நாலடிமேல் வைப்பு/ விலையுடை அருந்தமிழ்
திருஞானசம்பந்தர்
[தொகு]மூன்றாம் திருமுறை
[தொகு]பதிகம்: 262, திருவாவடுதுறை
[தொகு]- பதிகவரலாறு
ஞானசம்பந்தப்பெருமானின் தந்தையார் சிவபாதஇருதயர், பி்ள்ளையாரிடம் வேள்வி (யாகம்) செய்யப் பொன்வேண்டினார். அதனைக்கேட்ட பெருமான் திருவாவடுதுறை இறைவனிடம் முறையிடுகின்றார், தனக்குப் பொன் வேண்டுமென்ற உள்ளக்குறிப்புடன். ஆகவே, இது விலையுடை அருந்தமிழ் ஆனது; இது அரியதமிழ், இப்பதிகத்தைக் கேட்டதும் சிவபெருமான் பொன் -தங்கம்- தருகின்றார். எனவே, இது 'விலையுடை அருந்தமிழ்' எனப்பட்டது. இன்றும் செல்வம் வேண்டுவோர் இப்பதிகத்தினை இடைவிடாது பாராயணம் செய்வர்; அவர் வேண்டும் செல்வம் அவருக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை, அவ்வாறு பயன்பெற்றோரும் உண்டு.இனி அப்பதிகத்தினைக்காண்போம்.
- நாலடிமேல்வைப்பு. பண்- காந்தார பஞ்சமம்
- திருச்சிற்றம்பலம்
பாடல்:1 (இடரினும்)
[தொகு]- இடரினும் தளரினும் எனதுறுநோய்
- தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
- கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
- மிடறினில் அடக்கிய வேதியனே,
- இதுவோஎமை ஆறுமா றீவதொன்றெமக் கில்லையேல்
- அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பாடல்:2 (வாழினும்)
[தொகு]- வாழினும் சாவினும் வருந்தினும்போய்
- வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
- தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
- போழிள மதிவைத்த புண்ணியனே
- இதுவோஎமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
- அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பாடல்:3 (நனவினும்)
[தொகு]- நனவினும் கனவினும் நம்பாஉன்னை
- மனவினும் வழிபடல் மறவேனம்மான்
- புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
- கனல்எரி அனல்புல்கு கையவனே
- இதுவோஎமை ஆளுமா றீவதொன் றெமக்கில்லையேல்
- அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
பாடல்:4 (தும்மலொடருந்துயர்)
[தொகு]- தும்மலொ டருந்துயர் தோன்றிடினும்
- அம்மலர் அடியலால் அரற்றாதென்னாக்
- கைம்மல்கு வரிசிலைக் கண்யொன்றினால்
- மும்மதிள் எரியெழ முனிந்தவனே
- இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
- அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே
பாடல்:5 (கையதுவீழினும்)
[தொகு]- கையது வீழினும் கழிவுறினும்
- செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
- கொய்யணி நறுமலர் குலாயசென்னி
- மையணி மிடறுடை மறையவனே
- இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கி்ல்லையேல்
- அதுவோவுன தினனரு ளாவடுதுறை அரனே
பாடல்:6 (வெந்துயர்)
[தொகு]- வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
- எந்தாய் உன்னடியலால் ஏத்தாதென்னா
- ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
- சந்தவெண் பொடியணி சங்கரனே
- இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
- அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே.
பாடல்:7 (வெப்பொடு)
[தொகு]- வெப்பொடு விரவியோர் வினைவரினும்
- அப்பாவுன் அடியலால் அரற்றாதென்னா
- ஒப்புடை ஒருவனை உருவழிய
- அப்படி அழலெழ விழித்தவனே
- இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
- அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே
பாடல்:8 (பேரிடர்)
[தொகு]- பேரிடர் பெருகிஓர் பிணிவரினும்
- சிருடைக் கழல்அலால் சிந்தைசெய்யேன்
- ஏருடை மணிமுடி இராவணனை
- ஆரிடர் படவரை அடர்த்தவனே
- இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
- அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே
பாடல்:9 (உண்ணினும்)
[தொகு]- உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
- ஒண்மல ரடியலால் உரையாதென்னாக்
- கண்ணனும் கடிகமழ் தாமரைமேல்
- அண்ணலும் அளப்பரி தாயவனே
- இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
- அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே.
பாடல்:10 (பித்தொடு)
[தொகு]- பித்தொடு மயங்கியோர் பிணிவருனும்
- அத்தா உன்னடியலால் அரற்றாதென்னாப்
- புத்தரும் சமணரும் புறனுரைக்கப்
- பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
- இதுவோஎமை யாளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
- அதுவோவுன தின்னரு ளாவடுதுறை அரனே.
பாடல்:11 (அலைபுனல் ஆவடுதுறை)
[தொகு]- அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
- இலைநுனை வேற்படை யெம்மிறையை
- நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
- 'விலையுடை அருந்தமிழ்' மாலைவல்லார்
- வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம்
- நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே.
- திருச்சிற்றம்பலம்