40. ஔவை
ஔவைக் கிழவி நம்கிழவி,
அமுதின் இனிய சொற்கிழவி ;
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவி.
1
நெல்லிக் கனியைத் தின்றுலகில்
நீடு வாழும் தமிழ்க்கிழவி;
வெல்லற் கரிய மாந்தரெல்லாம்
வியந்து போற்றும் ஒருகிழவி.
2
கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி; அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே!
3
41. இலக்கிய மும்மணி
வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ்
மாதின் இனிய உயிர்நிலையை
உள்ளம் தெளிவுறப் போற்றுவமே - என்றும்
உத்தம ராகி ஒழுகுவமே.
1
பாவின் சுவைக்கடல் உண்டெழுந்து - கம்பன்
பாரிற் பொழிந்ததீம் பாற்கடலை
நாவின் இனிக்கப் பருகுவமே - நூலின்
நன்னயம் முற்றுந் தெளிகுவமே.
2
தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதியுணர்ந்தின் புறுவோமே.
3