உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகத்தை ஏன் மறைக்க வேண்டும்?
முத்தமிட்டுவிடுவேன் என்று பயமா? ஆனால் நீ என்னைத்
தழுவலாமோ?
உனது ஸ்பரிசம் என்னைப் புனிதனாக்கிவிட்டது.
நீ யார்?...
இன்று நீயேன் வரவில்லை? இன்று நிலவு காய்கிறது.
நிலவுக்கு நீ அவசியமில்லையா? அல்லது உனக்கு நிலவு
அவசியமில்லையா?
இன்று என் மனம் தகர்ந்துவிடுகிறதே? இப்பொழுது
வர மாட்டாயா?
உள்ளத்தில் ஒரு ஊழிக் கூத்து, ஊழியின் இறுதி... உனக்கு
இரக்கமில்லையா?
நீ யார்?...
இன்று நள்ளிரவு.
நீ வருவாய். வந்துவிட்டாய்! அடி, நீ யார்?
என்னை வாழ்விக்க வருகிறாயோ?
காதலா, கருணையா?
தாயின் அன்பா?
உன்னைத் தாய் என்று நினைக்க முடியவில்லை. நீ எனக்கு...
அடி, நீ யார்?
உன் முகத்திரையைக் களைந்தால் நீ என்ன செய்வாய்?
அடி, நீ யார்?"

பரமேச்வரம் வாசித்து முடிக்கும் பொழுது இரவு வெகு நேரமாகி விட்டது.

இதில் என்ன குற்றமிருக்கிறது? இருந்தால் அழித்துவிடத்தான் வேண்டுமா? அழித்தால் என்ன கிடைத்துவிடுகிறது? அழித்துத்தான் ஆக வேண்டுமா?

புது உலகத்தை சிருஷ்டிப்பவனை, இன்று உடலை அழித்துவிடலாம். அவன் பிரம்மா! அவனை அழிக்க முடியுமா? சமூகம் அசட்டுத்தனம் செய்யும்.

அரசாங்கம் எப்பொழுதும் இப்படித்தான். நமது அரசாங்கமாக இருந்தால் என்ன? அந்நியனுடையதாக இருந்தால் என்ன? சரித்திரத்தில் எங்கும் இப்படித்தான்.

கடமை இருக்கிறது. கடமை அவசியந்தான். கடமைக்காக எதையும் செய்துவிடுகிறதா?


புதுமைப்பித்தன் கதைகள்

127