அனிச்ச மலர்/1

விக்கிமூலம் இலிருந்து


அனிச்சமலர்

1

ப்போது இரவு ஒன்பது மணிக்கு மேல் இராது. அந்தக் கல்லூரி விடுதி லவுஞ்சில் ஒரே கலகலப்பு.

“என்னடீ! எல்லோரும் படிக்கிறீர்களா அல்லது ஊர் வம்பு பேசி அரட்டை அடிச்சிக்கிட்டிருக்கீங்களா ? 'எக்ஸாம்' நெருங்கிவருது. ஞாபகமில்லையா?” மாடி. வராந்தாவின் கோடியில் வார்டன் மாலதி சந்திரசேகரனின் குரலைக் கேட்டதும் ஹாஸ்டல் லவுஞ்சில் கூட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மாணவிகள் பட்டுப் பூச்சிகள் கலைவது போல் கலைந்து பரபரப்பாக அவரவர்கள் அறைக்குள் விரைந்தனர். மாலைத் தினசரிகளும், சினிமா இதழ்களும், வாரப் பத்திரிகைகளும் அவசர அவசரமாக மறைக்கப்பட்டன. அரட்டையும் கிண்டலும், சிரிப்பும் ஒய்ந்து அங்கே ஒரு ஸீரியஸ்நெஸ் வந்தது.

பாடப்புத்தகங்களும், வகுப்பு நோட்டுப் புத்தகங்களும் தேடப்பட்டுப் பிரித்து மேஜைமேல் வைக்கப்பட்டன. ரேடியோ ஒலி கேட்டுக் கொண்டிருந்த அறைகளில் பட்டென்று ஆஃப் செய்யப்படும் ஒசை வந்தது. சிலர் வார்டன் அம்மாளுக்குக் காது கேட்க வேண்டும் என்பதற்காக இரைந்து சத்தம் போட்டே படிக்கத் தொடங்கினார்கள். அதுவரை இருண்டிருந்த அறைகளில் கூட பளீரென்று விளக்கு வெளிச்சம் பாய்ந்தது. வராந்தா வெறிச்சோடியது.

செயற்கையாக ஏற்றப்பட்ட இந்தச் சுறுசுறுப்பும் தீவிரமும் எல்லாம் பத்து நிமிஷம்கூட நீடிக்கவில்லை. வார்டன் அம்மாள் மாடியில் இருந்து படியிறங்கிக் கீழே உள்ள விடுதியின் பிற்பகுதிகளையும் எதிர்புறம் இருந்த நியூ ஹாஸ்டல் பகுதியையும், கண்காணிப்பதற்காகச் சென்றபோது மறுபடியும் மேலே மாடி வராந்தா லவுஞ்சில் பெண்கள் கூட்டம் கூடியது. ஒரு பெண் கையிலிருந்த மாலைத் தினசரியைப் படிக்கலானாள்:-

"ஏய் பத்மா! உனக்காகத்தான் படிக்கிறேன் கேளு! ஒரு நாடகக் கம்பெனிக்கு மாலை நேரங்களில் மட்டும் நடிக்கக் கூடிய நடிகைகள் தேவையாம். பாலன் நாடகக் குழு, சென்னை. புதுமுகங்கள் தேவை. எங்களுடைய நாடகக் குழுவின் சமூக, சரித்திர-புராண நாடகங்களில் கதாநாயகி வேஷம் முதல் உப பாத்திரங்கள் வரை வேஷம் ஏற்று நடிக்கப் பெண்கள் தேவை. படிப்புக்கு இடையூறு இல்லாமல் மாலை நேரங்களிலே நடித்துப் பணம் சம்பாதிக்கலாம். புகைப்படத்துடன் விண்ணப்பிக்கவும். கல்லூரி மாணவிகளாயிருந்தால் விஷேச சலுகையுடன் அவர்களின் விண்ணப்பங்கள் கவனிக்கப்படும்.

உடனே அங்கே கூடியிருந்தவர்களில் ஒருத்தியைத் தவிர மற்றப் பெண்கள் எல்லோரும் தினசரிப்பேப்பரைக் கையில் வைத்து வாசித்துக் கொண்டிருந்தவளைச் சூழ்ந்து மொய்த்தார்கள். அவர்கள் மூலைக்கு ஒருவராக இழுத்த இழுப்பில் பேப்பர் ஒவ்வொருவர் கைக்கும் கொஞ்சமாகக் கிழிந்து துண்டு துண்டாகப் போய்விடும் போலிருந்தது. அந்த நேரத்திலும் பேப்பரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தவர்களில் ஒருத்தி,

"அதோ சுமதியைப் பாருடீ ! எதையோ பறிகொடுத்தவளைப்போல உட்கார்ந்திருக்கா" என்று, விலகி அமைதியாக உட்கார்ந்திருந்தவளைச் சுட்டிக் காட்டி மற்றவர்களிடம் கூறத் தவறவில்லை. உடனே அவர்களில் ஒருத்தி சுமதி என்கிற அந்தப் பெண்ணருகே ஒடிச் சென்று,

"என்னடி சுமதி? ஏன் என்னவோ போலிருக்கே? தலைவலியா?" என்று ஆதரவாகக் கேட்டாள். "ஒன்னுமில்லே. எனக்குத் தூக்கம் வருது! நான் ரூமுக்குப் போறேன்” என்று உடனே எழுந்து போய்விட்டாள் சுமதி என்று அழைக்கப்பட்ட அழகான அந்தப் பெண்.

அவளுடைய ரூம் மேட், சொந்த சகோதரனின் திருமணத்துக்காக மூன்று நாள் லீவு எடுத்துக் கொண்டு கோவை போயிருந்ததனால் அறையில் அவள் மட்டுமே தனியாக இருந்தாள். அதற்காக அவள் பயப்படவில்லை. அதை அவள் விரும்பினாள் என்றுகூடச் சொல்லலாம். தனிமை, கனவு காணும் வசதியைத் தருவதுபோல் வேறெதுவும் தருவதில்லை. அறைக்குச் சென்ற சுமதி பாத்ரூமுக்குள் போய் விளக்கைப் போட்டுக் கொண்டு வாஷ்பேஸினுக்கு மேலிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். சிநேகிதிகள் எல்லாம் அடிக்கடிச் சொல்லி வியக்கும் தன் அழகைப் பற்றிய பெருமிதத்தைத் தனக்கே உறுதிப்படுத்திக் கொள்வது போல் கண்ணாடியில் அவள் முகம் களை கொஞ்சியது.

தன் முகத்தைத் தானே நேருக்கு நேர் கண்ணாடியில் பார்த்துப் பெருமைப்பட்டுக் கொண்டவள், உடன் நிகழ்ச்சியாகச் சற்றுமுன் மாலைத் தினசரியிலிருந்து தோழிகள் படித்த விளம்பரத்தையும் நினைவு கூர்ந்தாள். ஏனோ அவளே மறக்க முயன்றும் அந்த விளம்பரம் அவளுக்குத் திரும்பத் திரும்ப நினைவு வந்து கொண்டிருந்தது. தூங்குவதற்கு முன் வழக்கம்போல் ஃபிரஷ்ஷை எடுத்துப் பற்பசையை அளவாக அதன் மேல் வழிய விட்டுத் தேய்த்தபோது கண்ணாடியில் தெரிந்த முல்லை அரும்பு போன்ற பற்கள் அவளைக் கர்வப்பட வைத்தன. அவளுடைய முக விலாசத்துக்கும், புன்னகைக்கும் யாருமே சுலபமாக மயங்கி வசப்பட்டு விடுவார்கள் என்று தோழிகள் எல்லாம் தங்களுக்குள்ளும் சில வேளைகளில் அவள் காது கேட்கவுமே பேசிக் கொண்டார்கள். இளமையாகவும் கவர்ச்சியாகவும் இருந்த சில புதிய இந்தி சினிமா நட்சத்திரங்களோடு அவளை ஒப்பிட்டுப் பரிகாசம் செய்த தோழிகளும் உண்டு.

எல்லாரிடமும் கடுவன் பூனையாக நடந்து கொள்ளும் ஹாஸ்டல் வார்டன் மாலதி அம்மாள்கூட அவளிடம் சிரித்துக் குழைந்து பேசுவாள். இதைப்போல் பலவற்றை நேரில் பார்த்தும் கேள்விப்பட்டும்தான் அவளுடைய முகராசியைப் பற்றித் தோழிகள் பேசிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர். சென்ற ஆண்டின் இறுதியில் கல்லூரி விடுதி நாள் கொண்டாட்டத்தின் போது முழுவதும் மாணவிகளே நடித்த ‘சகுந்தலை’ நாடகம் நிகழ்ந்தபோது பிரதம விருந்தினராகப் பிரபல நடிகர் ஒருவர் வந்திருந்தார். சுமதிதான் சகுந்தலையாக நடித்திருந்தாள்.நாடக முடிவில் அந்த நடிகர் நாடகத்தைப் பாராட்டிப் பேசும் போது, “சகுந்தலையாக நடித்த குமாரி சுமதி காவியத்தில் காளிதாசன் படைத்த சகுந்தலையைவிட அழகாயிருக்கிறார். அவருடைய தோற்றத்தையும் நடிப்பையும், எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று சிறிது தாராளமாகவே அவளைப் பாராட்டிப் பேசியிருந்தார்.

இவை எல்லாம் சேர்ந்து அவளுள் ஒரு கனவையே உருவாக்கியிருந்தன. தான் நடித்துப் புகழ்பெறப் பிறந்தவள் என்ற எண்ணம் அவளுள் உறுதிப்படத் தொடங்கியிருந்தது. கர்வம் அவளை மற்ற மாணவிகளிலிருந்து தனியே பிரித்தது. எல்லாரும் கலகலப்பாகப் பேசும்போது அவள் அவர்களோடு சகஜமாகப் பேசாமலிருப்பதும் எல்லாரும் மெளனமாக எதிலாவது ஈடுபட்டிருக்கும்போது அவள் கலகலப்பாகப் பேசி அனைவர் கவனத்தையும் கவர்வதுமாகத் தனக்குத்தானே ஒரு புது இயல்பையே உருவாக்கிக் கொண்டிருந்தாள் அவள் தான், மற்ற பெண்களைவிட அழகானவள், உயர்ந்தவள் என்று தனக்குத்தானே வலிந்து ஒர் அந்தஸ்தைப் புரிந்து கொண்டதன் காரணமாக ஏற்பட்ட இனிய ஆணவம்-அது தொடர்பாக அவளைப் பல கனவுகள் காண வைத்திருந்தது.

அந்தப் பெண்கள் கல்லூரியின் விடுதி நாள் கொண்டாட்ட நாடகத்தில் சுமதியின் நடிப்பைப் பாராட்டி பிரபல நடிகர் பேசிய பேச்சு வேறு 'நடிகர் பாராட்டிய மாணவி' என்ற தலைப்பில் ஒரு பிரபல வாரப் பத்திரிகையில் துணுக்காக அவள் படத்துடன் அச்சாகிவிட்டது. அதனால் அவள் மகிழ்ச்சி பல மடங்காகி இருந்தது. கர்வத்தைக் கூடச் சுமதி புது மாதிரியாகக் கொண்டாடினாள். பலர், கர்வம் வந்தால் அடக்கத்தையே இழந்து விடுவார்கள். அவளோ கர்வத்தினால் தன்னிடம் புதுப் புது அடக்கங்களை வளர்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வோர் அடக்கமும் அவளை உள்ளூர அடங்காப் பிடாரி ஆக்கிக் கொண்டிருந்தன. ஒவ்வோர் பணிவும் அவள் மனத்தைப் பணியவிடாமல் செய்து கொண்டிருந்தன. எல்லாரைக் காட்டிலும் எல்லா விதங்களிலும் தன்னை உயர்ந்தவளாகப் பாவித்துக் கொள்ளத் தொடங்கினாள் அவள். அதை அடிப்படையாக வைத்தே அவளுடைய கற்பனைகள் வளர்ந்திருந்தன. கனவுகள் பெருகித் தொடர்ந்து கொண்டிருந்தன.

தன்னையும் தன் அழகையும் விடுதிநாள் விழாவில் பாராட்டிப் பேசிய அந்தப் பிரபல நடிகருக்கு ஃபோன் செய்து பேசுவதற்குக்கூட இரண்டொரு தடவை அவள் முயன்று, அது முடியாமல் போயிருக்கிறது. அப்புறம் நேரிலேயே தேடிப் போயும் அது அவள் நினைத்தபடி நடக்கவில்லை.

“எப்படியாவது எதிலாவது எனக்கு நடிப்பதற்கு ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுங்கள்” என்று அந்த நடிகரிடம் கேட்பதற்காகத்தான் கூச்சத்தையும் பயத்தையும் விட்டு விட்டு அவள் அந்த நடிகரைத் தேடி நேரில் போனாள். ஆனால் அவரைச் சந்திப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியமாயில்லை. சில சினிமாப் பத்திரிகைகளில் ‘எப்படி நடித்து முன்னுக்கு வந்தேன்?' என்ற தலைப்பின் கீழ்ப் பெரிய நடிகைகள் எழுதிய தொடர் கட்டுரைகளை படித்திருந்தாள். அதில் அவர்கள் முன்னுக்கு வர எப்படி எப்படி சிரமப்பட வேண்டியிருந்தது, எதை எதை இழக்க வேண்டியிருந்தது என்றெல்லாம் தெரிந்திருந்தது. அதனால் சுமதிக்கும் இலைமறை காயாகச் சில விஷயங்கள் புரிந்திருந்தன.

எப்படியோ படிப்பில் மெல்ல அக்கறை போய், நடிக்க வேண்டும், புகழ்பெற வேண்டும். பல லட்சம் இளைஞர்கள் தன்னை எண்ணி ஏங்கித் தவிக்கச் செய்ய வேண்டும் என்பதில் அவளுக்கு ஆசை வந்துவிட்டது. ஒரு நிலையில் அது ஏக்கமாகவும் மாறிவிட்டது.

சுமதி குளியலறையிலிருந்து வெளியே வந்து அறைக்குள் அமர்ந்து கைக்குக் கிடைத்த ஒரு சினிமாப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அவளுக்கு ஏக்கப் பெருமூச்சு வந்தது.

கையில் எடுத்துப் பிரித்த பத்திரிகையில் 'எனக்கு வரும் இரசிகர் கடிதங்களுக்குப் பதில் போடவும் ஆட்டோ கிராப் போடவுமே நேரம் இருப்பதில்லை. அதற்காக மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் இரண்டு காரியதரிசிகளையே தனியாக நியமித்துவிட்டேன்” என்று ஒர் இளம் நடிகை பேட்டியில் சொல்லியிருந்தது அவள் பிரித்த பக்கத்தில் வந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/1&oldid=1146835" இலிருந்து மீள்விக்கப்பட்டது