அந்த விழாவிற்கு அப்போதைய முதல்வர் திரு பக்தவத்சலனாரே தலைமை தாங்கிடவும், சென்னை மாநகராட்சித் தி.மு.க.வினர் பெருந் தன்மையோடு ஏற்பாடு செய்திருந்தனர். நானும் எதிர்க்கட்சித் தலைவர் நாவலரும், மற்றும் கழக முன்னணியினரும் அவ்விழாவிலே பார்வையாளராகக் கலந்து கொண்டோம். தமிழராக பிறந்திட்ட ஒவ்வொருவரும் பெருமிதம் அடைந்திடத் தக்க வகையிலே அந்தச் சிலை திறப்பு விழா பெருஞ்சிறப்போடு நடந்து என்ன பயன்? தமிழ் நாட்டார் இதயம் எல்லாம் குமுறிக் கொந்தளித்திடும் வண்ணமே, தன்னுடைய வழக்கமான அலட்சியப் போக்கினைக் காட்டிற்று மத்திய அரசின் செய்திப் படத்துறை. சிங்காரச் சென்னை மாநகரில் திருவள்ளுரின் சிலையை திறப்பதைத் தான் தலையாய நிகழ்ச்சியாக மேற்கொண்டு தில்லியிலிருந்து புறப்பட்டு வந்திருந்தார் குடியரசுத் தலைவர் இராதா கிருஷ்ணன். ஆனால், மத்திய அரசு செய்திப் படத் துறையினரோ, அவர் கலந்து கொண்ட மற்ற நிகழ்ச்சிகளையெல்லாம் படம் எடுத்துக் காட்டினர். வள்ளுவர் சிலை திறப்பு விழாவை மட்டும் வேண்டுமென்றே படம் பிடிக்காமல் விட்டு விட்டனர். அவர்களுடைய அந்த ஓரவஞ்சனைச் செயலுக்கு ஒரே காரந் தான் அப்போது புலப்பட்டது. 'திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சியினைச் செய்திப் படத்திலே சேர்த்து விட்டால், மற்ற மாநிலக்காரர்களும் அதனைப் பார்ப்பார்கள் பிறகு, எந்தச் சமயத்தையும் சார்ந்திடாமல் எந்தச் சாதியையும் ஏற்றிடாமல், பொதுமை நோக்கோடு புதுமைக் கருத்துக் கதிர்களைப் பரப்பிய வள்ளுவரைப் பற்றி - அவருக்குச் சிலை எழுப்பியதன் மூலம் தன் திறமையையும், பெருந்தன்மையையும் வெளிப்படுத்திய சென்னை மாநகராட்சியைப் பற்றி - அதன் நிர்வாகத்தினைக் கைப்பற்றி விட்ட தி.மு. கழகத்தின் வளர்ச்சியைப் பற்றி- இந்தியா முழுவதுமே அறிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுவிடுமே! அதற்கு இடந் தரலாமா?- என்கிற பொல்லாங்கான நினைப்பினால் தான் பொலி வோடு நிகழ்ந்திட்ட அந்தத் தமிழகச் சிறப்பு நிகழ்ச்சியினைத் செய்திப் படத் துறையினர் புறக்கணித்திடத் துணிந்திருக்க வேண்டும். 631
பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/637
Appearance