சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு/பயங்கரக் குகை

விக்கிமூலம் இலிருந்து
38. பயங்கரக் குகை


சேனாதிபதி பரஞ்சோதியிடம் ஒற்றர் தலைவன் சத்ருக்னன் என்றுமில்லாத பதைபதைப்போடு கூறிய வரலாறு வருமாறு: சேனாதிபதியும், சக்கரவர்த்தியும் கட்டளையிட்டபடி சத்ருக்னனும் குண்டோ தரனும் நகரத்துக்குள் போவதற்கு இரகசியச் சுரங்க வழி இருக்கிறதா என்று கோட்டையைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் தேட ஆரம்பித்தார்கள். காபாலிகர்களின் பலி பீடத்துக்கு அருகிலுள்ள மேடும் பள்ளமுமான பாறைகளிலேதான் சுரங்க வழி இருந்தால் இருக்கவேணுமென்று அந்தப் பாறைகளிலேயெல்லாம் நுணுக்கமாகத் தேடிக் கொண்டிருந்தார்கள். அப்படித் தேடி வரும் போது ஒருநாள் இரவில் ஏதோ தீ எரிவதைப் பார்த்து அதன் அருகே சென்றார்கள். தீயின் அருகில் ஒரு மனிதனும் ஸ்திரீயும் காணப்பட்டனர். அந்த மனிதன் நாகநந்தி பிக்ஷு என்று தெரிந்தது. ஸ்திரீயோ பயங்கரத் தோற்றம் கொண்ட காபாலிகை. அவர்களுடைய சம்பாஷணையை மறைந்திருந்து ஒற்றுக் கேட்டதில் விளக்கமாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால், புலிகேசி, சிவகாமி என்ற பெயர்கள் அடிக்கடி கேட்டன. காபாலிகையைத் தமக்காக ஏதோ ஒத்தாசை செய்யும்படி நாகநந்தி கேட்டுக் கொண்டிருந்ததாக மட்டும் தெரிந்தது. பொழுது விடியும் சமயத்தில் பிக்ஷுவும் காபாலிகையும் ஒரு குகையை மூடியிருந்த பாறையை உருட்டித் தள்ளிவிட்டுக் குகைக்குள்ளே போனார்கள். அவர்கள் உள்ளே போனதும் குகைத் துவாரம் மறுபடியும் மூடப்பட்டது.

சத்ருக்னனும் குண்டோ தரனும் வெகு நேரம் காத்திருந்து பார்த்த பிறகு அந்தப் பாறையைத் தாங்களும் பெயர்த்துத் தள்ளிவிட்டுக் குகைக்குள்ளே போகலாமென்று எண்ணினார்கள். அதே சமயத்தில் உட்புறமிருந்து பாறை அசைக்கப்பட்டதைக் கண்டு நல்லவேளையாக ஓடி ஒளிந்து கொண்டார்கள். காபாலிகை மட்டும் வெளியில் வந்தாள். அவள் குகை வாசலைவிட்டு அப்பால் போகும் சமயத்தில் குகைக்குள்ளே போய்ப் பார்க்கலாம் என்று காத்திருந்தார்கள். பகலெல்லாம் அவள் குகைத் துவாரத்தை விட்டு அசையவில்லை. சாயங்கால வேளையில் அவள் கொஞ்சம் அப்பால் போன சமயம், குண்டோ தரனை வெளியில் நிறுத்திவிட்டுச் சத்ருக்னன் மட்டும் குகைக்குள் நுழைந்தான். அப்பா! அந்தக் குகையின் பயங்கரத்தை நினைத்தால் இனிமேல் வாழ்நாள் முழுதும் இரவில் தூக்கமே வராது. அப்படி மனிதரின் மண்டை ஓடுகளும் எலும்புகளும் அங்கே குவிந்து கிடந்தன. நாற்றமோ சகிக்க முடியவில்லை. குகைக்குள்ளே ஒரே இருட்டாகயிருந்தபடியால் அதற்குள் சுரங்க வழி இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. திடீரென்று கொஞ்சம் தெரிந்த வெளிச்சமும் மறைந்துவிட்டது. சத்ருக்னன் தான் நுழைந்து வந்த துவாரம் எங்கே என்று பார்த்தான். துவாரம் இருந்த இடம் தெரியவில்லை. காபாலிகை வெளியில் இருந்தபடியே குகைத் துவாரத்தை அடைத்துவிட்டாள் என்று ஊகித்ததும் அவன் அடைந்த திகிலைச் சொல்லமுடியாது. கபாலங்களும் எலும்புகளும் கும்மிருட்டும் துர்நாற்றமும் நிறைந்த அந்தப் பயங்கரக் குகைக்குள்ளே அவன் எத்தனை நேரம் கழித்தானோ தெரியாது. எவ்வளவோ முயற்சி செய்தும் துவாரம் இருந்த இடத்தையே அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நாலு யுகங்கள் என்று தோன்றிய காலம் அவன் அந்த இருண்ட குகைக்குள்ளே அங்குமிங்கும் பயனின்றி அலைந்து உழன்ற பிறகு திடீரென்று சிறிது வெளிச்சம் ஒரு பக்கத்தில் காணப்பட்டது. குகையின் துவாரம் திறந்தது; காபாலிகை உடனே உள்ளே நுழைந்தாள். அவள் கையில் ஒரு மனிதக் கபாலமும் எலும்புகளும் கொண்டு வந்தாள். சத்ருக்னன் குகையின் ஒரு கோடியில் சென்று பாறைச் சுவரோடு ஒட்டிக் கொண்டு நின்றான். காபாலிகை கையில் கொண்டுவந்த கபாலத்தையும் எலும்புகளையும் ஓரிடத்தில் தனியாகப் பத்திரப்படுத்தி வைத்த பிறகு குகையின் மத்தியில் தரையில் உட்கார்ந்து ஒரு பெரிய பாறாங்கல்லைப் பெயர்த்தாள். பெயர்த்த இடத்தில் அவள் இறங்கியபோது, அதுதான் சுரங்க வழியாயிருக்க வேண்டும் என்று சத்ருக்னன் ஊகித்துக் கொண்டான். இத்தனை நேரம் அந்தப் பயங்கரக் குகையில் ஆகாரம் தண்ணீர் இன்றிக் காத்திருந்தது வீண் போகவில்லை என்று எண்ணிச் சந்தோஷப்பட்டான். சுரங்கத்தில் இறங்கிய காபாலிகை தன் மனத்தை மாற்றிக் கொண்டாள் என்று தோன்றியது. மறுபடியும் மேலே ஏறினாள், திறந்த சுரங்கவாயை மறுபடியும் மூடிவிட்டு அதன்மேல் படுத்துத் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தாள்.

அவளுடைய பேச்சிலிருந்து சில முக்கிய விஷயங்கள் தெரியவந்தன. அவள் நாகநந்தி என்கிற புத்த பிக்ஷுவை காதலித்தாள் என்றும், அதன் காரணமாகச் சிவகாமியைத் துவேஷித்தாள் என்றும், புலிகேசி இறந்து விட்டான் என்றும், அவனுடைய எலும்பையும் கபாலத்தையும் தான் அவள் சற்றுமுன் குகைக்குள் கொண்டு வந்தாள் என்றும், நாகநந்தி பிக்ஷு புலிகேசியைப் போல் வேஷம் போட்டு நடித்து வாதாபிச் சக்கரவர்த்தியாகி, சிவகாமியைச் சக்கரவர்த்தினியாக்க விரும்புகிறார் என்றும் அதைத் தடுக்க இந்தக் காபாலிகை கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாள் என்றும் தெரிந்தது. வெகு நேரம் இப்படி அவள் தனக்குத்தானே பிதற்றிக் கொண்டிருந்த பிறகு மௌனமானாள். அவள் தூங்குகிறாள் என்று எண்ணிய சத்ருக்னன் அந்தச் சமயத்தில் தப்பி வெளியேறத் தீர்மானித்தான். திறந்திருந்த குகைத் துவாரத்தை நோக்கி மெள்ள மெள்ள அடிவைத்து நடந்தான். துவாரத்துக்கருகில் வந்ததும் விரைவாக அதில் நுழைந்து வெளியில் குதித்தான். குதித்த அதே சமயத்தில் அவனுடைய ஒரு கையைக் குகைக்குள்ளேயிருந்து யாரோ பற்றினார்கள், சத்ருக்னன் திடுக்கிட்டுப் பார்த்தான். காபாலிகை குகையின் உட்புறத்தில் நின்றபடி அவனுடைய ஒரு கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பயங்கரமாக உறுமினாள். சத்ருக்னனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. 'செத்தோம்' என்று எண்ணிக் கொண்டான். ஆயினும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளக் கடைசி முயற்சியாகக் கையைத் திமிறினான். எனினும், காபாலிகையின் இரும்புப் பிடியிலிருந்து அவனால் விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

காபாலிகை அப்போது, "லம்போதரா! லம்போதரா" என்று கூவினாள். "இதோ வந்துவிட்டேன், தாயே!" என்று குண்டோ தரன் பக்கத்துப் பாறை மறைவிலிருந்து ஓடிவந்ததைப் பார்த்ததும் சத்ருக்னனுக்கு வியப்பினால் வாய் அடைத்துப் போயிற்று. சத்ருக்னனைப் பார்த்துக் குண்டோ தரன் கண்களினால் சமிக்ஞை செய்து கொண்டே அவனருகில் ஓடிவந்தான். குகையின் உள்ளே நின்ற காபாலிகை, "லம்போதரா! இந்தத் திருட்டு ஒற்றனைச் சற்றே பிடித்துக் கொள், கத்தியை எடுத்துக் கொண்டு வருகிறேன் விட்டு விடமாட்டாயே?" என்றாள். "ஒருநாளும் விடமாட்டேன், அம்மா! இவனை முதல் பலி நானே கொடுக்கப் போகிறேன்!" என்று சொல்லிச் சத்ருக்னனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் குண்டோ தரன். காபாலிகை உள்ளே சென்றாள், உடனே குண்டோ தரன் சத்ருக்னனுக்குச் சமிக்ஞை காட்டிப் பிடியையும் தளர்த்த, சத்ருக்னன் தன்னை விடுவித்துக் கொண்டு ஓடினான். குண்டோ தரன் பெருங் கூச்சல் போட்ட வண்ணம் அவனைத் துரத்திக் கொண்டு ஓடினான். கொஞ்ச தூரத்தில் ஒரு பாறை மறைவுக்கு வந்ததும் குண்டோ தரன் நின்று, "சுவாமி! உங்களுடைய கதி என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்வதற்காக இந்தக் காபாலிகையின் சிஷ்யப்பிள்ளை ஆனேன். என்னைப்பற்றிக் கவலை வேண்டாம்; நான் இங்கிருந்து இவளைச் சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் சீக்கிரம் போங்கள்; கோட்டைத் தாக்குதல் ஆரம்பமாகி விட்டதாகத் தோன்றுகிறது!" என்றான். "குகைக்குள்ளே சுரங்க வழி இருக்கிறது, குண்டோ தரா! நான் போய்ச் சேனாதிபதியிடம் சொல்லி ஆட்களுடன் வந்து சேருகிறேன். அதுவரை நீ இந்த ராட்சஸியை எப்படியாவது சமாளித்துக் கொண்டிரு. அவளைச் சுரங்க வழியில் போக விடாதே!" என்று சத்ருக்னன் சொல்லி விட்டு ஓட்ட ஓட்டமாகச் சேனாதிபதியைத் தேடி ஓடி வந்தான். பிறகு குண்டோ தரனுடைய கதி என்ன ஆயிற்று என்பது சத்ருக்னனுக்குத் தெரியாது.

மேற்கூறிய வியப்பும் பயங்கரமும் நிறைந்த வரலாற்றைக் கேட்டதும், சேனாதிபதி பரஞ்சோதி, "சத்ருக்னா! ரொம்பவும் அவசரமான சமயத்தில் இப்படிப்பட்ட முக்கியச் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறாய். நன்றாய் யோசிப்பதற்குக் கூட நேரம் இல்லை. கோட்டைத் தாக்குதலோ ஆரம்பமாகிவிட்டது. நாளைப் பொழுது விடிவதற்குள் கோட்டைக்குள் பிரவேசித்து விடுவோம். எல்லாவற்றுக்கும் நீ நூறு வீரர்களுடன் அந்தக் காபாலிகையின் குகை வாசலுக்குப் போ! சுரங்க வழி மூலமாக யாரும் வெளியில் தப்பித்துக் கொண்டு போகாமல் பார்த்துக்கொள். முடிந்தால் நீயும் குண்டோ தரனும் சுரங்க வழியாகக் கோட்டைக்குள்ளே வந்து சேருங்கள். கோட்டை வாசல் திறந்ததும் நான் நேரே சிவகாமி தேவியின் வீட்டிற்குச் செல்கிறேன். கணேசரின் கருணை இருந்தால் சிவகாமி தேவியைக் காப்பாற்றி ஆயனரிடம் ஒப்புவிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும்" என்று கவலையோடு கூறினார்.