அலை ஓசை/பூகம்பம்/வாசலில் ரகளை

விக்கிமூலம் இலிருந்து

கிட்டாவய்யரின் மனைவி சிறிது நேரம் வாசலில் கால்கடுக்க நின்று லலிதாவை எதிர்பார்த்தாள். பிறகு சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்து பார்த்தாள். வீதியோடு யாராவது புருஷர்கள் சென்றால் உடனே எழுந்து ரேழியில் போய் நின்று கொள்வாள். இரண்டொரு தடவை வீட்டுக்கு உள்ளேயும் போய் விட்டு வந்தாள். கடைசியாக லலிதா கையில் பிடித்த கடிதத்துடனும் கண்ணில் கண்ணீருடனும் துணைக்குத் தபால்கார பாலகிருஷ்ணனுடனும் வருகிறதைப் பார்த்ததும் சரஸ்வதி அம்மாள் மனம் கலங்கி விட்டாள். பாய்ந்து சென்று குழந்தையைத் தாவி கட்டிக்கொண்டு, "அடிப்பெண்ணே! என்னடி விஷயம்? நான் பயப்பட்டது சரியாய்ப் போய்விட்டதே?... பாலகிருஷ்ணா! குழந்தை ஏன் அழுகிறாள்? தடுக்கி விழுந்து விட்டாளா?" என்று அலறினாள். மனக் குழப்பத்தினால் அக்கம் பக்கத்து வீட்டு ஆண் பிள்ளைகள் வாசலில் வந்து நிற்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை.

அம்மா இவ்விதம் கேட்டதும் லலிதாவின் தேம்பல் அதிகமாயிற்று. ஆனால் பாலகிருஷ்ணன், "அதெல்லாம் ஒன்றுமில்லை, அம்மா! பம்பாயிலிருந்து ஏதோ கடிதம் வந்திருக்கு! அதைப் படித்துவிட்டுக் குழந்தை அழுகிறது!" என்றான். "இவ்வளவுதானே? கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது? லலிதா! என்ன தான் இருந்தாலும் நீ எதற்காக அழவேண்டும்," என்று சரஸ்வதி அம்மாள் கேட்டாள். இதற்கும் லலிதாவிடமிருந்து பதில் வராமல் போகவே சரஸ்வதி அம்மாளுக்குக் கோபம் வந்துவிட்டது. "யாராவது செத்துக்கித்துத் தொலைந்து போய்விட்டார்களா என்ன? நீ சொல்லாவிட்டால் நானாகப் பார்த்துக் கொள்கிறேன்!" என்று லலிதாவின் கையிலிருந்த கடிதத்தைப் பிடுங்கினாள்.

கொல்லைக் கிணற்றில் விச்ராந்தியாகக் குளித்துவிட்டு அப்போதுதான் வீட்டுக் கூடத்துக்கு வந்து கிட்டாவய்யர் வாசலில் நடந்த கலாட்டா சத்தத்தைக் கேட்டு விட்டு வெளியே வந்தார். தான் சொன்னதைக் கேளாமல் லலிதா தபாலாபீசுக்குப் போனதற்காக அவளைத் தம் மனைவி அடிப்பதாக எண்ணிக் கொண்டு, "இந்தா சரசு! குழந்தையை அடிக்க வேண்டுமானால் இப்படித்தானா நாலு பேர் சிரிக்கும்படி தெருவிலே நின்று கொண்டு அடிக்கவேண்டும்? உள்ளே வந்து கதவை இழுத்துத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு அடித்துக் கொன்றுவிடு, தெருவிலே வேண்டாம்" என்றார். "நான் ஒன்றும் உங்கள் குழந்தையை அடிக்கவும் இல்லை; கொல்லவும் இல்லை. தபாலாபீசிலிருந்து வரும்போது அழுது கொண்டே வந்தாள். கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாதபடியால் கையில் கொண்டுவந்திருந்த கடிதத்தை வாங்கிப் படிக்கலாம் என்று நினைத்தேன். அதற்குள் நீங்கள் வந்து, 'அடிக்கிறாய்' 'கொல்லுகிறாய்' என்கிறீர்கள். நீங்களும் உங்கள் பெண்ணும் எப்படியாவது போங்கள். என் வயிற்றில் இவள் பிறக்கவில்லை என்று நினைத்துக்கொள்கிறேன்" என்று சரஸ்வதி அம்மாள் உரக்கச் சத்தம் போட்டுக் கத்திவிட்டு விடுவிடு என்று உள்ளே போனாள். கோடை இடி இடித்து ஆலங்கட்டி மழை பெய்து விட்டது போலிருந்தது.

மனைவியின் கோபத்தைக் கிட்டாவய்யர் சிறிதும் பொருட்படுத்தாதவராய், "பாலகிருஷ்ணா! என்ன சமாசாரம்? குழந்தை எதற்காக அழுகிறாள்?" என்று கேட்டார். அதன் விவரத்தைத் தெரிவித்து விடை பெற்றுக்கொண்டு திரும்பத் தபாலாபீஸுக்குப் போனான். ஐயர் வீட்டில் காப்பி சாப்பிடச் சொன்னால் சாப்பிடுவதற்குத் தயாராக அவன் வந்திருந்தான். ஆனால் அங்கு நடந்த ரகளையைப் பார்த்து விட்டு உடனே திரும்பினான். தபாலாபீசை அடைந்ததும் "ஸார்! பட்டாமணியம் கிட்டாவய்யர் இவ்வளவு சாதுவாயிருக்கிறாரே? அவருக்கு வாய்த்த சம்சாரம் ரொம்பப் பொல்லாத அம்மா, ஸார்! சற்று நேரத்துக்குள் எவ்வளவு ரகளை பண்ணிவிட்டாள்!" என்றான். "என்னடா பாலகிருஷ்ணா இப்படிச் சொல்கிறாய்? கிட்டாவய்யர் சம்சாரம் பரம சாதுவாயிற்றே! இருக்கும் இடமே தெரியாதே! நான் எத்தனையோ தடவை போயிருக்கிறேன் அந்த அம்மாளின் குரலைக்கூடக் கேட்டதில்லையே?" என்றார் நாயுடு.

"உங்கள் துரதிர்ஷ்டம் ஸார், அது! இன்றைக்கு நீங்கள் வந்திருந்தால் பார்த்திருப்பீர்கள்! அடே அப்பா! தாடகை சூர்ப்பனகை எல்லாரும் அப்புறந்தான்! மொத்தத்திலே பெண் பிள்ளைகளைக் கட்டிக்கொண்டு மாரடிக்கிறதே கஷ்டந்தான்!" என்றான் பாலகிருஷ்ணன். "பாலகிருஷ்ணா! நான் சொல்வதைக் கேள். நீ பிரம்மசாரி, அதனால் உனக்கு இந்த விஷயம் தெரியவில்லை. ஒவ்வொரு பெண் பிள்ளையிடத்தும் தாடகையும், சூர்ப்பனகையும் குடிகொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி லக்ஷ்மியும் சரஸ்வதியும் சீதையும் அருந்ததியும் இருக்கிறார்கள். புருஷன் யாரைக் கூப்பிடுகிறானோ அவர்கள் வெளிவருவார்கள். சூர்ப்பனகையை விரும்பினால் சூர்ப்பனகையும் சீதையை விரும்பினால் சீதையும் வருவார்கள். ஏதாவது பைத்தியக்காரத்தனமான எண்ணம் எண்ணிக் கலியாணம் பண்ணிக் கொள்ளாமலிருந்து சாப்பாட்டுக்குக் கஷ்டப்படாதே!" என்றார் நாயுடு. "ஆகக்கூடி, கலியாணம் செய்துகொள்வதென்பது சமையல் செய்து போடுவதற்காக என்றுதானே சொல்கிறீர்கள்! நான் கலியாணம் செய்து கொண்டால், 'லவ் மாரியேஜ்' தான் செய்து கொள்வேன்!" என்று பாலகிருஷ்ணன் சொல்லிவிட்டு அப்போது பிரபலமாகியிருந்த சினிமாப் பாட்டைச் சீட்டியடிக்கத் தொடங்கினான்.

இங்கே கிட்டாவய்யர் தம் குழந்தையை அன்புடன் தடவிக் கொடுத்துவிட்டு, "லலிதா! ஏன் அழுகிறாய்? கடிதத்தில் அப்படி என்ன எழுதியிருக்கிறது, அம்மா?" என்று கேட்டார். லலிதா விம்மலையும் தேம்பலையும் பிரயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டு, "அப்பா! அத்தைக்கு உடம்பு ரொம்ப சரிப்படவில்லையாம், சீதா எழுதியிருக்கிறாள். உங்களுக்கும் இதோ கடிதம் வந்திருக்கிறது" என்று சொல்லித் தான் கொண்டு வந்திருந்த இரண்டு கடிதங்களையும் அவரிடம் கொடுத்தாள். கிட்டாவய்யர் முதலில் ஒரு கடிதத்தைப் படித்துப் பார்த்தார். உடனே அவருடைய கண்களிலும் நீர் பெருகத் தொடங்கியது. உள்ளே சென்று சாய்மான நாற்காலியில் சாய்ந்தார். சரஸ்வதி அம்மாள் சற்று நேரத்துக்கெல்லாம் சாந்தமான குரலில், "சாப்பிட வரலாமே!" என்றாள்.

கிட்டாவய்யர் அது காதில் விழாதவர்போல் மௌனமாகயிருந்தார். "ஏன் கவலையாயிருக்கிறீர்கள்? கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது?" என்று சரஸ்வதி அம்மாள் மீண்டும் கேட்டாள். "ராஜத்துக்கு உடம்பு சரிப்படவில்லையாம்" என்றார் கிட்டாவய்யர். "உடம்பு சரிப்படாவிட்டால் என்ன? தானே சரியாய்ப் போய்விடுகிறது. இதற்காகச் சாப்பிடாமல் இருக்கப் போகிறீர்களா? வாருங்கள்! குழந்தைகள் சாப்பிட உட்கார்ந்து விட்டார்கள்." "இல்லை, சரசு! குழந்தைகள் சாப்பிடட்டும், எனக்கு இப்போது சாப்பாடு இறங்காது. ராஜத்துக்கு ரொம்ப உடம்பு சரி இல்லையாம், 'டைபாய்டு சுரமாம், பிழைப்பதே..." "பிழைப்பதே புனர் ஜன்மந்தான். போன வருஷமும் இப்படித்தான் கடிதம் எழுதியிருந்தார்கள். போய்ப் பார்த்தால் ஒன்றும் இல்லை. உங்களுக்கு நானூறு ஐந்நூறு ரூபாய் செலவு வைப்பதில் அவர்களுக்குத் திருப்தி போலிருக்கிறது." இதைக் கேட்ட கிட்டாவய்யர் சாய்மான நாற்காலியிலிருந்து கோபமாக எழுந்தார். அப்போது பிரிக்காமல் வைத்திருந்த இன்னொரு கடிதம் கீழே விழுந்தது.