உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/நேரிய நிதி உதவி

விக்கிமூலம் இலிருந்து


15. நேரிய நிதி உதவி


இந்த நிதியை வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு என் நன்றி. இன்னலை உணரக் கூடியவர்கள் நீங்கள். அதனால், பழுத்த மரத்திடம் பழம் தேடிச் செல்வது போல், உங்களிடம் வந்திருக்கிறேன்.

தமிழகத்தில் நல்ல திருப்பம் ஏற்பட்டுள்ளது. நான் ஏதோ அரசியல் திருப்பத்தைக் குறிப்பிடுவதாக நண்பர் செங்கல்வராயன்[1] எண்ணத் தேவையில்லை. நிதியுதவி ரூ. 5 இலட்சம் அளவுக்கு எட்டியுள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி அளவுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நிதி சேர்த்துச் சென்னை நகரக் குடிசை வாழ் மக்களுக்குப் புதிய குடியிருப்புக்களைக் கட்டித் தர நாம் வகை செய்வோம்.

மக்கள் எத்தனை ஆண்டுகள் எங்களை ஆட்சியில் அமர்த்துகிறார்களோ, அத்தனை ஆண்டுகளும், இவ்வாறு நிதி திரட்டி இத்தொண்டைச் செய்வோம்.

ஔவையாரால் பாடப்பட்ட பாரி மன்னன் போன்ற வள்ளல்கள் வாழ்ந்த நாடு இது. ஆட்சி இழந்த பின், பாரியின் பெண்டிர் இருவர் மலையொன்றில் வாழ்ந்தனர். ஔவையார் அவர்களைக் காணச் சென்ற போது, அவருக்குக் கொடுக்க அவர்களிடம் புதுச் சேலைகள் இல்லை. தாங்கள் அணிகிற நீலச் சிற்றாடையை எடுத்து, ஒளவையாருக்கு வழங்கினர். நீங்கள் அளித்துள்ள நன்கொடை அந்த நீலச் சிற்றாடைக்கு ஒப்பானதாகும்

சிங்காரச் சென்னை நகரிலே, 600க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும், 800 குடிசைகள் என்னும் அளவுக்கு உள்ளன. புதிதாகக் குடிசைகள் தோன்றாதிருக்க, அரசியல் கட்சிகள் தங்களுக்குள் கண்ணியமான ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். புதிய குடிசைப் பகுதிகள் ஏற்படாதிருக்க, ஆட்சியிலுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போது, ஆட்சியில் இல்லாத கட்சியினர் அதற்கெதிராக வாதாடுகிற நிலைமை இருக்கக் கூடாது. எனவே, கட்சிகள் கூடித் தங்களுக்குள் இது குறித்து ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளவேண்டும்.

வகைப்பாடு:: சமுதாயத் தொண்டு—வள்ளன்மை
(5-9-67 அன்று சென்னையில் நடந்த தீ விபத்துத் துயர் துடைப்புச் சீரமைப்பு நிதியளிப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)


  1. அண்ணாவின் நெடுங்காலக் காங்கிரஸ் நண்பர்.