திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

விக்கிமூலம் இலிருந்து
"குதிரைவீரர்கள் உன் வாயில்களில் அணிவகுத்து நின்றனர். யூதாவின் அரண் தகர்க்கப்பட்டது." - எசாயா 22:7-8

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 21 முதல் 22 வரை

அதிகாரம் 21[தொகு]

பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி[தொகு]


1 கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:


தென்னாட்டிலிருந்து சுழல்காற்றுகள் வீசுவதுபோல்,
அச்சம்தரும் நாடான பாலைநிலத்திலிருந்து
அழிவு வருகின்றது.


2 கொடியதொரு காட்சி எனக்குக் காண்பிக்கப்பட்டது:
நம்பிக்கைத் துரோகி துரோகம் செய்கின்றான்;
நாசக்காரன் நாசம் செய்கின்றான்.
'ஏலாம் நாடே! கிளர்ந்தெழு;
மேதியாவே! முற்றுகையிடு.'
அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும்
முடிவு வரச் செய்வேன்.


3 ஆதலால், என் அடிவயிறு வேதனையால் துடிக்கிறது.
பெண்ணின் பேறுகால வேதனைக்கு ஒத்த வேதனைகள்
என்னைக் கவ்விக் கொண்டன;
கலக்கமடைந்து செவிடன் போல் ஆனேன்;
திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.


4 என் மனம் பேதலிக்கிறது;
திகில் என்னை ஆட்கொண்டது;
நான் நாடிய கருக்கல் வேளை என்னை நடுக்கமுறச் செய்கிறது.


5 பந்தி தயார் செய்கிறார்கள்;
கம்பளத்தை விரிக்கிறார்கள்;
உண்கிறார்கள், குடிக்கிறார்கள்;
தலைவர்களே, எழுங்கள்;
கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.


6 ஏனெனில் என் தலைவர் எனக்குக் கூறியது இதுவே:
"நீ போய்க் காவலன் ஒருவனை நிறுத்திவை;
தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.


7 இருவர் இருவராய்க் குதிரைப்படை வீரர்கள்
அணிவகுத்து வருவதையும்,
கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும்
வீரர்கள் ஏறி வருவதையும் அவன் காணும்போது
மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்."


8 அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்:
"என் தலைவரே, பகல்முழுவதும் நான் காவல்
மாடத்தின்மேல் நின்று கொண்டிருக்கின்றேன்;
இரவெல்லாம் என் பணியில் நிறுத்தப்பட்டுள்ளேன்.


9 இதோ, ஒரு சோடிக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில்,
ஏறி ஒருவர் வருகின்றார்.
அவர் பதிலுரையாக, 'பாபிலோன் வீழ்ந்தது,
வீழ்ச்சியடைந்து விட்டது;
அதன் தெய்வங்களின் சிலைகள் அனைத்தும்
தரையில் மோதி உடைக்கப்பட்டாயிற்று' என்று கூறினார்." [*]


10 போரடிக்கப்பட்டுக் களத்தில் சிதறிக் கிடக்கும் என் மக்களே,
இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை
நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.

ஏதோம் பற்றிய செய்தி[தொகு]


11 தூமாவைப் பற்றிய திருவாக்கு:
சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு,
"சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?
சாமக்காவலனே, இரவு எப்போது முடியும்?"
என்று ஒருவர் கேட்க,


12 "காலை வருகிறது, அவ்வாறே இரவும்;
கேட்பதென்றால், கேளுங்கள்,
மீண்டும் திரும்பி வாருங்கள்" என்று சாமக்காவலன் கூறினான்.

அரேபியாவைக் குறித்த செய்தி[தொகு]


13 அரேபியாவைக் குறித்த திருவாக்கு:
தெதானின் வணிகப் பயணிகளே!
அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில்
நீங்கள் கூடாரம் அடியுங்கள்;


14 தேமா நாட்டில் குடியிருப்போரே!
தாகமுற்றோர்க்குத் தண்ணீர் கொண்டு வாருங்கள்;
அகதிகளை உணவுடன் சென்று சந்தியுங்கள்.


15 ஏனெனில், வாள்களுக்குத் தப்பி அவர்கள் ஓடுகின்றார்கள்;
உருவிய வாளுக்கும், நாணேற்றிய வில்லுக்கும்
போரின் கடுமைக்கும் அஞ்சி ஓடுகின்றார்கள்.


16 என் தலைவர் எனக்குக் கூறியது:
கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள்,
கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.
17 கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள்
எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர்.
ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய
ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.


குறிப்பு

[*] 21:9= திவெ 14:8; 18:2.


அதிகாரம் 22[தொகு]

எருசலேம் எச்சரிக்கப்படல்[தொகு]


1 காட்சிப் பள்ளத்தாக்கைக் குறித்த திருவாக்கு:


வீட்டுக்கூரைகளின் மேல் நீங்கள் அனைவரும் ஏறியிருக்கிறீர்களே,
உங்களுக்கு நிகழ்ந்தது என்ன?


2 ஆரவாரம் நிறைந்த நகரமே;
அக்களித்து அமர்க்களப்படும் பட்டணமே!
உங்களிடையே கொலை செய்யப்பட்டோர்
வாளால் வெட்டி வீழ்த்தப்படவில்லை,
போர்க்களத்திலும் செத்து மடியவில்லை.


3 உங்கள் தலைவர்கள் அனைவரும்
ஒருங்கே ஓட்டமெடுத்தார்கள்;
அம்பு எய்யாமலே அவர்கள் பிடிபட்டார்கள்;
உன்னிடத்தில் இருந்தவர் யாவரும்
வெகு தொலைவிற்குத் தப்பியோடியும்
கண்டுபிடிக்கப்பட்டு ஒருசேரக் கைதானார்கள்.


4 ஆதலால் நான் "என்னை உற்று நோக்காதீர்கள்,
நான் மனம் கசந்து கதறியழ விடுங்கள்;
என் மக்களாகிய மகளின் அழிவைக் குறித்து
என்னை தேற்ற முயலாதீர்கள்" என்றேன்.


5 ஏனெனில் அமளியும் திகிலும் நிறைந்த நாள் அது;
மக்கள் மிதிபடும் நேரம் அது.
என் தலைவராகிய படைகளின் ஆண்டவரது நாள் அது.
காட்சிப் பள்ளத்தாக்கில் இது நிகழ்கிறது;
மதிற் சுவர்கள் தகர்க்கப்படுகின்றன;
மலையை நோக்கி அபயக்குரல் எழுகிறது.


6 ஏலாம் நாட்டினர் அம்பறாத்தூணியை எடுத்துச்சென்றனர்,
தேர்ப்படையோடும் குதிரை வீரரோடும் புறப்பட்டனர்;
கீரைச் சார்ந்தோர் கேடயத்தின் உறையை அகற்றினர்.


7 மிகச்சிறந்த உன் பள்ளத்தாக்குகள்
தேர்ப்படைகளால் நிறைந்தன,
குதிரைவீரர்கள் உன் வாயில்களில்
அணிவகுத்து நின்றனர்.


8 யூதாவின் அரண் தகர்க்கப்பட்டது;
அந்நாளில் போர்க்கருவிகள் இருந்த
'வன மாளிகை'யை நாடினீர்கள்.


9 தாவீது நகரின் அரணில் பிளவுகள் பல இருப்பதை
நீங்கள் கண்டீர்கள்;
கீழ்க்குளத்துத் தண்ணீரைச் சேர்த்து வைத்தீர்கள்;


10 எருசலேமின் வீடுகளை எண்ணி முடித்தீர்கள்;
அரணுக்கு வலுவூட்ட வீடுகளை இடித்தீர்கள்.


11 இரு மதில்களுக்கும் இடையே
பழைய குளத்துத் தண்ணீருக்கென்று
ஒரு நீர்த்தேக்கத்தை அமைத்தீர்கள்.
ஆனால் அதை உருவாக்கியவரை நீங்கள் நாடவில்லை;
தொலையிலிருந்து அதை ஏற்படுத்தியவரை
நீங்கள் கண்ணோக்கவுமில்லை.


12 அந்நாளில் புலம்பவும், ஓலமிட்டுக் கதறி அழவும்
தலையை மொட்டை அடித்துக்கொள்ளவும் சாக்கு உடை உடுத்தவும்
படைகளின் ஆண்டவரான எம் தலைவர் ஆணையிட்டார்.


13 நீங்களோ, மகிழ்ந்து களிப்படைகின்றீர்கள்;
எருதுகளை அடித்து, ஆடுகளை வெட்டி,
இறைச்சியை உண்டு, திராட்சை இரசத்தைக் குடிக்கின்றீர்கள்.
'உண்போம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்' என்கின்றீர்கள். [1]


14 படைகளின் ஆண்டவர் நான் என் காதால் கேட்குமாறு
வெளிப்படுத்தியது:
"நீங்கள் சாகும்வரை இத் தீச்செயலின் கறை
கழுவப்படவேமாட்டாது," என்கிறார்
என் தலைவராகிய படைகளின் ஆண்டவர்.

செபுனாவுக்கு வந்த கண்டனம்[தொகு]


15 என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
அரண்மனைப் பொறுப்பாளனும் அதிகாரியுமாகிய
செபுனாவிடம் சென்று நீ சொல்லவேண்டியது:
16 "நீ உனக்கென்று ஒரு கல்லறையை வெட்டியிருக்கிறாய்;
உயர்ந்த இடத்தில் அக்கல்லறை இருக்குமாறு அமைத்திருக்கிறாய்;
பாறையில் உனக்கொரு தங்குமிடத்தைக் குடைந்துள்ளாயே?
இங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்?
இங்கே உனக்கு என்ன வேலை?
17 ஓ மனிதா, ஆண்டவர் உன்னைத் தள்ளிவிட்டுத்
தூக்கி எறிவார்;
உன்னைக் கெட்டியாய் மடக்கிப் பிடித்து,
18 சுற்றிச் சுற்றி உன்னைச் சுழற்றி,
பரந்து விரிந்த நாட்டிலே பந்தாடுவார்.
அங்கே நீ செத்துமடிவாய்.
உன் தலைவனின் குடும்பத்திற்கு இழுக்கானவனே,
உன் மேன்மைமிகு தேர்ப் படைக்கும் அதே நிலைதான்.
19 உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்;
உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.
20 அந்நாளில் இல்க்கியாவின் மகனும்
என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து,
21 உன் அங்கியை அவனுக்கு உடுத்தி,
உன் கச்சையை அவன் இடுப்பில் கட்டி,
உன் அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன்.
எருசலேமில் குடியிருப்போருக்கும்
யூதா குடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான்.
22 அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலை
அவன் தோளின் மேல் வைப்பேன்.
அவன் திறப்பான்; எவனும் பூட்டமாட்டான்.
அவன் பூட்டுவான்; எவனும் திறக்கமாட்டான். [2]
23 உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்;
அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு
மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்;
24 ஆனால், அவன் தந்தை குடும்பத்தினராகிய
பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும்
சிறு கலயங்கள், கிண்ணங்கள் முதல்,
கலயங்கள், குடங்கள் வரையுள்ள
அனைத்துக் கலங்களைப் போல்
அவன்மேல் சுமையாக மாட்டித் தொங்கினர்.
25 படைகளின் ஆண்டவர் உரைத்தது:
அந்நாளில் உறுதியான இடத்தில் அடிக்கப்பட்ட முளை
பெயர்ந்து முறிந்து கீழே விழும்.
அதில் தொங்கிய சுமையும் வீழ்ந்து அழியும்,
என்கிறார் ஆண்டவர்.


குறிப்புகள்

[1] 22:13 = 1 கொரி 15:32.
[2] 22:22 = திவெ 3:7.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை