உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/202

விக்கிமூலம் இலிருந்து

202. செல்சுடர் நெடுங்கொடி!

பாடியவர் :பாலை பாடிய பெருங்கடுங்கோ.
திணை : ......
துறை: உடன் போகா நின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.

[(து-வி.) தன் இல்லத்தைவிட்டு நீங்கித் தலைவனுடன் உடன்போக்கிற் செல்கின்றாள் தலைவி. அவள் வழியிடை வருத்தத்தைப் போக்குவானாகக், காட்டைக் காட்டித், தலைவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]


புலிபொரச் சிவந்த புலவுநா றிருங்கோட்டு
ஒலிபல் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து
வண்சுவற் பராரை முருக்கிக் கன்றொடு
மடப்பிடி தழீஇய தடக்கை வேழம்
தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப் 5
பொன்புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மாமலை விடரகம் கவைஇக் காண்வரக்
கண்டிசின் வாழியோ குறுமகள்! நுந்தை
அறுமீன் கெழீஇய அறம்செய் திங்கட்
செல்சுடர் நெடுங்கொடி போலப் 10
பல்பூங் கோங்கம் அணிந்த காடே!

தெளிவுரை : புலியோடு போரிட்டுக் கொன்றதாலே சிவப்புக்கறை படிந்ததும், புலவுநாற்றத்தை யுடையதுமான பெரிய கொம்பினிடத்தே உண்டாகிய பலவாகிய முத்துக்கள் ஒன்றோடொன்று மோதி ஒலிசெய்ய, வன்கண்மையிலே மிகுந்ததாய், வலிய மேட்டு நிலத்திலேயுள்ள பருத்த அடியையுடைய வேங்கை மரத்தைத் தகர்த்துத் தள்ளியது, பெரிய கையையுடையதான வேழம் ஒன்று. கன்றோடும், இளமை நலங்கொண்ட தன் பிடியையும் அருகே கொண்டுள்ள அது, மொய்த்துத் தேனீட்டக் கருதிக்கூடியிருந்த வண்டினத்தின் பெருங்கூட்டமானது அகன்று போகுமாறு, அவ்வேங்கையின் பொன்னைப்போன்ற பூவும் தழையுங் கலந்த உணவுக் கவளத்தை, அவற்றுக்கு அன்போடு பறித்து ஊட்டியபடி யிருக்கும். பெருமலையிடத்துள்ள, அத்தகைய பிளவிடங்களைத் தன்னகத்தே கொண்டதாய், அழகுற இக்காடும் தோன்றுவதைக் காண்பாயாக! இளையவளே, நீயும் வாழ்க! நின் தந்தைக்கு உரியதான, கார்த்திகை மீன் பொருந்தியதும், அறஞ்செய்தற்கமைந்ததுமான கார்த்திகைத் திங்களில், வரிசையாக செல்லுகின்ற நெடுவிளக்குகளின் ஒழுங்கைப் போலப், பலவான பூக்களைக் கொண்ட கோங்க மரங்களாலே அழகு பெற்று விளங்கும் காட்டையும் காண்பாயாக!

சொற்பொருள் : சிவந்த–புலியின் குருதிக்கறை படிந்ததனாலே சிவப்புற்ற. புலவு நாறு–புலால் நாற்றங்கொண்ட. இருங்கோடு–பெரிய கொம்பு. ஒலிதல்–தழைத்தல்–உண்டாதல். ஆர்ப்ப–ஒலிக்க. வலிசிறந்து–வன்கண்மை மிகுந்து. வன்சுவல்–வலிய மேட்டுநிலப் பகுதி; வன்மையாவது நீர்ப்பசையால் நெகிழ்வு பெற்றிராத வறட்சித் தன்மை. பராரை–பருத்த அடிமரம். முருக்கி–ஒடித்துத்தள்ளி. தடக்கை–பெரியகை–துதிக்கை. பொன்புரை கவளம்–பொன் போலத் தோன்றும் வேங்கைப் பூவும் தழையுமாகக் கூடிய உணவுக் கவளம். தேன் செய்–தேனை ஈட்டும். பெருங்கிளை–பெரிதான வண்டின் கூட்டம். புறந்தருபு–அன்போடுங் கூடியதாய். விடரகம்–மலைக்கண்ணுள்ள பிளவிடங்கள்; வெடிப்பிடங்கள் என்பர். கவைஇ–தன்பாற் கொண்டு. காண்வர– காட்சிக்கு இனிதான அழகோடு. குறுமகள்–இளமகள். அறுமீன் கெழீஇ அறம்செய் திங்கள்–கார்த்திகை மீன் பௌர்ணமியன்று கூடிவருகின்றதும், அறம் செய்தற்கு உரியதுமாகிய கார்த்திகைத் திங்கள் பௌர்ணமி நாள். கோங்கம்–கோங்கமரம். அணிந்த காடு–அழகுறப் பெற்றுள்ளதனாலே அணிபுனைந்தாற் போலத் தோன்றும் காடு.

விளக்கம் : 'புலிபொரச் சிவந்த புலவு நாறு இருங்கோட்டு வேழம்' என்றது, 'புலியை அணிமையில் தானே தன் கோட்டால் குத்திக்கொன்று, அதன் குருதிக்கறை படிதலால் சிவந்தும், புலவு நாற்றங்கொண்டும் விளங்கிய பெரிய கோட்டையுடைய வேழம்' என்றதாம். அத்தகு ஆண்மையன் தான் என்பதும் உணர்த்தினான். அவ்வேழம் வலிசிறந்து வன்சுவற் பராரை வேங்கையை முரித்துத் தள்ளியது; அதுவும் புலிபோலத் தோன்றிய தோற்றத்தினால் என்க. அடுத்து, கன்றோடுங் கூடிய தன் பிடியைக் காணவும் அதன் சினம் தணிகின்றது. மென்தழையும் பூவுங் கூடிய வேங்கைக் கவளங்களை அன்போடே தன் கன்றுக்கும் பிடிக்கும் கொய்து ஊட்டுகின்றது. இவ்வாறே தலைவனும், தலைவியை மீட்கக் கருதித் தன்னை எதிர்த்து வருவாரை வென்றும், அலர் உரைப்பாரை ஒதுக்கியும், தலைவியைத் தன்னூர்க் கண்ணே கொண்டுபோய் மணம் புரிந்து, இல்லத்தே வைத்து அன்புடன் காத்துப் பேணுவான் என்பதாம். இது பகற்போதில் காட்டகத்தே கண்டது.

இரவில், முழுநிலவு எறிக்கக் கோங்கம் பூக்களால் அழகுடன் தோன்றும் காட்டைக் காட்டி, 'அவள் தந்தை அறம் செய்யும் கார்த்திகை நாளில் எடுத்த கார்த்திகை விளக்கு வரிசைகள் போலிருக்கின்றது' எனப் புனைந்து கூறி, அவளை மகிழ்விக்கின்றான். இதனால், காட்டிடையே இரவில் ஏதும் இடையூறில்லை என்று கூறினானுமாயிற்று.

விளக்கொழுங்கு கோங்கம் பூப்போலத் திகழ்தலைக் 'கோங்கின் புதுமலர் கைவிடு சுடரின் தோன்றும்' (அகம். 153) எனப் பிற சான்றோரும் உரைப்பர். காடு விளக்கம் பெறுவதுபோல, நீயும் மனைவாழ்க்கையில் என்னால் பேணப்பட்டுப் பெரிதும் விளக்கம் பெறுவாய் என்று உணர்த்தி அவளைத் தெளிவித்தானும் ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/202&oldid=1698362" இலிருந்து மீள்விக்கப்பட்டது