உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/356

விக்கிமூலம் இலிருந்து

356. கீழ்த்திசை வெள்ளி!

பாடியவர் : பரணர்.
திணை : குறிஞ்சி.
துறை : வரைவு மறுக்கப்பட்டு ஆற்றானாகிய தலைமகன், தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து-வி.) தலைமகன், தன் காதலியைத் தனக்கு மணம் பேசி வருமாறு சான்றோரை அனுப்புகின்றான். தலைவியின் தமரோ அவனுக்கு அவளைத் தர இசையவில்லை. அவர் வந்து அந்த மறுப்பைச் சொல்லியதும், தலைவன் மனம் நொந்து வருந்துவதாக அமைந்த செய்யுள் இது.]


நிலந்தாழ் மருங்கில் தெண்கடல் மேய்ந்த
விலங்குமென் தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட்டு இமயத்து உச்சி
வானர மகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அல்கிரை ஒய்யும் 5
அசைவில் நோன்பறை போலச் செல்வர
வருந்தினை—வாழியென் உள்ளம்!—ஒருநாள்
காதலி உழையள் ஆகவும்,
குணக்குத் தோன்று வெள்ளியின், எமக்குமார் வருமே!

தெளிவுரை : என் உள்ளமே! நிலத்திடத்தே தாழ்வாக உள்ள பக்கத்திலேயுள்ள, தெளிந்த கடலிடத்தே சென்று இரைமேய்ந்த, விலகிய மென்மையான இறகையுடையதும் சிவந்த கால்களைக் கொண்டதுமான அன்னப்பறவையானது. பொன்படுதலையுடைய நெடிதான உச்சிகளைக் கொண்ட இமயத்தின் உச்சியிலேயுள்ளவரான, தெய்வ மகளிர்க்கு விருப்போடு விளையாடுவதற்குப் பயன்படும், வளராத தம் இளம் குஞ்சுகளுக்கு இட்டு உண்பிக்கும் இரையைக் கொண்டு செல்லும். அப்படி, நாள்தோறும் செல்லும்போது, வருந்துதல் என்பதில்லாத அதன் வலிய சிறகும் வருத்தம் அடைந்தாற்போல, நீயும் அவள்பால் செல்வதும் மீண்டும் வருவதுமாக அலைந்தலைந்து வருத்தம் கொண்டனை! நீ தான் வாழ்வாயாக! ஒரு நாள், எம் காதலியானவள் எம் அருகே இருப்பவளாகவும், கீழ்த்திசைத் தோன்றும் வெள்ளியைப் போலத் தோன்றுவதும், எமக்கு என்று வாய்க்குமோ?

கருத்து : 'அவளை ஒரு நாள் அடைவோம்' என்பதாம்.

சொற்பொருள் : நிலம் தாழ் மருங்கில் – நிலப்பகுதியானது பள்ளம்பட்டுக் கிடக்கும் பக்கத்தே. தெண்கடல் – தெளிந்த கடல்; குளிர்ந்த கடலும் ஆம். விலங்குதல் – ஒன்றையொன்று ஒட்டாதே பிரிந்து அமைந்திருத்தல். பொன்படு – பொன் படுதலையுடைய; அழகுபடுதலைக் கொண்ட எனினும் ஆம், பொன் – அழகு. இமயத்து உச்சி – இமயத்தின் மேற்பரப்பு; இது வானுரை மகளிர் வாழுமிடம் என்பர். அல்கிரை – இட்டு வைத்துண்ணும் உணவு. அசைவு – வருத்தம். செல்வர – செல்லவும் வரவுமாக. உழை – பக்கம். வெள்ளி – விடிவெள்ளி

இறைச்சி : இமயத்து உச்சியிலுள்ள வானர மகளிர்க்கு விளையாட்டிற்கு உதவும் அன்னப் பார்ப்புகளுக்கு, அதன் தாய் கடலிடத்தேயுள்ள இரையை மிக வருத்தத்துடன் கொண்டு செல்லும் என்றனர்; அவ்வாறே தலைமகனும் தமர் பேச்சுக்கும் காப்புக்கும் உட்பட்ட தன் காதலியை வரைந்து கொள்ளற்கான பணத்தைத் தேடிவரும் பொருட்டுச் சென்று சென்று வருந்தினன் என்பதாம்.

விளக்கம் : இதனால், அவன் தந்த வரைபொருள் போதாவென்று தலைவியின் தமர் அவளைத் தர மறுத்தனர் என்பதாம். அன்போடு சிரமப்பட்டுத் உணவு தேடித்தரும் தாயைவிட்டு, வானர மகளிர்க்கு விளையாட்டுத் துணையாகி விளங்கும் அன்னப் பார்ப்புகள் போலத், தலைவியும் தலைவனின் துன்பம் நோக்காதே, தமர்பால் கட்டுண்டு அமைந்தனள் என்பதுமாம். ஆகவே, தலைமகன் மீளவும் சென்று பெரும் பொருள் தேடி வந்து தந்து, அவளைப் பெறுவதற்கு உறுதிபூண்டான். எனவே காதலியை மீண்டும் முயன்று அடைவோம் என்பான், 'காதலி உழையளாக... எமக்குமார் வருமே' என்றனன். அது தான் நிகழ்தல் உறுதியென்பவன், 'குணக்குத் தோன்றும் வெள்ளியைக் குறித்தனன்.

பயள் : இதனைக் கேட்கும் தோழி, தலைவனின் மிகுதியான பேரன்பை அறிந்தவளாக, உடன்போக்கிற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாளாவள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/356&oldid=1698675" இலிருந்து மீள்விக்கப்பட்டது