பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழியிற் கூட்ட மரபுகள்

93


அழுந்தேன் நரகத் தியானென்
   றிருப்பவந் தாண்டுகொண்ட
செழுந்தேன் திகழ்பொழில் தில்லைப்
   புறவிற் செறுவகத்த
கொழுந்தேன் மலர்வாய்க் குமுதம்
   இவள்யான் குருஉச்சுடர்கொண்டு
எழுந்தாங்கு அதுமலர்த் தும்உயர்
   வானத்து இளமதியே.[1]

(புறவு - இளங்காடு; செறுவகத்த - வயலின் உற்றன வாகிய ; குருஉச்சுடர்-நிறத்தையுடைய நிலா; மலர்த்தும்- விகசிக்கும்) கூட்டத்தின் இறுதியில் நலனுகர்ந்த தலைவியின் மலர்ந்த முக மலர்ச்சி கண்டு, "என் காதற் களஞ்சியமே, இந் நள்ளிராப்போதில் நீ குமுத மலராகின்றனை; யான் அதனை மலர்த்தும் வெண்மதி யாகின்றனன்" என்று நலம் புனைந்துரைக்கின்றான். இங்ஙனம் கூறி மகிழும் தலைவன் உடனே அவளைத் 'தோழியொடு சேர்ந்து ஆயஞ் சென்று பள்ளியிடத்தே துயில்வாயாக; இரவு நேரமாதலால் இங்கு நெடிது பொழுது இராதே' என்று கூறிப் பிரிவான்.

இறையனார் அகப்பொருளாசிரியர் 'இரவுக்குறியே இல்வரை இகவாது’[2] என்று இரவுக்குறியை உணர்த்துவர். இக்குறி இல்லத்தைச் சார்ந்த இடத்தை விட்டு அகலாது என்பது கருத்து. இரவுக் குறிகள் இல்வரைப் பகத்தே நிகழும் என்பது குறிப்பு. அவ்வுரையாசிரியர் சில குறிகளையும் காட்டுவர்: "அட்டில், கொட்டகாரம், பண்டசாலை, கூடகாரம், பள்ளியம்பலம், உரிமையிடம், கூத்தப்பள்ளி என இவற்றுள் நீங்கிச், செய்குன்றும் இளமரக்காவும், பூம்பந்தரும் விளையாட்டிடமும், அவற்றைச் சார்ந்தனவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் ஆக என்றவாறு. எனவே, பகற்குறியிடம்போல வேறுபட்டது ஆகற்க இரவிற்குறியிடம் என்றவாறு. அஃதேயெனின், மனையகத்து ஆக வழியுண்டோ எனின், குரவர்கள் உறையும் இடமாதலின் தெய்வத் தானம்


  1. திருக்கோவை - 166
  2. இறை. கள. 19