திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

விக்கிமூலம் இலிருந்து
"ஆண்டவரே, நீரே என் கடவுள்...புயற்காற்றில் புகலிடமாகவும், கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்." - எசாயா 25:1,4

எசாயா (The Book of Isaiah)[தொகு]

அதிகாரங்கள் 25 முதல் 26 வரை

அதிகாரம் 25[தொகு]

ஆண்டவருக்குப் புகழ்ச்சிப் பா[தொகு]


1 ஆண்டவரே, நீரே என் கடவுள்;
நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்;
உம் பெயரைப் போற்றுவேன்;
நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்;
நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும்
உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.


2 ஏனெனில், நீ நகரத்தைக் கற்குவியலாக்கினீர்;
அரண்சூழ்ந்த பட்டணத்தைப் பாழடையச் செய்தீர்;
அயல் நாட்டினரின் கோட்டை அது;
இனி நகராய் இராது;
என்றுமே கட்டி எழுப்பப்படாது.


3 ஆதலால் வலிமைமிகு மக்களினம் உம்மைப் பெருமைப்படுத்தும்;
முரடரான வேற்றின நகரத்தினர் உமக்கு அஞ்சுவர்.


4 ஏழைகளுக்கு நீர் அரணாய் இருக்கின்றீர்;
வறியவனுக்கு அவன் துன்பத்தில் உறைவிடம் நீரே;
புயற்காற்றில் புகலிடமாகவும்,
கடும் வெப்பத்தில் குளிர் நிழலாகவும் திகழ்கின்றீர்;
ஏனெனில் முரடர்களின் சீற்றம் மதிற்சுவரை
மோதித் தாக்கும் பெரும் புயல் போலும்,


5 வறண்ட நிலத்தில் வெப்பம் போலும் இருக்கும்.
கார்மேக நிழல் வெயிலைத் தணிப்பது போல்
அயல் நாட்டவரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடங்கச் செய்கின்றீர்;
முரடர்களின் ஆரவாரம் அடங்கிவிட்டது.

ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்து[தொகு]


6 படைகளின் ஆண்டவர் இந்த மலையில்
மக்களினங்கள் அனைவருக்கும்
சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்;
அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும்,
கொழுப்பான இறைச்சித் துண்டுகளும்,
வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும்.


7 மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை
இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்;
பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார்.


8 என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்;
என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும்
கண்ணீரைத் துடைத்து விடுவார்;
தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை
இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்;
ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். [1]


9 அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்:
இவரே நம் கடவுள்;
இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்;
இவர் நம்மை விடுவிப்பார்;
இவரே ஆண்டவர்;
இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;
இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்."

மோவாபுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]


10 ஆண்டவரின் ஆற்றல் இம் மலையில் தங்கியிருக்கும்;
எருக்குழி நீரில் வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல்,
மோவாபு அவரால் மிதிக்கப்படுவான். [2]


11 நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல்,
மோவாபு தன் கைகளை விரிப்பான்;
ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும்
கைவினைச் செயல்களையும் விழச் செய்வார்.


12 வானாளவ உயர்ந்துநிற்கும் உன் அரண்களை
அவர் விழத் தள்ளி, தரைமட்டமாக்குவார்;
அவை புழுதியோடு புழுதியாகி மண்ணோடு மண்ணாகும்.


குறிப்புகள்

[1] 25:8 = 1 கொரி 15:54; திவெ 7:74; 21:4.
[2] 25:10 = எசா 15:1-16:14; எரே 48:1-47;
எசே 25:8-11; ஆமோ 2:1-3; செப் 2:8-11.


அதிகாரம் 26[தொகு]


1 அந்நாளில் யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்:
நமக்கொரு வலிமைமிகு நகர் உண்டு;
நம்மைக் காக்க அவர் கொத்தளங்களை அமைத்துள்ளார்;


2 வாயில்களைத் திறந்துவிடுங்கள்;
அவர்மீது நம்பிக்கை கொண்ட
நேர்மையான மக்களினம் உள்ளே வரட்டும்.


3 அவர்கள் மனஉறுதி கொண்டவர்கள்;
உம்மீது நம்பிக்கை உடையவர்கள்;
அவர்களை அமைதியால் நீர் உறுதிப்படுத்துகின்றீர்.


4 ஆண்டவர்மீது என்றென்றும் நம்பிக்கை கொள்ளுங்கள்;
ஏனெனில், ஆண்டவர், என் ஆண்டவர் என்றுமுள கற்பாறை!


5 உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்;
வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்;
அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக,
மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார்.


6 காலடிகள் - எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் -
அதை மிதிக்கும்.


7 நீதிமான்களின் நெறிகள் நேரியவை;
நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர்.


8 ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து,
உமக்காகக் காத்திருக்கிறோம்,
உமது திருப்பெயரும் உமது நினைவும்
எங்களுக்கு இன்பமாய் உள்ளன.


9 என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது;
எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது;
உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில்
வாழ்வோர் நேர்மையைக் கற்றுக் கொள்வர்.


10 கொடியவர்களுக்கு நீர் இரக்கம் காட்டினாலும்
அவர்கள் நேரியன செய்யக் கற்றுக் கொள்வதில்லை;
நேர்மை நிறைந்த நாட்டில் அவர்கள் அநீதி செய்கின்றனர்;
ஆண்டவரின் மாட்சியை அவர்கள் காண்பதில்லை.


11 ஆண்டவரே, ஓங்கிய உம் கையை அவர்கள் காண்பதில்லை;
உம் மக்கள்மீது நீர் கொண்ட பேரார்வத்தை அவர்கள் கண்டு நாணட்டும்!
உம் பகைவர்களுக்காக மூட்டிய தீ அவர்களை விழுங்கட்டும்! [1]


12 ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்!
ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும்
எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே.


13 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே,
உம்மைத்தவிர வேறு தலைவர்கள் எங்கள்மேல் ஆட்சி செலுத்தினார்கள்;
ஆனால், உமது பெயரைமட்டுமே நாங்கள் போற்றுகின்றோம்.


14 அவர்கள் செத்து மடிந்தார்கள், இனி உயிர்வாழ மாட்டார்கள்.
அவர்களின் நிழல்கள் உயிர்பெற்றெழ மாட்டா;
ஏனெனில் நீர் அவர்களைத் தண்டித்து, அழித்துவிட்டீர்;
அவர்களைப் பற்றிய நினைவுகள் யாவற்றையும் இல்லாததொழித்தீர்.


15 இந்த இனம் வளரச் செய்தீர்;
ஆண்டவரே, இந்த இனம் வளரச் செய்தீர்;
நீர் மாட்சியுடன் விளங்குகின்றீர்;
நாட்டின் எல்லைகள் அனைத்தையும் விரிவுபடுத்தினீர்.


16 ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்;
நீர் எங்களைத் தண்டிக்கும்போது,
உம்மை நோக்கி மன்றாடினோம்.


17 பேறுகாலம் நெருங்குகையில்,
கருவுற்றவள் தன் வேதனையில்
வருந்திக் கதறுவதுபோல்,
ஆண்டவரே, நாங்களும்
உம் முன்னிலையில் இருக்கின்றோம்!


18 நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்;
ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்;
நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை;
உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை.


19 இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்;
அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்;
புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்;
ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி;
இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச்செய்கின்றீர். [2]

தண்டனையும் முன்னைய நிலைக்குக் கொணரலும்[தொகு]


20 என் மக்களே!
நீங்கள் போய் உங்கள் அறைக்குள் நுழைந்து,
உள்ளிருந்து கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள்;
கடும் சினம் தணியும்வரை சற்று ஒளிந்து கொள்ளுங்கள்.


21 மண்ணுலகில் வாழ்வோர் தமக்கு எதிராகச் செய்த
தீச் செயலுக்குத் தண்டனை வழங்க,
ஆண்டவர் தம் திருத்தலத்திலிருந்து புறப்படுகின்றார்;
மண்ணுலகம் தன் இரத்தப்பழியை வெளிக் கொணரும்;
அதில் கொலை செய்யப்பட்டவர்களை இனியும் அது மூடிமறைக்காது.


குறிப்பு

[1] 26:11 = எபி 10:27.
[2] 26:19 = தானி 12:2.


(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 27 முதல் 28 வரை