உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/மீன் வருவாய் பெருகிட

விக்கிமூலம் இலிருந்து


26. மீன் வருவாய் பெருகிட


மீன் வளத்தைப் பெருக்குவதில், நாம் புதிய கட்டத்தை அடைந்துள்ளோம். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள் தேவை. கப்பலைச் செலுத்த, வானொலி, தொலைபேசி முதலிய கருவிகளை இயக்கத் தேர்ந்தவர்கள வேண்டும்.

 பிற நாடுகளில் மீன்பிடிதொழிலில் ஈடுபடுகிறவர்கள் இலாபமடைகிறார்கள். நம்நாட்டில் இத்தொழில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனாலும், இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வருமானமின்றித் தாழ்ந்து ஒதுக்கப்பட்டுச் சலிப்படிைந்து இருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கிடைக்கிற வருவாய் அதிகரித்து ஆதாயம் கிடைக்கச் செய்ய இந்திய அரசும் தமிழக அரசும் முன்வந்துள்ளன.

மீன் பிடிப்பதைப் பாதுகாக்கவும், எங்கே மீன் அதிகம் கிடைக்கும் என்பதைக் கண்டறியவும் தக்க கருவிகள் உள்ளன. இந்தக் கருவிகளை இயக்க இங்கே பயிற்சி அளிக்கப்படும்.

இந்த நிலையம் முழு அளவும் வடிவம் பெறும் போது, 60 இலட்சம் மூலதனம் கொண்டதாக இருக்கும். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு டிராலர் என்னுங் கப்பல் தேவை. அந்தக் கப்பலை நிறுத்த மீன்பிடி துறைமுகங்கள் தேவை.

நிலவளம் போலவே கடல் வளமும் முக்கியமானது. நிலவளத்வைப் பெருக்குவது கடினமானது. கடல் விதைக்காமலே பயன்தருவது.

அதிலுங்கூட ஒன்றைக் கவனிக்கவேண்டும். 4 மைல் 5 மைல் தொலைவுக்குள்ளேயே மீன் பிடித்துவிட்டால், சிறிய மீன்கள் வெகுவாகப் பிடிக்கப்பட்டு வளர்ச்சி குறைந்து வருகிறது. இதற்கு ஆழ்கடலுக்குச் செல்ல டிராலர் தேவை. டிராலர் தருவிப்பதில், அந்நியச் செலவாணிக் கஷ்டம் குறுக்கிடுகிறது. அமைச்சர் ஜகஜீவன்ராம் கூட, நேற்று அந்நியச் செலவாணிச் சிக்கலைச் சமாளித்து 20 டிராலர்களைத் தருவிப்பதாகச் சொன்னார்கள். அதில், சென்னைக்குக் கணிசமான பங்கை ஒதுக்கித் தர வேண்டும்.

இந்தப் பயிற்சி நிலையத்திற்குத் தேவையான இடத்தைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மீதியுள்ள நிலத்தையும், தமிழக அரசு ஒதுக்கித் தரும். அதில் சில பேர் குடியிருப்பதால், ஒதுக்கித் தருவதில் தயக்கம் ஏற்படலாம். அந்தத் தயக்கத்தை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். இப்படி ஒரு முக்கிய காரியத்திற்கு உதவவில்லை என்றால், நிலம் வேறு எதற்குத்தான் பயன்படப் போகிறது?

வகைப்பாடு : வாணிபம் தொழில்—மீன் பிடித்தல்
(11-6-68 அன்று சென்னையில் மைய அரசு மீன் பிடி பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை)