உள்ளடக்கத்துக்குச் செல்

குழந்தைச் செல்வம்/சரத் காலம்

விக்கிமூலம் இலிருந்து

27. சரத் காலம்[1]

பொன்னொளியும் மரகதத்தின் பொலிவும் செந்நெற்
      புலங்காட்ட, அதன்மீது நிழலை வீசும்
பன்னரிய சரற்கால மேகந் தன்னைப்
      பரிதிவிரைந் தெழுந்தோடி வெருட்டிச் செல்ல,
தன்னைமறந் தொளிமயக்கில் மயங்கி வண்டு
      சாருமலர்த் தேன் மறந்து சுழன்று பாட,
மன்னுகுளம் நதிக்கரையில் வாழுந் தாரா
      மனங்களித்துக் குரலெழுப்பித் திரியும் மாதோ!

நீலநெடு வான்முகட்டைத் தாக்கி நிற்போம்;
      நிரந்தோடி வெளியிடத்தைக் கொள்ளை கொள்வோம்.
வேலையிது காலையெதும் செய்ய வேண்டாம்;
      வீட்டினுக்கு யாவருமே திரும்ப வேண்டாம்;
மேலெழுந்த பெருவெள்ள நுரையே போல,
      விளங்கும் எழிற் சிரிப்பினொளி மிதக்கு தம்மா!
சீலமிகு சோதரரே! கூடி இன்று,
      தெம்மாங்கு பாடிவிளை யாடு வோமே! 2

விரித்துவிடு பாய்காற்றுப் பிடித்து ஓடம்
      விரைந்துகுதித் தோடியழ கமையக் கண்டேன்;
பெருத்தநிதி யிருக்குமிடம் பாடக் கேட்டேன்;
      பெறும்வழிகள் அறிந்தாசை பெரிதும் கொண்டேன்;

திருத்தமுறச் சுடரொளிதான் முகத்தில் வீசத்
      திரண்டுபுயல் பின்வர, மாலுமியும் நின்றான்;
கருத்தொடெதைப் பாடுவன்யான், களிப்பி லொன்றாய்க்
      கண்ணீரும் புன்னகையும் கலந்தது அம்மா! 3

உள்ளமதை ஆகாயம் பரவ விட்டேன்;
       உன்கரமும் என்கனவில் தீண்டப் பெற்றேன்;
மெள்ள உன்றன் முகமறைக்கும் திரையை நீக்கி,
       விழிகளையான் கண்டுதொழக் கருணை செய்வாய்!
கள்ளவிழும் வனத்திலெழும் இசையூ டெம்மைக்
       களிப்பொடு வரவேற்கும் குறிப்பைக் கண்டேன்;
வள்ளலுன்றன் திருக்கழலின் ஒளிஎன் னுள்ளம்
       மலியநிறைந் தானந்தம் அளிக்கு தையா! 4



  1. இது ஸ்ரீ ரவீந்திரநாத தாகூர் பாடிய 'தோட்டக்காரன்' என்ற நூலிலுள்ள 'சரத்கால விழா' என்னும் கவியின் கருத்தை யொட்டி எழுதப் பெற்றது.