அனிச்ச மலர்/15

விக்கிமூலம் இலிருந்து

15

காஷ்மீர் வந்த பின்புதான் தனக்கும், மேரிக்கும் அங்கு எந்த வேலையும் இல்லை என்பது சுமதிக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. தயாரிப்பாளர் கன்னையாவும் அவரோடு வந்திருந்த வேறு சிலரையும் 'குஷி'ப்படுத்தவே தாங்கள் அழைத்து வரப்பட்டிருக்கிறோம் என்பது ஜாடைமாடையாகத் தெரிந்தது. ரீநகரில் ஒரு பிரபல ஹோட்டலில் மொத்தமாகப் பல அறைகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. சென்னையிலிருந்த ஒரு டிராவல் ஏஜண்டு மூலமாக அவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தாங்கமுடியாத குளிர் இருந்ததனால் உல்லன் உடைகளுக்காக வேறு நிறையச் செலவழித்தார் தயாரிப்பாளர்.

ஸ்ரீநகருக்கு அருகிலிருந்த ஓர் ஏரியிலும், ஷாலிமார் கார்டன்ஸ் என்னும் மொகல் தோட்டத்திலும் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இந்த இரண்டு காட்சிகளுக்குமாகவே ஏராளமான தொகையைச் செலவிட்டுக் கொண்டிருந்தார் தயாரிப்பாளர். பணம் தண்ணீராகச் செலவழிந்தது என்றே சொல்லலாம். “பல படங்களிலே,  லாபம் வந்த 'பிளாக்மணி' கையிலே நிறைய இருக்கு. அதை எல்லாம் இப்படி அவுட்டோர்னு காஷ்மீருக்கோ, சிம்லாவுக்கோ வந்து செலவழிக்கிறாங்க. அது புரியாமல் நீயும் நானும் வீணாக் கவலைப்பட்டுப் பிரயோசனமில்லே" என்றாள் மேரி.

ஒருநாள் மாலை ஸ்ரீநகரில் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து சுமதியும், மேரியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சென்னையிலிருந்து புறப்படுவதற்குமுன் பாண்டி பஜார் பட்டு ஜவுளிக்கடையில் புடவைகள் தேர்ந்தெடுத்துவிட்டு வெளியேறியபோது தங்கள் ஹாஸ்டல் வார்டன் மாலதி சந்திரசேகரனைச் சந்திக்க நேர்ந்தது பற்றிக் கவலை தெரிவித்தாள் சுமதி.

”எனக்குப் பயமாயிருக்குடி மேரீ, ஏற்கெனவே வார்டன் என்னைப்பத்தி எங்கம்மாவுக்கு எழுதி வம்பு பண்ணியிருக்கா. இப்பவோ அம்மாவுக்கு உடம்பு சுகமில்லேன்னு பொய் சொல்லியே லீவு கேட்டிருக்கோம். வார்டன் எங்க அம்மாவுக்கே லெட்டர் கிட்டர் எழுதி வச்சு எல்லாக் குட்டும் உடைஞ்சிடப் போகுது...”

"வந்த இடத்திலே சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு இதையெல்லாம் என் நினைக்கிறடி சுமதி! மாலதி சந்திரசேகரன் பெரிய இவளோ? அவ யோக்கியதை எனக்குத் தெரியும். ஏதாவது வம்பு பண்ணினாளோ அவ வண்டவாளத்தைத் தண்டவாளம் ஏத்திப்புடுவேன். எங்கிட்டே அவ வாலாட்ட முடியாது.”

"சரி! அது போகட்டும்; எழுதிக் குடுத்த லீவு முடி யறத்துக்குள்ளேயாவது இங்கேயிருந்து ஊர் திரும்பிடுவோமோ இல்லியா? அதையாவது சொல்லுடி மேரி”-

“ஏண்டி பறக்கிறே? சொந்தத்திலே செலவழிச்சிக் கிட்டு நாம எப்பத்தான் காஷ்மீருக்கு வரப்போறோம்? ஏதோ மகராஜன் கன்னையா தயவுலே வந்திருக்கோம்.  கூட ரெண்டு நாள்தான் இருப்போமே?” என்றாள் மேரி. சுமதிக்கு மட்டும் பயமாகவே இருந்தது. ஊரில் என்னென்ன பேசிக் கொள்வார்களோ, என்னென்ன நடக்குமோ என்றெல்லாம் தயக்கம் இருந்தது; மனமும் குழம்பியது.

காஷ்மீர் என்ற பூலோக சுவர்க்கத்தின் அனுபவங்களும், அழகும் மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தாலும் நடு நடுவே வார்டனும், அம்மாவும் ஞாபகம் வந்து சுமதியைப் பயமுறுத்தினார்கள்.

காஷ்மீரச் சாலைகளில் எல்லாம் குடையை மடக்கிக் கவிழ்த்ததுபோன்ற உயரமான பச்சை மரங்களும், குங்குமப் பூ வயல்களும், ஏரிகளும், மலைச்சிகரங்களுமாக அந்தப் பிரதேசம் எழில் களஞ்சியமாக இருந்தது. ஏரிகளில் மிதக்கும் படகு வீடுகளில் ஒன்றில் தங்குவதற்குக் கன்னையா ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்.

"யூனிட்டிலே இருக்கிற அத்தினி பேருக்கும் படகுவீடு ஏற்பாடு பண்றதுன்னா நான் போண்டியாயிடுவேன், நீயும், நானும், மேரியும் மட்டும் ரெண்டு நாள் படகு வீட்டிலே தங்கலாம்"-என்றார் தயாரிப்பாளர். ஹோட்டலில் தங்கும் போதே ஒரு விஷயம் சுமதிக்கு புரியாத புதிராயிருந்தது. தயாரிப்பாளர் தனியாக ஒரு லக்சுரி அறையில் தங்கியிருந்தார். அதே வரிசையில் இருவர் தங்க முடிந்த ஒர் அறையில் சுமதியும், மேரியும் தங்கியிருந்தார்கள். மற்றவர்கள் வேறு வேறு அறைகளில் தங்கியிருந்தார்கள். பகலிலும் நள்ளிரவிலும் திடீரென்று மேரி சுமதியைத் தனியே விட்டு விட்டுத் தயாரிப்பாளரின் அறைக்குப் போய் விடுவாள். சில இரவுகளில் சுமதியைத் தனியே விட்டுச் சென்றவள் விடிகாலையில்தான் மறுபடி அறைக்கே திரும்பியிருக்கிறாள். அப்படி இரவுகளில் எல்லாம் பயத்தினாலும், புது ஊரில் புது இடத்தில் தனியாகவும் படுத்திருக்கிறோமே என்ற தனிமை உணர்வினாலும் உறக்கமே வராமல் சுமதி தவித்தது உண்டு.  அந்த யூனிட்டைச் சேர்ந்த பலர் சுமதியையும், மேரியையும் பார்க்கும் போதெல்லாம் நமுட்டு விஷமமாகச் சிரித்துக் கொள்ளுவதும் தங்களுக்குள் 'குசுகுசு' வென்று காதைக் கடிப்பதுபோல் இரகசியம் பேசிக் கொள்ளுவதும் வழக்கமாயிருந்தன. ஆனால் பணம் வரவு செலவுக்காக உடன் வந்திருந்த 'புரொடக்க்ஷன் இன் சார்ஜ்' ஆள் மட்டும் சுமதி.மேரி விஷயத்தில் மிகவும் தாராளமாகவே நடந்து கொண்டார். அவர்கள் கேட்டது எதையும் அவர் மறுக்காமல் வாங்கிக் கொடுத்தார். அடிக்கடி அறையைத் தேடி வந்து "கூச்சப்படாமல் உங்களுக்கு எது வேணும்னாலும் எங்கிட்டச் சொல்லுங்கம்மா! உங்க ரெண்டு பேருக்கும் ஒரு குறையும் வைக்கப்பிடாதுன்னு ஐயாவே சொல்லியிருக்காரு” என்று புரொடக்க்ஷன் மானேஜர் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஊர் திரும்புவதற்குச் சில நாட்கள். இருக்கும்போது அழகான டீலக்ஸ் படகு வீடு ஒன்றைத் தேர்ந்தெடுத்து மேரியோடும் சுமதியோடும் அதில் தங்கினார் தயாரிப்பாளர் கன்னையா. யூனிட்டைச் சேர்ந்த மற்றவர்கள் எல்லாரும் முதலில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே இருந்தார்கள். ஏரி வாசம் மனோரம்யமாகத்தான் இருந்தது. மேஜை அலங்கரிப்புக்கான பூக்கள் விற்பவர்களும், பழங்கள், காய்கறிகள் விற்பவர்களும் படகுகளிலேயே ஏரியில் வந்து விற்பனை செய்தார்கள். பக்கவாட்டில் கருநீல நிறம் கப்பிய மலைமுகடுகளும், நெடிது நெடிதாக வளர்ந்த சினார் மரங்களும், கண்ணாடியைப் பதித்தாற்போன்ற நீர்ப்பரப்பும் வனப்பும் மிக்க சூழ்நிலைகளாக இருந்தன.

பொழுது போவது மட்டும் கடினமாக இருந்தது. சுடச் சுடத் தேநீர் அருந்திய வண்ணமாக இருந்தார்கள் அவர்கள். கன்னையாவும், மேரியும் வற்புறுத்தியது பொறுக்க முடியாமல் படகு வீட்டில் அவர்களோடு அமர்ந்து சீட்டாடினாள் சுமதி. சீட்டாடுவது சலித்தபின் வேறொரு திறந்த படகில் ஏரியைச் சுற்றிவரலாம் எனறாா கன்னையா.  அவர்கள் படகில் ஏரியைச் சுற்றப் புறப்பட்டார்கள்.

"அழகிலும் நிறத்திலும் இந்தக் காஷ்மீரத்துப் பெண்கள் பிரமாதமாயிருக்கிறார்கள். எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு தளதளப்பு வருகிறதோ?’ என்று காஷ்மீரத்துப் பெண்களைப் பற்றி ஆரம்பித்தார் கன்னையா. உடனே மேரி குறுக்கிட்டு, " நீங்க சும்மா சொல்றீங்க. நம்ம சுமதியை விடவா அவங்க அழகாயிருக்காங்க? எங்கே? இப்படி ஒரு தடவை இவளைத் திரும்பிப் பார்த்தப்புறம் அபிப்பிராயம் சொல்லுங்க பார்க்கலாம்?" என்றாள்.

கன்னையா சுமதியை ஏறிட்டுப் பார்த்தார். அப்போது கிளிப்பச்சை நிற உல்லன் சால்வை போர்த்தியிருந்த சுமதி பச்சைக்கிளி போலிருந்தாள்.

"நீ சொல்றது சரிதான் மேரீ! என்னோட முந்தின அபிப்பிராயத்தை வாபஸ் வாங்கிக்கறேன். நம்ம சுமதிக்கு யாரும் ஈடாக முடியாது.”

படகிலிருந்து திரும்பியதும் கன்னையாவும், மேரியும் குடித்தார்கள் . சுமதியை வற்புறுத்தினார்கள்.

"இந்தக் குளிருக்கு ரொம்ப நல்லதும்மா! உடம்புக்குச் சூடா இதமா இருக்கும். கொஞ்சம் ட்ரை பண்ணு” என்றார் தயாரிப்பாளர்.

"ஒரு சின்ன பெக்' மட்டும்தான். உடம்பைக் கத கதப்பா வச்சுக்கும். எல்லாப் பெரிய நடிகைங்களும் குடிக்கிறாங்க. நீயும் நாளைக்கி ஸ்டாராகப்போறே... இத்தனை கூச்சம் இருந்தா எப்படி? ஸ்டார் ஆனப்புறம் எத்தினியோ 'வெட்' பார்ட்டிங்களுக்கு எல்லாம் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்குமே?”

சுமதிக்கு அந்த வாடையே குமட்டியது. "தயவு செய்து என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க... எனக்கு ஒரு கோகோகோலா மட்டும் போதும்” என்றாள் சுமதி. தயாரிப்பாளர் மேரியை நோக்கி ஏதோ கண் ஜாடை காட்டினார். மேரி உள்ளே போய்க் கண்ணாடி டம்ளரில்  'கோகோ கோலா'வை ஊற்றி எடுத்து வந்தாள். சுமதி அதை எடுத்துப் பருகத் தொடங்கியபோது அந்த வாசனை அவளுக்குப் புதிதாயிருந்தது. அது அவளுக்குப் பழக்கமான கோகோ கோலா போல இல்லை. சிறிது கசந்தது. சிறிது குமட்டியது. என்னவோ செய்தது.

"இந்தா இதைச் சாப்பிடு! ஒண்ணும் பண்ணாது” என்ற ஒரு பிளேட் நிறைய பொன்நிற உருளைக் கிழங்கு வறுவலை எடுத்து நீட்டினாள் மேரி. சுமதி நாலு வறுவல் துணுக்குகளை எடுத்து மெல்லத் தொடங்கினாள். குமட்டல் சிறிது நின்றது. மீண்டும் கன்னையாவும், மேரியுமாக வற்புறுத்தி அவளை இன்னொரு கிளாஸ் பருகச் செய்தனர். அதையும் பருகிய பின் சுமதிக்குத் தடுமாறியது. எழுந்து நின்றாலே கால்கள் தள்ளாடின.

அதற்குப் பின்பு நடந்தவை அவளுடைய சுய நினைவுக்கு அப்பாற்பட்டவையாயிருந்தன.

மறுபடி அவள் கண் விழித்தபோது தயாரிப்பாளரின் இரட்டை கட்டிலடங்கிய படுக்கையில் தான் இருந்ததை உணர்ந்தாள். -

உடம்பெல்லாம் அடித்துப் போட்டதுபோல் வலித்தது. மேரியைக் காணவில்லை. தயாரிப்பாளர் கன் னையா உறங்கிக் கொண்டிருந்தார். அவருடைய குறட்டை ஒலி கர்ணகடுரமாக இருந்தது.

சுமதி விக்கி விக்கி அழுதாள். அந்த இருளில் அந்த அறையில் தான் எதை இழந்திருக்கிறோம் என்று நினைத்த போது சுமதிக்குப் பகீரென்றது. கட்டிலோரமாகக் கீழே விழுந்திருந்த 'ப்ரா'வை எடுத்து அணிந்து கொண்டு பிளவுஸையும் போட்டுக் கொண்டு மேலே உல்லன் ஸ்வெட்டரையும் மாட்டியபோது ஓர் இயந்திரம் போல்தான் அவள் இயங்கினாள். தான் மிகச் சுலபமாக மோசம் போய் விட்டோம் என்று அவளுக்குப் புரிந்தது.

அப்படியே படகு வீட்டின் கதவைத் திறந்து கொண்டு ஏரியில் குதித்துத் தற்கொலை செய்து  கொண்டுவிடலாமா என்றுகூட அவள் அப்போது எண்ணினாள். அவளுடைய கதறலும் அழுகையும்கூடத் தயாரிப்பாளர் கன்னையாவை எழுப்பி விடவில்லை. வேட்டையாடிய மிருகத்தின் இறைச்சியைத் தின்று விட்டுத் துங்கும் வேடனைப்போல் கன்னையா அயர்ந்து துங்கிக் கொண்டிருந்தார். படகு வீட்டின் மரச்சுவரில் தலையை முட்டி மோதிக் கொண்டு கதறி அழுதாள் சுமதி. சத்தம் கேட்டோ தற்செயலாகவோ மேரி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். கதவு உட்புறம் தாழிடப்பட்டிருக்கவில்லை. மேரியை அப்படியே பாய்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றுவிட வேண்டும் போலிருந்தது சுமதிக்கு. ஆனால் அப்படிச் செய்யவும் முடியாமல் பிரமை பிடித்தவள்போல் நின்றுவிட்டாள் அவள். மேரியோ, "ஒண்ணும் கவலைப்படாதே ! யாருக்கும் தெரியாது. எல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்று சுமதியிடம் ஒரு சிறிதும் பதறாமல் சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அனிச்ச_மலர்/15&oldid=1146924" இலிருந்து மீள்விக்கப்பட்டது