அகல் விளக்கு/அத்தியாயம் 26

விக்கிமூலம் இலிருந்து

ஒரு மாதத்திற்குள் என்னை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றி உத்தரவு வந்தது. அருமையான நண்பரையும் காவிரியாற்றுத் தண்ணீரையும் விட்டுப் பிரிந்து போவது வருத்தமாக இருந்தது. "நான் அடிக்கடி சென்னைக்கு வருபவன். ஆகையால் நம் பழக்கம் எப்போதும் இருக்கும். அந்தக் கவலையே வேண்டாம். காவிரியாற்றுத் தண்ணீர்தான் அங்கே உங்களுக்குக் கிடைக்காது. வேண்டுமானால் நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், பெரிய காளத்தி கூசா நிறையத் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவேன்" என்று நகர்மன்றத் தலைவர் நகைத்தார். என் குடும்பத்திற்குப் பெரிய விருந்து வைத்தார். குழந்தை மாதவிக்கு ஒரு தங்கச் சங்கிலி செய்து அன்போடு அணிவித்தார்.

குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்னைக்குச் சென்று வேலையில் சேர்ந்தேன். அந்தத் தொழிலில் எனக்கு முன்னே இருந்தவர் தாம் குடியிருந்த வீட்டையே எனக்கு ஏற்பாடு செய்தார். நுங்கம்பாக்கத்தில் இருந்தது அந்த வீடு. எனக்கு அந்த வீடு பிடித்தமாகவே இருந்தது. அதை ஏற்றுக் கொண்டேன். அடுத்த சனிக்கிழமையே ஈரோட்டுக்குச் சென்று குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன்.

ஈரோட்டாரிடம் வாங்கிய எண்ணூறு ரூபாய்க்கடனில் ஐம்பது மட்டுமே திருப்பிக் கொடுத்தேன். அவருக்கு உறுதி கூறியபடி மாதம் நூறு ரூபாய் தர முடியாததை நினைந்து வருந்தினேன். அதற்கு ஒரு கடிதமும் எழுதி மன்னிப்புக் கேட்டிருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு, அந்த மாறுதலின் காரணமாகவும், புது இடத்தில் வாழத் தொடங்கியதன் காரணமாகவும், எதிர்பாராத செலவுகள் நேர்ந்தன. எல்லாவற்றையும் அவர்க்கு எழுதியிருந்தேன். அவர் அதுபற்றிக் கவலை வேண்டாம் என்று ஆறுதல் அளித்திருந்தார்.

சென்னை வாழ்க்கை எனக்குப் புதியது அல்ல. மனைவிக்கு முற்றிலும் புதியது. ஈரோடு மிகப்பிடித்திருந்தது என்றும் சென்னை அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் அவள் சொன்னாள். நாள் ஆக ஆக இந்தப் பரபரப்பு மிகுந்த நகரம் அவளுக்குப் பழகிவிட்டது. பல குடும்பத்துப் பெண்கள் அவளுக்கு பழக்கமாகிவிட்டார்கள். கடற்கரையும் உயிர்காட்சிச் சாலையும் அவளுக்கு விருப்பமான இடங்கள் ஆகிவிட்டன. ஒரு சின்ன கார் இருந்தால் அடிக்கடி மாதவியை வெளியே அழைத்துக் கொண்டு போய் வேடிக்கை காட்டுவதற்கு உதவியாக இருக்குமே என்ற அந்த ஒரு குறைதான் அவளுக்கு இருந்தது.

எனக்கும் அந்தக் குறை இல்லாமற் போகவில்லை. ஈரோட்டாரிடம் வாங்கிய கடனை தீர்த்துவிட்டு, தங்கைக்கு ஒரு தையல் பொறியும் வாங்கிக் கொடுத்த பிறகு பாதி பணமாவது சேர்த்துக் கையில் வைத்துக் கொண்டுதான் ஒரு பழைய கார் வாங்க முயற்சி செய்யவேண்டும் என்று உறுதி கொண்டேன். நான் ஈரோட்டிலேயே இருந்திருந்தால் மாதம் நூறு ரூபாய் மீதியாக்கி விரைவில் கடனை அடைத்திருக்க முடியும். சென்னைக்கு வந்த பிறகு மாதம் ஐம்பது மீதியாக்குவதே பெரு முயற்சி ஆயிற்று.

எப்படியோ எதிர்பாராத வகையில் வேண்டாத செலவுகள் பெருகிக் கொண்டிருந்தன. ஊர்ப்பக்கத்திலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் நேரே வீட்டைத் தேடி வந்து தங்கியிருக்கத் தொடங்கினார்கள். உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் உடனிருந்து படித்தோம் என்பது தவிர நெருங்கிப் பழகாதவர்கள் பலர் இருந்தார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரும் இப்போது நான் பெரிய வேலையில் இருப்பதை அறிந்த பிறகு, நெருங்கிப் பழகியவர்கள்போல் நட்புரிமை கொண்டாடி அடிக்கடி வரத் தொடங்கினார்கள். உண்மையாகவே நெருங்கிப் பழகிய பழைய நண்பர்கள் இரண்டே பேர்தான்.

அவர்களுள், சந்திரன் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டான். மாலன் இருந்தும் பயன் இல்லாதவனாக மாறிவிட்டான். ஆனால், என் உள்ளத்தில் இடம்பெறாத நண்பர்களும் உறவினர்களும் இப்போது என் வீட்டில் இடம் பெறத் தொடங்கி விட்டார்கள். அவர்களே, நெருங்கி வந்தபோது, "நீங்கள் எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள்" என்று நான் சொல்ல முடியுமா? விலக்க முடியுமா? ஆகவே, ஆகும் செலவு ஆகட்டும் என்று எல்லோரையும் ஓரளவு வரவேற்றேன்.

சென்னை சின்ன நகரம் அல்ல; பெரிய நகரம்; அதிலும் பல தாலுக்காக்களையும் கொண்ட ஒரு மாவட்டம் போன்றது. இதைப் பலர் மறந்து விடுகின்றார்கள். ஒரு மாவட்டத்தின் வடகோடியில் ஓர் ஊரில் இருப்பவர்கள், அதே மாவட்டத்தின் தென் கோடியில் மற்றோர் ஊரில் இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தித் திருமணத்துக்கோ விருந்துக்கோ அழைப்பதில்லை.

சென்னை ஒரு பெரிய மாவட்டத்துக்கு நிகரானதாக இருந்தாலும், ஒவ்வொரு திருமணத்துக்கும் அலுவலுக்கும் வருமாறு வற்புறுத்துகிறார்கள், விருந்துக்கு வருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரே நாளில் இந்த நகரத்தில் எத்தனை வீடுகளில் திருமணங்கள், அலுவல்கள், விருந்துகள்! இத்தனைக்கும் போய்வருவது என்றால் யாரால் முடியும்? தொலைவான உறவினர்கள் எல்லாரும் நெருங்கிய உறவினர்கள் போல் தொடர்பு கொண்டாடும்போது என்ன செய்வது?

அங்கங்கே போய் வருவதை எவ்வளவோ குறைத்துக் கொண்டேன். ஆனாலும், ஓரளவு செலவு ஏற்பட்டு வந்தது. எனக்கு அவைகளில் வெறுப்பு ஏற்பட்ட போதிலும், என் மனைவிக்கு அவற்றில் சலிப்பு ஏற்படவில்லை. அவள் குழந்தை மாதவியை அழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓயாமல் போய் வந்தாள். எனக்கு வெளியே போய்வருதல் தொழிலிலேயே அமைந்தது. அவளுக்கு தொழிலோ வீட்டளவில் உள்ளது. வெளிப் போக்குவரத்தில் அவளுக்கு சலிப்பும் வெறுப்பும் ஏற்படாத காரணம் அதுதான் என்று உணர்ந்தேன்.

அவளுக்குப் புதிய நண்பர்கள் ஏற்பட்டது போலவே எனக்கும் புதிய நண்பர்கள் ஏற்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் பலர் பொழுதுபோக்குக்காக அல்லது ஏதேனும் உதவியின் காரணமாக என்னோடு பழகியவர்களாகவே இருந்தார்கள். அந்தக் காரணம் தீர்ந்ததும் அவர்களின் நட்பும் தீர்ந்தது போலவே இருந்தது. எங்கேனும் பார்க்கும்போது புன்முறுவல் காட்டுவதும், "எப்படி? நலம்தானே?" என்று பொருளின்றிக் கேட்பதும் அந்த நட்பின் நிழல்போல் நிற்கும். அவர்களின் புன்முறுவலைக் காணும்போதெல்லாம் எனக்குக் காகித மலர்களே நினைவுக்கு வரும். ஆயினும் அவர்களுள்ளும் ஒருசிலர் உள்ளன்பு உடைய நண்பர்களாக - நறுமண மலர்களாக - இருந்தார்கள்.

சந்திரனும் மாலனும் என் வாழ்வை விட்டு நெடுந்தொலைவு நீங்கிவிட்ட போதிலும் என் உள்ளத்தை விட்டு அவ்வாறு நீங்கவில்லை. அவர்களை வெறுத்த போதும், உளமார வெறுத்தேன். அந்த வெறுப்பு என் உள்ளத்தில் ஆழத்திலிருந்து எழுந்தது. நெருங்கிய பழக்கம் - உண்மையான நட்புதான் - அதற்குக் காரணம். ஆனால், உள்ளத்திற்கு ஓய்வு இல்லாத வாழ்க்கையில் அந்த ஆழ்ந்த நட்பும் எப்படி விளங்க முடியும்?

பலவகையான கடமைகளும் பலரோடு பழகவேண்டிய காரணங்களும், பரபரப்பான போக்குவரவும் மிகுந்த சென்னை வாழ்க்கை இருந்தபடியால், உள்ளத்திற்கு ஓய்வே இல்லை. சந்திரனையும் மாலனையும் நினைத்து வெறுப்பதற்கும் நேரம் இல்லை. சில நாட்கள் அவர்களின் நினைப்பே இல்லாமலும் இருந்திருக்கிறேன்.

இப்படிச் சில நாட்கள் அவர்களை நினைக்காமலே இருந்து விட்டுத் திடீரென அவர்களின் நினைப்பு வரும்போது நெஞ்சம் உருகும். சந்திரனுடைய மனைவி இறந்தபின் சில நாட்கள் வரையில் அவன்மேல் அளவு கடந்த வெறுப்பு இருந்தது. அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்ற அளவிற்கும் வெறுப்புக் கொண்டேன். நாள் ஆக ஆகத் துயரம் குறைவது போலவே வெறுப்பும் குறைந்தது. இளமை நண்பனை மறுபடியும் காண முடியாதா என்று ஏங்கினேன். என்னை அறியாமல் என் உள்ளத்தில் அந்த ஏக்கம் இருந்து வந்தது.

மாலனை அடிக்கடி நினைப்பதற்குக் காரணமாக இருந்தவள் என் மனைவியே. கற்பகத்தின் மேல் அவளுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட்டது. மாதவியை பெற்றெடுத்து வாலாசாவுக்கு வந்தபோது கற்பகம் அங்கே இருந்தாள் அல்லவா? அப்போது அவள் கற்பகத்தோடு நெருங்கிப் பழகிவிட்டாள். அவளுடைய பெருங்காஞ்சி முகவரியை எழுதிக் கொடுக்கச் சொன்னாள். எழுதிக்கொடுத்தேன்.

அந்த முகவரிக்குக் கடிதம் எழுதும் பழக்கம் வைத்துக் கொண்டாள். அங்கிருந்து ஒவ்வொரு கடிதம் வந்தபோதும் என்னிடம் செய்திகள் சொல்வாள். "கற்பகம் நல்ல பெண். அவளுடைய கணவர் உங்கள் நண்பர் அல்லவா? நீங்கள் அவளுடைய வாழ்க்கைக்கு ஏதாவது உதவி செய்யக் கூடாதா? அவருக்கு ஒருமுறை எழுதினால் போதுமா? மறுபடியும் எழுதக் கூடாதா" என்பாள். "நண்பர் நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலைப்படுவதாகவே காணோம். நாங்கள் பெண்கள் அப்படி இருக்கவே மாட்டோம். ஆண்களுக்கே கல்மனம்தான்" என்பாள். கற்பகத்திடமிருந்து கடிதம் வந்தபோதெல்லாம் இப்படி ஏதாவது இரக்கத்தோடு சொல்லிக் கொண்டே இருந்தாள்.

ஒரு மாதக் கடைசியில் வரவு செலவு பார்த்தபோது, ஈரோட்டு அப்பாவுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லாமல் மாலனுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அகப்பட்டுக் கொண்டேன். விடாமல் கேட்டாள். உண்மையைச் சொன்னேன். "அவ்வளவுதான், அந்த ஆயிரமும் போனதுதான். பணவகையில் அவர் மோசமான பேர்வழி என்று தெரிந்துதான் கற்பகத்தின் அப்பா பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார். நிலமாக எழுதி வைக்கிறார். எனக்கு இதுவரையில் சொல்லவில்லையே" என்று கடிந்தாள்.

"நண்பருக்கு ஒரு முறையாவது அந்த அளவுக்காவது உதவி செய்யாமல் கல்மனத்தோடு இருக்க முடியுமா? பெண்களுக்கு அந்தக் கல்மனம் உண்டு. ஆண்களுக்கு முடியாது?" என்றேன். "போதும், இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் பணம் கொடுத்து உதவும் வேலை வேண்டா" என்றாள். அதற்குப் பிறகு அவள் கற்பகத்தின் கடிதம் பற்றிச் சொன்னாலும், மாலனுக்குச் சொல்லிச் சீர்ப்படுத்தக் கூடாதா என்பதை பற்றி சொல்வதை விட்டுவிட்டாள்.

ஒருமுறை மட்டும் மிக்க இரக்கத்தோடு கடிதத்தைப் படித்து கொண்டிருந்தபோது நான் அணுகிச் சென்றேன். "நான் பார்க்கக்கூடாதா? படி கேட்கலாமே" என்றேன்.

படித்தாள், "இனிமேல் என் கணவர் மனம் திருந்தி வருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் போக்கே உலகத்தில் இல்லாத புதிய போக்காக இருக்கிறது. அப்பா யார் யாரிடமோ சொல்லியனுப்பி முயற்சி எல்லாம் செய்து ஆயிற்று. உன்னுடைய கணவரும் தம்மால் ஆனவரையில் முயன்றார் என்று நம்புகிறேன். என் மனமும் மரத்துவிட்டது. ஆனாலும், அப்பாவின் கவலையைப் பார்க்கும் போதுதான், என்னால் அவர் துன்பப்படுகிறாரே என்ற வருத்தம் ஏற்படுகிறது. அப்பா மட்டும் சிறிது மனத் துணிவோடு இருப்பாரானால், நான் இனி அவரோடு வாழும் வாழ்வையே மறந்துவிடுவேன்.

கொஞ்ச காலம் வாழ்ந்தேன் அல்லவா? அது போதும். எத்தனையோ பெண்கள் அவ்வளவு சிறு காலமும் கணவருடன் வாழாதவர்கள் இல்லையா? அவர்களை விட என் நிலைமை மேலானது என்று எண்ணிக் கொள்கிறேன். இன்னொரு வகையில் நான் புண்ணியம் உடையவள். திருவாய்மொழியும் திருப்பாவையும் எனக்கு இருக்கும்போது என்ன குறை? எப்படியோ அந்த இரண்டு மக்களையும் பார்த்துப் பாராட்டிக்கொண்டு காலம் கழிப்பேன்" என்று கற்பகத்தின் கடிதத்தைப் படித்தாள்.

அப்போது நான் நிறுத்தி, "திருவாய்மொழி பையன், நினைவு இருக்கிறது. திருப்பாவை" என்றேன்.

"மகள். குழந்தை, மறந்துவிட்டீர்களா?" என்றாள்.

"பெயர் தெரியாது அல்லவா? நல்லது. படி" என்றேன் தொடர்ந்து படித்தாள்.

"இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது, அப்பா திண்ணை மேல் உட்கார்ந்து ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. பையன் (அதாவது என் அண்ணன்) போன இடம் தெரியவில்லை, அவன் எங்கே வரப்போகிறான், எத்தனை குறை இருந்தாலும் மானம் உடையவன், எங்கேயாவது உயிரை விட்டு விட்டிருப்பான்.

இந்தச் சொத்தை எல்லாம் நான் யாருக்கு வைத்து விட்டுப் போகப்போறேன், மருமகன் வந்து எல்லா நிலத்தையும் வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளக்கூடாதா. இருக்கும் கடனைத் தீர்த்து விட்டுச் சுகமாக வாழலாமே எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சொல்லும்போது அவருடைய மனத்தில் மகனைப் பற்றிய வேதனையும் இருக்கிறது. என்ன சொன்னாலும் அவர் கேட்கவில்லை. அவருடைய மனத்துக்கு தான் ஆறுதல் அளிக்க முடியவில்லை. அதுதான் இப்போது என் கவலை, - இப்படிக்கு அன்புள்ள கற்பகம்."

இவ்வாறு மனைவி படித்து முடித்த போது, சாமண்ணாவின் வேதனை என் மனத்திலும் பற்றிக்கொண்டது. சந்திரன் உண்மையாகவே மானம் உடையவன். அதனால்தான் இமாவதியால் ஏமாற்றம் அடைந்ததாக உணர்ந்ததும் கல்லூரி விடுதியை விட்டே ஓடிப்போய் விட்டான். இப்போதும் மனைவி தற்கொலை செய்து கொண்டாள் என்று அறிந்ததும் ஊரை விட்டே ஓடிப்போனான்.

ஆனால் இந்த மான உணர்ச்சி இருந்த அளவிற்கு அறத்தில் நம்பிக்கையும் நெறியில் தெளிவும் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். நம்பிக்கையும் தெளிவும் இல்லாத போது இந்தப் பொல்லாத மானம் இருந்தும் என்ன பயன்? தன்னைக் கெடுத்துக் கொள்வதற்கும் அழித்துக் கொள்வதற்கும் தான் இந்த மான உணர்ச்சி பயன்படுகிறது என எண்ணிச் சோர்ந்தேன்.

"ஏன் வருந்துகிறீர்கள்?" என்றாள் மனைவி.

"சந்திரன் என்ன ஆனானோ என்று நினைத்தால் மனம் வேதனைபடுகிறது."

"அந்த ஆள் இனி எப்படிப் போனால் என்ன? மனைவி போய்விட்டாள். குடும்பம் போய்விட்டது. போனவர்களை நினைத்து வருந்திப் பயன் என்ன? இருக்கிறவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? செய்யுங்கள். இப்படிச் சொத்து முழுதும் கிடைக்கும் என்பதைக் கற்பகத்தின் கணவருக்கு எழுதுங்கள்."

அந்தச் சொல் நொந்த என் மனத்தைக் கோலால் குத்துவது போல் இருந்தது. "ஒருகாலும் நான் அப்படி எழுதமாட்டேன். என் நண்பன் சந்திரன் செத்துப்போனான் என்று நினைக்கவும் என் மனம் இடம் தரவில்லை. அய்யோ வேண்டா" என்றேன்.

மாலனுக்கு வேறு வகையில் கடிதம் எழுதினேன். மறுமொழி வரும் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துச் சலித்தேன். பணம் கடன் கொடுத்த காரணத்தால் இருந்த நட்புக்கும் இடையூறு நேர்ந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டேன்.

முன்னெல்லாம் இப்படி நண்பரிடமிருந்தும் வீட்டாரிடமிருந்தும் கடிதம் வராமல் இருந்தால் அதுவே எனக்குப் பெருங்கவலை ஆகிவிடும். அதையே எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பேன். சிறு துன்பமும் பெரிதாகத் தோன்றிய காலம் அது. இப்போது பெரிய துன்பமும் சின்னதாகத் தோன்றும் அளவிற்கு மனமாறுதல் ஏற்பட்டுவிட்டது. நன்றியுணர்ச்சி முதலான அடிப்படை உணர்ச்சிகள் அப்படியே இருக்கின்றன.

ஆனால் இன்ப துன்ப உணர்ச்சிகள் வரவரக் குறைந்துகொண்டிருக்கின்றன. சிறு தோட்டம் பயிரிடுகிறவன் ஒரு செடி வாடினாலும் கவலைப்படுகிறான்; பெரிய தோட்டம் உடையவன் ஒரு பாத்தியே பட்டுப்போனால் தான் வருந்துகிறான்; பெரிய தோப்பு உடையவன் ஒரு செடிக்காவும் கவலைப்படுவதில்லை; ஒரு பாத்திக்காகவும் வருந்துவதில்லை. இரண்டு மூன்று பெரிய மரங்கள் பட்டுப்போனால் தான் அவனுடைய மனம் கொஞ்சம் அசையும். அப்போதும் அவன், சின்ன தோட்டம் பயிரிடுகின்றவனைப் போல் அவ்வளவு கவலைப்பட மாட்டான் அல்லவா?

என் மனநிலையும் அப்படித்தான் மாறியது. முன் சின்ன ஒரு கூட்டத்து அளவில் என் பழக்கமும் தொடர்பும் இருந்தன. இப்போது பெரிய நகரத்தில் நூற்றுக்கணக்கானவர்களோடும் ஆயிரக்கணக்கானவர்களோடும் பழக நேர்ந்துவிட்டதால், உணர்ச்சிகளின் ஆழம் குறைந்துவிட்டது. அதனால் சந்திரனுக்காகவும் மாலனுக்காகவும் வருந்தும் வருத்தம் முன்போல் இல்லை எனலாம்.

நான் தொழில் காரணமாகவும் வேறு காரணமாகவும் நூற்றுக்கணக்கானவர்களோடு பழகிய போதிலும், ஒரு சிலர் தான் உண்மையாக என்னுடன் நெருங்கிய பழக்கம் உடையவர்கள். அவர்களிடம் என் மனம் கொஞ்சம் ஆழ்ந்த நட்பும் கொண்டது என்று சொல்லலாம்.

அவர்களுள், என் அலுவலகத்தில் என்னோடு தொழில் செய்த நண்பர் ஒருவர். அவருடைய பெயர் பச்சைமலை. நல்ல பண்புகள் உடையவர். பலரோடு பழகமாட்டார். பழகும் சிலரிடத்தில் அன்பாகப் பழகுவார். அலுவலகத்தில் வேலையாட்களையும் மனம் நோகப் பேசாதவர். ஆனால் வேலையில் திறமையானவர். அப்படிப்பட்டவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டுக்கு வரப் போகப் பழகினார். நாங்களும் சில ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். நாளடைவில் பெண்களுக்குள் பழக்கம் மிகுந்தது. நான் வேலை மிகுதியாக இருந்தபோது மனைவி மட்டும் அங்கே போய் வருவதும் பழக்கமாயிற்று.

ஒரு நாள் இரவு நான் வீட்டுக்குத் திரும்பியதும் "பச்சைமலையின் மனைவி உங்களுக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியுமாமே" என்றாள்.

"உனக்குப் பைத்தியம்! நாம் எங்கிருந்தோ பிழைக்க வந்தோம். நாம் யார்? அவர்கள் யார்? இப்போதுதானே பழக்கம்! என்ன உளறுகிறாய்?" என்றேன்.

"அவர் உங்களுக்குச் சொல்லவே இல்லையா?"

"நீ என்னதான் சொல்கிறாய்?"

"அந்த அம்மாவுக்கும் இத்தனை நாள் தெரியாது. இன்றைக்குத் தான் கண்டுபிடித்தார்கள்."

"அமெரிக்காவா, ஆஸ்திரேலியாவா. என்னை அவர்கள் கண்டுபிடிக்க."

"பொய்யா சொல்கிறேன்?"

"என்ன செய்தி? விளக்கமாகச் சொல்."

அந்த அம்மாவின் அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறார். முன்னமே ஒருமுறை வந்தபோதும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இன்றைக்கு என்னென்னவோ பேசியிருந்து விட்டு, குடும்பத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார். அப்போது தெரிந்துவிட்டது."

"என்ன தெரிந்துவிட்டது?" என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். "சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?" என்றேன்.

மனைவி சிரித்தாள். "சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்" என்றாள். "உங்கள் வீட்டுக்காரர் பேர் என்ன என்று கேட்டார். பேரைச் சொன்னவுடன், சற்று விழித்துப் பார்த்தபடி இருந்துவிட்டு, ஊர் எது என்று கேட்டார். வாலாசா என்று சொன்னவுடன், திகைத்தாற்போல் இருந்தார். உடனே உங்கள் வீட்டுக்காரருக்குச் சந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறாரா என்று கேட்டார்.

அப்போது அவருடைய திகைப்பு முழுவதும் எனக்கு வந்துவிட்டது. 'ஆமாம் இருக்கிறார். உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்?' என்றேன். 'சொல்கிறேன். நீ வேலய்யாவுக்கு மனைவியாக வருவதற்கு முன்னிருந்தே அவரை எனக்குத் தெரியும்' என்று என்னிடம் சொல்லிவிட்டு, பிறகு தம் தங்கையைப் பார்த்து, 'தெரியுதா'டி உனக்கு நினைவு வருகிறதா’டி' என்று கேட்டார். 'யார்? நம் சந்திர அண்ணாவா!' என்று பச்சைமலையின் மனைவி உடனே அக்காவைக் கேட்டார். ஆமாம் என்றார் அந்த அக்கா.

'அவர்தான் அப்போதே எங்கோ போய் விட்டாரே அவரைப் பற்றி அப்புறம் ஒன்றுமே தெரியாதே' என்றார் தங்கை. எனக்குத் திகைப்பு மிகுதியாயிற்று. 'அவர் எங்கோ போய்விட்ட செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும் அம்மா?' என்று கேட்டேன். 'நேற்றுத் திருமணமாகி வந்த உங்களுக்கு அவர் போய்விட்டது எப்படித் தெரியும்?' என்று அக்கா என்னையே திருப்பிக் கேட்டார்."

இந்த அளவிற்கு மனைவி சொல்லியவுடன், என் கலக்கம் தீர்ந்து உடனே இமாவதியின் நினைவு வந்துவிட்டது. "அடடா!" என்றேன்.

"ஓ ஓ! உங்களுக்கு இப்போதுதான் யார் என்று தெரிந்ததா?" என்றாள் மனைவி.

"ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இமாவதி என்று ஒரு பெண். அவளாகத்தான் இருக்க வேண்டும்" என்றேன்.

"பெண்ணா? எனக்கு மேல் வயதில் பெரியவர். நான்கு பிள்ளைகளுக்குத் தாய்."

"இருக்கலாம் அப்போது பெண்தானே? நானும் சந்திரனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் ஆகாத பெண். சரி சொல்லிமுடி. அப்புறம் தான் விரிவாகச் சொல்வேன்."

"அப்புறம் என்ன? உனக்கு எப்படித் தெரியும் என்று அவர் கேட்க, நான் கேட்க, வேடிக்கையாக இருந்தது. அவர் முன்னமே ஒருமுறை ஓடிப்போய் வந்தவர் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பிறகு நான் எல்லாம் சொன்னேன். அவருக்குத் திருமணம் ஆனது. மனைவியோடு அன்பாக வாழாதது. அந்த அம்மா கிணற்றில் விழுந்து செத்தது. பிறகு அவர் ஓடிப்போனது எல்லாவற்றையும் நான் சொன்னேன். வியப்போடு கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவருக்காக மிகவும் வருத்தப்பட்டார். அழாத குறையாக அந்த அம்மாவின் முகம் வாடிப்போய்விட்டது" என்றாள்.

இவ்வளவு செய்திகளையும் இமாவதிக்குச் சொல்லி இருக்கத் தேவையில்லையே என எண்ணினேன். "இதை எல்லாம் ஏன் சொன்னாய்? அந்த அம்மா சந்திரனைப் பற்றித் தவறாக நினைப்பாரே" என்றேன்.

"அதுதானே இல்லை! இவ்வளவு சொன்ன பிறகும் அந்த அம்மா சந்திரனுக்காக வருத்தப்படுகிறார். இரக்கத்தோடு பேசுகிறார். தமக்குத் தெரிந்தவரையில் சந்திரன் மிக நல்ல குணமுள்ளவர் என்கிறார். அவரைப்போல் நல்ல மனம் உள்ளவர்களைப் பார்ப்பது அருமை என்கிறார். சந்திரனைப் பற்றி நீங்களும் அவ்வளவு நன்றாகச் சொன்னதே இல்லை" என்றாள்.

என் உள்ளம் குழைந்தது. "ஆமாம். அவ்வளவு நல்லவனாக இருந்தவன்தான். அந்தக் காலத்தில் அவன் மேல் ஒரு குறையும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நல்லவன்தான் பிறகு இப்படி மாறிக் கெட்டு விட்டான். அதுதான் எனக்கு வருத்தம்" என்றேன்.

"உங்களைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று அந்த அம்மா விரும்புகிறார். என்னோடு உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார். வீட்டில் இருக்கமாட்டார் என்று சொன்னதால் நின்றுவிட்டார். நாளை மறுநாள் அவர்களுடைய ஊருக்கே திரும்பிப் போகிறபடியால் நீங்கள் நாளைக்கே போய்ப் பார்த்துவிடுங்கள். நீங்கள் போகாவிட்டால் அந்த அம்மா தவறாமல் இங்கே வந்துவிடுவார்" என்றாள்.

"அப்படியானால், பச்சைமலையின் மனைவியின் பெயர் என்ன? திருமகளா?" என்றேன்.

"ஆமாம். உங்களுக்கு இவ்வளவு நன்றாகத் தெரிந்திருந்தும் நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே. பெயரும் நினைவில் வைத்திருக்கிறீர்களே, கணவர் தம் மனைவியைக் கூப்பிடும் போது "திரு" என்று அழைப்பார்" என்றாள்.

"நான் சின்ன வயதில் பார்த்தது உண்டு. அப்போதிருந்தே பெயரும் தெரியும். ஆனால் இந்தக் குடும்பம் என்று எப்படித் தெரியும்?" என்றேன்.

பிறகு, சந்திரன் படித்துக் கொண்டிருந்தபோது இமாவதியின் குடும்பத்தோடு பழகியதும், இமாவதியின் திருமண அழைப்பைப் பார்த்தவுடன் கலங்கி அழுததும், உடனே சொல்லாமல் ஓடிப் போனதும், பிறகு தேடிப் போய் அவனை அழைத்து வந்ததும் எல்லாம் விரிவாக மனைவிக்கும் சொன்னேன்.

"அப்படியானால், அடிப்படையிலேயே அவருடைய மனத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது" என்றாள் மனைவி.

"மெய்தான். அவனுடைய மனமே இன்னொருவரை நம்பாத மனம். யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம்பிக்கை வைத்து மனத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது, ஒத்த உரிமையோடு யாரிடமாவது திறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும். நண்பனாகிய என்னிடமும் அப்படிப் பழகவில்லை. வந்த மனைவியிடமும் அவ்வாறு பழகவில்லை. அதனால் உலகமே அவனுக்கு இருண்ட குகையாக இருந்தது. வழி தெரியாமல் தடுமாறித் தடுமாறிக் கெட்டான். மருண்ட போதெல்லாம் வெருண்டு வெருண்டு ஓடினான்" என்றேன்.

காலையில் எழுந்தவுடன் இமாவதியைப் பற்றி மனைவி நினைவூட்டினாள். நானும் அதே நினைவாக இருந்தேன். கடமைகளை விரைந்து முடித்து, பச்சைமலையின் வீட்டுக்குச் சென்றேன். போய் நின்று கதவைத் தட்டியவுடன் "வாங்க! நானும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்" என்று சொல்லிக் கொண்டே இமாவதி வந்தார்.

"என்ன அய்யா! முன்னமே பழகிய பழக்கம் இருந்தும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே இருந்தீர்கள். இப்போது நான் தான் அந்நியனாக, புதியவனாக நிற்கிறேன்" என்றார் பச்சைமலை.

அவருடைய மனைவி, "வேடிக்கையாக இருக்கிறது" என்றார்.

இமாவதியும் நானும் எங்கள் பழைய பேச்சை எடுத்தவுடன் ஒவ்வொருவராக நீங்கினார்கள். இமாவதியின் தங்கை திருமகள் மட்டும் ஒருமுறை வந்து குறுக்கிட்டு, "சந்திர அண்ணா வந்து வாழ்ந்து மறுபடியும் அப்படிப் போய்விட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது" என்றார்.

நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

"அவர் திரும்பி வந்த பிறகு எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா? நான் வந்து பார்த்து உண்மையைச் சொல்லியிருப்பேனே! எனக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். அவருக்கும் ஆறுதலாக இருந்திருக்குமே" என்றார் இமாவதி ஓரிடத்தில்.

மற்றொரு முறை பேச்சின் இடையே, "வந்த அவராவது பழைய அன்பை நினைத்து எட்டிப் பார்த்திருக்கக் கூடாதா?" என்றார்.

இன்னொரு முறை குறுக்கிட்டு, "நீங்களும் அவரைப் போலவே நடந்து கொண்டீர்கள். எங்கள் முகவரி நன்றாகத் தெரிந்திருந்தும், சென்னையிலேயே தொழில் இருந்தும் எங்களை அடியோடு மறந்து விட்டீர்கள். கல்லூரி நட்பு இவ்வளவுதான் போல் இருக்கிறது" என்றார்.

"சந்திரனுக்கு விருப்பமான பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கவில்லை போல் இருக்கிறது" என்றார் வேறொரு பேச்சின் இடையே.

"எங்கள் அம்மாவிடத்தில் சந்திரன் எவ்வளவு பணிவோடு மரியாதையோடு இருந்தார். சொந்தத் தாய் தந்தையாருக்கு வருத்தம் உண்டாகும்படியாக நடந்தார் என்றால் நம்ப முடியவில்லையே" என்றார் மற்றோர் இடத்தில்.

நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்த போது இமாவதி இப்படி இடையிடையே வியப்புடனும் திகைப்புடனும் பெருமூச்சுவிட்டுச் சில கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தார். எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு, "அய்யோ! கடவுள் ஏன் இப்படி அன்பானவர்களை - நல்லவர்களைக் - கெடுக்கிறார்?" என்று மிக மிக வருந்தினார். "எங்கேதான் போயிருப்பார்? தெரிந்தால் நானும் தேடுவேனே! நீங்கள் யாரும் தேடவே இல்லையா? அவ்வளவு தொலைவு நம்பிக்கை இழந்து விட்டதா குடும்பம்?" என்று துன்பப்பட்டார்.

சிறிது நேரம் தரையையே உற்றுப் பார்த்தபடி இருந்து ஒரு பெருமூச்சு விட்டார். அந்தப் பெருமூச்சு, சொல்லாத வேதனையை எல்லாம் சொல்வதுபோல் இருந்தது. வலமும் இடமும் முன்னும் பின்னும் மெல்லத் திரும்பிப் பார்த்தார்.

"என்னால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் அவருடைய மனமே கெட்டுப்போவதற்குக் காரணமாக இருந்ததோ என்று இன்னமும் என் நெஞ்சம் என்னைச் சுடுகிறது. என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?" என்றாள்.

அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது.

ஆனாலும் அந்த வினா இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_26&oldid=7906" இலிருந்து மீள்விக்கப்பட்டது