பூவை எஸ். ஆறுமுகம்
125
அந்நேரத்தில்–
"தந்தையே!” என்று வீறிட்டு அலறியவளாக மண்ணிலே மயங்கிச் சாயப்போன இளவரசி கன்யாகுமரியைத் தன்னுடைய பாசமும் நேசமும் கொண்ட இருகைகளாலும் ஆரத்தழுவிப் பற்றிக் கொண்டான், வேழ நாட்டரசன் விஜயேந்திரன்!
"அன்புத் தெய்வமே! மகளே கன்யா!”
மாமன்னர் பூபேந்திர பூபதி விம்மினார்; சுடுநீர்த் துளிகள் முடிசூடிச் சிதறின!
சிந்திச் சிதறிய பாசத்துளிகளின் தேவாமிர்தத்தை உடலும் உள்ளமும் உணர்ந்ததும், கனவு கண்டு விழிப்பவள் போன்று வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள், சிருங்காரபுரி இளவரசி கன்யாகுமரி. "தந்தையே! என்ன ஆயிற்று எனக்கு ? நான் இவ்வளவு நாழி வேழநாட்டின் மடியிலே ஏன் கிடந்தேன்?. என்னவோ நினைத்தேன்; தலை சுற்றத் தொடங்கியது. அவ்வளவுதான் தெரியும் எனக்கு!” என்று கூறியவளாகத் தந்தையின் மேனியில் சாய்ந்தாள். மறு நொடியில் சிலிர்த்துத் தலையை நிமிர்த்தினாள்: "வேழநாட்டு மன்னவா! எடுங்கள் உங்கள் வாளை!" என்று வீறு கொண்டு முழங்கினாள்; கண்பார்க்க மண்ணிலே புரண்டு கிடந்த தன்னுடைய உடைவாளை விரைந்தோடி எடுத்தாள், கன்யாகுமரி!
“இளவரசி வாழ்க!” என்று பாசமும் நேசமும் வீரமுழக்கமிட, ஏந்திய வாளுடன் தோன்றினான் விஜயேந்திரன்.
“மீண்டும் போரிடத் தொடங்குவோமா?”
“நான் தயார்!"
விஜயேந்திரன், கன்யாகுமரி இருவரின். இரு ஜோடி விழிகளும் ஈரம் சொட்டச் சொட்ட, ஆரத் தழுவிக் கொண்டன!
வேழநாட்டின் அரசன் விஜயேந்திரனின் வீரவாள், தன்னம்பிக்கையோடும் தன்மானத்தோடும் சுழன்றது.