திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/தோபித்து (தொபியாசு ஆக‌ம‌ம்)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"அப்பொழுது தோபியா இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து, தம் பையிலிருந்து மீனின் ஈரலையும் இதயத்தையும் எடுத்துக்கொண்டார். அவற்றை தூபத்திற்கான நெருப்பிலிட்டார். மீனிலிருந்து கிளம்பிய தீய நாற்றம் பேயைத் தாக்கவே அது பறந்து எகிப்துக்கு ஓடிப்போயிற்று. இரபேல் விரட்டிச் சென்று அதைக் கட்டி விலங்கிட்டார்... சாரா எழுந்து நின்றாள். அவர்கள் மன்றாடத் தொடங்கி, தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள்." - தோபித்து 8:2-3,5.

தோபித்து (The Book of Tobit)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

இரகுவேலின் வீட்டில்[தொகு]


1 அவர்கள் எக்பத்தானாவை அடைந்தபொழுது தோபியா அசரியாவிடம்,
"சகோதரர் அசரியா, உடனே என்னை
நம் உறவினர் இரகுவேலின் வீட்டிற்கு அழைத்துச் செல்லும்" என்றார்.
எனவே இரபேல் அவரை இரகுவேலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
இரகுவேல் தம் வீட்டு முற்றத்துக் கதவு அருகே அமர்ந்திருக்க அவர்கள் கண்டு
முதலில் அவரை வாழ்த்தினார்கள்.
அதற்கு அவர், "இளைஞர்களே, வணக்கம்.
உங்களுக்கு நலம் பெருகட்டும்" என்று அவர்களை வாழ்த்தினார்.
பின்னர், அவர்களை அவர் வீட்டிற்குள் அழைத்துச் சென்று,
2 "இவ்விளைஞர் என் உறவினர் தோபித்தைப்போல் இல்லையா?"
என்று தம் மனைவி எதினாவிடம் வியந்து கூறினார்.
3 எதினா அவர்களை, "இளைஞர்களே, எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார்.
அவர்கள் அவரிடம், "நாங்கள் நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட
நப்தலியின் மக்கள்" என்றார்கள்.
4 அதற்கு எதினா அவர்களிடம்,
"எங்கள் உறவினர் தோபித்தைத் தெரியுமா?" என்று கேட்டார்.
அவர்கள், "அவரை எங்களுக்குத் தெரியும்" என்றார்கள்.
பின்பு, "அவர் நலமா?" என்று கேட்டார்.
5 அவர்கள், "அவர் உயிரோடு, நலமாக இருக்கிறார்" என்றார்கள்.
"என் தந்தைதான் அவர்" என்றார் தோபியா.
6 உடனே இரகுவேல் துள்ளி எழுந்து அவரை முத்தமிட்டு
மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார்.
7 "தம்பி, உனக்கு மங்கலம் உண்டாகுக!
நீ ஒரு நல்ல, சிறந்த தந்தையின் மகன்!
தருமங்கள் செய்யும் நேர்மையான ஒரு மனிதர்
பார்வையை இழந்தது எத்துணை துயரமான செய்தி!"
என்று கூறித் தம் உறவினர் தோபியாவின் தோள் மீது சாய்ந்து அழுதார்.
8 அவருடைய மனைவி எதினாவும் தோபித்துக்காக அழுதார்.
அவர்களுடைய மகள் சாராவும் அழுதாள்.
9 பிறகு, இரகுவேல் தம் ஆடுகளுள் ஒன்றை அடித்து
அவர்களைச் சிறப்பாக உபசரித்தார்.


அவர்கள் குளித்தபின் கை அலம்பிவிட்டு
உணவு அருந்த அமர்ந்தார்கள்.
தோபியா அசரியாவிடம்,
"சகோதரரே, என் உறவினளான சாராவை
எனக்கு மணம் செய்துகொடுக்குமாறு இரகுவேலிடம் கேளும்" என்றார்.
10 இச்சொற்கள் இரகுவேலின் செவியில் விழுந்தன.
அவர் இளைஞரிடம், "நீ இன்று இரவு உண்டு பருகி மகிழ்வுடன் இரு.
தம்பி, என் மகள் சாராவை மணந்து கொள்ள
உன்னைத்தவிர உரிமை உள்ள மனிதர் வேறு எவரும் இல்லை.
உன்னைத்தவிர வேறு எவருக்கும் அவளைக் கொடுக்கவும்
எனக்கு அதிகாரம் இல்லை;
ஏனெனில் நீ என் நெருங்கிய உறவினன்.
ஆயினும், தம்பி, உன்னிடம் ஓர் உண்மையைக் கூற விரும்புகிறேன்.
11 அவளை நம் உறவினர்களுள் எழுவருக்கு மணமுடித்துக் கொடுத்தேன்.
அவளைக் கூடுவதற்கு நெருங்கிய அன்றிரவே
அவர்கள் அனைவரும் இறந்தார்கள்.
இப்பொழுது, தம்பி, உண்டு பருகு.
ஆண்டவர் உங்கள் இருவருக்கும் நல்லது செய்வார்" என்றார்.
அதற்குத் தோபியா, "நீங்கள் இதைப்பற்றி
ஒரு முடிவுக்கு வரும்வரை நான் உண்ணமாட்டேன், பருக மாட்டேன்" என்றார்.
இரகுவேல், "சரி, செய்கிறேன்;
மோசேயின் நூலில் விதித்துள்ளபடியே
அவளை உனக்கு மணமுடித்துக் கொடுப்பேன்.
உனக்கு அவளைக் கொடுக்கும்படி
விண்ணகத்தில் உறுதி செய்யப்பட்டு விட்டது.
ஆகவே உன் உறவினளை ஏற்றுக்கொள்.
இனி நீ அவளுக்கு உரியவன்; அவள் உனக்குரியவள்;
இன்று முதல் என்றுமே அவள் உன்னுடையவள்.
தம்பி, விண்ணக ஆண்டவர் இன்று இரவு உங்களைக் காப்பாராக;
உங்கள் மீது இரக்கமும் அமைதியும் பொழிவாராக" என்றார்.

தோபியா, சாரா திருமணம்[தொகு]


12 இரகுவேல் தம் மகள் சாராவை அழைக்க, அவள் வந்தாள்.
அவளது கையைப் பிடித்துத் தோபியாவிடம் கொடுத்தார்.
"மோசேயின் நூலில் விதித்துள்ள சட்டங்கள்,
முறைமைகளின்படி இவள் உனக்கு மனைவியாகிறாள்.
இவளை ஏற்றுக் கொண்டு உன் தந்தையின் வீட்டுக்கு இனிதே அழைத்துச் செல்.
விண்ணகக் கடவுள் உங்களுக்கு அமைதி அருள்வாராக" என்றார்.
13 பின்பு, அவர் சாராவின் தாயை அழைத்து
ஓர் ஏட்டைக் கொண்டுவரச் சொன்னார்.
மோசேயின் சட்டம் விதித்துள்ளபடி சாராவைத்
தோபியாவின் மனைவியாக்கும் திருமண ஒப்பந்தத்தை அதில் எழுதிக் கொடுத்தார்.
14 அதன் பின் அவர்கள் உண்டு பருகத் தொடங்கினார்கள்.
15 இரகுவேல் தம் மனைவி எதினாவை அழைத்து அவரிடம்,
"அன்பே, மற்றோர் அறையை ஏற்பாடு செய்து
அவளை அங்கு அழைத்துச் செல்" என்றார்.
16 இரகுவேல் தமக்குக் கூறியபடி அவர் சென்று
அறையில் படுக்கையை ஏற்பாடு செய்தார்;
தம் மகளை அங்கு அழைத்துச் சென்று, அவளுக்காக அழுதார்.
பிறகு கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவளிடம்,
"அஞ்சாதே, மகளே, விண்ணக ஆண்டவர்
உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார்.
துணிவுகொள், மகளே!" என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.


அதிகாரம் 8[தொகு]

பேய் சாராவைவிட்டு நீங்குதல்[தொகு]


1 அவர்கள் உண்டு பருகி முடித்தபின்
சாராவின் பெற்றோர் உறங்க விரும்பினர்;
எனவே மணமகனைப் படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்றனர்.
2 அப்பொழுது தோபியா இரபேலின் சொற்களை நினைவுகூர்ந்து,
தம் பையிலிருந்து மீனின் ஈரலையும் இதயத்தையும் எடுத்துக்கொண்டார்.
அவற்றை தூபத்திற்கான நெருப்பிலிட்டார்.
3 மீனிலிருந்து கிளம்பிய தீய நாற்றம் பேயைத் தாக்கவே
அது பறந்து எகிப்துக்கு ஓடிப்போயிற்று.
இரபேல் விரட்டிச் சென்று அதைக் கட்டி விலங்கிட்டார்.

தோபியா, சாராவின் மன்றாட்டு[தொகு]


4 சாராவின் பெற்றோர் வெளியில் சென்று அறையின் கதவை மூடினர்.
தோபியா படுக்கையிலிருந்து எழுந்து சாராவிடம்,
"அன்பே, எழுந்திரு. நம் ஆண்டவர் நம்மீது இரங்கிக்
காத்தருளுமாறு பணிந்து மன்றாடுவோம்" என்றார்.
5 சாரா எழுந்து நின்றாள்.
அவர்கள் மன்றாடத் தொடங்கி,
தங்களைக் காத்தருளுமாறு வேண்டினார்கள்.
தோபியா பின்வருமாறு வேண்டினார்:


"எங்கள் மூதாதையரின் இறைவா, போற்றி!
உமது பெயர் என்றென்றும்
எல்லாத் தலைமுறைகளுக்கும் போற்றி!
வானங்களும் உம் படைப்பு அனைத்தும்
எக்காலமும் உம்மைப் போற்றுக!


6 நீர் ஆதாமைப் படைத்தீர்;
அவருடைய மனைவி ஏவாளை அவருக்குத் துணையாகவும்
ஆதரவாகவும் உண்டாக்கினீர்.
அவர்கள் இருவரிடமிருந்தும் மனித இனம் தோன்றியது.
'மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று;
அவனுக்குத் தகுந்ததொரு துணையை உருவாக்குவோம்' என்று உரைத்தீர். [*]


7 இப்பொழுது என் உறவினள் இவளை
நான் மனைவியாக ஏற்றுக்கொள்வது இச்சையின் பொருட்டன்று,
நேர்மையான நோக்கத்தோடுதான்.
என்மீதும் இவள்மீதும் இரக்கம் காட்டும்;
நாங்கள் இருவரும் முதுமை அடையும்வரை
இணைபிரியாது வாழச் செய்யும்."


8 இருவரும் "ஆமென், ஆமென்" என்று கூறினர்.


9 அன்று இரவு உறங்கினர்.

இரகுவேலின் புகழ்ப்பா[தொகு]


10 இரகுவேல் எழுந்து தம் பணியாளர்களைத் தம்மிடம் அழைக்க,
அவர்கள் சென்று ஒரு குழி வெட்டினார்கள்.
"தோபியா அனேகமாக இறந்திருப்பான்.
அவ்வாறாயின் நாம் இகழ்ச்சிக்கும் நகைப்புக்கும் ஆளாவோம்" என்றார்.
11 அவர்கள் குழிவெட்டி முடித்தபொழுது,
இரகுவேல் வீட்டுக்குள் சென்று தம் மனைவியை அழைத்து,
12 "பணிப்பெண்களுள் ஒருத்தியை அனுப்பு.
அவள் உள்ளே சென்று,
தோபியா உயிரோடு இருக்கிறானா என்று பார்த்து வரட்டும்.
அவன் இறந்திருந்தால் எவரும் அறியா வண்ணம்
அவனைப் புதைத்துவிடலாம்" என்று கூறினார்.
13 எனவே அவர்கள் ஒரு பணிப்பெண்ணை அனுப்பினார்கள்;
விளக்கேற்றிக் கதவைத் திறந்தார்கள்.
பணிப்பெண் உள்ளே சென்று அவர்கள் ஒன்றாக
அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கக் கண்டாள்.
14 அவள் வெளியே வந்து,
தோபியா உயிருடன் இருக்கின்றார் என்றும்
அவருக்குத் தீங்கு எதுவும் நேரவில்லை என்றும் தெரிவித்தாள்.
15 அவர்கள் விண்ணகக் கடவுளைப் புகழ்ந்தார்கள்.
இரகுவேல் பின்வருமாறு மன்றாடினார்:


"கடவுளே, போற்றி!
எவ்வகை மெய்ப் புகழ்ச்சியும் உமக்கு உரித்தாகுக.
எக்காலமும் நீர் புகழப்பெறுவீராக.


16 என்னை மகிழ்வித்த நீர் போற்றி!
நான் அஞ்சியதுபோல் எதுவும் நடக்கவில்லை.
உம் இரக்கப் பெருக்கிற்கு ஏற்ப எங்களை நடத்தியுள்ளீர்.


17 தம் பெற்றோருக்கு ஒரே மகனும் ஒரே மகளுமான
இவர்கள் இருவருக்கும் இரக்கம் காட்டிய நீர் போற்றி.
ஆண்டவரே, இவ்விருவர்மீதும் இரங்கிக் காத்தருளும்.
இவர்கள் மகிழ்ச்சியும் இரக்கமும் பெற்று
நிறை வாழ்வு காணச் செய்தருளும்."


18 பின்னர் இரகுவேல் தம் பணியாளர்களிடம்,
பொழுது விடியுமுன் குழியை மூடிவிடுமாறு கூறினார்.

திருமண விழா[தொகு]


19 இரகுவேல் தம் மனைவியிடம் நிறைய அப்பம் சுடச் சொன்னார்.
அவரே மந்தைக்குச் சென்று இரண்டு காளைகளையும்
நான்கு ஆடுகளையும் ஓட்டி வந்து சமைக்கச் சொன்னார்.
அவர்கள் விருந்து ஏற்பாடு செய்தார்கள்.
20 இரகுவேல் தோபியாவை அழைத்து அவரிடம்,
"பதினான்கு நாள்கள் நீ இங்கிருந்து நகரக் கூடாது.
என்னுடன் உண்டு பருகி இங்கேயே தங்கியிரு;
சோர்வுற்றிருக்கும் என் மகளின் மனத்துக்கு மகிழ்வூட்டு.
21 என் உடைமையிலெலாம் பாதியை இப்பொழுதே எடுத்துக்கொள்.
உன் தந்தையின் வீட்டிற்கு நலமாகத் திரும்பு.
நானும் என் மனைவியும் இறந்ததும்
மற்றொரு பாதியும் உன்னைச் சேரும்.
அஞ்சாதே, தம்பி!
நான் உனக்குத் தந்தை; எதினா உனக்குத் தாய்.
இனிமேல் என்றும் நாங்கள் உன்னுடனும் உன் மனைவியுடனும் இருப்போம்.
துணிவுகொள் மகனே!" என்று கூறினார்.


குறிப்பு

[*] 8:6 = தொநூ 2:7, 17-23.


(தொடர்ச்சி): தோபித்து: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை