உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/355

விக்கிமூலம் இலிருந்து

355. நனி நாகரிகர்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : (1) தோழி அருகடுத்தது; (2) தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடயாதூஉம் ஆம்'

[(து-வி.) தலைமகன் வரவு இடையிடையே, தடைப்படுகின்றது. அதனால் வருந்தும் தலைமகளது நிலைகண்டு கலங்கிய தோழி, தலைவனை நெருங்கிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது; (2) தலைமகள் இடையீடுபடும் தலைவனது வரவாலே வருந்தி நலியக் கண்ட தோழி, தலைமகனை நெருங்கி, அவளை விரைந்து மணந்து கொள்ளக் கூறுவதாக அமைந்த செய்யுளும் இது.]


புதல்வன் ஈன்ற பூங்கண் மடந்தை
முலைவாய் உறுக்கும் கைபோல் காந்தள்
குலைவாய் தோயும் கொழுமடல் வாழை
அம்மடற் பட்ட அருவித் தீநீர்
செம்முக மந்தி ஆரும் நாட! 5
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
அஞ்சில் ஓதியென் தோழி தோள்துயில்
நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அதுநீ
என்கண் ஓடி அளிமதி— 10
நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே!

தெளிவுரை : புதல்வனை ஈன்ற பூப்போலும் கண்ணையுடைய மடந்தையானவள், தன் மகனைக் கையால் அணைத்தபடி பாலருந்தச் செய்வாள். அது போலக் காந்தள் மலர்கள் குலையினிடத்தே முன்பக்கமாகத் தோய்ந்திருக்கும், கொழுமையான மடலையுடைய வாழையிலுள்ள, வாழைப்பூவின் மடலினுள்ளே கிடைக்கும் அருவி நீர்போல இனிதான நீரினைச், செம்முகத்தையுடைய மந்தியானது வாய்வைத்துப் பருகியபடியிருக்கும் மலைநாட்டோனே! முன்னதாக அமர்ந்து நட்புடையாளர் கொடுத்தாரானால், மிக்க நாகரிகத்தை உடையவர்கள், அவர்கள் தந்தது நஞ்சாகவே இருப்பினும் உண்பார்களே! அழகிய சிலவாய கூந்தலை உடையவளான என் தோழியின் தோளிடத்தே துயின்று பெறும் இன்பத்தினை, நீ நெஞ்சிலே இன்பமாகக் கெள்ளாய் என்றாலும், நின் கண்ணோட்டம் இல்லாது பிறிது யாதொரு பற்றுக்கோடு எதுவும் இல்லாதாள் அவளாதலினாலே, அந்த இன்பத்தை, நீ, என்னிடத்தே கண்ணோட்டம் செலுத்தியாவது, அவளுக்கு அளிப்பாயாக.

கருத்து : அவனை இனியும் காலம் தாழ்க்காது மணந்து கொள்ளல் வேண்டும் என்பதாம்.

சொற்பொருள் : பூங்கண் மடந்தை – நீலமலர்போலக் கண்களையுடைய மடந்தை; புதல்வனை ஈன்றதன் பெருமையால் கண் தாய்மை நோக்கம் பெற்று மென்மை மிகுதியாயிற்றென்க. முலைவாய் உறுக்கும் கை – குழந்தையை அணைத்து முலையை அதன் வாயிடத்தே எடுத்துச் சேர்த்துப் பாலூட்டும் கை. தீ நீர் – இனிய நீர். வாழைக்குலையின் முற்பகுதியிலுள்ள பூவிலே காந்தள் மலர் தொட்டபடி இருக்க, அந்தப் பூவிதழ் மடலிடையேயுள்ள இனிய நீரை வாய் வைத்து அருந்தும் மந்தியானது, தாய் கையால் அணைத்து முலையூட்டப் பருகும் குழந்தைபோலத் தோன்றிற்று. முந்தை இருந்து – முகத்தெதிரே அமர்ந்திருந்து. நட்டோர் – நட்புச் செய்தவர். நனி நாகரிகர் – மிக்க பண்பாளர்.

விளக்கம் : புதல்வனை ஈன்ற தாயது அன்பைக் கூறியது, அவ்வாறே அவனும் அவளுடன் இல்லறம் பேணி, அவள் மகிழ்தல் கண்டு இன்புற வேண்டும் என்பதற்காம். வாழைப் பூவின் தேனை மந்தி அருந்தி இன்புறும் மலைநாடனாயிருந்தும், தமக்கு அருள் செய்து, தலைவியை மணந்து இன்புறும் மனம் பெற்றானில்லையே என வருந்துகின்றனள். 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் என்ற தொடர்களோடு, 'பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்' (குறள் 580) என்னும் குறளையும் ஒப்பிட்டு இன்புறுக, நட்டோர் இயல்பு அதுவாகவும், நினக்கு இன்பமே தந்த எம்மை நீ வெறுத்து ஒதுக்குவது நின் சால்புக்கு ஒவ்வாதது என்று கடிந்து கூறி அறிவுறுத்தியதுமாகும்.

'தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் ஆயினும்' என்றதனால், இடையிலே அவன் நாட்டம் பிறிதின்மேற் செல்ல, நொந்து, தோழி கூறியதாகவும் கொள்ளலாம்.

‘முந்தையிருந்து...' என்னும், இரண்டடிகளும் பெருங்கதையிலும் எடுத்தாளப் பட்டுள்ளது. நஞ்சும் என்பதில் வரும் உம்மையால் அவர் ஒருபோதும் நஞ்சைத் தரமாட்டார் என்பதும் விளக்கும்.·

பயன் : தலைவன் விரைவிலே மணம்கொண்டு தலைவியின் துயரைப் போக்குவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/355&oldid=1698674" இலிருந்து மீள்விக்கப்பட்டது