அந்தமான் கைதி/9

விக்கிமூலம் இலிருந்து
காட்சி 9.

இடம்: திவான்பகதூர் மாளிகை

காலம் : மாலை


பாத்திரங்கள்: திவான்பகதூர், முனியாண்டி, பிச்சைக்காரப் பையன்.

[திவான்பகதூர் சோபாவில் சாய்ந்தபடி சுருட்டுப் பிடித்துக்கொண்டிருக்கிறார். முனியாண்டி வருகிறான்.]

முனி : மகமாயி......

பொன் : வாப்பா முனியாண்டி. என்ன, காரியமெல்லாம் எப்படி ஆயிற்று?

முனி : வீடு நாளைக்கு ஏலம். இன்னெமே எல்லாம் படிஞ்சுடுங்க.

பொன் : படிகிறதாவது...உம் எனப்பா அந்தப் பயலைத் தொலைப்பதற்கு ஏதாவது ஒரு வழியில்லையா?

முனி : இதுதான்ங்க பிரமாதம். (சுற்றிப் பார்த்துவிட்டு ரகசியமாக) நம்ம சக்கரைத் தேவனைப் புடிச்சா, நிமிஷத்திலே முடிச்சுடுறான்.

பொன் : (பயத்துடன்) என்ன, கொலையா? ஊஹும். அப்புறம் அதனால் நமக்கு ஏதாவது தொந்தரவு வந்துவிட்டால்...... சேச்சே அதெல்லாம் வேண்டாம். அவனைத் தந்திரமாகக் கொஞ்ச நாளைக்கு இந்த ஊரை விட்டுக் கிளப்பி விட்டுவிட்டால் நம் காரியத்தை முடித்துக்கொள்ளலாம். எப்படியுங் கயிற்றைக் கழுத்திலே போட்டுவிட்டால் அப்புறம் இந்தக் கழுதை வந்து என்ன செய்ய முடியும்?  முனி : நீங்க சொல்றதும் நல்ல யோசனைதான் (சற்று யோசித்து) சரி அதுக்கும் வழியிருக்கு. (காதண்டை ஏதோ சொல்லிவிட்டு) எல்லாம் நுழைந்து வேலை செய்யனும்.

பொன் : சபாஷ் முனியாண்டி.......ஆனால் இது நடக்க வேணுமே!

முனி : நீங்க பாருங்களேன். இந்த முனியாண்டி வேலையை அப்புறம் தெரியும்.

பொன் : சரி, எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கிறது. நீ பிறகு........ முனி சரி...(இழுப்போடு தலையைச் சொரிந்து கொண்டே) சில்லரை ஏதாவது......

பொன் : இந்தா, இந்தப் பத்து ரூபாயை வைத்துக்கொள்; போதுமா?

முனி : போதுங்க, இன்னைக்கு மட்டுந்தானே. (போகிறான்)

(பிச்சைக்காரப் பையன் ஒருவன் பாடிக்கொண்டு வருகிறான்)

பிச்சை : ஐயா பசி காதை அடைக்கிறது. ஒரு காலணா இருந்தால் கொடுங்களேன். உங்களுக்குப் புண்ணியம்.

பொன் : சீ! அயோக்கிய ராஸ்கல். போடா வெளியே. எருமை மாதிரி இருக்கிறாயே. எங்கேயாவது போய் வேலை செய்தால்? சோம்பேறி நாயே!

பிச்சை : வேலை எங்கும் கிடைக்கலே. பசிக்கிறது; ஒங்களுக்குப் புண்ணியம்,

பொன் : அடப் பிச்சைக்கார நாயே! நான் போடாங்கிறேன் அவ்வளவு திமிரா (சவுக்கால் அடிக்கிறார். பையன் கீழே விழுகிறான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/9&oldid=1073495" இலிருந்து மீள்விக்கப்பட்டது