பக்கம்:அய்யன் திருவள்ளுவர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி


எந்தப் பொருளைப் பற்றியும் இனிது எடுத்து இயம்ப வல்ல இவர்தம் எழுத்தின் மாட்சிக்கு எடுத்துக்காட்டாக இவர்தம் மதிப்புரை, பதிப்புரை, கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

பொற்குடத்திற்குப் பொட்டிட்டது போல் இந்நூலில் இவர்தம் கவிதையாற்றலுக்குச் சான்று கூறும் இரண்டு தலைப்புகளும் எழிலூட்டுகினறன.

ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பெருமக்களும், அருந்தமிழ்க் கவிஞர்களும் அவ்வப்போது தந்துள்ள மதிப்புரைகள் இவர்தம் மாட்சிக்கு சாட்சி கூறும் வகையில் இந்நூலில் காட்சி தருகின்றன.

சொல் புதிது, பொருள் புதிது, கற்பனை புதிது, கலை நலம்புதிது என்று சொல்லும் வகையில் நூல் முழுதும் செம்மாதுளையை உரித்துப் பார்ப்பதுபோல் கருத்துச் செம்முத்துக்கள் கைக்குக் கிடைத்துள்ளன. சுவைத்து மகிழ்வோம்! நண்பர் மேலும் வாழ்வும் வளமும் பெற வாழ்த்துகிறேன்.



பேராசிரியர்
கே.எஸ். சிவராமலிங்கம்,