அன்னை கஸ்தூரிபாயின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/003

விக்கிமூலம் இலிருந்து

காந்தியின் இளமை உணர்வுகள்

ரம் சந்த்காந்தி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். தனது தந்தையை இரவிலே கண்போல காத்து அவருக்குரிய பணிகளைச் செய்து வந்தார் காந்தி!

பகலிலே காந்தி பள்ளிப் படிப்புக்குச் சென்ற பின்பு, நோயாளிக்குரிய சேவைகளை அவரது மனைவி புத்லி பாயும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த கஸ்துரி பாயும் செய்து வருவார்கள்.

ஒரு நாள் இரவு! தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் காந்தி அவசரம் அவசரமாகச் செய்தார்! ஆசையோடு தனது படுக்கை அறைக்குச் சென்று கர்ப்பிணி கஸ்தூரி பாயைத் தட்டி எழுப்பினார்; சில நிமிடங்களுக்குள் அவரது தந்தையார் இறந்து விட்ட செய்தி காந்தி அறைக்கு வந்தது!

ஓடினார் தகப்பனார் அறைக்குக் காந்தி! பாவம் கரம் சந்த், காலமாகிவிட்டார். காந்தியடிகள் மிகவும் வேதனைப்பட்டு சிற்றின்ப ஆசையால், தந்தையின் கடைசி நேரத்தில் அவருக்குப் பக்கத்தில் இருக்க முடியவில்லையே என்பதை எண்ணி எண்ணி கண்ணீர் விட்டு வருத்தப்பட்டார் இளம் வயதுக் காந்திக்கு இந்தச் சோகம் நீண்ட நாள் தனது நினைவை விட்டு அகலவில்லை. சத்திய சோதனை நூலில் அதைக் குறிப்பிடுகிறார்.

தந்தை மறைவுக்குப் பின்கஸ்தூரி பாய்க்கு முதல் குழந்தை பிறந்தது. சில மணி நேரம் கழித்து அதே அறையிலேயே அந்தக் குழந்தை இறந்துவிட்டது. இளம் தம்பதிகள் இருவருமே மீளா வேதனையிலே வருத்தப்பட்டார்கள்!

காந்தி, கி.பி.1888-ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேர்விலே தேறினார். இதைக் கண்ட அவரது தமையனும், குடும்ப நண்பர்களும் அவரை இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பி சட்டத்துறையிலே பாரிஸ்டராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

வெள்ளைக்காரன் நாட்டுக்குக் காந்தி படிக்கப்போவதை, காத்தியின் வைசிய குல மக்கள் எதிர்த்தார்கள்! தாயும், தமையனும் காந்தி மேல் நாட்டு மோகத்திலே சிக்கி வழி தவறிப் போய்விடும் நிலை ஏற்படுமோ என்று பயந்தார்கள். அவர்களுக்கு எல்லாம் காந்தி ஆறுதல் கூறி, ஒருக்காலும் ஒழுக்கத்தை விட்டு நழுவமாட்டேன் என்று சத்திய வாக்கு கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டார்.

அந்த நேரத்தில் கஸ்தூரிபாய் தனது பிறந்த வீடான ராஜ்கோட் நகரில், இரண்டாவது ஆண் குழந்தையுடன் இருந்தார். கணவன் மீதுள்ள பாசத்தால், அவரைப் பிரிகிறோமே என்று மனம் கலங்கினார்.

காந்தி பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்புவதற்கு முன்பே புத்லி பாயும் மறைந்தார். தாயார் இறந்து விட்ட செய்தியை, படிப்பு வீணாகிவிடக் கூடாதே என்ற கவலையால் இங்கிலாந்திலே உள்ள காந்திக்கு அவரது தமையனார் உடன் தெரிவிக்காமல் இருந்து விட்டார். இந்தியாவுக்கு வந்த பிறகு தான், அவரது தாயார் மரணத்தை காந்தி அறிந்து மிகவும் வருந்தினார்.

பாரிஸ்டராக காந்தி திரும்பி வந்தார்; குடும்பத்தில் தந்தையில்லை தாயுமில்லை; மீண்டும் கஸ்தூரி பாயுடன் குடும்பம் நடத்தினார். முன்பு எப்படி மனைவிக்குத் தொல்லை களையும் உபத்திரவங்களையும் தந்து கொண்டிருந்தாரோ அதே நிலைதான் மீண்டும் உருவானது. இந்தக் குறை கஸ்தூரி பாயிடம் இல்லை!

இளம் வயதுக் காந்தியிடம் பெருங்குறைகள் குடி கொண்டிருந்தன. பாரிஸ்டர் படிப்புக்காக மூன்றாண்டுக் காலம் இங்கிலாந்தில் இருந்து அனுபவம் பெற்ற பின்பும், பாரிஸ்டர் பட்டம் பெற்ற கல்வித்துறை அறிவு இருந்தும் கூட கல்வி அறிவு அறவே அற்ற கஸ்தூரி பாய் மீது அவர் கொண்ட பழைய அழுக்காறுகள் நீங்கியபாடில்லை!

தீய நண்பன் மூட்டிவிட்ட பொய்யுரை, கற்பனைப் பழி காந்தியை விட்டு அகலவில்லை. சிறு சிறு குடும்ப விஷயங்களுக்கு எல்லாம் கூட அவர் மனைவி மீது சந்தேகப்படும் நிலைவெட்ட வெட்டத் துளிர்க்கும் மரமாக முளைத்தது.

இங்கிலாந்தில் இருந்தபோது கஸ்தூரி பாய்க்கு படிக்க, எழுத கற்றுக் கொடுக்க வேண்டும் என்று அடிக்கடி எண்ணுவார்! ஆனால், தந்தை இறந்த போதும் அவரின் சிற்றின்ப ஆசை விடாததைப் போன்று, இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்ட பிறகும் கூட சிற்றின்ப உணர்வு அவரை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது.

ஒரு முறை அவர் மனைவியைத் தாய் வீட்டுக்குக் கோபமாக, துன்புறுத்தி அனுப்பிவிட்டார். அங்கே கஸ்தூரிபாயும் மனம் நொந்திருந்தார். ஆனால் சிற்றின்ப உணர்வால் உந்தப்பட்டு அவரை மீண்டும் அழைத்து வந்தார்.

xxx