திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
எசாயா இறைவாக்கினர். மைக்கிலாஞ்சலோ போனறோட்டி (1465-1564) வரைந்த சுவர் ஓவியம். வத்திக்கான் நகரம்.

எசாயா (The Book of Isaiah) [1][தொகு]

முன்னுரை


கி.மு. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எருசலேமில் வாழ்ந்த எசாயா இறைவனால் சிறப்பான முறையில் தெரிந்தெடுக்கப்பட்டு, கற்பிக்கப்பட்டு யூதா மக்களிடம் அனுப்பப்பட்டவர். இந்த மாபெரும் இறைவாக்கினரின் பெயரால் வழங்கப்பெறும் இந்நூலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) அதிகாரங்கள் 1 - 39: இக்காலத்தில் தென் நாடாம் யூதா வலிமை மிக்க அண்டை நாடான அசீரியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் யூதாவுக்கு வரவிருந்த அழிவுக்கு, அசீரியாவின் ஆற்றலைவிட, அந்த நாடு கடவுள் மீது நம்பிக்கை இழந்து அவருக்குப் பணியாது செய்த பாவங்களே உண்மையான காரணம் என்று எசாயா உணர்ந்தார். எனவே அவர் எழுச்சியூட்டும் சொற்களாலும் செயல்களாலும், அம்மக்களையும் அவர்கள் தலைவர்களையும் நேர்மையோடும் நீதியோடும் வாழுமாறு அழைத்தார். கடவுளுக்கு அவர்கள் செவிகொடாவிடில் இருளும் அழிவுமே காத்திருக்கின்றன என்று எச்சரித்தார். ஆயினும் தாவீதின் வழிமரபில் தோன்றவிருக்கும் ஓர் ஒப்பற்ற அரசர் மூலம், அனைத்துலகும் அமைதி பெறும் பொற்காலம் வரவிருந்ததையும் எசாயா முன்னறிவித்தார்.

2) அதிகாரங்கள் 40 - 55: இப்பகுதி யூதாவின் மக்களுள் பலர் பாபிலோனில் அடிமைகளாக நசுக்கப்பட்டு நம்பிக்கை இழந்து இருந்த காலத்தைச் சார்ந்தது. கடவுள் தம் மக்களை விடுவித்து அவர்களது சொந்த வீடான எருசலேமில் புது வாழ்வு வாழுமாறு அழைத்துச் செல்வார் என்று இறைவாக்கினர் முழக்கம் செய்தார். வரலாற்றின் ஆண்டவர் கடவுளே என்பதும் இஸ்ரயேலர் மூலமாக மாந்தர் அனைவரும் நற்செய்தி பெற்று, இறையாசி பெறுவர் என்பதும் இங்கு வலியுறுத்தப் பெறுகின்றன. இப்பகுதியில் காணப்பெறும் 'ஆண்டவரின் ஊழியன்' பற்றிய பாடல்கள் பழைய ஏற்பாட்டிலேயே மிகச்சிறந்த பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

3) அதிகாரங்கள் 56 - 66: இவற்றுள் பெரும்பாலானவை எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டவை. கடவுள் இஸ்ரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று இப்பகுதியில் வலியுறுத்தப்படுகின்றது: நேர்மை, நீதி, ஓய்வுநாள், பலி, மன்றாட்டு ஆகியவற்றின் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகின்றது. இயேசு பெருமான் தம் பணியின் தொடக்கத்தில் இந்நூலின் (61:1-2) சொற்களைக் கையாள்வது குறிப்பிடத்தக்கது.

எசாயா[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 1:1 - 12:6 1001 - 1020
2. வேற்றினத்தார்க்குரிய தண்டனைகள் 13:1 - 23:18 1020 - 1033
3. உலகின்மீது ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு 24:1 - 27:13 1033 - 1037
4. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 28:1 - 35:10 1037 - 1049
5. யூதாவின் அரசன் எசேக்கியாவும் அசீரியரும் 36:1 - 39:8 1049 - 1055
6. வாக்குறுதி, நம்பிக்கை உரைகள் 40:1 - 55:13 1055 - 1081
7. எச்சரிக்கைகளும் வாக்குறுதிகளும் 56:1 - 66:24 1081 - 1097

எசாயா[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]


1 உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர்
யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில்
யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து
ஆமோட்சின் எசாயா கண்ட காட்சி: [1]

கடவுள் தம் மக்களைக் கண்டித்தல்[தொகு]


2 விண்வெளியே கேள்; மண்ணுலகே செவிகொடு:
ஆண்டவர் திருவாய் மலர்ந்தருளுகின்றார்;
பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்;
அவர்களோ எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள்.


3 காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது;
கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத்
தெரிந்து கொள்கின்றது;
ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை;
என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை.


4 ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது;
அநீதி செய்வோரின் கூட்டம் இது;
தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது;
கேடுகெட்ட மக்கள் இவர்கள்;
ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்.
இஸ்ரயேலின் தூயவரை அவமதித்துவிட்டார்கள்;
அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.


5 நீங்கள் ஏன் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்?
என் கையால் பட்ட அடி போதாதா?
உங்கள் தலையெல்லாம் வடுக்கள்; இதயமெல்லாம் தளர்ச்சி.


6 உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை
உங்கள் உடலில் நலமே இல்லை;
ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள்,
சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன;
அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை, கட்டு போடப்படவில்லை,
எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.


7 உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது;
உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின;
வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே
உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்;
வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட உங்கள் நாடு
பாழடைந்து கிடக்கிறது.


8 மகள் சீயோன் திராட்சைத் தோட்டத்துக் குடில் போன்றும்
வெள்ளரித் தோட்டத்துக் குடிசை போன்றும்
முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும் கைவிடப்பட்டாள்.


9 படைகளின் ஆண்டவர் நம்மில் சிலரையேனும்
எஞ்சியிருக்கச் செய்யாவிடில்
சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்.
கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.

வெளிவேடக்காரருக்கு எதிராக[தொகு]


10 எருசலேமே,
உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும்,
சோதோம் கொமோராவைப் போன்றவர்களாயிருக்கின்றனர்;
நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்;
அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.


11 "எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?"
என்கிறார் ஆண்டவர்.
ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும்,
கொழுத்த விலங்குகளின் கொழுப்பும்
எனக்குப் போதுமென்றாகிவிட்டன;
காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள்
இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை.


12 நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது,
இவற்றையெல்லாம் கொண்டு வந்து
என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?


13 இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டுவர வேண்டாம்;
நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது;
நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை,
ஓய்வுநாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன்.


14 உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும்,
என் உள்ளம் வெறுக்கின்றது;
அவை என் மேல் விழுந்த சுமையாயின;
அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். [2]


15 என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும் போது,
பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்;
நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பதில்லை;
உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.


16 உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்;
உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்;
தீமை செய்தலை விட்டொழியுங்கள்;


17 நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்;
நீதியை நாடித் தேடுங்கள்;
ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்;
திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்;
கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.


18 "வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்"
என்கிறார் ஆண்டவர்;
"உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன;
எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்;
இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன;
எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.


19 மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்,
நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.


20 மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால்,
திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்;
ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்.

அநீதி நிறைந்த எருசலேம்[தொகு]


21 உண்மையாய் இருந்த நகரம்,
எப்படி விலைமகள் போல் ஆயிற்று!
முன்பு அந்நகரில் நேர்மை நிறைந்திருந்தது;
நீதி குடி கொண்டிருந்தது;
இப்பொழுதோ, கொலைபாதகர் மலிந்துள்ளனர்.


22 உன் வெள்ளி களிம்பேறிற்று;
உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.


23 உன் தலைவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்;
திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்;
கையூட்டு வாங்குவதற்கு ஒவ்வொருவனும் ஏங்குகின்றான்.
திக்கற்றோருக்கு அவர்கள் நீதி வழங்குவதில்லை;
கைம்பெண்ணின் வழக்குகளைத் தீர்ப்பதில்
கவனம் செலுத்துவதில்லை.


24 ஆதலால், படைகளின் ஆண்டவரும்
இஸ்ரயேலின் வல்லவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
என் எதிரிகளைப் பழிவாங்குவேன்;
என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத் தீர்த்துக்கொள்வேன்.


25 உனக்கு நேராக என் கைகளை நீட்டுவேன்;
உன்னை நன்றாகப் புடமிட்டு உன் களிம்பை நீக்குவேன்;
உன்னிடமுள்ள உலோகக் கலவை அனைத்தையும் நீக்குவேன்.


26 முன்னாளில் இருந்தது போலவே
உன் நீதிபதிகளைத் திருப்பிக் கொணர்வேன்;
தொடக்க காலத்தில் இருந்தது போலவே
உன் ஆலோசகர்களை மீண்டும் தருவேன்;
அப்பொழுது எருசலேம் 'நீதியின் நகர்' எனப் பெயர் பெறும்;
'உண்மையின் உறைவிடம்' எனவும் அழைக்கப்படும்.


27 நீதி சீயோனை மீட்கும்;
நேர்மை மனமாற்றம் அடைவோரை விடுவிக்கும்.


28 ஆனால் வன்முறையாளரும் பாவிகளும்
ஒருங்கே அழிந்தொழிவர்;
ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள் அனைவரும் இல்லாதொழிவர்;


29 நீங்கள் நாடி வழிபட்ட தேவதாரு மரங்களை முன்னிட்டு
மானக்கேடு அடைவீர்கள்;
நீங்கள் தெரிந்து கொண்ட சோலைகளை முன்னிட்டு
நாணுவீர்கள்;


30 ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த
தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்;
நீரின்றி வாடிப்போகும் சோலையைப் போலவும் இருப்பீர்கள்;


31 வலிமை மிக்கவன் சணற் கூளம் போலாவான்;
அவனுடைய கைவேலைப்பாடும் தீப்பொறியாகும்;
அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்;
நெருப்புத் தணலை அணைப்பார் எவரும் இரார்.


குறிப்புகள்

[1] 1:1 = 2 அர 15:1-7; 15:32-16:20; 18:1-20:21;
2 குறி 26:1-32:33.
[2] 1:11-14 = ஆமோ 5:21-22.

அதிகாரம் 2[தொகு]

முடிவில்லா அமைதி[தொகு]

(மீக் 4:1-3)


1 யூதாவையும் எருசலேமையும் குறித்து
ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி:


2 இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை
எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்;
எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்;
மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள்.


3 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து
'புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;
யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம்;
அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்;
நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள்.
ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்;
எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.


4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள
வழக்குகளைத் தீர்த்து வைப்பார்;
பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்;
அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும்,
தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்;
ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது;
அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். [*]

செருக்குற்றோரின் அழிவு[தொகு]


5 யாக்கோபின் குடும்பத்தாரே,
வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;


6 யாக்கோபின் குடும்பத்தாராகிய உம்முடைய மக்களை
நீர் கைவிட்டு விட்டீர்;
ஏனெனில், கீழை நாட்டுப் போதனை
அவர்களிடையே மிகுந்துள்ளது.
பெலிஸ்தியரைப் போல அவர்கள்
நிமித்தம் பார்க்கின்றார்கள்;
வேற்று நாட்டினருடன் கூட்டுச் சேர்கின்றார்கள்.


7 அவர்கள் நாடு வெள்ளி, பொன்னால் நிறைந்துள்ளது;
அவர்கள் கருவூலத்திற்கு அளவே இல்லை;
அவர்கள் நாடு குதிரைகளால் நிறைந்துள்ளது;
அவர்கள் தேர்ப்படைகள் எண்ணிக்கையில் அடங்கா.


8 அவர்கள் நாட்டில் சிலைகள் மலிந்துள்ளன;
தங்கள் கைவேலைப்பாட்டினால் செய்தவற்றை வணங்குகின்றனர்;
தங்கள் விரல்கள் உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.


9 இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்;
மக்கள் சிறுமை அடைவார்கள்;
ஆண்டவரே! அவர்களுக்கு மன்னிப்பு அருளாதீர்;


10 கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்;
மண்ணில் பதுங்கி மறைந்து கொள்ளுங்கள்;
ஆண்டவரின் அச்சம் தரும் திருமுன்னின்றும்
அவரது உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்;


11 செருக்குமிகு பார்வையுடையோர் தாழ்த்தப்படுவர்;
ஆணவமிக்கோர் அவமானமடைவர்;
ஆண்டவர் ஒருவரே அந்நாளில் மாட்சியுறுவார்.


12 படைகளின் ஆண்டவருக்குரிய நாள் ஒன்று இருக்கின்றது;
அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய அனைவரும் தாழ்வுறுவர்;
உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை
அனைத்தும் நலிவடையும்.


13 அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த
கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும்;
பாசானில் உள்ள அனைத்துக்
கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.


14 வானளாவிய மலைகள்,
உயர்ந்த குன்றுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.


15 உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும் தகர்த்தெறியப்படும்;
வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும்
தவிடு பொடியாக்கப்படும்.


16 தர்சீசின் மரக்கலங்கள் யாவும்
அழகிய வேலைப்பாடுகள் அனைத்தும் அமிழ்த்தப்படும்.


17 மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்;
அவர்தம் செருக்கு அகற்றப்படும்;
ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில்
உன்னதமானவராயிருப்பார்;


18 சிலைகள் அனைத்தும்
ஒருங்கே ஒழிக்கப்படும்.


19 ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது,
அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும்,
அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட
மனிதர் குன்றின் குகைகளில் புகுந்து கொள்வர்;
மண்ணின் குழிகளில் மறைந்து கொள்வர்.


20 அந்நாளில் மக்களினத்தார் தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய
வெள்ளிச் சிலைகளையும்,
பொற்பதுமைகளையும்,
அகழ் எலிகளுக்கும், வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.


21 ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய வரும்போது,
அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும்,
அவரது சீர்மிகு மாட்சியினின்றும் மறைந்திட
அவர்கள் பாறைகளின் வெடிப்புகளில் பதுங்கிக் கொள்வர்;
குன்றுகளின் பிளவுகளில் ஒளிந்து கொள்வர்.


22 நிலையற்ற மனிதர்மேல் நம்பிக்கை வைக்காதீர்;
அவர்களின் உயிர் நிலையற்றது;
ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு அவர்களின் தகுதி என்ன?


குறிப்பு

[*] 2:4 = யோவே 3:10.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை