாரதா, கணவனைப் புரட்டிப் பார்த்தாள். எழுந்திருக்கவில்லை. பிறகு அவள் படுக்கையைவிட்டு எழுந்து, பெரிய பச்சைச்சால்வை யொன்றை எடுத்து போர்த்துக்கொண்டு புறக்கடைக் கதவைத் திறந்துகொண்டு கழனிப்பக்கம் நடந்தாள். இருட்டு, தவளையின் கூச்சல் காதைத் துளைத்தது. சேறும் நீறும் கலந்த வழி. தொலை தூரத்தில், நரியின் ஊளை. ஆங்காங்கு வீட்டுப் புறக்கடைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் அசைவதால் உண்டாகும் மணி ஓசை. மரஉச்சியில் தங்கி ஆந்தை கூச்சலிட்டது. சாரதா பயத்தையும் மறந்து நடந்தாள். கணவனின் பிடிவாதத்தால் பாலைக் கொஞ்சம் பருகியதால், அபின் அவளுக்கு மயக்கத்தைத் தந்தது. அதையும் அவள் உணர்ந்தாள். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல், நடந்தாள். எங்கே தன் தாய் வீட்டுக்கு! ஏனெனில் பரந்தாமன் பிழைப்பதே கஷ்டம். அவன் உயிர் போகு முன்னம் சாரதா வந்து பார்த்துவிட்டுப் போனால்தான் போகிற பிராணனாவது சற்று நிம்மதியாகப் போகும் என சாரதாவுக்கு அவள் தாய் சேதி விடுத்திருந்தாள். எனவேதான் சாரதா, பதைத்து கணவனுக்கு அபின் கலந்த பால் கொடுத்துவிட்டுப் பறந்தாள். தன் காதலனைக்காண.

"சாரதா வரவில்லையே. சாரதாவுக்கு என் மீது கோபமா? ஆம்! நான் அவள் வாழ்விற்காக ஒரு சகுனத்தடைபோல வந்தேன். சாரதா என் மனதைக் கொள்ளைகொண்ட சாரதா..." என்று பரந்தாமன் அலறிக்கொண்டிருந்தான்.

கண் இரப்பை மீதும் அம்மை இருந்ததால் பரந்தாமனுக்குக் கண்களைத் திறப்பதென்றாலும் கஷ்டம். திறந்ததும் வலிக்கும். வலித்ததும் மூடுவான். "வந்தாளா சாரதா?" என்று கேட்பான்.

"தம்பி, வருவாள் பொறு, சற்றுத் தூங்கு" என்பாள் சாரதாவின் தாய்.

"தூக்கம்! எனக்கா! அம்மணி.நான் சொல்கிறேன். சாரதா இங்கு வரமாட்டாள். நானே அங்கு செல்கிறேன்.

போனால் என்ன? அவள் கணவன் என்னைக் கொல்வானா கொல்லட்டுமே? நான் செத்துத்தான் பல வருஷங்களாயிற்றே.

எனக்கு இல்லாத சொந்தம் அவனுக்கா?

தாலி கட்டியவன் அவன்தான்! ஆனால் அவளுடைய கழுத்தின் கயறுதானே அது! நான் அவள் இருதயத்தில் என் அன்பைப் பொறித்துவிட்டேன். எனக்கே அவள் சொந்தம்.

ஓஹோ! ஊரைக்கேள், சாரதா யாரென்று, என்பானோ ஊரைக்கேட்டால், ஊராருக்கு என்ன தெரியும்? உள்ளத்தைக் கேட்டுப் பார்க்கட்டுமே. எதோ இங்கேவா அம்மா இப்படி, நீயே சொல், சாரதா உன் மகள்தான். நீ சொல். சாரதா எனக்குச் சொந்தமா, அந்தக் கிழவனுக்கா!

யாருக்கம்மா சொந்தம்! கொண்டுவா சாரதாவை, இனி ஒரு க்ஷணம் விட்டு வைக்கமாட்டேன். என் சாரதா என்னிடம் வந்தே தீரவேண்டும்"— என்று பரந்தாமன் அலறினான். கப்பல் முழுகுவதற்கு முன்பு கடல் நீர் அதிகமாக உள்ளே புகும். அதுபோல, பரந்தாமன் இறக்கப்போகிறான். ஆகவே தான் அவன் எண்ணங்களும் மிகவேகமாக எழுகின்றன என வேதவல்லி விசனித்தாள்.

சாரதாவைப் பெற்றவள் அவள். அவளே சாரதாவை கிழவனுக்குக் கலியாணம் செய்து கொடுத்தாள். பரந்தாமனோ சாரதா யாருக்குச் சொந்தம்? கூறு! என தன்னையே கேட்கிறான். வேதவல்லி என்ன பதில் சொல்வாள்?

"கதவைத் தட்டுவது யார்?"

"அம்மா! நான்தான் சாரதா!"

"வந்தாயா கண்ணே, வா வந்து பாரடி அம்மா பரந்தாமனின் நிலையை" என்று கூறி, சாரதாவை வேதவல்லி அழைத்துவந்தாள்.

பரந்தாமனைக் கண்டாள் சாரதா. அவள் கண்களில் நீர் பெருகிற்று.

உள்ளம், ஒருகோடி ஈட்டியால் ஏககாலத்தில் குத்தப்பட்டதுபோல் துடித்தது. குனிந்து நோக்கினாள்.

அந்த நேரத்தில் பரந்தாமனின் எண்ணம், அன்றொருநாள் ஜுரமாக இருந்தபோது சாரதாவுக்கு முத்தமிட்டகாட்சியில் சென்றிருந்தது. அதனை எண்ணி புன்சிரிப்புடன் அவன் மீண்டும் உளறினான். "சாரதா, நான் உன்னைக் காதலிக்க, நீ என் பாட்டனுக்குப் பெண்டானாயே. உன்னை விடுவேனா! ஒரு கயறு என்னிடமிருந்து பிரித்து விடுமா! என்னைவிட அக்கயறு என்ன பிரமாதமா? வா! சாரதா! வந்துவிடு" என்று உளறினான்.

"தம்பி பரந்தாமா, இதோ இப்படிப் பார்! சாரதா வந்திருக்கிறாள்" என்று வேதவல்லி கூறினதும், பரந்தாமன் "யார் சாரதாவா?இங்கேயா" என்று கேட்டுக்கொண்டே கண்களைத் திறந்தான். சாரதாவைக் கண்டான். படுக்கையிலிருந்து தாவி தன் கரங்களால் சாரதாவை இழுத்தான். சாரதா தழதழத்த குரலுடன் கண்களில் நீர்ததும்ப, "வேண்டாம், வேண்டாம், என்னைத் தொடாதீர்கள்” என்றாள்.

பரந்தாமனின் விசனம் அதிகமாகிவிட்டது. கரங்களை இழுத்துக்கொண்டான். "மறந்துவிட்டேன் சாரதா. அம்மை தொத்து நோய் என்பதை மறந்துவிட்டேன். என் பிரேமையின் பித்தத்தில், எனக்கு எதுதான் கவனத்துக்கு வருகிறது" என்று சலிப்புடன் கூறினான். சாரதா பதைபதைத்து "பரந்தாமா, அப்படி எண்ணாதே. நான் என்னைத்தொட்டால் அம்மை நோய் வந்துவிடுமென்பதற்காகக் கூறவில்லை. நீ தொடும் அளவு பாக்கியம் எனக்கில்லை. நான் ஒரு பாவி" என்றாள். புன்னகையுடன் பரந்தாமன், "நீ பாவி. தப்பு தப்பு. சாரதா, நான் பாவி. நான் கோழை. என்னால் தான் நீ துயரில் மூழ்கினாய்" என்றான். என்று கூறிக்கொண்டே சிங்காரவேலனிட மிருந்து வாங்கிக்கொண்டு வந்த "போட்டோவை" சாரதாவிடம் கொடுத்தான். சாரதா சிறிதளவு திடுக்கிட்டுப் போனாள். பரந்தாமனைப் பார்த்து "அந்தப் படத்தைக் கண்ட பிறகுமா, என் மீது உனக்கு இவ்வளவு அன்பு? நான் சோரம் போனதைக்காட்டும் சித்திரங்கூட உன் காதலை மாற்றவில்லையா?" என்று கேட்டாள்.

"சாரதா, கல்லில் பெயர் பொறித்துவிட்டால், காற்று அதனை எடுத்து வீசி எறிந்து விடுமா!" என்றான் பரந்தாமன். அவனுடைய இருதயப் பூர்வமான அன்பு கண்ட சாரதாவால் அழுகையை அடக்க முடியவில்லை. இவ்வளவு அன்பு கனியும் பரந்தாமனிடம் வாழாது வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டு, வழுக்கி விழுந்ததை எண்ணினாள். ஆனாள் அவள் என் செய்வாள்!

சமுதாயத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சருக்கு மரமாக்கிவிட்டது. அதில் தம்மிஷ்டப்படி செல்ல விரும்பி சருக்கி விழுந்து சாய்ந்தவர், கோடி கோடி, அதில் சாரதா ஒருத்தி.

"சாரதா! ஒரே ஒரு கேள்வி, என்மீது கோபிப்பதில்லையானால் கேட்கிறேன்" என்றான் பரந்தாமள்.

"குணசீலா, உன் மீது எனக்குக் கோபமா வரும்? கேள், ஆயிரம் கேள்விகள்" என்றாள்.

"அந்தப்படத்திலுள்ள கருப்பையாவிடம் நீ காதல் கொண்டிருந்தாயா!" என்று சற்று சஞ்சலத்துடன் கேட்டான் பரந்தாமன்.

"கருப்பையாவிடம் காதலா? வலை வீசும் வேடன் மீது புள்ளிமான் ஆசைகொண்டா வலையில் விழுகிறது?" என்றாள் சாரதா.

"தெரிந்துகொண்டேன், ஆம்! நான் எண்ணியபடி தான் இருக்கிறது. நீ அவன் மீது காதல் கொள்ளவில்லை. அவன் உன் நிலை கண்டு உன்னைக் கெடுத்தான். நீ என்ன செய்வாய். பருவத்தில் சிறியவள்" என்று பரந்தாமன் கூறிக்கொண்டே சாரதாவின் கரத்தைப் பிடித்து தன் மார்பில் வைத்துக்கொண்டு, "சாரதா நீ இதனுள்ளே எப்போதும் இருந்து வந்தாய். அன்று உன்னை முந்திரிச் சோலையில் கண்டபோது உன் முத்திரை என் இதயத்தில் ஆழப்பபதிந்தது. அதனைப் பின்னர் அழிக்க யாராலும் முடியவில்லை. நாளொன்றுக்கு ஆயிரம் தடவை "அரகரா சிவசிவா அம்பலவாணா " என்று சொல்லிப் பார்த்தேன், உன் கவனம்மாறவில்லை. தில்லை, திருவானைக்கால், காஞ்சி, எனும் ஸ்தலங்களெல்லாம் சென்றேன்? என் 'காதல்' கரையவில்லை. எப்படி க் கரையும்? "உமை ஒரு பாகன்" "இலட்சுமி நாராயணன்" "வள்ளி மணாளன் முருகன்" "வல்லபை லோலன்" என்றுதான் எங்கும் கண்டேன். நான் தேடிய உமை நீ தானே!"–என்று பரந்தாமன் பேசிக்கொண்டே இருந்தான்.

கேட்கக்கேட்க சாரதாவின் உள்ளம் தேன் உண்டது. ஆனாலும், கடுமையான அம்மையின் போது,பேசி, உடம்புக்கு ஆயாசம் வருவித்துக் கொள்ளக்கூடாதே என்று அஞ்சி, "பரந்தாமா போதும், பிறகு பேசுவோம். உன் உடம்பு இருக்கும் நிலைமை தெரியாது பேசிக்கொண்டிருக்கிறாயே' என்று கூறி, அவன் வாயை மூடினாள்.

"உடம்பு ஒன்றும் போய்விடாது. போனாலும் என்ன? உன்னைக் கண்டாகிவிட்டது. உனக்கு இருந்துவந்த ஆபத்தைப் போக்கியுமாகிவிட்டது. இனி நான் நிம்மதியாக...என்று கூறி முடிப்பதற்குள் சாரதா மீண்டும் அவன் வாயை மூடி, "அப்படிப்பட்ட பேச்சு பேசக்கூடாது. நான் சாகலாம். ஆனால் உங்களுக்கு ஒரு கெடுதியும் சம்பவிக்கலாகாது" என்று கூறினாள். சாரதாவைக் கண்ட ஆனந்தம் அவளிடம் பேசியதால் ஏற்பட்ட களிப்பு பரந்தாமனின் மனதில் புகுந்தது. அயர்வு குறைந்தது. பேசிக்கொண்டே கண்களை மூடினான். அப்படியே தூங்கி விட்டான். அவன் நன்றாகத் தூங்கும் வரை பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தாள் சாரதா. மெல்ல குறட்டை விட்டான் பரந்தாமன். சாரதா, மெதுவாக எழுந்தாள். தாயை அழைத்தாள். இருவரும் சமையலறை சென்று, அடுப்பில் நெருப்பை மூட்டினர். பரந்தாமன் தந்த போட்டோவை எரியும் நெருப்பில் போட்டு கொளுத்தி விட்டனர். பின்னர் சாரதா மெள்ள நடந்து வீடு சென்றாள். படுத்துறங்கும் கணவன் பக்கத்தில் படுத்தாள். பூனைபோல சில நிமிடங்கள்வரை சாரதாவின் கவனம் முழுதும் பரந்தாமன் மீதே இருந்தது. திடீரென அவள் திடுக்கிட்டாள். ஏன்? தன் கணவன் குறட்டை விடும் சத்தமே கேட்கவில்லை. என்றுமில்லாத அதிசயமாக இருக்கிறதே என்றெண்ணி, மெதுவாக கணவன் மீது கையை வைத்தாள். பனிகட்டிபோல் ஜில்லென இருந்தது. அலறிக்கொண்டே அவர் உடலைப் பிடித்து அசைத்தாள். பிணம் அசைந்தது, அபின் அதிகம். அதனால் மரணம்.

சாரதா விதவையானாள். குங்குமம் இழந்தாள். கூடின பந்துக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவித்தனர். வேதவல்லி தன்னைப்போலவே சாரதாவும் ஆனது கண்டாள்; மனம் நொந்தாள்.

சாரதா விதவையானாள்; பரந்தாமன் குருடனானான். அம்மையிலிருந்து அவன் தப்பித்துக்கொண்டான். ஆனால் அவனது கண்கள் தப்பவில்லை, பார்வையை இழந்தான் பரந்தாமன். சாரதாவுக்கு நேரிட்ட விபத்தைக் கேட்டான், மனம் நொந்தான். ஏன்? சாரதாவுக்கு இதனால் மனக்கஷ்டம் வருமே என்பதனால். அம்மை போயிற்றே தவிர, எழுந்து நடமாடும் பலம் பரந்தாமனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது.

ஒரு மாசத்துக்குப் பிறகு, பரந்தாமன் சாரதாவைக் காணச்சென்றான். கண் இழந்தவன்—கபோதி—எனினும் அவளைக் காணமுடியும் அவனால்! கண் இழந்தான், கருத்தை இழக்கவில்லையல்லவா!

சாரதா தாலியை இழந்தாள். பிறரால் பிணைக்கப்பட்ட கணவனை இழந்தாள். தன் வாழ்க்கையில் அதனை ஒரு விபத்து எனக் கொண்டாள். ஆனால் அதனாலேயே தன் வாழ்க்கையில் இருந்து வந்த இன்ப ஊற்று உலர்ந்து விட்டதாகக் கருதமுடியவில்லை.

துக்கம் விசாரிக்க வந்தவர்களெல்லாம், தனக்கும் மாண்டுபோன தன் கணவருக்கும் இருந்த பொருத்தம், ஒற்றுமை, நேசம் முதலியவைகளைப் பற்றிப் பேசினர். அது வாடிக்கையான பேச்சுத்தானே! யாருக்குத் தெரியும், தன் காதலனைக் காணப் போகவேண்டும் என்பதற்காக கணவனுக்கு அபின் ஊட்ட, அது அளவுக்கு மீறிப் போனதால் அவன் இறந்தான் என்ற உண்மை.

தன் கணவனைத் தானே கொன்றதை எண்ணும்போது, சாரதாவுக்கு இருதயத்தில் ஈட்டி பாய்வது போலத்தான் இருந்தது. "நான் அவர் சற்று தூங்க வேண்டும் என்று அபின் கொடுத்தேனேயொழிய அவர் இறக்க வேண்டும்

என்றாகொடுத்தேன்? இல்லை! இல்லை! நான் எதைச் செய்தாலும் இப்படித்தானே "வம்பாக" வந்து முடிகிறது. என் எழுத்துப்போலும்." என்று கூறி தன்னைத் தானேதேற்றிக் கொண்டாள்.

தன் வீட்டின் கடனைத் தீர்க்கத்தான் சாரதாவின் தகப்பன் பணக்காரனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுத்தார். வேதவல்லியும் தன் மகள் நல்ல நகை நட்டுடன் நாலு பேர்கண்களுக்கு அழகாகவாழவேண்டும் என்ற விருப்பத்துக்காகத்தான் சாரதாவை சீமானுக்கும் மணம் செய்ய ஒப்பினாள். ஆனால் அந்த மணம், மரணத்தைத்தான் கணவனுக்குத் தந்தது. மணமற்ற செத்த வாழ்வைத்தான் சாரதாவுக்குத் தந்தது. என் செய்வது? ஓட்டைப் படகேறினால் கரை ஏறு முன்னம் கவிழ்ந்தாக வேண்டுமல்லவா? சாரதாவுக்கு அவள் பெற்றோர்கள் அமைத்துக்கொடுத்த வாழ்க்கைப் படகு, ஓட்டை உள்ளது, அதில் எத்தனை நாளைக்குச் செல்லமுடியும்? இந்த ஓட்டைப் படகுக்கு கருப்பையா 'ஒட்டுப் பலகை' ஆனால் ஒட்டுப் பலகை தான் எத்தனை நாளைக்குத் தாங்கும், அதுவும் பிய்த்துக் கொண்டு போய்விட்டது, ஒரு நாள்; பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கணவன் மாண்டான். இனி சாரதா கரை சேருவது எப்படி முடியும்?

"முடியுமா? முடியாதா?"

"நான் என்ன பதில் கூறுவேன்?"

"உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு"

"ஊரார்...."

"ஊரார்! பாழாய்ப் போன ஊராருக்குப் பயந்து தானே நாம் இக்கதிக்கு வந்தோம், அறுபட்ட தாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவைகள் ஊரார் ஊரார் என வீண் கிலி கொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள்ள உன் உள்ளம் உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன சாரதா? இது ஆகுமா, அடுக்குமா? தாலி அறுத்த முண்டைக்கு கண் இழந்த கபோதியா என்றுதான் கூறுவர். ஏளனம் செய்வர், எதிர்ப்பர், நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னை சமூக பகிஸ்காரமும். செய்வர். ஆனால், அதனைப்பற்றி நீ ஏன் கவலை கொள்ளவேண்டும். சாரதா, கேள் நான் சொல்வதை. நான் கண்ணிழந்தவன், ஆனாலும், எனக்கு பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள், இந்த சமுதாயத்தின் சித்திரங்கள், எனக்குப் புகட்டும் பாடம் இது தான்; சமூகம் திடமுடன் யார் எதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும். தாங்கிப் பதுங்கினால் அவர்கள் மீது பாய்ந்து அவர்களைப் பதைக்கவைக்கும்.

சாரதா! கழுதையின் பின்புறம் நின்றால் உதைக்கும். முன்னால் செல், ஓடிவிடும்.

"பழக்க வழக் மெனும் கொடுமையை, தீரமாக எதிர்தால் தான் முடியும்"—என பரந்தாமன் சாரதாவிடம் வாதாடினான். தன்னை மறுமணம் செய்துகொள்ளும்படி.

சாரதாவுக்கு மறுமணம்–தான் தேடிய பரந்தாமனை நாயகனாகப் பெறுவது என்ற எண்ணமே அமிர்தமாகத்தான் இருந்தது. அவள் மனக்கண் முன்பு எதிர்கால இன்பச் சித்திரங்கள் அடுக்கடுக்காகத் தோன்றின. அவனுடைய அன்பு தன்னைச் சூழ்ந்து தூக்கிவாரி இன்ப உலகில் தன்னை இறக்குவதைக் கண்டாள். அவனுடைய கருவிழந்த கண்களில் காதல் ஒளி வெளிவரக் கண்டாள். சிங்காரத்தோட்டத்தில் அவன் கைப்பிடித்து நடக்க, காலடிச்சத்தம் கேட்டு மரக்கிளைகளில் அமர்ந்திருந்த கிளி, கொஞ்சுமொழி புகன்று பறக்கக் கண்டாள். அவன் ஏதேதோ கூறவும் அவை எண்ணத்தில் இன்ப வாடையைக் கிளப்பவும் கண்டாள். அவன் அணைப்பு, அவன் முத்தம், அவன் கொஞ்சுதல், அவன் கூடி வாழ்தல், அவனுடன் குடும்பம் நடத்துதல் இவை யாவும் அவள் மனக்கண் முன்பு தோன்றின.

"சாரதா, இதோ உன் உலகம், நீ தேடிக்கொண்டிருந்த தேன் ஓடும் தேசம். நீ நடந்து சென்று வழி தவறி சேர முடியாது தத்தளித்தாயே அதே நாடு. காதல் வாழ்க்கை. பரந்தாமனுடன் இணைந்து வாழும் இன்பபுரி, போ. அவ்வழி வாழு. அந்த நாட்டில் ஒரு முறை தான் தவறிவிட்டாய். அதற்குக் காரணம் உன் தந்தை. இம்முறை தவறவிடாதே.

முன்பு நீ பேதைப் பெண்; உன்னை அடக்க மடக்க பெற்றோரால் முடிந்தது. இப்போது நீ உலகைக் கண்டவள் இம்முறை உணர்ச்சியை அடக்காதே. நட இன்பபுரிக்கு. சம்மதம் கொடு பரந்தாமனுக்கு. அவன் உனக்குப் புத்துலக இன்பத்தை ஊட்டுவான். அவனுக்கு நீ தேவை; உனக்கு. அவன், நீங்கள் இருவரும் தனி உலகில் வாழுங்கள், சாதாரண உலகைப்பற்றிக் கவலை ஏன்? பழிக்கும் சுற்றத்தார், இழித்துப் பேசும் பழமைப் பித்தர்கள், கேலி செய்யும் குண்டர்கள், என் சொல்வரோ என்பதைப்பற்றி நீ கவலைப்படாதே.

அவன் கபோதிதான்! ஆனால் அவனுக்குத்தான் தெரியும்,உன்னை இன்பபுரிக்கு அழைத்துச் செல்ல, பிடித்துக்கொள் அவன் கரத்தை. அவன் குருடன்! எனவே உலகின் காட்சிகள் எதுவும் அவனுக்கு இனித் தெரியாது. ஆனால் உன்னை மட்டும் அவன் அறிவான். பிறவற்றைப் பார்க்க வொட்டாதபடி தடுக்கவே பார்வை அவனை விட்டுச் சென்றும் விட்டது" என சாரதாவுக்கு விநாடிக்கு விநாடி காணும் காட்சிகள் யாவும் உணர்த்துவித்தன.

விதவை சாரதாவுக்கும் விழியிழந்த பரந்தாமனுக்கும் மணம் நடந்றிேயது.

வீதி மூலைகளில் வீணர்கள் வம்பு பேசினர். சமயற்கட்டுகளில் பெண்டுகள் சகலமும் தெரிந்தவர்கள் போல கேலி செய்தனர். வைதீகர்கள், 'வந்தது விபரீதம்' எனக் கைகளைப் பிசைந்தனர். உற்றார், உறவினர், உறுமினர். ஆனால் கபோதிபுரக்காதலை இனி யாராலும் தடுக்க முடியாது. அவர்கள் இன்பபுரி சென்று இன்பத்துடன் வாழ்ந்து வரலாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பரிசு/காதல்-கதை_2&oldid=1652794" இலிருந்து மீள்விக்கப்பட்டது