உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/தொழில் வளர்ச்சியும் ஒருமைப்பாடும்

விக்கிமூலம் இலிருந்து

10. தொழில் வளச்சியும்
ஒருமைப்பாடும்


இந்தப் பிளாஸ்டிக் தொழிற்சாலை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய தொழிற்சாலைத் திறப்பு விழாவில் முதலமைச்சர் என்னும் முறையில் பங்கு கொள்ளும் நான் மகிழ்ச்சி அடைந்தாலும், நிதியமைச்சர் என்னும் முறையில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

தமிழகத்தின் நிதி நிலைமை என்னைப் போல உயரக் குறைவாக இருந்தாலும், தொழில் துறை வளர்ச்சி, நம்முடைய தொழிலமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களைப் போல உயரமாக இருக்கிறது.

தமிழகத்தின் தொழில், வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றாலும், அது மேலும் வளர்ச்சியடைய வேண்டும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடையத் தொழில்கள் பெருக, நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில், தமிழகத்தில் என்னென்ன திட்டங்கள் வகுக்கப்படும் என்பதை இங்கே வந்திருக்கும் திட்ட அமைச்சர் அசோக் மேத்தா அவர்கள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நம் நாட்டின் மக்களின் வருமானத்தில் பெரும் பகுதி, உணவுக்காகவே செலவாகிறது. தொழில்கள் பெருக வேண்டுமானல், ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் அளவில் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும், தொழில் துறையில் அக்கறையுள்ளவர்கள் முன்வர வேண்டும். பிளாஸ்டிக்கினால் ஏழை மக்களுக்குக் குறைந்த விலையில் தயாராகும் பொருட்களை உருவாக்க வேண்டும்.

குடிசைப் பகுதிகள் அடிக்கடி தீப்பிடித்துக் கொள்கின்றன. அதனால், பிளாஸ்டிக்கிலான கூரைகளே வீடுகளுக்குப் பயன்படுத்தலாம்.

புது தில்லிக்கு நான் சென்றிருந்தபொழுது, முழுவதும் பிளாஸ்டிக்கிலான வீட்டைப் பார்த் தேன். அந்த வீட்டின் எல்லாப் பகுதிகளும் – அலமாரியில் இருந்து ஒவ்வொரு பகுதியும் – பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டிருந்தன. கடையில் அந்த வீட்டின் விலை என்னவென்றபொழுது, 47,000 ரூபாய் என்று சொன்னர்கள். அது மிகவும் அதிக மாகும். ஏழை மக்கள் பயன்படுத்தும் அளவுக்குப் பிளாஸ்டிக் வீடுகள் கட்டப்பட வேண்டும்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைகள் முழுவதும் மாறிவிட்டன. நாட்டின் தொழில் வளர்ச்சியில் நல்ல அக்கறை ஏற்பட்டு உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆல்ககாலை “எதற்கோ பயன்படும்” என்று நினைத்தோம். ஆனால் ஆல்காலையும் குளோரினையும் பயன்படுத்தி இப்போது பிளாஸ்டிக் தயார் செய்கிறோம்.

கடந்த பத்தாண்டுகளில் புதிய தலைமுறையினரின் கடின உழைப்பு, நாட்டின் பொருளாதார, வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பற்றிய பேச்சு அடிபடுவதற்கு முன்பே, மறைந்த டாக்டர் சி. பி. இராமசாமி அவர்கள், “வடக்கே ஓடும் ஆறுகளான கங்கை, யமுனை ஆகியவற்றைத் தெற்கே உள்ள ஆறுகளுடன் இணைக்க வேண்டும்” என்று வற்புறுத்தி, ஆறுகளின் இணைப்பு ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார்கள். ஆனால், அந்தக் கருத்து நிறைவேற்றப்படவில்லை. அதை ஏற்றுக் கொண்டிருந்தால், இப்பொழுது வடக்கே உள்ள ஆறுகளில், அங்கே ஏற்படும் வெள்ளங்கள் தடுக்கப்பட்டிருக்கும்.

நாட்டின் ஒரு பகுதி வெள்ளத்துக்கு ஆளாகியும், இன்னுமொரு பகுதி தாழ்ந்தும் இருப்பது ஒருமைப்பாட்டை உருவாக்கி விடாது. புராண காலத்திலே கூட, மத அடிப்படையில் காசியிலிருந்து காஞ்சி வரை ஒருமைப்பாடு பற்றிப் பேசப்பட்டது. நாட்டில் உள்ள நிதி நிலைமை, மூலப் பொருள், தொழில் நுட்ப அறிவு முதலியன ஒருங்கிணைந்து ஏற்படும் ஒருமைப்பாடே உண்மையானதாக இருக்க முடியும். இல்லாவிடில், ஒருமைப் பாடு ஏட்டளவில் உள்ளதாகவே அமையும்.

இங்கு அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை, அமெரிக்காவின் கூட்டுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொழில் மேலும் வளர்ச்சி பெற வேண்டும். இதன் சேய்த் தொழில்கள் பல உருவாக வேண்டுமென்னும் நல்லெண்ணத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேளாண்மைத் துறையில் முழுமையான வளர்ச்சியை நாம் பெற வேண்டும். விவசாயத்தில் ஈடுபட்டு இருப்போரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான், வாங்கும் சக்தி அதிகரிக்கும். அப்பொழுதுதான், அதிக அளவில் தொழிற்சாலைகள் உருவாக முடியும். அனைவரும் பொருட்களை வாங்கும் அளவில், தொழிற்சாலைகளில் நவீன முறைகளைப் புகுத்திப் பொருள்களின் விலைகளைக் குறைக்கவேண்டும்.

வகைப்பாடு : பொருளாதாரம்—தொழில் வளர்ச்சி
(4-5-67 அன்று மேட்டூர்ப் பிளாஸ்டிக் தொழிற்சாலைத் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)