பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




ஊழித் தீயே, கடையனலே! பரிதியே! உன்னுடைய குதிரைகள் எங்கே?

நீ பனிப் பகைவன்; உன்னுடைய புரவிகள் பணியிலே புரள்கின்றனவா?

நீ சுடர், அதனால்தான் சுடுகிறாயா?

நீ பதங்கன்; அதனால் தான் என்னைப் பதப்படுத்தினாயா?

மார்த்தாண்டன் நீ, உன்னைத் தாண்டி யாரும் வர முடியாது.

என்னுழ் நீ; ஆகவே, நீ என்றும் இருப்பவன்!

அருணன் நீ, அரும்பைத் தொடர்ந்து ஆகாயம் வரை விரிந்து இருக்கிறாய்!

ஆதவன் நீ; உன்னுடைய ஆதரவு எமது உரிமைக்குத் தேவை!

நீ மித்திரன்; எனவே நீ என் உறவு!

நீ ஆயிரம் சோதி; எனவே உனக்கு ஆயிரம் பகை உண்டு!

நீ தரணி! இயல்பாகவே கோடைப் பரணி உன்னிடத்திலே உண்டு!

நீ செங்கதிர்; ஆகவேதான் - நீ காலையிலே மென்மையாக இருக்கின்றாய்!

கண்டன் நீ; என்றும் எவர்க்கும் எப்போதும் தோற்றதில்லை!

தபணன் நீ; உன்னிடத்திலே வைராக்கியம் உண்டு!

ஒளி நீ; உன் உருவத்தைத் தெளிவாக யாரும் கண்டு பிடித்ததில்லை - ஒளிந்துகொண்டே இருப்பவன்!

சான்றோன் நீ; உலக அறிவாளர்கள் உன்னை நோக்கி சிரம் தாழ்த்தி வணங்குகின்றனர்!

நீ எல்; எல்லாம் நீ!

நீ பார்க்கரன்; உன்னுடைய ஒளி நிறமே அதுதான்!