அசோகனுடைய சாஸனங்கள்/பாப்ரு சாஸனம்

விக்கிமூலம் இலிருந்து

II. பாப்ரு சாஸனம்

இந்த லிகிதம் பிக்ஷுக்களுக்கென்று பிரத்தியேகமாக எழுதப்பட்டது. பாப்ரு என்ற ஊர் ராஜஸ்தானத்தில் ஜெய்ப்பூர் ஸம்ஸ்தானத்திலுள்ளது. பெய்ராத்துக்கு மிகவும் அருகிலுள்ளது. லிகிதம் வரைந்திருக்கும் கல் இப்போது கல்கத்தா ம்யூஸியத்தில் காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. பாப்ருவில் பழைய பௌத்த விஹாரம் ஒன்று இருந்து வந்தது. இச்சாஸனத்தின் காலம் எது என்னும் விஷயமாய் வித்வான்களுக்கிடையில் இன்னும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பொதுவான அபிப்பிராய மென்னவென்றால் இதுவும் மற்ற இரண்டு உபசாஸனங்களைப் போல அசோகனுடைய ஆதி லிகிதங்களில் ஒன்றென்றாம். இச்சாஸனத்தின் ஆரம்பம் குறிப்பிடத்தக்கது.

மகதத்து அரசன் பியதஸி, ஸங்கத்தை நமஸ்கரித்து அவர்கள் சுகமும் ஆரோக்கியமும் அடையவேண்டுமென்று விரும்பிக் கூறுவதாவது. புண்ணியவான்களே! புத்தர், தர்மம், ஸங்கம் என்பனவற்றில் எனக்குள்ள விசுவாஸ வெகுமானமும் நம்பிக்கையும் எவ்வளவு அதிகமென்று உங்களுக்குத் தெரியும். புண்ணியவான்களே! பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள யாவும் மிகச் சிரேஷ்டமாகவே கூறப்பட்டிருக்கின்றன. புண்ணியவான்களே, நான் உங்களுக்கு ஒரு வாக்கியத்தைச் சுட்டிக்காட்ட அனுமதி கொடுப்பீர்களானால் அது “ஸத் தர்மம், சாசுவதமாய் நிலை நிற்கும்” என்பதே. புண்ணியவான்களே ! வேறு சில வாக்கியங்களையும் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.

(1) வினய ஸமுகஸே1.
(2) அலியவஸானி. (பெரியோரின் நடக்கை.)
(3) அநாமதடியாநி. (வரப்போவதைக் குறித்துள்ள பயம்.)
(4) முனிகாதை (முனிவரின் கீதங்கள்.)
(5) உபதிஷ்யன் கேள்விகள் 2.
(6) மோனேயஸூதே (முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிய சம்பாஷணை.)
(7) அநித்தியம் முதலிய கொள்கைகளைப் பற்றி ராஹுலனுக்குள்ள உபதேசம்.

பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள இவைகள் எல்லாவற்றையும், புண்ணியவான்களே, பிக்ஷுக்களும் பிக்ஷுணிகளும் அடிக்கடி கேட்டு மனனம் செய்யவேண்டும் என்று என் விருப்பம்; அப்படியே இல்லறத்திலுள்ள ஸ்திரீ புருஷர் களும் இவற்றை அடிக்கடிக் கேட்டு மனனம் செய்ய வேண்டும். புண்ணியவான்களே, இக்காரணம் பற்றியே-அஃதாவது, ஜனங்கள் எனது கோரிக்கையை அறியும் பொருட்டே - இதை நான் வரையச் செய்தேன்.

மொத்தம் 9 வாக்கியங்கள்.

புத்தரது சுயவாக்கியங்களுக்கு ஸத்தர்மம் என்று பெயர். “ஸத் தர்மம் சாசுவதமாய் நிலை நிற்கும்” என்பது பௌத்தர்களுக்கு மஹா வாக்கியம் போன்ற ஓர் வாக்கியம். அங்குத்தர நிகாய Iv.

1. இவ்வேழு பெயர்களும் பௌத்தருடைய ‘திரிபிடகம்’ என்ற பிரபந்தத் தொகுதியில் வரும் பாகங்களைக் குறிக்கின்றன.

இப்பாகங்கள் எவையென்று நிச்சயமாகத் தெரியவில்லை. வினய ஸமுகஸே என்பது புத்தர் காசியில் செய்த முதல் உபதேசத்தைக் குறிப்பிடுகிறதென்று ஓர் அமேரிக்க வித்துவான் எழுதுகிறார். இதற்கு தர்ம சக்ரப் பிரவர்த்தன ஸூத்திரம் என்று பெயர். மற்ற உரைகள் எங்கெங்குகாணப்படுகின்றனவென்று இரண்டாம் அனுபந்தத்தில் கூறியிருக்கிறோம்.

2. உபதிஷ்யன் என்பவன் மதக்கிரந்தங்களில் ஸாரிபுத்திரன் என்ற பெயரால் குறிப்பிடப்பட்ட புத்தருடைய பிரதம சீஷரில் ஒருவன். புத்தருடைய சம்பாஷணையிற் பல ஸாரிபுத்திரனின் கேள்விகளிலிருந்து உண்டாகின்றன.